Showing posts with label the hindu tamil. Show all posts
Showing posts with label the hindu tamil. Show all posts

Tuesday, September 29, 2015

தந்திரமாக நடக்கும் கொலைகள்!அதிர்ச்சி தகவல்!!

Mohamed Anas


பண்டைய அரபு தேசத்தில் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்தது. இஸ்லாம் அந்த மண்ணில் வந்தவுடன் அந்த பழக்கத்தை கடுமையாக தடை செய்தது. நபிகள் நாயகம் அவர்கள் ''யார் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று அழகிய முறையில் வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, அவர்களுடன் நல்ல முறையில் நடக்கிறாரோ அவருக்கு இறைவன் சுவர்கத்தை பரிசாக கொடுக்கிறான்'' என்ற நற்செய்தியை அந்த மக்களுக்கு கூறினார்கள். மேலும் திருக்குரான் வசனமோ ''மேலும், உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படும்போது எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என்று'' போன்ற எச்சரிக்கையும் அந்த மக்களுக்கு விடுக்கப்பட்டது. இது அந்த சமூகத்தை முழுவதுமாக மாற்றியது. சமூகம் மாற வேண்டும். எண்ணங்கள் மாற வேண்டும். வரதட்சணை ஒழிய வேண்டும். அப்பொழுதே இந்த அவலங்கள் முற்று பெரும்.

----------------------------------------------------------------------

உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்களை கள்ளிப்பால் ஊற்றி தளிரிலேயே பொசுக்கும் பயங்கரம் வெளிச்சத்துக்கு வந்து ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இந்த சமூக அவலத்தை தடுக்க அரசு எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் நிலைமை இன்னும் மாறவில்லை என்ற உண்மை முகத்தில் அறைகிறது. அங்கே, சிசுக்கொலைகள் குறைந்தாலும் நவீன வடிவத்தில் கருக்கொலைகள் அதிகரித்துவிட்டன என்பதே களம் நமக்குச் சொல்லும் தகவல். 

தாயே தன் மகளுக்கு கள்ளிப்பால் புகட்டி மண்ணுக்குள் புதைப்பது உசிலம்பட்டி பகுதிக்கு புதிதல்ல. ‘இதுவும் பொட்டப் புள்ளயா.. கழுதைய போட்டுத் தள்ளிரு.. வச்சிருந்தா வகை பண்ண முடியாது’ - சர்வ சாதாரணமாய் இப்படிச் சொல்லி, கருப்பையின் ஈரம் காய்வதற்குள் பெண் சிசுக்களை கல்லறைக்கு அனுப்பும் அவலத்தை 1984-ல் தான் வெளி உலகம் அறிந்தது. இதற்குப் பிறகுதான், சேலம், தருமபுரி மாவட்டங்களில் இதைவிட அதிகமாக பெண் சிசுக்கள் கொல்லப்படும் பகீர் தகவலும் கசிந்தது. 

சிசுக்கொலையின் அடிநாதம் 
 
முன்பெல்லாம் மதுரை, தேனி மாவட்டங் களில் ஆண்கள்தான் பரிசப் பணம் கொடுத்து பெண்களை மணம் முடித்தார்கள். பெண்ணுக்கு சீர்வரிசையாக ஆடு - மாடுகளை மட்டுமே கொடுத்தனுப்பினார்கள். பசுமைப் புரட்சியின் வரவால் விவசாயம் செழித்தபோது நகை, பணம் என வரதட்சணை கொடுத்து பெண்களைக் கட்டிக் கொடுக்கும் வழக்கமாக மாறியது. 

இது வானம் பார்த்த பூமி. பக்கத்திலேயே வைகை அணை இருந்தாலும், உசிலையின் ஒரு பகுதியை மட்டும் வளப்படுத்திவிட்டு இன்னொரு பகுதிக்கு வஞ்சகம் செய்கிறது வைகை நதி. வளமான பகுதியில் இருப்பவர்கள், பெண்களுக்கு அதிக நகைகளை போட்டு கட்டிக் கொடுத்தார்கள். அவர்களுக்குச் சரிநிகராக வறண்ட பூமிக்காரர்களால் வரதட்சணை கொடுக்க முடியவில்லை. கடனை வாங்கி சீர் செய்து விட்டு கடனாளி ஆனார்கள். வாகாக சீர்வரிசை கொண்டு வராத பெண்கள், புகுந்த வீட்டில் நெருக்கடிகளுக்கு ஆளானார்கள். 

கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து நிற்கும் மகளுக்கு வழி சொல்ல வகை தெரியாத பெற்றோர், ‘இம்பூட்டுக் கஷ்டப்படுறதுக்கு பொறந்த வீட்டுக்குள்ளயே இந்தப் புள்ளய கள்ளிப்பால ஊத்திக் கொன்னுருக்கலாம்’ என்று அமில வார்த்தைகளை அள்ளி வீசுவது வழக்கமானது. பெண் சிசுக் கொலையின் அடிநாதம் இதுதான். 

ஆணுக்கு முக்கியத்துவம் ஏன்? 
 
எப்படியும் ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்து பெண் குழந்தைகளை பெற்றவர்கள், கள்ளிப்பாலோ எருக்கம் பாலோ, நெல் உமியோ கொடுத்து ஈவிரக்கமின்றி கொன்று புதைத்தார்கள். 

‘மூணு பொட்டப் புள்ளையல கொன்டோம்னா நாலாவதா ஆம்பளப் புள்ளதான்’ - இப்படிக் கிளப்பி விடப்பட்ட மூட நம்பிக்கைகளும் பெண் சிசுக்களுக்கு எமவேதமாக அமைந்து போனது. இப்படித்தான் பெண் சிசுக் காவுகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே போனது உசிலம்பட்டி. என்னதான் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் இருந்தாலும் இன்னும் அங்கே சிசுக்கொலைகள் தொடர்கின்றன. அதைவிட அதிகமாக கருக்கொலைகள் பெருகிவிட்டன. 

“ஆம்பளப் புள்ளை இல்லைன்னா ’அரசத்த வளே’ன்னு வைவாக. எங்க அம்மாச்சிக்கு மூணு பொட்டப் புள்ள, எங்கம்மாவுக்கு ரெண்டு, எனக்கும் ரெண்டாவது பொட்டப் புள்ளயா பொறந்துடக்கூடாதுன்னு எங்கம்மா என்னைய திருமங்கலத்துல இருக்குற ஸ்கேன் சென்டருக்கு கூட்டிப் போச்சு. கோயில் விசேஷத்துல (கடா) குட்டி பிடிக்க, செத்தாக்க கோடித்துணி கொண்டாந்து போட, வாணம் போட்டு, உருமி கொட்டி மையக்கரைக்கித் தூக்கிவிட இதுக்கெல்லாம் ஆம்பளப் புள்ளதானே வேணும்கிது சனம்’’ என்று ஆண் வாரிசுக்கு வக்காலத்து வாங்குகிறார் கொக்குடையான்பட்டி பிரியா. 

தந்திரமாய் சாகடிப்பு 
 
இதே ஊரைச் சேர்ந்த சமூக சேவகி மீனாட்சி, “ஏழு வருசத்துக்கு முந்தி வடகாட்டுப்பட்டியில சலவை தொழிலாளி ஒருத்தரு மூணாவதும் பொம்பளப் புள் ளயா பொறந்துருச்சுன்னு சொல்லி அந்தப் புள்ளைய வீட்டுக்குப் பக்கத்துல இருந்த குழியில உசுரோட தூக்கி அடிச்சு மண்ணைப் போட்டு மூடுனாரு. கதறக் கதற அந்தச் சிசுவை மண்ணுக்குள்ள போட்டு மூடுன கொடுமையை கண்ணால பாத்தவ நான். உசிலம்பட்டி பகுதியில இப்பையும் பொம்பள புள்ளைகள கொன்டுக் கிட்டுத்தான் இருக்காக. ஆனா, ரொம்ப தந்திரமா பண்றாக. இந்தப் பகுதியில இருக்கவங்க நிறையப் பேரு ஆந்திரா, கர்நாடகான்னு தொழில் பாக்குறாக. 

நெறமாச கர்ப்பஸ்திரிகள அங்க கூட்டிட்டுப் போயிடுறாங்க. ஆணா பொறந்தா அங்கருந்து உடனே தூக்கிட்டு வந்துருவாங்க. பொட்டப் புள்ளைனா நாலாம் பேருக்கு தெரியாம கொன்டு பொதைச்சிட்டு ஒரு மாசம் கழிச்சு, எதுவுமே நடக்காதது மாதிரி ஊருக்கு திரும்பிருவாக. ’என்னடி ஆச்சு?’ன்னு கேட்டா, ’’கொடி சுத்திப் பொறந்துச்சு. பெரிய உசுர காப்பாத்துறதே பெரும்பாடா போச்சுல்ல, புள்ளைக்கி ‘ஆர்ட்’டுல (ஹார்ட்) ஓட்டையாம், குழந்தைக்கு வளர்ச்சி இல்லை’ அப்படி இப்படின்னு ஏதாச்சும் காரணத்தச் சொல்லுவாக. இப்பெல்லாம் காசுக்காக டாக்டருங்களே பொம்பளப் புள்ளைய கொல்லத் தயாரா இருக்காங்க” என்கிறார்.
பெண் குழந்தைகளால் என்ன பிரச்சினை? 
 
“அப்பெல்லாம் அஞ்சு பொட்டப் புள்ளைகளக் கூட பெத்து வளத்துக் கட்டிக் குடுத்தாங்க. ஆனா இப்ப, பொம்பளப் புள்ளைய பெத்தாலே புருஷங்காரன் சண்டை புடிக்கிறான். அந்தக் கொடுமைய தாங்க முடியாம புள்ளைக நாண்டுக்குதுக. சரி.. பொட்டப் புள்ளையா இருந்தாலும் பரவால்ல. ஆளாக்கிக் கட்டிக் குடுத்துருவோம்னு படிக்க வைச்சா, எடப் போக்குல சாதிவிட்டுச் சாதி எவனையாச்சும் இழுத்துட்டு ஓடிருதுக. இந்தக் கச்சடாவெல்லாம் வேண்டாமுன்டு தான் பொம்பளப் புள்ளைகன்டா கழிச்சுக் கட்டிடுறாங்க’’ சிசுக்கொலைக்கு இப்படி நியாயம் கற்பிக்கிறார் ஆனையூர் அங்கம்மாள். 

“ஆம்பளப் பய எப்புடியும் பொழைச்சுக் குவான். அவனுக்கு ஒரு கோவணத்தக் கட்டிக்கூட வெரட்டிரலாம். பொட்டப் புள்ளைகள அப்படி வெரட்ட முடியுமா சாமி? அதுகளுக்கு பொறந்ததுலேயிருந்து மையக்கரை வரைக்கும் சீர் செய்யணும். அந்தக் காலத்துல நாங்க ஆறு மாசத்துக்கு ஒரு தடவ தான் அரிசிச் சோத்தப் பாப்போம். இந்த லட்சணத்துல புருசன் அடிக்கிறான்னு பொட்டப்புள்ள கண்ணக் கசக்கிட்டு வந்து நிக்கும். மூணுவாட்டி கூட தீத்து விட்டிருக்கோம். இதையெல்லாம் சகிச்சுக்க முடியாமத்தான் கள்ளிப்பாலை ஊத்துனாங்க’’ என்கிறார் இதே ஊரைச் சேர்ந்த கருத்தக்கண்ணன். 

“நாங்க தான் நெதானம் தெரியாம செஞ்சோம். இப்ப, காலம் பெரண்டுக்கிச்சுல்ல. ஊசி, மருந்து, மாத்தரைன்னு வந்துருச்சுப்பு. ஆணு பொண்ணுன்னு பாத்து கலைச் சுப்புடுறாங்கள்ல.. பொட்டப் புள்ளைகளப் பூரா கொன்னு போட்டுட்டு இப்ப பொண்ணுக கெடைக்காம வெளி வெளியா பொண்ணு தேடி கெளம்புறாங்கே.” கருக்கலைப்பின் அபாயகரமான தாக்கத்தை போகிற போக்கில் விதைக்கிறார் பி.முத்துப்பிள்ளை. 

“இப்பத்தான் ஏன் கொல்றே?’ன்னு வர்றாங்க. அந்தக் காலத்துல இந்த வெசாரணை எல்லாம் இல்லப்பு. பொட்டப்புள்ள பொறந்துருச்சா.. (தொடர்ந்து.. பெண் சிசுவைக் கொல்வதற்கு கையாளும் முறையை அவர் சொன்ன விதத்தை விலாவாரியாகச் சொல்ல முடி யாது என்பதால் தவிர்க்கிறோம்) மூணே நாழிகையில எல்லாம் முடிஞ்சிரும். புள்ளைய பெத்தவ ரெண்டு மூணு நாளைக்கு அழுதி சிந்திக்கிட்டுக் கெடப்பா. அந்தப் புள்ள வளந்து பெருசாகி வாக்கப்பட்டுப் போற எடத்துல அடிப்பட்டு மிதிபட்டுச் சாகுறதுக்கு இது தேவலைன்னு அப்புறம் அவளே தேத்திக்குவா’’ இது ஆனையூர் காசம்மாளின் வாதம். 

“அன்னைக்கி கிலோ கணக்குல நகை போட்டு புள் ளைகள கட்டிக் குடுத்தாங்க. இப்ப வெலவாசி ஏறிப் போச்சு. இப்பப் போயி கனமா பொட்டப் புள்ளைகள பெத்துப் போட்டு என்ன செய்ய..? இருக்குற வீட்டுப் புள்ளைகள பகுமானமா கட்டிக் குடுக்குறாங்க இல்லாத வீட்டுப் புள்ளைக நின்டு போகுதே. அதனால தான் பொட்டப் புள்ளையே வேணாம்னு சொல்லுது சனம்’’ 

கொக்குடையான்பட்டி காமாயியும் மின்னல் கொடியும் இப்படிச் சொல்கிறார்கள். அதிர்ச்சி தரும் வார்த்தைகளை அனாசயமாக கூறுகின்றனர். சிசுக்கொலைக்கான காரணத்தை இன்னும் சிலர் வேறு கோணத்தில் கூறுகிறார்கள். 

 thanks

 http://tamil.thehindu.com/opinion/columns/

 4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.



6:140. எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.
 
17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
 




Monday, October 20, 2014

தெற்காசியாவின் மதச்சார்பின்மை

 இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் தங்கள் சிறுபான்மையினரை எப்படி நடத்துகின்றன?

‘சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு) அமைப்பின் உறுப்பு நாடுகளில் பரப்பளவு, மக்கள்தொகை, மொத்த தேசிய உற்பத்தி மதிப்பு ஆகியவற்றில் இந்தியாதான் மிகப் பெரிய நாடு. ஏனைய நாடுகளைவிட சிறப்பானதொரு அம்சமும் இந்தியாவிடம் இருக்கிறது; குறிப்பிட்ட எந்த ஒரு மதத்துடனும் இந்தியா தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் அது.

பூடான், இலங்கை ஆகிய இரண்டுக்குமே பவுத்தம்தான் அதிகாரபூர்வ மதம். பாகிஸ்தான், இஸ்லாமியக் குடியரசு. மாலத்தீவில் சன்னி முஸ்லிம் பிரிவுதான் அதிகாரபூர்வ மதம். 2008 வரையில் நேபாளம் இந்து நாடாக இருந்தது. 1971-ல் உதயமான வங்கதேசம் மதச்சார்பற்ற குடியரசு நாடாக இருந்தது. 1980-களில் ஜெனரல் எர்ஷாத் அதிபராக இருந்தபோது, அதன் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு இஸ்லாத்துக்கு உரிமைமிக்க தனியிடம் கிடைத்தது. இந்த நாடுகளைப் போல அல்லாமல் இதுவரை இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே திகழ்கிறது.

ஆனால், நம்முடைய அரசியல் சட்டம் மதச்சார்பற்ற தன்மையைப் பறைசாற்றினாலும் மத அடிப்படையிலான பேரினவாதம் அசிங்கமான தனது முகத்தை அடிக்கடி காட்டிக்கொண்டிருக்கிறது. 1950-களில் சற்று அமைதி நிலவியது. பிறகு, ஜபல்பூரில் நடந்த இந்து, முஸ்லிம் கலவரத்தால் அது குலைந்தது. 1960-களிலும் 1970-களிலும் உத்தரப் பிரதேசம், பிஹார், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மதங்களுக்கு இடையிலான வன்முறை மோதல்கள் தொடர்ந்தன.

1984-ல் டெல்லியிலும் சில வட இந்திய நகரங்களிலும் இந்திரா காந்தி படுகொலையையொட்டி சீக்கியர்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டனர். 1990-களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த இந்துக்களில் பெரும்பாலான

வர்களை மதஅடிப்படைவாதிகள் தாக்கி வெளியேற்றினர். ராமஜன்ம பூமி இயக்கத்தால் 1980-களிலும் 1990-களிலும் பலர் பலிவாங்கப்பட்டனர். இவற்றின் தொடர்ச்சியாக இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் கலவரங்கள் ஏற்பட்டன. அவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி முஸ்லிம்களே. 2002-ல் குஜராத்தில் இந்து அடிப் படைவாதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றனர், ஆயிரக் கணக்கானவர்கள் வீடிழந்தனர்.

ஆர்எஸ்எஸ் செல்வாக்கு

இந்தியாவின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் இப்போதும் பாதுகாப்பற்றவர்களாகவும் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களாகவும் இருக்கின்றனர். இந்த நிலைமை வெகுவிரைவில் மாறிவிடாது.

பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் பலமடங்கு செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் இயக்கம், இந்து மதவாத அரசை ஏற்படுத்திவிட வேண்டும் என்று துடிக்கிறது.

அந்த இயக்கத்தின் தலைவர், பாஜகவைச் சேர்ந்த சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சமீபத்திய பேச்சுகளில், இந்து பேரினவாத ஆதிக்க உணர்வு வெளிப்படுகிறது. வலதுசாரி இந்துத்துவக் கட்சியின் ஆதிக்கம் காரணமாக இந்திய அரசியல், சமூக வாழ்க்கை ஆகியவற்றின் இயற்கைத் தன்மையே மாறி, மதச்சகிப்புத்தன்மை, பன்மைத் தன்மை ஆகியவற்றிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான்

இந்தியா தனது மதச் சிறுபான்மையோரை நடத்துவது இருவிதமாகவும் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தானோடு ஒப்பிடும்போது இங்குள்ள நிலை பரவாயில்லை. இந்தியாவில் அரசுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் இடையே இடைவெளி இருக்கிறது. பாகிஸ்தானில் அரசே இஸ்லாமியத் தன்மையோடு திகழ்கிறது. அங்குள்ள சிறுபான்மையினத்தவருக்குத் தங்களுடைய இடம் எது என்று தெரியும்; முன்பு, அவர்கள் திட்டமிட்டு வேட்டையாடப்பட்டதில்லை. ஆனால், பாகிஸ்தானில் (1977-88) அதிபர் ஜியா உல் ஹக் பதவிக் காலத்தில் இஸ்லாமியமயமாதல் விரைவுபெற்றது. ஷரியத் சட்டம் தேசியச் சட்டமானது. சிறுபான்மைச் சமூக மக்களின் வாயை அடைக்க அவர்கள் மீது மதநிந்தனை வழக்குகள் போடப்பட்டன. அகமதியர்கள் இஸ்லாமியர் அல்லாதோராக அறிவிக்கப்பட்டனர். வஹாபிய பாணியில் இஸ்லாத்தைப் போதிக்கும் ஏராளமான மதரசாக்கள் வளைகுடா நாடுகளிலிருந்து கிடைத்த நன்கொடைகள் மூலம் தொடங்கப்பட்டன. சன்னி முஸ்லிம்கள் முதலில் இந்துக்கள், கிறிஸ்தவர்களைக் குறிவைத்தனர். எண்ணிக் கையில் குறைவாக இருந்ததால், அவர்கள் எளிதாக அடக்கப்பட்டனர். பிறகு, அவர்களுடைய கவனம் ஷியாக்கள் மீது சென்றது. ஒருகாலத்தில் ஷியாக்களும் அரசியலிலும் தொழிலிலும் ஆதிக்கம் செலுத்தினர். முகம்மது அலி ஜின்னாவே ஷியாதான். சமீப காலமாக ஷியாக்களின் வழிபாட்டிடங்களும் குடியிருப்புகளும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்படுகின்றன. இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தக் கூடாது என்று நம்பும் அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகளும் தாக்கப்படுகின்றனர்.

கிழக்கு பாகிஸ்தான்

நாடு சுதந்திரம் பெற்றபோது மேற்கு பாகிஸ்தானைவிட கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். 1950-களில் இந்துக்கள் தொடர்ச்சியாக இந்தியாவில் குடியேறினார்கள். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஹஸ்ரத் பால் மசூதியில், நபிகளின் ‘நினைவுப் பொருள்’ காணாமல் போனதாகச் செய்திகள் வந்தவுடன், கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்பட்டனர். மீண்டும் பெரும் எண்ணிக்கையில் இந்துக்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்தனர். அப்படியிருந்தும் வங்கதேச விடுதலைப் போரின்போது 1971-ல் ஏராளமான இந்துக்கள் வங்கதேசத்திலேயே வாழ்ந்தனர். வங்கதேச விடுதலை மத அடிப்படையில் அல்லாமல் மொழி அடிப் படையிலானது என்பதால், இந்துக்களும் ஆயுதம் ஏந்திப் போராடினர்.

வங்கதேசம் பிறந்தபோது மதச்சார்பற்ற நாடாகத்தான் இருந்தது. ரவீந்திரநாத் தாகூரின் பாடலையே தேசிய கீதமாக ஏற்றது. சுதந்திரம் அடைந்த பிறகு 40 ஆண்டுகளாக அங்கு இஸ்லாமியமயமாதல் மெதுவாக நடந்தேறியது. சமீபத்திய காலத்தில் அது வன்செயல்களுடன், பாகிஸ் தானைப் போலவே அரங்கேறுகிறது.

இலங்கை

இலங்கையிலும் அரசியல் மோதலானது மத அடிப்படையில் அல்லாமல் மொழி அடிப்படையில்தான் தொடங்கியது. தெற்கில் வாழ்ந்த சிங்களர்கள், வடக்கில் வாழ்ந்த தமிழர்களின் பொருளாதார வளத்தைக் கண்டு அஞ்சினார்கள். எனவே, சிங்களம் தெரிந்தால்தான் கல்லூரியில் படிக்க முடியும்; அரசு வேலையில் சேர முடியும் என்று கட்டாயப்படுத்தினார்கள். இதுவே, தமிழர், சிங்களர் மோதலுக்கான மூல காரணம்.

இந்த மோதல் உச்சத்தில் இருந்தபோது 1972-ல் இலங்கை அரசின் தேசிய மதமாக பவுத்தம் அறிவிக்கப் பட்டது. தமிழர்களில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ் தவர்கள் இருந்தனர், பவுத்தர்கள் யாருமில்லை. மதப் பேரினவாதம் மொழிப் பேரினவாதமாகியது. இலங்கை ராணுவத்துக்கு சிங்கள பவுத்த சன்யாசிகள் ஆதரவாளர்களாக மாறினார்கள். தமிழர்களைக் கடுமை யாக ஒடுக்குமாறு தூண்டினர். 2009 போருக்குப் பிறகு எதேச்சாதிகார அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாளர் களாகினர், சிங்கள பவுத்தத் துறவிகள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் முஸ்லிம்களைக் கடுமையாகத் தாக்கினார்கள் பவுத்தர்கள்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் சகிப்புத்தன்மை மிக்க வர்கள் அல்ல. அவர்களும் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஆகிய ஊர்களில் முஸ்லிம்களையும் அவர்களுடைய வீடுகளையும் மசூதிகளையும் தாக்கினர். தமிழ் கிறிஸ்தவர்களும் அலைக்கழிக்கப்பட்டனர். சிங்களர், தமிழர் வாக்குவாதத்தை பவுத்தர், இந்து மோதலாக விடுதலைப் புலிகள் மாற்றினார்கள்.

பூடான்

சார்க் நாடுகளிலேயே பூடான்தான் அமைதியான, இயற்கை அழகு நிறைந்த நாடு. ஆனால், பவுத்த அடை யாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அந்த நாடும் 1990-களில் ஏராளமான இந்துக் குடும்பங்களைத் தங்கள் நாட்டிலிருந்து நேபாளத்துக்கு விரட்டியது பலருக்கும் தெரியாது.

நேபாளம்

19-வது, 20-வது நூற்றாண்டுகள் முழுக்க நேபாளம் இந்து நாடாகவே திகழ்ந்தது. அந்நாட்டு மன்னர், பூவுலகில் விஷ்ணுவின் பிரதிநிதியாகவே கருதப்பட்டார். 2008-ல் மன்னராட்சி முறை கைவிடப்பட்டு மதச்சார்பற்ற குடியரசு நாடாகியது நேபாளம். தெற்காசிய நாடுகளிலேயே மத மோதல்கள் மிகக் குறைவாக நடந்தது நேபாளத்தில்தான். சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு நிலஉடைமையாளர்களுக்கும் நிலமற்றவர்களுக்கும் இடையே, மலைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சமவெளி மக்களுக்கும் இடையே, பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதாருக்கும் இடையேதான் மோதல்கள் நடைபெறும்.

தெற்காசியாவில் இந்தியாவும் இலங்கையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கொண்ட ஜனநாயக நாடுகளாக வெகுகாலம் திகழ்ந்தன. இப்போது பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளமும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கின்றன. பூடானில்கூட தேர்தல் நடந்திருக்கிறது. முதல்முறையாக சார்க் அமைப்பின் எல்லா நாடுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தான் பதவியில் இருக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இருப்பதாலேயே மக்களிடையே சமத்துவம் ஏற்பட்டுவிடவில்லை. வறுமை யும் ஏற்றத்தாழ்வும் பெரிதாக இருக்கிறது. மொழி, மதம் ஆகிய காரணங்களாலும் மக்களிடையே வேறுபாடு காட்டப்படுகிறது. பாகிஸ்தானில் ஒரு இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ ஷியாவாகவோ இருப்பதும், இலங்கையில் இந்துவாகவோ முஸ்லிமாகவோ இருப் பதும், வங்கதேசத்தில் இந்துவாகவோ பவுத்தராகவோ இருப்பதும், இந்தியா, நேபாளத்தில் முஸ்லிமாக இருப்பதும் சிரமம்தான்.

- ராமச்சந்திர குஹா, ‘இந்தியா ஆஃப்டர் காந்தி’ உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்;

தமிழில்: சாரி

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/article6517432.ece

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!