ஆளூர் ஷாநவாஸ் எழுப்பியிருந்த கேள்விக்கு திருமாவளவன் பதில்! திருமாவளவனின் முஸ்லிம் அரசியல் மாற்றமா ஏமாற்றமா என்றத் தலைப்பில், சமநிலைச் சமுதாயம் ஜூலை இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதியிருந்த கட்டுரை அரசியல் சமூக அரங்கில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் உள்ளுணர்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடி படம் பிடித்துக் காட்டிய அந்தக் கட்டுரை வெளியான நாள் முதல் இன்று வரை அது குறித்த உரையாடல் கூர்மையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல தரப்பினரும் சமநிலைச் சமுதாயத்தையும், கட்டுரையாளரையும் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வந்தனர்.
திருமாவின் முஸ்லிம் அரசியல் குறித்த அந்தக் கட்டுரையை திருமாவளவன் படித்தாரா? அதற்கு அவர் பதில் சொல்வாரா? அல்லது மற்ற அரசியல் வாதிகளைப் போல சிக்கலான விசயங்களுக்கு பதிலளிக்காமல் மெளனம் காப்பாரா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகளும் சமுதாய மக்களிடம் எழுந்தது.
இந்நிலையில்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் 05 -09 -2010 அன்று நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய தோழர் திருமாவளவன், தமது முஸ்லிம் அரசியல் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களையும், கேள்விகளையும் தான் வரவேற்பதாகவும், அதற்கு செயல்பூர்வமாக விடை அளிக்க இருப்பதாகவும் கூறினார். முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்து அரசியல் எழுச்சி அடைவதற்கான தொலை நோக்குத் திட்டங்களையும் அவர் அறிவித்தார். திருமாவின் இப்தார் உரை முழுவதும்,சமநிலைச் சமுதாயத்தில் வெளியான கட்டுரைக்கான பதிலுரையாக இருந்தது. ஆளூர் ஷாநவாஸ் எழுப்பியிருந்த கேள்விக்கு தமது பதில் இந்த உரைதான் என்று திருமாவும் அறிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு, தலித் - இஸ்லாமியர் அரசியல் கூட்டணி.. திருமா அறிவிப்பு !
இந்த இனிய இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிற இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்த இப்தார் விருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு உன்னதமான சமூக உறவு வலுப்பெறவும், அதன் மூலம் அரசியல் அரங்கில் ஒரு நிரந்தரக் கூட்டணியை இரண்டு சமூகங்களும் இணைந்து உருவாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும்,இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.
திருமாவளவன் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்? வழக்கமாக நடைபெறும் இப்தார் நாடகங்களைப் போல இதுவும் ஒரு நாடகமா? என்கிற ஐயம் இஸ்லாமிய சமூக மக்களிடம் உருவாகி இருக்கலாம். அல்லது இனி உருவாகலாம். இது தொடர்பாக ஆளூர் ஷாநவாஸ் கூட ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
'திராவிடக் கட்சிகளிடம் முஸ்லிம்கள் பட்ட காயங்களும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் இன்னும் ஆறவில்லை; இந்த நிலையில் திருமா வளவனும் இங்கே தொப்பி போட்டுக் கொண்டு வருகின்றாரே என்ற ஐயம் பலருக்கும் இங்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு திருமாவளவன் பதில் சொல்வாரா' என்று அவர் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதை விட, நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் தோழர்களே..
நீங்கள் என்னை நோக்கி என்ன கேள்வி எழுப்பினாலும், எவ்வளவு சந்தேகமடைந்தாலும் அல்லது பழி சுமத்தினாலும் நான் அதைப் பற்றி கவலைப் படாமல் சகிப்புத்தன்மையோடு இருந்து, தலித்துகளும் முஸ்லிம்களும் இணைந்து ஒரு அரசியல் சக்தியாய் எழுச்சி பெற உறுதியாகப் பணியாற்றுவேன் என்பதை இந்த வேளையில், விடையாகச் சொல்லிக் கொள்கிறேன்.
திருமாவளவன் இப்படி எல்லாம் தொப்பி போட்டுக் கொண்டு வந்து, விருந்து உண்ணுவது ஏன் என்பது ஒரு இயல்பானக் கேள்வி தான்.அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை,எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
நான் எதற்காக நோன்பு இருக்க வேண்டும்? நீங்கள் முப்பது நாட்கள் நோன்பிருக்கின்றீர்கள், முப்பது நாட்களும் இல்லாவிட்டாலும், ஒரு மூன்று நாளாவது நோன்பிருக்க வேண்டுமே என்ற உள்ளுணர்வின் அடிப்படையில், நானே விரும்பி அறிவித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக அதை கடைபிடித்தும் வருகிறேன் தோழர்களே.
வாழ்விலும் இருக்க வேண்டும், தாழ்விலும் இருக்க வேண்டும் என்பதை.. வார்த்தையில் மட்டும் இருக்காமல் செயலிலும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளவன் நான். இப்தாரிலே மட்டும் இருக்க வேண்டும் சகரிலே இருக்கக் கூடாது என்றில்லாமல், இப்தாரிலும் இருப்பான் திருமாவளவன் சகரிலும் இருப்பான் திருமாவளவன், சகரிலும் இருந்து விட்டு இப்தாரிலும் இருந்து விட்டு இடையில் நோன்பில் மட்டும் இல்லாமல் இருக்கக் கூடாது. நோன்பிலும் இருப்பான் திருமாவளவன் என்பதை உறுதிப் படுத்தக் கூடிய வகையில் தான் நான் செயல் பட்டு வருகிறேன்.
இப்படி நான் செயல் படுவதும்,முஸ்லிம்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து நான் போராடுவதும், அரசியல் ஆதாயத்துக்காக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.அதற்கு விடை சொல்ல விரும்புகிறேன்.. ஆம், அரசியல் ஆதாயத்திற்காகத்தான். எனக்கு மட்டுமல்ல நமக்கு, அந்த அரசியல் ஆதாயம் நமக்கு..
நமக்கு அரசியல் ஆதாயம் வேண்டும். நாம் எந்த ஆதாயமும் கருதாமல் எல்லோரையும் தோளில் தூக்கிச் சுமக்கிறோம். தலித்துகளும் அப்படித்தான் முஸ்லிம்களும் அப்படித்தான். பிற சிறுபான்மை மக்களும் அப்படித்தான். ஆக அரசியல் ஆதாயம் கருதாமல் இவ்வளவு காலம் உழைத்தது போதும். இனி நாம் அரசியல் ஆதாயம் கருத வேண்டும். நமக்கு அதிகாரம் வேண்டும்.
ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கிற இரண்டு வர்க்கம். ஆளப்படுவோர் எப்போதும் அடக்கப்படுவார்கள். ஆளப்படுவோர் எப்போதும் சுரண்டப்படுவார்கள், ஆளப்படுவோர் எப்போதும் பழிசுமத்தப்படுவார்கள்; இழிவுபடுத்தப்படுவார்கள், நசுக்கப்படுவார்கள். ஆள்வோர் எப்போதும் தமது ஆளுமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஏவிக் கொண்டே இருப்பார்கள். சர்வதேச அரங்கில் தான் மட்டுமே 'தாதா' வாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற அமெரிக்கா, அதற்கான வேலைகளைச் செய்வதிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. இந்தியாவுக்கு யார் பிரதமர் என்று நீயும் நானும் கவலைப்படவில்லை, அமெரிக்காகாரன் கவலைப்படுகிறான். இலங்கையிலும் பாகிஸ்தானிலும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் அந்தந்த நாட்டு மக்களை விட அமெரிக்கா காரனுக்குத்தான் அதிக கவலை..ஏன் அவனுக்கு அந்தக் கவலை? அவனது ஆளுமையையும், சர்வதேச 'தாதா' தனத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள அவனுடைய ஆதரவாளர்கள் உலக நாடுகளை ஆள வேண்டும் என்று விரும்புகிறான்.உலகம் முழுவதும் தனக்கு வேண்டியவர்களின் ஆட்சி நடைபெறும் போதுதான் தனது ஆதிக்கம் நிலைபெறும் என்று அவன் சிந்திக்கிறான்.
எதற்கு இதை நான் சொல்கிறேன் என்று சொன்னால்.., யார் ஒருவர் அல்லது எந்த ஒரு சமூகம் தான் ஆளப்படுவதில் இருந்து மீளப்படுவதை விரும்புகிறார்களோ, ஒடுக்கப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, சுரண்டலில் இருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ளத் துடிக்கிறார்களோ, அவர்கள் அதிகாரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தேடல் வேண்டும்.
இறைவனிடத்திலே நாம் அமைதியைத் தேடுகின்றோம். ஆனால் 'இறை' என்கிற அரசிடம் நமக்கான அதிகாரத்தை இன்னும் நாம் தேடவில்லை. ஆக, அதிகாரத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல், அதிகாரத்தைப் பற்றிய தேடல் இல்லாமல், அதிகாரத்தைப் பற்றிய வேட்கை இல்லாமல், நம்மீதான அடக்குமுறைகளில் இருந்தும் ஒடுக்குமுறைகளில் இருந்தும் நம்மால் மீளவே முடியாது.
அந்த அடிப்படையில் தான் தலித் மக்களிடத்திலே, புரட்சியாளர் அம்பேத்கர், ஆட்சி அதிகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கினார்.அந்த விழிப்புணர்வு இன்றைக்கு தலித் மக்களிடத்தில் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதன் அடையாளமாகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் இங்கே எழுந்து வந்திருக்கிறது. இதை நான் நெஞ்சுயர்த்திச் சொல்கிறேன். அம்பேத்கரின் அந்தக் கொள்கை வழியில் தான் தலித் மக்களை நாங்கள் அமைப்பாக்கி வருகிறோம்..
இன்றைக்கு திருமாவளவன் மீது முஸ்லிம் சமூகத்தினர் சந்தேகப்படுகிறார்கள் என்று சொன்னால், அதை எண்ணி நான் வருத்தப்படவில்லை, மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் சந்தேகப்படுவது என்றைக்குத் தொடங்கி விட்டதோ அப்போதே விழிப்புணர்ச்சியும் தொடங்கி விட்டது என்று பொருள். நம்மைப் பிறர் ஏய்க்கிறார்களா இல்லையா என்பதைப் பற்றி விழிப்புணர்வே இல்லை என்றால் நமக்கு சந்தேகமே வராது. எங்கே சந்தேகம் வருகிறதோ அங்கே விழிப்புணர்வு வந்துவிட்டது என்று பொருள். ஆக இஸ்லாமியர்கள் விழிப்படைந்து விட்டார்கள். தமிழ்நாட்டு இஸ்லாமியச் சமூகம் விழிப்படைந்து விட்டது. கடந்த கால வடுக்களைத் தடவிப் பார்த்து, தம்முடைய இயலாமையையும் தமது தோல்விகளையும் தமது ஏமாற்றங்களையும் எடை போட்டுப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.
ஆக இந்தச் சூழ்நிலையில் இப்போது நான் சொல்கிறேன்... 2016 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இப்போதே நான் அறைகூவல் விடுக்கிறேன். அரசியல் கூட்டணிக்கு அழைக்கிறேன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமே, தவ்ஹீத் ஜமாஅத் இயக்கமே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமே, தேசிய லீக் இயக்கமே, பாப்புலர் பிரன்ட் எனப்படும் மக்கள் முன்னணியே, இன்னும் என்னென்ன இஸ்லாமிய அமைப்புகள் இருக்கின்றனவோ அத்தனை அமைப்புகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அழைப்பு விடுக்கிறேன்.
2016 ஆம் ஆண்டு தலித் - முஸ்லிம் கூட்டணி தமிழகத்தில் மலர வேண்டும். ஆட்சி அதிகாரத்தை நோக்கிய நமது பயணம் வெற்றியடைய வேண்டும். நமக்கான அரசியல் அதிகாரம் தேவை. அதை அடையாமல் நம்மீதான ஒடுக்குமுறைகளை நாம் தடுத்து நிறுத்த முடியாது.
இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை முறை.ஆனால் அது மதம் என்கிற ஒரு மிகப்பெரிய ஆளுமை மிக்க அமைப்பாக மாறி இருக்கிறது. இதற்கு அடிப்படையாக நம்முடைய நபிகளார் விளங்குகின்றார். தமது நாற்பது வயதுக்குப் பின்னர் தான் நபிகளார் பொதுப் போதனைகளைத் தொடங்கி இருக்கிறார். மிகக் குறுகிய வட்டத்தில் தமது நண்பர்களோடு முதலில் கருத்துக்களைப் பரிமாறி இருக்கிறார்.
பொதுப் போதனைகளில் அவர் இறங்கிய உடனேயே அன்றைய ஆட்சியாளர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். நபிகளாரின் உயிருக்கு அவர்கள் உலை வைக்கத் தொடங்கினர். அப்போது அவர் தான் பிறந்த மண்ணை விட்டு மதீனாவை நோக்கிப் போனார். மக்காவிலிருந்து நபிகளார் மதீனாவை நோக்கிப் போனது 'ஹிஜ்ரா' என்றழைக்கப் படுகிறது. அது ஒரு புனிதப் பயணம் என்றழைக்கப்படுகிறது.
ஆனால் அவர் எதற்காக அந்தப் பயணத்தை மேற்கொண்டார்? தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், தன் உயிர் கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ளவும் தான் அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டார். அதுவரையில் மதீனாவுக்கு யாத்ரிப் என்றுதான் பெயர் இருந்திருக்கிறது. நபிகளார் அங்கு சென்றபிறகு, இவர் மதீனத்து நபி, ஆகவே நபிகளின் பட்டணம் என்று பெயர் மாற்றிக் கொண்டார்கள்.
அங்கு தான் நபிகளாருக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கைப் பெருகியது. அவரது போதனைகளைக் கேட்கும் கூட்டம் அதிகரித்தது. அங்கு தான் நபிகளார் ஒரு அமைப்பாக திரட்சியுற்றார். தனி நபராக இருந்தவர் மக்காவிலே ஒரு சிறு குழுவாக மாறினார். பின்பு மதீனாவிலே ஒரு அமைப்பாக வளர்ந்தார். அந்த அமைப்பு ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போரிடும் படை வலிமை உள்ளதாக மாறியது.அந்தப் படை வலிமையோடு மக்காவிற்குத் திரும்புகிறார். மக்காவில் ஆளும் வர்க்கத்தோடு மிகப்பெரும் யுத்தத்தை நடத்துகிறார்..அதன் பிறகு தான் அது ஒரு இயக்கமாக மாறியது.
ஆக, நபிகளாரிடம் இருந்த அந்த ஆளுமைப் பண்பு, அந்தத் தலைமைப் பண்பு, அந்தப் போர்க்குணம் தான் ஒரு அமைப்பாக மாறி ஒரு இயக்கமாக மாறி இன்று மிகப்பெரிய நிறுவனமாக உலகையே வியாபித்து நிற்கிறது. இன்றைக்கு உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருந்தாலும், இஸ்லாத்தைப் போல, கட்டுப்பாடும் ஒழுங்கும் உள்ள ஒரு மதத்தை எங்கும் அடையாளம் காட்ட முடியாது. நான் இஸ்லாமியர்கள் மத்தியில் பேசுகிறேன் என்பதற்காக உணர்ச்சிவயப்பட்டு இதை சொல்லவில்லை.
மக்காவிலே கோடிக்கணக்கான மக்கள் கூடுகிற அந்த இடத்திலே, எத்தனைக் கோடிப் பேர் திரண்டாலும் ஒருவருக்கொருவர் இடித்துக் கொள்ளாமல், முட்டிக் கொள்ளாமல், அவர்கள் இறைவனை வழிபடுவதில் சரிசமமாக இருந்து மண்டியிட்டுத் தொழுகை நடத்துவதை ஒரு மிகப் பெரிய ஓவியமாக நம்மால் பார்க்க முடிகிறது. வேறு எந்த மார்க்கத்திலும், மதத்திலும் அந்தக் கட்டுப்பாட்டை பார்க்க முடியவில்லை.அப்படிப்பட்ட ஒரு ஒழுக்கத்தையும், நல்ல தலைமைப் பண்பையும் கற்றுத் தருகின்ற ஒரு மிகப்பெரிய மத நிறுவனத்தை ஒரு தலைவரால் கட்டியமைக்க முடிந்தது என்று சொன்னால்., அதற்கு எவ்வளவு பெரிய அர்பணிப்பும் போர்க்குணமும் தியாக உள்ளமும் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அப்படிப்பட்ட நபிகளாரைப் போல வியூகமும் தொலைநோக்கும் கொண்ட தலைவர்கள் நமக்குத் தேவை. அவரை நான் இறைவனின் தூதர் என்று பார்ப்பதை விட, அரசியல் தளத்தில் நின்று கொண்டு, ஒரு மகத்தான அரசியல் தலைவராகப் பார்க்கிறேன்.அதைப் போல தலைமைப் பண்புள்ளத் தலைவர்கள் இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்திற்குத் தேவை.
தலைமைப் பண்புள்ளத் தலைவர்கள் வருகின்ற போது, எத்தனைக் குழுக்கள் இருந்தாலும் அவை ஒற்றை வடிவமாய், ஒற்றை முகமாய் இருக்கும். தலைமைப் பண்புள்ள தலைவர்கள் உருவாகாத வரையில் குழுக்கள் மேலும் மேலும் பல குழுக்களாகச் சிதறும். ஒற்றுமை பாழ்பட்டு விடும்.
ஆக, இதையெல்லாம் மனதில் கொண்டு நாம் நமது பயணத்தை திட்டமிட வேண்டும். இன்றைக்கு விதைத்து நாளைக்கே அறுவடை செய்கிற அவசரம் நமக்கு வேண்டாம். 2016 வரை நாம் உழைப்போம், நமக்காகத் திட்டமிட்டு உழைப்போம், அரசியல் சக்தியாய் எழுச்சி பெறுவோம். அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வோம்.
இதைத் தவிர வேறு எந்த உள்நோக்கத்த்தோடும் திருமாவளவன் உங்களோடு அமரவில்லை; எந்த எதிர்பார்ப்போடும் திருமாவளவன் உங்களோடு உரையாடவில்லை. 2016 தலித் - இஸ்லாமியர் ஆண்டு என்கிற முடிவை நான் எடுக்கிற போது, எந்த அரசியல் கட்சித் தலைவர்களோடும் சேர்ந்து எடுக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கக் கூடிய இஸ்லாமியத் தோழர்களோடு சேர்ந்துதான் இந்த முடிவை நான் எடுத்தேன்.
முஸ்லிம்களை நோக்கிய எனது பயணத்திற்கும், அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் ஒரு சமூகத்தின் விடுதலை அரசியல் களத்தோடு தொடர்புடையது. அதை நாம் மறந்து விடக் கூடாது. மதமும் அரசும் இரட்டை விழிகள் மாதிரி.இரண்டு விழிகளால் ஒற்றை உருவத்தைப் பார்ப்பது போல மதமும், அரசும் சேர்ந்து தான் மக்களை வழிநடத்துகிறது. அரசு என்பது அதிகாரத்தோடு தொடர்புடையது. அதிகாரம் என்பது யாருக்கோ சில நபர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. குறிப்பிட்ட சில இனத்துக்குச் சொந்தமானதும் அல்ல. உன்னாலும் என்னாலும் உருவானது தான் அதிகாரம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ஆகவே, மண் ஒரு சொத்து என்பதைப் போல,கட்டிடம் ஒரு சொத்து என்பதைப் போல, வண்டி வாகனம் ஒரு சொத்து என்பதைப் போல, செல்வம் ஒரு சொத்து என்பதைப் போல, பிள்ளைகள் ஒரு சொத்து என்பதைப் போல அதிகாரம் ஒரு சொத்து. இந்த மண்ணில் எனக்கு ஒரு பங்கு உண்டு என்பதைப் போல, இந்த நீரில் எனக்கு ஒரு பங்கு உண்டு என்பதைப் போல அதிகாரத்திலும் எனக்குப் பங்கு உண்டு.
ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு மட்டுமே இந்திய அதிகாரம் சொந்தமானதில்லை. இதில் திருமாவளவனுக்கும் பங்குண்டு, இந்த அதிகாரத்தில் யூசுபுக்கும் பங்கு உண்டு.
நான் இந்த மண்ணில் குடிமகனாக இருக்கிற காரணத்தினால், நான் ஓட்டுப் போடுகிற உரிமை பெற்றிருக்கிற காரணத்தினால், நாம் சேர்ந்து இந்த நாட்டையும், அதன் சட்ட திட்டங்களையும் உருவாக்கி இருக்கிற காரணத்தினால், நாம் இந்தச் சட்டங்களை மதிக்கிற காரணத்தினால் உருவானது தான் அரசு, உருவானது தான் அதிகாரம். ஆகவே அந்த அதிகாரத்தில் எனக்கும் பங்குண்டு, உனக்கும் பங்குண்டு.
இந்த எனக்கும் உனக்கும் என்கிற சொல்லுக்கு இடையில் உள்ள சுவரை உடைத்து விட்டு, நமக்கு என்ற ஒற்றை சொல்லால் அழைப்போம். நன்றி |