Thursday, January 8, 2009

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?வெளிவரும் நிஜங்கள்!!! பாகம் 3

இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.

இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)

வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)

இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்துவதில் 1980-ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதமாற்றப் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறிஸ்தவ மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.

பார்ப்பனீய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற்காகவே அவர்கள் மதமாற்றத்தை - அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக ‘திரிசூலம்’ வழங்கி, வன்முறையை வெளிப்படையான ஆயுதமாகக் கையாளுகின்றனர்.

மத்தியில் உள்ள ஆட்சி பெயரளவுக்குத் தேசிய ஜனநாயக முன்னணி என்ற 23 கட்சிகள் கூட்டணியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் அது பி.ஜே.பி. என்ற பெரிய அண்ணனின் தாக்கீது செல்லும் ஆட்சியாக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும்.

அக்கட்சியினர், இந்திய அரசியல் சட்டத்தினைத் தூக்கி எறிந்து விட்டு, பழைய மனுதர்மத்தையே சட்டமாக வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் போட்டு முழங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

‘விசுவ இந்து பரிஷத்’ ஒரு கலாச்சார அமைப்புதானே, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை இணைத்து ஒரு புது உணர்ச்சியைத் தோற்றுவிப்பது தானே என்ற கருத்தில் இதில் முக்கியப் பங்கு வகித்த டாகடர் கரண்சிங் போன்ற அறிஞர்கள், இந்த பிற்போக்குத் தனத்தை - அதாவது இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமே மீண்டும் அரசியல் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அபாயகரமானது; அது மீண்டும் 2-ஆம் நூற்றாண்டுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதால் அவர் அதிலிருந்து விலகி கொண்டார்(இவ்விவரங்கள் மேற்சொன்ன நூலில் 31-ஆம் பக்கத்தில் உள்ளது).

பசு பாதுகாப்பு, கணபதி ஊர்வலம், புதிய கோயில் கும்பாபிஷேகம், அனுமார் ஜெயந்தி விழாக்கள், இராமன் கோயில் கட்டும் விவகாரம் இவைகள் மூலம் தான் பாமர மக்களுக்குப் ‘பக்தி போதை’யைத் தந்து இந்து மதம் என்கிற பார்ப்பன மதத்தினை வலியுறுத்த அவர்கள் முயலுகின்றனர்!.

மதம் மாறுவதற்குரிய நிர்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்காளுக்கு ஏற்படுகிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது - அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் - அந்த மக்களைYஏ நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!.

நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்றவனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்.

அபூ சுமையா

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!