Wednesday, September 30, 2009

இவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா?

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத - கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை - பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக - பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

(நபியே?!) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - திருக்குர்ஆன் - 112:1-4


நன்றி: Readislam.net


அபூ பாத்திமா

Thursday, September 24, 2009

நீங்களும் முயற்சிக்கலாமே!

சமச்சீர் கல்விக்கான புதிய பாடத் திட்டம் தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகள் ஆகியவையும், பாடப் புத்தகங்கள் எழுத தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (டி.டி.இ.ஆர்.டி.) கூறியுள்ளது.

இது தொடர்பாக டி.டி.இ.ஆர்.டி. புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவதன் முதல் கட்டமாக 1 முதல் 10-ம் வகுப்பு வரை புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதற்காக கல்வி வல்லுநர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட 150 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பாடத் திட்டம் தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகள் கூற விரும்புகிறவர்கள் தங்கள் கருத்துகளை "இயக்குநர், டி.டி.இ.ஆர்.டி. டிபிஐ, வளாகம், கல்லூரி சாலை, சென்னை-06' என்ற முகவரியிலோ அல்லது

dtert@tn.nic.in

என்ற மின்னஞ்சலிலோ தெரிவிக்கலாம்.

இக்கருத்துகள் தேவையின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

பாடப் புத்தகம் எழுத: முதல் கட்டமாக 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கும், 2-ம் கட்டமாக 2, 3, 4, 5, 7, 8, 9, 10-ம் வகுப்புகளுக்கும் பாட நூல்கள் தயாரிக்கப்பட உள்ளன.

பாடப் புத்தகங்களை எழுதுவதற்கு தகுதியும், திறனும் உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், உதவிபெறும் தனியார் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல் பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் பாட நூல்கள் எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை

www.pallikalvi.in

என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் வழியாக, சென்னை டி.பி.ஐ.யில் உள்ள டி.டி.இ.ஆர்.டி. இயக்குநருக்கு 5.10.09-க்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப உறையின் மீது பாடப் புத்தகங்கள் எழுதுவதற்கான விண்ணப்பங்கள் என்று குறிப்பிட வேண்டும்.

புத்தகம் எழுத தெரிவு செய்யப்பட்டு, பணியை மேற்கொள்பவர்களுக்கு மதிப்பூதியம், பயணப்படி, சான்றிதழ் போன்றவை வழங்கப்படும். எழுதுவோரின் பெயர்களும் புத்தகத்தில் இடம்பெறும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பி.ஈஸ்வரி -94449 29142; கே.மஞ்சுளா -98412 98425; என்.சத்தி -94445 20311 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, September 19, 2009

இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எங்களது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

Monday, September 14, 2009

"தவக்குல்"

ஒருவர் இறைவனை முழுமையாகச் சார்ந்து நின்று, அவர்தம் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற இறைவனே பொறுப்பேற்கக் கூடியவன் என்ற உறுதியுடன் செயல்படுவது "தவக்குல்' எனும் இறைச் சார்பு நெறியாகும்.

இந்த நெறியானது, "கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்ற முதுமொழியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இதுபற்றி கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனங்கள் விளக்கமளிப்பதாக உள்ளன.

"இறைவனே சிறந்த பொறுப்பேற்பவனாக இருக்கிறான்' (3:173); "நீங்கள் இறைவனையே சார்ந்து நில்லுங்கள்; அவனே உங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளப் போதுமானவன்' (33:3); "நிச்சயமாக இறைவன் (தன்னிடம்) பொறுப்பை ஒப்படைப்பவர்களை மிகவும் நேசிக்கிறான் (3:159).

இதன் மூலவசனங்களில் இடம் பெற்றுள்ள அரபி மொழிச் சொற்களான "தவக்குல்' என்பதும், "வக்கீல்' என்பதும் முறையே இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவனைத் தன் பொறுப்பாளனாக்கிக் கொள்வதையும், பொறுப்பேற்பவனாகிய இறைவனையும் குறிப்பவை.

இங்கு, "நம் காரியங்கள் அனைத்துக்கும் இறைவனே பொறுப்பேற்கிறான்' என்பதன் பொருள் என்னவெனில், "நம்மை முழுமையாக அவனிடம் ஒப்படைத்துவிட்டோம்; இனி அவனே நமக்கு வேண்டியவற்றை எல்லாம் வழங்குவான்' என்று வாளாவிருப்பதல்ல; மாறாக இறைவன் நமக்குத் தந்துள்ள அறிவையும், ஆற்றலையும் முறையாகப் பயன்படுத்தி முழுமையாக உழைத்த பின்னர், "அவ்வுழைப்பின் பயன் இறைவன் புறத்தே உள்ளது' என்று திடமாக நம்புவதேயாகும்.

இதனை, நபி (ஸல்) அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டின் மூலமாக மேலும் தெளிவுப்படுத்திக் கூறியுள்ளார். அதாவது, ""நீங்கள் இறைவனிடம் முழு நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று இறைவன் உங்களுக்கும் உணவளிப்பான். ஒட்டிய வயிற்றுடன் காலையில் கிளம்பிச் செல்லக்கூடிய பறவை, வயிறு நிரம்பிய வண்ணம் மாலையில் திரும்புகிறது.'' இவ்வெடுத்துக்காட்டில் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது யாதெனில், "இறைவன் உணவளிப்பான்' என்பதற்காக பறவை கூட்டினுள் இருந்தால் அதற்குத் தேவையான உணவு, பறவையின் கூட்டினை வந்தடைவதில்லை. பறவை உணவைத் தேடிப் பறந்து செல்கிறது; அதற்கு உணவு கிடைக்கிறது. அதைப் போன்றுதான் மனிதனும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கான பலனை இறைவன் வழங்குகிறான். (அறிவிப்பாளர் உமர் (ரலி); ஆதாரம்-மிஷ்காத்.)

இறை நம்பிக்கையும், முழு முயற்சியும் இணைந்தே நம் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகின்ற மற்றொரு நபிமொழி : "நீ இறைவனை நம்பு; ஆனால் உன் ஒட்டகத்தைக் கட்டி வை' என்பதாகும். (அறிவிப்பாளர் அனஸ் (ரலி); ஆதாரம் - திர்மதி)

"இறைவனைச் சார்ந்து நிற்றல்' என்ற இந்த நிலைப்பாடு, மனித வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

உதாரணத்திற்கு உழவுத் தொழிலை எடுத்துக் கொண்டால், முதலில் உழவன் நிலத்தை உழுது, விதைவிதைத்து, நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு, களை எடுத்து- இவ்வாறெல்லாம் செய்த பின்னர் நல்ல விளைச்சலை ஆவலுடன் எதிர்பார்க்கிறான் அல்லவா? இறைவனிடமிருந்து அவன் இதனை எதிர்பார்க்க வேண்டும். அப்பொழுது இறைவன் உழவனுடைய இப்பயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறான்; பயிர் செழித்து வளர்வதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி, உழவன் எதிர்பார்த்தவாறு நல்ல விளைச்சலை இறைவன் அளிக்கிறான்; இதனால் உழவன் உளம் மகிழ்கிறான்; மனநிறைவுடன் அந்த இறைவனுக்கு அவன் நன்றி செலுத்துகிறான். தவக்குலின் பொருளடக்கம் இதுதான்.

ஓர் அடியான் இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்தலின் மற்றுமோர் முக்கிய அம்சம் என்னவென்றால், தன் விவகாரங்களை முடிந்த வரை முயற்சி செய்து முடித்துவிட்ட பிறகு, "இறைவா! நான் சக்தியற்றவனாக இருக்கிறேன்; பலவீனனாகவும் இருக்கிறேன். நீயே வல்லமை மிக்கவன்! எனவே நான் மேற்கொண்ட பணிகளில் குறைகளிருப்பின் நீயே நிறைவு செய்து நற்பயன் அருள்வாயாக!' என்று இறைவனை வேண்டி நிற்பதாகும்.

இவ்வாறாக, "தவக்குல்' எனும் இறைச் சார்பு நெறியை உறுதியாகக் கடைபிடிப்பதன் மூலமாக, நமக்கு இறைவனுடைய அருளும், உதவியும் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதனையே "நம்பிக்கை கொண்டோருக்கு உதவி செய்வது தம் கடமை' (30:47) என்றும், "தம் அருட்கொடையைப் பற்றி எவரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்' (39:53) என்றும் இறைவன் திருமறையில் திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளான்.

எனவே, நாம் இறை நம்பிக்கையுடன் செயல்படுவோம்; அவன்தன் அருளைப் பெற்றிடுவோம்.

எம்.கே.எஸ். பாவா

Thursday, September 10, 2009

தொழுது கொள்வோம்,நமக்கு தொழுகை வைக்கப்ப்படுமுன்!





அறிவிப்பாளர் : அப+ஹுரைரா (ரலி)
நபி அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக் கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)

இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். 2:110

Wednesday, September 9, 2009

வந்தார்கள்,சொன்னார்கள்,மா மனிதரைப் பற்றி!

உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முஹம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே!

1400 ஆண்டுகள் கழிந்த பின் இன்றும் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் குறைக்கப்படாமலும் கூட்டப்படாமலும் எந்தவொரு மாற்றமுமின்றி நமக்கு அப்படியே கிடைக்கின்றன. மனித சமுதாயத்தின் பெரும் பிரச்சினைகளை அப்போதனைகள் அன்று தீர்த்து வெற்றி கண்டதைப் போலவே இன்றும் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவையாய் இருக்கின்றன. இதுவே வாய்மையாய் யாம் உலகிற்கு மொழியும் கூற்றாகும். வரலாற்றை ஆராயும் ஒவ்வொருவருக்கும் தென்படும் தவிர்க்க முடியாத முடிவாகும்.

மைக்கேல் ஹார்ட்,the 100 எனும் நூலில்
---------------------------------------

உயர்ந்த லட்சியம், குறைவான வசதிகள் வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம் மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள். சட்டங்களை இயற்றினார்கள். பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவை தான்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்து விட்ட உலகாயதக் கோட்டைகளைத் தான் அவர்களால் நிறுவ முடிந்தது.

ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரசவம்சங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை. அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார்கள். வழிபாட்டுத் தளங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துக்களையும், கொள்கையையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள்.

வெற்றியின் போது அவர்கள் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத் தன்மை, தாம் ஏற்றுக் கொண்ட பணிக்காக தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவரது உயர் நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடன் அவர்கள் நடத்தி வந்த மெஞ்ஞான உரையாடல்கள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஓர் ஏமாற்றுக்காரர் என்றோ,மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை. மாறாக, சமயக் கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத் தான் பறைசாற்றுகின்றன.

சரித்திர ஆசிரியர் லாமர்டின்
------------------------------------------

பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.

டாக்டர் அம்பேத்கார்

-----------------------------------------
முஹம்மது இரக்கமே உருவானவர். அவரது இரக்கம் அவரைச் சுற்றியுள்ளவர்களைக் கவர்ந்திழுத்தது.

- திவான் சந்த் ஷர்மா (D.C.Sharma – The Prophets of the East Calcutta 1935 pp 12)

-------------------------------------------

இனத்தார் மேல் பற்றுக் கொள்ளல் தவறா என்று
…..இறைத்தூதர் நபி பெருமான் தன்னிடத்தில்
வினாவொன்று வைத்து நின்றார் நல்ல நண்பர்
…..விரைந்தங்கு நபி பெருமான் பதிலைச் சொன்னார்
இனத்தார் மேல் பற்று அவர்க்கு உதவி செய்தல்
…..எல்லாமே மிகச் சரிதான் ஆனால் மற்றோர்
இனத்தார் மேல் கொடுமை செய்ய உதவி நின்றல்
…..இனவெறி தான் நல்லதில்லை என்று சொன்னார்

நெல்லை கண்ணன்
--------------------------------------------
இன்னும் வருவார்கள்,
சொல்வார்கள்-இன்ஷா அல்லாஹ்.

Friday, September 4, 2009

வெற்றிக்கு வழி! கண்ணை மூடிக்கொண்டு,கடவுளை நம்ப வேண்டுமா?தொடர் 4

ட்ரைன் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.டிரைனின் சப்தம் தவிர வேறு சத்தம் இல்லை.ஷண்முகமும்,ரஞ்சிதம்மாலும் சிந்தனையில் மூழ்கி இருந்தனர்.எப்படி இவ்வளவு அருமையான முறையில் இஸ்லாம் அமைந்திருக்கிறது.இன்னும் அது பற்றி தெரியவேண்டும் என்ற உந்துதல் இருவருக்கும் ஏற்பட்டத்தில் வியப்பில்லை.

"பாய், ஏக இறைவன்தான் எல்லாவற்றையும் படைத்தான் என்பதை ஒத்துக்கொள்கிறேன்,சரி,குர்ஆனில் அவன் படைத்தவைகளின் செயல்,அதிசயம்,இன்னும் பலவற்றை பற்றி ஏதும் செய்தி உண்டா?ஏனெனில்,இன்னைக்கு பல சமயங்களில் விஞ்ஞானமும்,மருத்துவமும் சொல்லிக் கொண்டே இருக்கிறதே,அதனால் கேட்டேன்,அதுமட்டுமல்ல,குர்ஆன் இறைவன் அருளிய வேதம் என்றால்,கூறப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?என்றார் ஷண்முகம்.
"ஒ அதுபற்றி கடல் அளவு செய்திகள் சொல்லப்பட்டிருக்கு,என்னால் இயன்ற அளவு,தெரிஞ்ச அளவு சொல்கிறேன்"என்று ஆரம்பித்தார் பஷீர் காக்கா.

"மனிதப் படைப்பை ஓர் உதாரணமாகக் கொள்வோம். தந்தையால் வெளிப்படுத்தப்படும் இலட்சக்கணக்கான விந்தணுக்களில் ஒன்றே ஒன்று மட்டும் தாயின் கருவறையில் சினை முட்டையுடன் இணைந்து ஒரு கருவாகிறது! ஆரம்ப நிலையிலிருக்கும் இக் கருவுக்கு தான் பிறந்து செல்லவிருக்கும் வெப்பம், குளிர், காற்று, ஒளி, ஒலி எல்லாம் உள்ள உலகத்தைக் குறித்த எந்த அறிவும் இருப்பதில்லை! ஆனால் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள உதவும் திசுக்களாக சுயமாகவே பெருக்கமடைகிறது! ஒன்றாக இருந்தது சுயமாகவே பலகோடி திசுக்களாகப் பெருக்கமடைகின்றன. இதயம், நுரையீரல், இரைப்பை முதலான உடலின் உள்ளுறுப்புகள் உருவாகின்றன.. எல்லாவற்றுக்கும் மேலாக இவற்றையெல்லாம் நிர்வகிக்கின்ற மிகப்பெரிய அற்புதமாகிய மூளை உருவாகின்றது! எவ்வாறு இது நடை பெறுகிறது? அற்பமான, புறக்கண்ணால் பார்க்க இயலாத வேறுபட்டிருந்த இரு அணுக்களை ஒன்றிணையச் செய்து, இவ்வளவு அற்புதச் செயல்களை நடைபெறச் செய்பவன் யார்? இவற்றக்குப் பின்னால் உள்ள ஒரு படைப்பாளனை ஏற்றுக் கொள்வதன்றோ அறிவுடைமை?"


படைப்புகளைப் பற்றிய சிந்தனையின் மூலம் படைத்தவனின் உள்ளமையை அறிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுப்பூர்வமான கோட்பாடைத் திருக்குர்ஆன் கூறுகிறது.

“ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? வானத்தை, அது எவ்வாறு உயர்த்தப் பட்டுள்ளதென்றும், மலைகள், அவை எவ்வாறு நடப்பட்டுள் ளனவென்றும். பூமி, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ள தென்றும் (அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?)” (அல்குர்ஆன் 88: 17-20)


கண்ணை மூடிக் கொண்டு கடவுளை நம்ப வேண்டும் என்பதை விட படைத்தவனைக் குறித்து அறிந்து நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை இஸ்லாம் கற்றுத் தருகிறது. இறை கொள்கையில் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தரும் இத்தகைய உயர்ந்த கொள்கை இன்று நடைமுறையில் உள்ள எந்த மதத்திலும் கிடையாது என்பது இஸ்லாமினுடைய தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். தன்னைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தைக் குறித்தும் ஆராய்வதன் மூலம் இதற்குப் பின்னாலிருக்கும் அந்த இறைவனின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுமாறு மனிதனுக்கு அழைப்பு விடுக்கும் குர்ஆனிய வசனங்கள் பாமரர் முதல் விஞ்ஞானிகள் வரை புரிந்து கொள்ளக் கூடிய அளவில் தெளிவாகவும் எளிதாகவும் உள்ளது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் அருளப்பட்ட வசனங்களைப் பாருங்கள்

யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96: 1 -4)
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (23:12-14)

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (56: 58, 59)

"அறியாத பாமரன் முதல் அறிவியலாளன் வரை இத்தகைய சிந்தனையால் தன் இறைவனைப் பற்றி அறிய உதவும் எளிய கோட்பாடை குர்ஆன் கற்றுத் தருகிறது."



இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

Thursday, September 3, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? நரக நெருப்பில் நுழைவதற்கான முதன்மையான காரணம்!தொடர் 13

அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதல் முதலில் (இறைவழியில் உயிர் துறந்து) ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒத்துக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம் 'நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர், 'நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரை போராடினேன்" என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய்: வீரன் என்று கூறப்படுவதற்காகவே போாிட்டாய். இவ்வாறே (மக்களாலும் உலகில்) பேசப்பட்டு விட்டது" என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதர்; முகங்கவிழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.

பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆன் ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ், தான் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம், 'நான் கொடுத்த அருட்கொடைகளை என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர், 'நான் உனக்காக (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனை (பிறருக்கும்) கற்றுக் கொடுத்து, குர்ஆனை உனக்காக ஓதி வந்தேன்" என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய், அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டுமென்பதற்காகவே இஸ்லாமிய அறிவைக் கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக்கூடியவர்கள் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களாலும்) பேசப்பட்டு விட்டது" என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும் வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லும் படி ஆணையிடப்படும்.

அதன் பின்னர் செல்வந்தர்; ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவருக்கு அல்லாஹ் தான் அளித்துள்ள அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம், 'நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர் 'நீ எந்த வழிகளிலெல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் நான் செலவு செய்யாமல் விட்டதில்லை." என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய். (இவர் வள்ளல் தனத்துடன்) வாாி வாாி வழங்குபவர், என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது" எனக்கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லுமாறு ஆணையிடப்படும். நூல்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ

சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீபில் இந்த அறிவிப்பின் இறுதியில் பின்வரும் வாசகமும் இடம் பெற்றுள்ளது. பிறகு அண்ணல் நபி அவர்கள் எனது முட்டிகளைத் தட்டி விட்டுச் சொன்னார்கள்:

'அபூஹுரைராவே! அல்லாஹ்வின் படைப்புகளில் இறுதித் தீர்ப்பு நாளில் நரக நெருப்பிற்கு இரையாகப்போகும் முதல் மூன்று நபர்கள் இவர்கள்தான்"

அபூ அம்மார் யாசிர் அல் காழி - தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!