Saturday, February 28, 2009

இஸ்லாம் பார்வையில் "மனைவி"

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915

உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160

பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக் கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும் என நபி அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2913

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56

''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல்: புகாரி 5204

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162

''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082

''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபியவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலீ) நூல்: அபூதாவூத் 1442

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ) நூல்: புகாரீ 5200

நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ) நூல்: புகாரீ 2481

''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911

Friday, February 27, 2009

ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்!!!

பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.
அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்



உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.

நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.
ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.
வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு



தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.

எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.
முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.
பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.

இதற்கான தீர்வு என்ன?



"நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை" இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்

முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நூளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு

தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.

நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.
சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.
நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.
இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.
ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்

நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்

நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.

எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?
நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்

சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்

கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்

ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.
ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர். பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்

டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

13.மக்கள் சக்திப் போராட்டம்

நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.

சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்

ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.
நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.
இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.
சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.
நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.
வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.
பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.
இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூசாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்

மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.

இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.
எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.

16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு

பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.
சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக 'சத்தியமார்க்கம்' போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்

பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முடிவுரை

"உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.

மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.
நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.
இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.

BY அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

Thursday, February 26, 2009

இஸ்லாம் பார்வையில் "தர்மம்"

உங்களில் ஒருவர் பேரிச்சம் பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்துக் கொள்ளட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதியீஇப்னு ஹாதம்(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம்

ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தர்மம் செய்வது அவசியமாகிறது என்று நபி அவர்கள் குறிப்பிட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ ''அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழாகள் 'அவர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ அவர் நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அம்மனிதர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ ''அவர் (பிறருக்கு) தீமை செய்வதை விட்டு தவிர்த்து கொள்ளட்டும். அதுவே தர்மமாகும் என்று நபி அவர்கள் விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

நபி அவர்கள் என்னிடம் கூறினார்கள். ''நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை அறிவிக்கட்டுமா? நோன்பு கேடயமாகும் மேலும் தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஅத் இப்னு ஜபல்(ரலி)நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்

உங்களில் யார் இன்று நோன்பு நோற்றிருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்திருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று மிஸ்கீனுக்கு உணவு அளித்திருக்கின்றார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் உங்களில் யார் இன்று நோயாளியை சந்தித்தார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் இவையனைத்தும் ஒரு மனிதர் விஷயத்தில் ஒன்றுபட்டிருக்குமானால் அவர் சொர்க்கத்தில் புகுவார் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயி

தர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் மதிப்பை உயர்த்தாமாலிருப்பதில்லை. அல்லாஹ்வுக்காக யாரேனும் பணிவுடன் நடந்தால் அவரை அல்லாஹ் உயர்த்தாமலிருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி

ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம் ,பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி

விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் ''நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

தர்மத்தில் சிறந்தது எது? என்று மக்கள் நபி அவர்களிடம் கேட்டதற்கு குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், அஹ்மத்

உபரியான தான தர்மங்களை அது செல்வமாகவோ அல்லது தானிய வர்க்கமாகவோ அல்லது அசைவற்ற பொருளாகவோ இருந்தால் முதலில் மனைவி, மக்கள் உறவினர், அண்டைவீட்டார் என ஆரம்பித்து தான தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

ஒரு மனிதர் நபி அவர்களிடம் ''என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்புபே) முடிந்திருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருந்திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டார். நபி அவர்கள் ''ஆம்'' சார்பாக தர்மம் செய்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா

Tuesday, February 24, 2009

முஸ்லிம் சகோதரன்!!!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: "முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களாகி விட்டால் அவரைச் சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலிருந்து நீங்கிவிட்டார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) கூறினார்கள்: ""ஒருவர் தனது சகோதரரை ஒரு வருடம் வெறுத்திருந்தால் அந்தச் சகோதரரின் இரத்தத்தை சிந்தியவர் போலாவார். (அதாவது இச்செயல் கொலைக்கு ஒப்பானதாகும்).'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். கோபப்படாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களை எவியவாறு சகோதரர்களாக இருங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மன்னிக்கப்படமாட்டான். அப்போது சொல்லப்படும் "இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நோன்பு நோற்பதை விட, தர்மம் செய்வதை விட சிறந்தவொரு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவரிடையே இணக்கத்தை எற்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக் கூடியதாகும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரு நண்பர்களில் ஒருவரின் தவறு, அவ்விருவருக்குமிடையே பிரிவினையை எற்படுத்தி விட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்க்கத்திற்காகநேசித்தவராக மாட்டார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

"ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாங்கும் நோக்கமில்லாமல் பிறரைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே விலையை அதிகப்படுத்தாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவரது வியாபாரத்தில் மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்யாதீர்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களாக, சகோதரர்களாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநீதி இழைக்கமாட்டார். மோசடி செய்யமாட்டார். அவரை அற்பமாகக் கருதமாட்டார். இறையச்சம் என்பது இந்த இடத்தில் என்று தனது நெஞ்சின் பக்கம் மூன்று முறை சைக்கினை செய்தார்கள் ஒருவர் தமது சகோதரரை இழிவாகக் கருதுவது அவரது கெடுதிக்குப் போதுமானதாயிருக்கும். ஒரு முஸ்லிமுக்கு பிற முஸ்லிமின் இரத்தம், அவரது சொத்து, அவரது கெªரவம் ஹராமாகும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

Monday, February 23, 2009

பள்ளியில் பெண்கள்

நபி அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் இமாம் தவறு செய்தால் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு) தஸ்பீஹ் கூறுவது ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:புகாரி

உமர்(ரலி) அவர்களின் மனைவி (ஆதிகா) சுபுஹ் தொழுகைக்கும், இஷா தொழுகைக்கும் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்திலே கலந்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (உங்கள் கணவர்) உமர் அவர்கள் இதை விரும்பமாட்டார். இன்னும் ரோஷப்படுவார் என்று அறிந்திருந்தும் எதற்காக நீங்கள் வெளியேறி (மஸ்ஜிதுக்கு) வருகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (இதுவரை என்னை அவர் தடுக்கவில்லையே) என்னை மஸ்ஜிதுக்கு வராமல் தடுப்பதை விட்டும் அவரை எது தடுத்தது என்று வினவினார்கள். அதற்கு (அவர்களின் மகன் அப்துல்லாஹ்) இப்னு உமர் அவர்கள் அல்லாஹ்வினுடைய பெண் அடிமைகளை அல்லாஹ்வின் மஸ்ஜிதை விட்டும் தடுக்காதீர்கள் என்ற நபியின் சொல்தான் அவர்களை தடுத்துள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி அவர்கள் எழுவதற்கு முன் சற்று அமர்ந்து இருப்பார்கள். பெண்கள் ஆண்களை சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக நான் கருதுகிறேன் என்று இப்னு ஹிஷாம் கூறுகிறார். நூல்:புகாரி

இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

நபி அவர்கள் கூறினார்கள்: உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி

"உங்களில் ஒரு பென் மஸ்ஜிதுக்கு வந்தால் அவள் நறுமணம் பூசவேண்டாம்" என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஜைனப் (ரலி) நூல்: முஸ்லிம்

நபி அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை நான் கேட்பேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டு இருக்கும்) அந்த குழந்தையின் தாயாருக்கு சிரமமளிக்க கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கி முடித்து விடுவேன். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்:புகாரி

Sunday, February 22, 2009

அழகு தமிழில் சகோ ஜாகிர் நாயக் உரை!

இஸ்லாத்தை அழகிய முறையில் உலகம் முழுதும் எத்தி வைத்து வரும் சகோ ஜாகிர் நாயக் அவர்களின் உரையை,அழகு தமிழில் சகோதரர் ஒருவர் டப்பிங் செய்துள்ளார்.இது தமிழ் மக்களுக்கு மிகவும் மிக பயன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.அதன் லிங்க்

https://www.youtube.com/watch?v=SWdnmAofQ5o

 நீங்களும் பார்த்து,மாற்று மத நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

Friday, February 20, 2009

இஸ்லாம் பார்வையில் "வணிகம்"

அறிவிப்பாளர் : ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றுள்ளார்கள்: “கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கடனைக் கோருவதிலும் மென்மையுடனும் நற்பண்புடனும் நடந்து கொள்ளும் மனிதர் மீது அல்லாஹ் அருளைப் பொழிவானாக!” (புகாாி)

அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் அருளினார்கள்: “உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தோர்) ஆகியோருடன் இருப்பார்.” (திர்மிதி)


அறிவிப்பாளர் : அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் (வணிகர்களுக்கு எச்சாிக்கை செய்த வண்ணம்) கூறினார்கள்: “உங்களுடைய பொருளை விற்பனை செய்வதில் அதிகமாகச் சத்தியம் செய்வதைத் தவிருங்கள். ஏனென்றால் அது (தற்காலிகமாக) வாணிபத்தைப் பெருக்கினாலும் இறுதியில் அருள்வளத்தை இல்லாதொழித்து விடும்.” (முஸ்லிம்)


அறிவிப்பாளர்: அபூதர் கிஃபாாி رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்: “மூன்று வகையினாிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மையாக்கி சுவனத்தில் நுழையவிக்க மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே தருவான்.” அபூதர் கிஃபாாி رَضِيَ اللَّهُ عَنْهُ வினவினார்கள்: “அல்லாஹ்வின் தூதரவர்களே! தோல்வியுற்றும் நற்பேறற்றும் போன இவர்கள் யார்?” அதற்குப் நபிصلى الله عليه وسلم அவர்கள், “பெருமை கொண்டு தம் ஆடையைக் கணுக்காலுக்குக் கீழ்வரை தொங்கவிட்டுத் திாிபவன், உதவி செய்வதைச் சொல்லிக் காண்பிப்பவன், பொய் சத்தியத்தின் மூலம் தனது வாணிபப் பொருளைப் பெருக்கிக் கொள்பவன் ஆகியோர்தாம்” என்று மறுமொழி பகர்ந்தார்கள். (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : கைஸ் அபூகர்ஸா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில் வியாபாாிகளான நாங்கள் “ஸமாஸிரா” (புரோக்கர்கள்) என்று அழைக்கப்பட்டு வந்தோம். ஒரு சமயம் நபிகள் நாயகம்صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு அருகில் நடந்து சென்றார்கள். அப்போது அண்ணலார் இந்தப் பெயரைவிட சிறந்த பெயரை எங்களுக்குத் தந்தார்கள். அண்ணலார் கூறினார்கள்: “வணிக்க கூட்டத்தாரே! சரக்கை விற்பதில் வீண்பேச்சுக்களைப் பேசுவதற்கும் பொய் சத்தியம் செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது, எனவே நீங்கள் உங்கள் வியாபாரத்தில் தர்மத்தையும் கலந்து விடுங்கள்!” (அபூதாவூத்)


அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் அளந்தும், நிறுத்தும் வணிகம் செய்யும் வியாபாாிகளை நோக்கி “நீங்கள் எத்தகைய இரு பணிகளுக்குப் பொறுப்பாளர்களாய் ஆக்கப்பட்டுருக்கிறீர்களெனில், அவற்றின் காரணமாக உங்களுக்கு முன் சென்றுபோன சமூகங்கள் அழிந்து விட்டிருக்கின்றன” என்றார்கள். (திர்மிதி)


அறிவிப்பாளர் : உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ
“தேவையான பொருள்களைப் பதுக்கி வைக்காமல் உாிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உாித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், அவற்றைப் பதுக்கி வைப்பவன் இறைவனின் சாபத்திற்குாியவனாவான்.”(இப்னு மாஜா)

அறிவிப்பாளர் : வாயிலா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “ஒருவன் ஒரு பொருளை விற்கின்றான். ஆனால் அதிலுள்ள குறையை அவன் சுட்டிக் காட்டவில்லையென்றால் அது அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல, ஒருவன் பொருளிலுள்ள குறையை அறிகின்றான். ஆனால் அதனைத் தெளிவாக எடுத்துரைக்கவில்லையென்றால் அதுவும் அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல.” (முன்தகா)

Wednesday, February 18, 2009

இஸ்லாம் பார்வையில் "திருமணம்"

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
“இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)


அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)


அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்: “எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
எங்களுக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஓதும் தஷஹ்ஹுதை ஓதிக் காட்டியபின், “இது திருமணத்தின்போது ஓதக்கூடிய தஷஹ்ஹுது” எனச் சொல்லி அதனையும் ஓதிக்காட்டினார்கள். அதன் பொருள்:

நன்றியும் புகழும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானவை. நாங்கள் அவனிடமே உதவி தேடுகின்றோம். அவனிடத்திலேயே மன்னிப்புக் கோருகின்றோம். எங்கள் மனத்தின் தீமைகளுக்கெதிராக எங்களை நாங்களே அல்லாஹ்விடம் தஞ்சம்தேடி ஒப்படைத்து விடுகின்றோம். எவருக்கு அல்லாஹ் நேர்வழி அளிக்கின்றானோ அவரை எவரும் வழிகெடுக்க முடியாது. அவன் எவனை வழி தவறச்செய்து விடுகின்றானோ அவனுக்கு யாரும் நேர்வழி அளிக்க முடியாது. மேலும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவரும் இலர் என நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனுடைய திருத்தூதர் என்றும் சான்று பகருகின்றேன்.

பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மூன்று இறைவசனங்களை ஓதிக் காண்பித்தார்கள்.

1. இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். (3:102)

2. மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)

3. இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் இருங்கள். மேலும் சொல்வதைத் தெளிவாக, நேரடியாகச் சொல்லுங்கள். இப்படிச் செய்தால் அல்லாஹ் உங்கள் செயல்களைச் சீர்திருத்துவான். பாவங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடிபணிந்து நடப்பவர்கள் பெரும் வெற்றியை அடைவார்கள். (33:70-71) (திர்மிதி)

Sunday, February 15, 2009

இஸ்லாம் பார்வையில் "பொய்"

அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் رَضِيَ اللَّهُ عَنْهُ
நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா? என்று நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை வினவினோம். அதற்கு ஆம் என்றனர். கஞ்சனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் ஆம் என்று பதிலளித்தனர். பொய்யனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு அவர்கள், இல்லை (இருக்க இயலாது) என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஅத்தா

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் உமைஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களின் துணைவியரில் ஒருவரை (புதுமணப் பெண்ணை) அழைத்துக் கொண்டு அண்ணலாரின் இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அண்ணலாரின் வீட்டை அடைந்த பொழுது அண்ணலார் ஒரு பெரிய பால் குவளையை எடுத்து வந்தார்கள். பிறகு (அதிலிருந்து பாலை) திருப்தியடையும் அளவிற்குக் குடித்தார்கள். பின் தம் துணைவிக்குக் கொடுத்தார்கள். அத்துணைவியார் பசியிருந்தும் ‘எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினார்கள். அவர்கள் ஒப்புக்கு பதிலளிப்பதைப் புரிந்துகொண்ட அண்ணலார், ‘நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே!’ என்று கூறினார்கள். (தபரானீயின் அல்முஃஜமுஸ்ஸகீர்)

அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ‘நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.’ (அபூதாவூத்)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ
ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?’ என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன்’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்’ என்று கூறினார்கள். (அபூதாவூத்)

அறிவிப்பாளர் : பஹ்ஸ் பின் ஹகீம் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: ‘மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடும் தோல்வியும் உண்டாகட்டும்! அவனுக்கு அழிவு காத்திருக்கிறது.’ (திர்மிதி)

அறிவிப்பாளர் : அபூஉமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்.’ (அபூதாவூத்)

அறிவிப்பவர்: அஸ்மாஃபின்து யஜீது رَضِيَ اللَّهُ ஆதாரம்: திர்மிதீ
'மக்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது விட்டது. ஈசல் விளக்கில் மொய்த்து மடிவது போன்று நீங்கள் பொய்மைக்குப் பலியாகி விடுகிறீர்கள். பொய்கள் அனைத்தும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் மீது ஹராமாகும் மூன்று செயல்களைத் தவிர. அதாவது: 1) கணவன் தம் மனைவியைத் திருப்தியுறச் செய்ய அவளிடம் பொய் கூறுதல். 2) போரில் ஒருவர் பொய் கூறுதல். 3) இரு முஸ்லிம்களுக்கிடையில் உள்ள பிணக்கை நீக்கும் பொருட்டு ஒருவர் பொய் கூறுவது ஆகும்' என்று அண்ணல் நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்رَضِيَ اللَّهُ ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ''
நான்கு செயல்கள் இருக்கின்றன. அவை எவனிடம் குடிகொண்டிருக்கின்றனவோ அவன் கலப்பற்ற நயவஞ்சகனேயாவான். அன்றி அவற்றில் ஒரு செயல் எவரிடம் இருக்கிறதோ அவர் அதனைக் கைவிடாதவரை அவரிடம் நயவஞ்சகத்தன்மை குடி கொண்டிருக்கிறது. அவை: 1) பேசினால் பொய் பேசுவது. 2) அமானிதம் ஒப்படைக்கப்பட்டால் அதனை மோசம் செய்வது. 3) வாக்குறுதி அளித்துவிட்டு அதை மீறுவது. 4) (வாய்ச்) சண்டையிட்டால் ஒருவர் மீது அநியாயமாக பழிசுமத்தி அவதூறு கூறுவதுமாகும்' என்று அண்ணல் நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.''

Friday, February 13, 2009

மானுட வசந்தம்,துபைவாசிகளே வாங்க!!

துபாய் ஈமான் அமைப்பு டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ப‌ங்கு பெறும் மானுட‌ வ‌ச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 27.02.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை ஆறு ம‌ணிக்கு துபாய் இந்திய‌ க‌ன்சுலேட் அர‌ங்கில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து.இந்நிக‌ழ்வில் இஸ்லாம் குறித்த‌ அனைத்து கேள்விக‌ளுக்கும் ப‌தில் அளிக்க‌ இருக்கிறார் டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து.த‌மிழ‌ன் தொலைக்காட்சி வார‌ந்தோறும் தொட‌ர்ந்து ஒளிப‌ர‌ப்பு செய்யும் இந்நிக‌ழ்ச்சி துபாயிலும் ப‌திவு செய்ய‌ப்ப‌டுகிற‌து.இஸ்லாம் ப‌ற்றிய‌ உங்க‌ள‌து ச‌ந்தேக‌ங்க‌ளை எந்த‌ த‌ய‌க்க‌மும் இன்றி கேட்க‌லாம்.பார‌ப‌ட்ச‌மில்லாத‌ உங்க‌ள் உண‌ர்வுக‌ளை உன்ன‌த‌மாக‌ உண‌ர்த்த‌லாம்.ச‌கோத‌ர‌ ச‌முதாய‌த்தின‌ர் ச‌ம‌ர்ப்பிக்கும் கேள்விக‌ளை முன்னுரிமையாக்க‌லாம்.இந்நிக‌ழ்சி முழுவ‌தும் த‌மிழ‌ன் தொல‌க்காட்சியில் ஒளிப‌ர‌ப்பாக‌ இருக்கிற‌து.அனைத்து ச‌மூக‌த்தின‌ரும் அணி திர‌ண்டு வாரீர்

குறிப்பு : இர‌வு உண‌வு அனைவ‌ருக்கும் ஏற்பாடு செய்ய‌ப்பட்டுள்ள‌து.

தொட‌ர்புக்கு ஈமான் துபாய்
050 51 96 433 / 050 58 53 888 / 050 467 4399

முஸ்லீம் அல்லாத மாற்று மத நண்பர்களை அழைத்து செல்லுங்கள்,மார்க்கத்தை அழகிய முறையில் அறிமுகப்படுத்துங்கள்.

Thursday, February 12, 2009

இஸ்லாம் பார்வையில் "தூய எண்ணம்"

அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:
செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.

(உதாரணமாக) ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்கானதாகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும். அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் رَضِيَ اللَّهُ عَنْهُ (புகாரி, முஸ்லிம்)

நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ (முஸ்லிம்)

அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். மறுமைநாளில் அனைவர்க்கும் முதலில் இறைவனின் பாதையில் வீரமரணம் அடைந்தவனுக்கு எதிராகாத் தீர்ப்பளிக்கப்படும். அம்மனிதன் இறைவனின் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவான். பிறகு, இறைவன் அவனுக்குத் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் நினைவவூட்டுவான் அப்போது அவனுக்கு தான் பெற்றிருந்த அருட்கொடைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். இறைவன் அம்மனிதனிடம் வினவுவான்: நீ என் அருட்கொடைகளைப் பெற்று என்னென்ன பணியாற்றினாய்?

அம்மனிதன் கூறுவான்: நான் உன் உவப்புக்காக (உன் மார்க்கத்தை எதிர்த்துப் போரிடுவோருக்கு எதிராக) போரிட்டேன். இறுதியாக என் உயிரையும் கொடுத்து விட்டேன். இதை கேட்ட இறைவன் அவனிடம் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். மக்கள் உன்னை வீரன், துணிவு மிக்கவன் எனப் புகழ வேண்டும் என்பதற்காகத்தான் நீ போரிட்டாய்! (வீரத்தை வெளிக்காட்டினாய்!) அதற்கான புகழுரையும் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது! என்பான். பின்னர், இறைவன் அந்த உயிர்த் தியாகியைத் தலைகீழாக இழுத்துச்சென்று நரகத்தில் எறியும்படி கட்டளையிடுவான். அந்த மனிதன் நரகத்தில் எறியப்படுவான்.

பிறகு, மார்க்க அறிஞராயும், போதகராயும் இருந்த இன்னொரு மனிதன் இறை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவன் குர்ஆனைக் கற்றுத் தெளிந்த காரியாகவும் இருப்பான். அவனுக்கு இறைவன் தான் அளித்த அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவனுக்கு அருள் நலங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: இந்த அருட்கொடைகளைப் பெற்ற நீ என்ன நற்செயல் புரிந்தாய்?

இறைவா! நான் உனக்காக உனது தீனைக் கற்றேன். உனக்காகவே அதனைப் பிறர்க்கு கற்பித்தேன். உனக்காகத்தான் குர்ஆனை ஓதினேன் என்று அம்மனிதன் கூறுவான். இதைக் கேட்ட இறைவன் பின்வருமாறு கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய்! மக்கள் உன்னை அறிஞர் எனக் கூறவேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய்! குர்ஆனை நன்கறிந்தவர் என மக்கள் உன்னை புகழ வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை ஓதினாய்! அதற்கான வெகுமதி உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் எறியுங்கள் எனக் கட்டளையிடப்படும். அவ்வாறே அவன் நரகில் எறியப்படுவான்.

உலகில் வசதி வாய்ப்புக்கள் பலவும் அளிக்கப்பட்டிருந்த மூன்றாவது மனிதன் இறைவனின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவனுக்கு எல்லாவகைச் செல்வங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இறைவன் அம்மனிதனிடம் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் எடுத்துக் கூறுவான்.

அப்போது அவன், ஆம்! இந்த அருட்கொடைகள் அனைத்தும் எனக்கு அளிக்கப்பட்டிருந்+தன என ஒப்புக்கொள்வான். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: என் அருட்கொடைகளைப் பெற்று நீ என்ன நல்வினை புரிந்தாய்? அம்மனிதன் சொல்வான்: உன் உவப்பைப் பெற எந்தெந்த வழிகளில் செலவழிப்பது உனக்கு விருப்பமானதோ, அவ்வழிகளில் எல்லாம் நான் செலவு செய்தேன்

இறைவன் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். நீ இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மக்கள் உன்னை வள்ளல் எனப்புகழ்ந்து போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் வாரி இறைத்தாய்! அந்த வள்ளல் பட்டம் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, இவனை முகம் குப்புற இழத்துச் சென்று நரகில் வீசி விடுங்கள் எனக் ஆனையிடப்படும். அவ்வாறே அவன் இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப்படுவான். அறிவிப்பாளர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்

Wednesday, February 11, 2009

இஸ்லாம் பார்வையில் "பெரும் பாவங்கள்"

பெரும் பாவங்களில் மிகப் மிகப் பெரியதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினர். அதற்கு நாங்கள் சரி என்றோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் (அநியாயமாக) கொலை செய்வதுமாகும் என்று கூறிச் சாய்ந்து வீற்றிருந்த நபி صلى الله عليه وسلم நிமிர்ந்து அமர்ந்து மேலும் கூறினர்; அறிந்து கொள்ளுங்கள். பொய்யுரைப்பதும், பொய்ச்சான்று பகர்வதுமாம் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவற்றைத் திரும்பத் திரும்ப கூறாது) வெறுமனே இருந்து விடட்டுமே என்று கூறும் வரை. அறிவிப்பாளர்: அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் புகாரி, முஸ்லிம், திர்மிதீ

பெரும் பாவங்களைப் பற்றி ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அவை ஒன்பதாகும். [1] இணை வைப்பதும் [2] சூனியம் செய்வதும் [3] கொலை செய்வதும் [4] வட்டியை உண்பதும் [5] அனாதிகளின் பொருள்களை உண்பதும் [6] போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவதும் [7] கணவர்களைப் பெற்றுள்ள குற்றமற்ற பெண்கள் மீது அவதூறு கூறுவதும் [8] பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் [9] உங்களுடைய கிப்லாவான கஃபதுல்லாஹ்வில் செய்யத் தகாததைச் செய்ய, ஒருவன் வாழும்பொழுதும் இறந்த பின்பும் பிறர் செய்து வருவதையும் ஆகுமாக்குவதாகும் என்று கூறினர். அறிவிப்பவர்: உபைதுப்னு உமைர் அவர்கள் தமது தந்தை மூலம் அறிந்து, ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

அல்லாஹ்வுடைய நபியே! அல்லாஹ்விடம் எந்த பாவம் மிகப்பெரியது என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், நீர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும். அவன்தான் உம்மைப் படைத்தவன் என்று கூறினார்கள். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், உம்முடைய குழந்தைகள் உம்முடைய உணவில் பங்காளிகளாக வந்து விடுவார்களென்று அஞ்சி அவர்களைக் கொலை செய்வதாகும்' என்று கூறினர். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள் 'நீர் உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் மனைவியைச் சோரம் செய்வதாகும்' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ

'ஒருவன் தனது பெற்றோர்களை ஏசுவதும் நிச்சயமாகப் பெரும் பாவங்களைச் சேர்ந்ததேயாகும்' என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அப்பொழுது) மனிதன் தன் பெற்றோர்களையும் ஏசுவதுண்டா? என்று நாங்கள் வினவினோம். ஆம்! இவன் மற்றவனின் தந்தையை ஏசுகிறான். அவன் இவனுடைய தந்தையை (பதிலுக்கு) ஏசி விடுகிறான். இவன் மற்றவனின் தாயை ஏசி விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னுல் ஆஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

Monday, February 9, 2009

இஸ்லாம் பார்வையில் "நோயாளியை நலம் விசாரித்தல்"

பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி அவர்கள், ''முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து'' என கூறியபோது நபி அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி அவர்கள் கூறினார்கள், ''அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)

''ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான்.

''ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை'' என்று கூறுவான். அம்மனிதன் ''எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ''எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி அவர்கள் கூறினார்கள்: ''ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.'' (ஸ¤னனுத் திர்மிதி)

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் 'நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்' என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ''நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!'' என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி அவர்கள், ''இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்'' என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ''உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ''யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.'' (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ''கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)


நபி அவர்கள் கூறினார்கள்: ''பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)

Sunday, February 8, 2009

இஸ்லாம் பார்வையில் "உபரியான வணக்கம்"

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி அவர்கள், "இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர், "அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை" என்றார்கள்

அடுத்து, "ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் "என்று நபி அவர்கள் கூறினார்கள். உடனே அவர், அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.

அவரிடம் நபி அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், "அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?" என்றார். அதற்கு அவர்கள் "நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை" என்றார்கள். உடனே அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்" என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி அவர்கள், "இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி) நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகின்றார்கள் :
நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி," என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர் : தமீமுத் தாரி(ரலி) நூல்: தாரமீ

உங்களில் ஒருவர் தன் நற்செயலினால் (மட்டும்) சொர்க்கத்தில் புகமுடியாது' என்றார்கள். இதைக்கேட்ட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா? எனக் கேட்டனர். அதற்கு, ஆம் நானும் தான், என்றாலும் இறைவன் தன் அருளால் என்னை பாதுகாத்துக் கொண்டான். எனவே வணக்கத்தில் பேணுதலாகவும், இரவும் பகலும் நெருங்குங்கள். மேலும், இவற்றில் (வணக்கங்களில்) நடுநிலையை மேற்கொள்ளுங்கள்!. என்று நபி அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: முஸ்லிம், புகாரி

Saturday, February 7, 2009

மண்டிய இருள் கிழிக்கும், மக்களின் எழுச்சி!மாற்று அரசியலுக்கான, மாபெரும் புரட்சி!!

மண்டிய இருள் கிழிக்கும்
மக்களின் எழுச்சி
மாற்று அரசியலுக்கான
மாபெரும் புரட்சி


என்ற இலட்சியத்துடன்,முஸ்லீம் மக்களுடன்,தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட,மற்ற ஏனைய சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காகவும்,தேர்தல் அரசியல் களத்தில் குதித்துள்ள மனித நேய மக்கள் கட்சி,சீரிய முறையில் தொண்டாற்றி,மக்களுக்கு நன்மை பல கிடைக்க,எல்லாம் வல்ல அல்லாஹ்,அதன் நற் பணிகளில் துணை நின்று,உதவி புரிவானாக.ஆமீன்.

த மு மு க மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள் முதற்கொண்டு அனைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்!அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக,ஆமீன்.

Friday, February 6, 2009

இஸ்லாம் பார்வையில் "சபித்தல்"

ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம்

"அதிகம் சபிப்பது உண்மையானவனுக்கு அழகல்ல!" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

ஒரு அடியான், ஏதாவது பொருளை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும், அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால், யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின் பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால், சொன்னவரிடமே திரும்பிச் சென்று விடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) அபூதாவூத்

'அல்லாஹ் சபிப்பானாக! அவனின் கோபம் உண்டாகட்டும்! என்றோ, நெருப்பைக் கொண்டோ: ஒருவருக்கொருவர் சபிக்க வேண்டாம்!" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமூரா (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

அதிகம் சபிப்பவர்கள் 'மறுமை நாளில்" பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ

'ஒரு முஃமினை திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ: கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ

Thursday, February 5, 2009

இஸ்லாம் பார்வையில் "மென்மை"

நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: "அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)


நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்: ஒரு கிராமவாசி மஸ்ஜிது (நபவி)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார் அவரைத் தடுப்பதற்கு மக்கள் ஆவேசமடைந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், "அவரை விட்டுவிடுங்கள்! அவரது சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் இலகுபடுத்தவே அனுப்பப்பட்டீர்கள். சிரமப்படுத்த அனுப்பப்படவில்லை'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "நற்செய்தி கூறுங்கள்! வெறுப்படைய செய்யாதீர்கள், எளிதாக நடந்து கொள்ளுங்கள், சிரமப்படுத்தாதீர்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: "எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.'' மற்றோர் அறிவிப்பில்: "ஒரு குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்'' என நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: "ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "நரகத்திற்கு ஹராமாக்கப்பட்ட ஒருவரைப் பற்றி அல்லது எவர் மீது நரகம் ஹராமாக்கப்படுமோ அவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மக்களை நெருங்கியிருக்கும் மென்மையான, இலகுவான, நளினமான ஒவ்வொருவர் மீதும் நரகம் ஹராமாக்கப்படும்.'' (ஸுனனுத் திர்மிதி)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் எல்லா விஷயங்களிலும் உபகாரத்தை விதித்திருக்கிறான். நீங்கள் கொலைத் தண்டனையை நிறைவேற்றினால் அழகிய முறையில் நிறைவேற்றுங்கள். பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுத்துக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவர் கத்தியை நன்கு தீட்டிக் கொள்ளட்டும். அதனால் பிராணிகளுக்கு (சிரமத்தை) இலேசாக்குங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

Wednesday, February 4, 2009

இஸ்லாம் பார்வையில் "பிரார்த்தனை"

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!

பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:
ஃபுளாலத் பின் உபைத்

رَضِيَ اللَّهُ عَنْهُ, நூல்: திர்மிதீ


அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

(உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ

அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான் என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ, நூல்:ஹாகிம்

உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரீ, முஸ்லிம்

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூத், திர்மிதி)

நிச்சயமாக உங்கள் இறைவன் நித்திய ஜீவன். கொடையாளன். அவனுடைய அடிமைகளில் யாரேனும் அவனிடம் (எதையேனும் கேட்டு) கையேந்திவிட்டால் அதனை வெறுங்கையாக திருப்பிவிட அவன் வெட்கப் படுகிறான். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாாிஸி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத், திர்மிதி)

ஒரு முஸ்லிம், பாவச்செயல் மற்றும் இரத்த பந்த உறவுகளை முறிக்காத எந்தப் பிரார்த்தனையை இறைவனிடம் கேட்டாலும் அதற்கு இறைவன் (மூன்றில்) ஏதேனும் ஒரு விதத்தில் பதில் அளிக்கிறான்.1) அவன் கேட்டதை கொடுத்து விடுகிறான். 2) மறுமைக்காக அதன் நன்மையை சேர்த்து வைக்கிறான். 3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கை போக்கிவிடுகிறான்.

என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது ஒரு நபித்தோழர், அல்லாஹ்வின் தூதர்صلى الله عليه وسلم அவர்களே! நாங்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யப் போகிறோம் என்றார்கள். அதற்கு நபிصلى الله عليه وسلم அவர்கள், அல்லாஹ்வும் மிக அதிகமாக்குவான் என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: ஹாகிம்)

இம்மண்ணுலகில் இருக்கும் எவரும் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அல்லாஹ் அதை கொடுக்காமல் இருப்பதில்லை. ஆனால் அவர் பாவமானவற்றையும் உறவினரை பகைப்பதையும் பிரார்த்திக்காதிருக்க வேண்டும். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: ஹாகிம்)

உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்துவிடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் உங்களுக்கே எதிரான அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் : முஸ்லிம்)


உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை. (அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் : புகாரீ)


நான் என்னுடைய இரட்சகனிடம் பிரார்த்தனை செய்தேன், ஆனால் அவன் அதற்கு பதிலளிக்கவில்லை என்று கூறி அவசரப்படாதவரை உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். (அறிவிப்பவர் : அபூஹரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரீ, முஸ்லிம்)

Tuesday, February 3, 2009

இஸ்லாம் பார்வையில் "அண்டை வீட்டார்"

முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்கு கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக (கொடுக்காமலிருக்க) வேண்டாம். சிறிதளவு இறைச்சி ஒட்டிக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டாக இருப்பினும் சரியே! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

அண்டை வீட்டுக் காரர் அவரது எல்லையில் ஒரு மரக்குச்சி நடுவதை ஆட்சேபிக்க வேண்டாம் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடியவர் தம் அண்டை வீட்டாரைத் தொல்லை படுத்த வேண்டாம் என்று என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவ்விருவரில் யாருக்கு (முதலில்) அன்பளிப்புக் கொடுக்கவேண்டும் என்று கேட்டேன், அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் எந்த வீட்டின் வாசல் உனக்கு மிக அருகில் உள்ளதோ அந்த வீட்டாருக்கு என்று விடையளித்தார்கள் . ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி

அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு அண்டை வீட்டார் பற்றி ஜப்ரீல்(அலை) என்னிடம் வலியுருத்திக்கொண்டே இருந்தனர். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி), இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

அபூதர்! நீ குழம்பு சமைத்தால் (அது குறைவாக இருந்தால்) அதில் தண்னீரை அதிகப்படுத்தி உண் அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். முஸ்லிம்

எவரது தொந்தரவிலிருந்து அண்டை வீட்டார் அச்சமற்று இருக்க முடியவில்லையோ அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஈமான் கொண்டவராக மட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

Monday, February 2, 2009

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம்!!!

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், "இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!'' என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)

"எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்: "எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.'' பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

உபை இப்னு கஅப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், "நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!'' என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: "நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்'' என்றார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)


நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் அவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரைவிட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)


உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: "இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)


அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)


நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்.'' (ஸஹீஹுல்புகாரி)

Sunday, February 1, 2009

இஸ்லாம் பார்வையில்"இரத்த பந்தம்"

அபூ அய்யூப் அன்சாரி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஒர் அமலை எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், ""நீர் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது'' என்று கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது, நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""எவர் தன்னுடைய இரணம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும், ஆயுள் நீளமாக்கப்பட வேண்டுமெனவும் விரும்புகிறாரோ அவர் தனது இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறுகிறார்கள்: ""தனது இரட்சகனை அஞ்சி, இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்பவருடைய ஆயுள் நீளமாக்கப்படும், செல்வங்கள் பெருகும், அவரை அவரது குடும்பத்தினர் நேசிப்பார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஒரு கூட்டத்தில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் இருந்தால் அந்தச் சமுதாயத்தினர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்காது.'' (ஷு"ஃ புல் ஈமான் அல் பைஹகீ)


நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""மறு உலகில் அல்லாஹ் தண்டிப்பதுடன் இவ்வுலகிலும் தண்டனை தருவதற்கு மிகத் தகுதியான குற்றம் உறவுகளைத் துண்டிப்பதை விடவும், அக்கிரமம் செய்வதை விடவும் வேறொன்றுமில்லை.'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)


அல்லாஹ் அருளியதாக நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""நானே ரஹ்மான். நான் "ரஹிமை' (இரத்த பந்தத்தை)ப் படைத்தேன். அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன். யார் அதைச் சேர்த்துக் கொள்கிறார்களோ நானும் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன். எவர் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன்.'' (ஸுனன் அபூதாவூத்)

ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?'' என்று கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஆம்ரு இப்னு ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது: ""இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் நேசர்கள் அல்லர். என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தான். ஆயினும் அக்குடும்பத்தாருடன் எனக்கு இரத்த பந்தம் உண்டு. அதை நான் உபகாரத்தால் பசுமையாக்குவேன்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறினார்: ""அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து கொள்கின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: ""நீ சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலை சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!