Showing posts with label புகை. Show all posts
Showing posts with label புகை. Show all posts

Saturday, June 20, 2009

உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்!


நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.

சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் இருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் þருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு 'சமூக விரோதி' புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.

இறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?

இஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.

நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)

இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு சொல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:195)

உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7:31)

மேலே கண்ட þறைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா?

மார்க்கம், மருத்துவம், ஒழுக்க ரீதியில் தீய பழக்கம் என கருதப்படுவதை முஸ்லிம்கள் தாமும் தவிர்த்து, சமுதாயத்தினரையும் தவிர்க்கத் தூண்டுவதை விடுத்து, தாமே அக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடாகும்.
by அப்துஸ்ஸமது சென்னை

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!