Thursday, October 6, 2011

ஆபத்தான ஆயுத பூஜை,சிறுமி பலி

சேலம்: ஆயுத பூஜையையொட்டி சாலையில் உடைக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காய் மீது ஏறிய மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 12 வயது சிறுமி டிராக்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று ஆயுத பூஜை தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்களில் இதையொட்டி பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகளின் முடிவில் சாலையில், தெரு நடுவில் திருஷ்டிப் பூசணிக்காயை போட்டு உடைத்தனர்.

நடுத் தெருவல், சாலையில் பூசணிக்காய் உடைக்கக் கூடாது, அதனால் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படும், விபத்து ஏற்படும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் அதையும் மீறி பூசணிக்காய் உடைப்பு விமரிசையாக களை கட்டியிருந்தது.

இந்த பூசணிக்காய்க்கு இன்று ஒரு சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலம் களரப்பேட்டை சாலையில் இன்று காலை தனது தந்தையுடன் 12 வயது சிறுமி மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். அப்போது சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காய் மீது மோட்டார்சைக்கிள் ஏறியுள்ளது. இதனால் வழுக்கிக் கொண்டு போன மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது. இதில் தந்தையும், மகளும் கீழே விழுந்தனர்.

அப்போது பின்னால் வந்த டிராக்டர் சிறுமி மீதி ஏறி விட்டது. சக்ககரத்துக்குள் சிக்கி அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!