Sunday, October 23, 2011

அழிந்த குட்டையில் மீன் பிடிக்கவா தெரியாது அன்னியருக்கு?


1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்ததும், 'அரசியல் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது, மாறாக பொருளாதார சுதந்திரமும் அடைய வேண்டும்' என்றார் மகாத்மா காந்தி. அவர் கனவு கண்டது சிலர் சொல்வதுபோல ராம ராஜ்யமில்லை, மாறாக கிராம ராஜ்யம் பெற வேண்டும் என்றார். அதாவது கிராமம் தன்னிலை அடைய வேண்டும் என்றார். செல்வம் ஒரு சிலரிடமே பிரமிடு போன்று குவியாது, கடல் போன்று பரந்து அனைவரும் பலன் பெற வேண்டும். இஸ்லாத்திலும் வறியவர் மேன்மைப்பட சொத்து வரி என்ற ஜகாத், சதகா, பித்ரா போன்ற பொருளாதார உதவிகள் செல்வந்தர் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. மகாத்மா கூட கலிபா உமர் (ரளி) போல ஜனநாயக நல்லாட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
சங்கத் தமிழ் இலக்கியங்களில் கிராமங்களில் எவ்வாறு ஜனநாயகம் தழைத்திருந்தது என்று விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. சோழ மன்னன் ராஜேந்திரன் காலத்தில் கிராமத்தில் குடவோலை முறையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டு கிராம நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று அனைத்து கிராமங்களும் முன்னேற தங்களால் தேர்ந்தேடுக்கும் பிரதிநிதிகளால் நிர்வாகம் நடைபெறும். சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 40 இன் படி மெட்ராஸ் கிராம பஞ்சாயத் சட்டம் 1959 இயற்றப்பட்டது. அதில் 500 பேர் மற்றும் அதற்கு அதிகமாக வாழும் மக்களைக் கொண்டது ஒரு கிராமப் பஞ்சாயத்தாக மற்றும் பஞ்சாயத் யூனியன் ஆக அறிவிக்கப்பட்டது. இந்திய மக்கள் 80 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்வதால் அவர்கள் ஜனநாயகத்தின் பயனை உண்மையாக சுவைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆசைப் பட்டார். அதன் விளைவாக அரசியல் சட்டம் 73 மற்றும் 74 திருத்தங்கள் கொண்டு வரப் பட்டது. அந்த திருத்தங்களின் விளைவு கிராமப் பஞ்சாயத், பஞ்சாயத் யூனியன், மாவட்ட பஞ்சாயத் போன்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்து அலுவலகங்கள் தோன்றின.

2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்பு 17, 19.10.2011 ஆகிய நாட்களில் இரண்டு அடுக்கு தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய பலத்தைக் காட்டுவதிற்காக தனித்தனியே போட்டியிட்டன. அதேபோல் சமுதாய அரசியல் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. சில சமுதாய இயக்கங்களும், உதிரி சமுதாய அரசியல் கட்சிகளும் வலியச்சென்று பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. சென்ற 2011 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சில சமுதாய அரசியல் கட்சிகளுடன் வந்து சேர்ந்தவர்கள் திரும்பவும் தாங்கள் முன்பு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிக்கே காவடி தூக்கச் சென்று விட்டன. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளிடம் பல லகரம் கொடுத்துத்தான் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சீட்டு வாங்கினார்களாம். அப்படி சீட்டு கிடைக்காதவர்கள் முறையான அரசியல் கட்சி வேட்ப்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டர்களாம். போட்டிப்போடுவது ஒன்றும் புதிதல்லதான். ஆனால் முஸ்லிம்கள் ஊரில் பணம் பாதாளம் வரை பாயும் என்பதை இந்தத் தேர்தல் காட்டிவிட்டதாம்.

பல இடங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் சுடச்சுட பணியாரத்திலிருந்து, சுவையான பிரியாணியில் தொடர்ந்து, மேன்சன் ஹவுஸ் பிராந்தியை வயிறு முட்ட ஏத்திவிட்டு, சுருட்டிய ரூபாய் 500 நோட்டினை காதில் வைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்ற காட்சி எல்லாம் ஜெக ஜோதியாக இருந்ததாம். சில ஊர்களில் காலையில் பற்ற வாய்த்த அடுப்பு நடு இரவு வரை பற்றி எரிந்து கொண்டு இருந்ததாம். இவை எல்லாம் சாதாரண வார்டு தேர்தலுக்குக் கூட இருந்ததாம். ஒரு கடல்கரை சமுதாய ஊரில் இரு தரப்பிதனரிடையே சண்டை உச்சக்கட்டத்தில் போய் "உன்னை ஒழித்துக் கட்டுகிறேன் பார். உன் வண்டவாளங்களை எல்லாம் காட்டிகொடுக்கிறேன் பார்" என்று ஒலிபெருக்கி மூலம் சவால் விட்டார்களாம் நமது சமுதாய சகோதரர்கள் என்றால், அந்த ஊரில் வாழும் மற்ற சமுதாயத்தினர் எப்படி எல்லாம் மகிழ்ச்சி அடைந்து இருந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். நமது சமுதாயத்தினரை தோற்கடிக்க வேறு வெளி ஆட்களை நாம் தேட வேண்டாம். மாறாக நமக்குள்ளே இருக்கின்றார்கள் என்று அரபு மற்றும் ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஏற்படுகின்ற கொந்தளிப்புகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அழிந்த குட்டையில் மீன் பிடிக்கவா தெரியாது அன்னியருக்கு?

அப்படி நடந்த தேர்தலில் நாம் சாதித்தது என்ன? ஒரு சில வார்டு தேர்தலிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் தான் வெற்றிப் பெற்றுள்ளோம். ஏன் இந்த வெட்கக் கேடு. ஏழு சதவீதம் உள்ள நாம் இணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்ப்படுத்தி தேர்தலில் நமக்கென்ற ஒரு தனி அங்கீகாரம் பெற முடியாதா? இன்று பெரும்பாலான சமுதாய இயக்கங்களில் இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த இளைஞர் பட்டாளத்தை ஒன்று திரட்டி, ஓர் அணியினை உருவாக்கக் கூடாது? பலர் இணைய தளங்களில் அதற்கான கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால் பூனைக்கு மணி கட்ட யாரும் முன் வரவில்லையே ஏன் என்று உங்களுக்கு ஆச்சரியமாகத் தோணவில்லையா? அந்த சமுதாய அரசியல் கட்சிகளிடம் இருக்கின்ற சிலரின் வரட்டுக் கௌரவமே காரணம் என்றால் மிகையாகாது. ஆகவே பொய்யான வரட்டுக் கௌரவத்தை விட்டு சமுதாய நலன் கருதி சமுதாய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை மாநிலத்திலும், மாவட்டத்திலும், நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். நாம் அடுத்தவர்களுக்கு வெண் சாமரம் இனிமேலும் வீசத் தான் வேண்டுமா? கஷ்டப்பட்டு சம்பாதித்த நாலு காசுகளை மார்கத்துக்குப் புறம்பான காரியங்களில் நான் முன்பு குறிப்பிட்டதுபோல வீண் செலவு செயத் தான் வேண்டுமா? அதனை ஏழை எளிய சமுதாய மக்களுக்கு வழங்கினால் என்ன என்று சிந்திக்க வேண்டாமா சொந்தங்களே? 

டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!