Showing posts with label சஹாபாக்கள். Show all posts
Showing posts with label சஹாபாக்கள். Show all posts

Wednesday, August 10, 2011

உமராலும் முந்தமுடியாத உத்தமர் இவர்!


உமர்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தர்மம்  செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அதற்கு ஏற்றார்போல் என்னிடம் பொருளாதாரமும் இருந்தது. ''ஏதேனும் ஒரு நாளில் அபூபக்கரை நான் முந்த வேண்டுமாயின், இந்த நாளில் முந்திவிட வேண்டியதுதான்'' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். எனவே என் பொருளாதரத்தில் நான் பாதியைக்  கொண்டு வந்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், உமரே! உமது குடும்பத்திற்காக என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். 'இதுபோன்ற ஒரு பங்கை வைத்து விட்டு வந்துள்ளேன்' என்று நான் பதிலளித்தேன். அபூபக்கர்[ரலி] அவர்கள் தன்னிடமுள்ள பொருளாதாரம் அனைத்தையும் கொண்டு வந்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், அபூபக்ரே! உம்முடைய குடும்பத்திற்காக எதை விட்டு வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவர்களுக்காக விட்டு வந்திருக்கிறேன்' என்று  பதிலளித்தார்கள். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக!எதிலும் அபூபக்ரை முந்த முடியாது என நான் எண்ணிக்கொண்டேன்.

நூல்; திர்மிதி, அபூதாவூத்.

இந்த பொன்மொழியை நாம் கவனிக்கும் வேளையில், அருமை சஹாபாக்கள் எதற்கு போட்டி போட்டுள்ளார்கள் என்பதை முதலாவதாக நம்மால் அவதானிக்க முடிகிறது. நம்மில் பெரும்பாலோர் நமது சக சகோதரரை  செல்வம் உள்ளிட்ட உலக விஷயங்களில் முந்த முற்படுகிறோம். அவரை விட எங்களுக்குத் தான் வலிமை  அதிகம் என்று காட்ட முற்படுகிறோம். இவ்வாறன உலக விஷயங்கள் எல்லாம் சஹாபாக்களுக்கு இரண்டாம்பட்சமாக, இறைவனின் பொருத்தம் ஒன்றே முதலாவதாக தோன்றியதால் தான் செல்வங்களை  அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்குவதில் ஒருவரை ஒருவர் போட்டி  போட்டுக் கொண்டனர். அதிலும் மிக உயர்வான தோழரான அபூபக்ர்[ரலி] அவர்களை, மற்றொரு உயர்வான நபித் தோழர் உமர்[ரலி] அவர்களால் கூட எந்த விஷயத்திலும் நன்மையில் முந்த முடியவில்லை எனும் நிலையில், நாமெல்லாம் நமது அமல்களெல்லாம் இந்த நபித் தோழர்களின் அமல்களோடு ஒப்பிடுகையில் கடலில்  கரைத்த பெருங்காயம் போன்று காட்சியளிக்கிறது. ஆனாலும் நபித் தோழர்கள் வாழ்வில் ஏதேனும் கறையோ, குறையோ தென்படாதா? என கண்ணில் எண்ணெய் ஊற்றி தேடுவதில் மட்டும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நம்மில் பலரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. 

எல்லாம் வல்ல அல்லாஹ், அபூபக்ர்-உமர்[ரலி-அன்ஹும்] ஆகியோரைப் போன்று, நாமும்  நன்மையில் போட்டி போடக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாக!

-- 

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!