Thursday, January 15, 2009

இஸ்லாம் பார்வையில் "மன திருப்தி"

எவர் தம்மிடம் இருக்கும் ஒரு நாளைக்குப் போதுமான சாதத்தைக் கொண்டு தம் மனத்துக்கு நிம்மதியையும் தம் உடலுக்குத் தெம்பையும் கொடுத்துக் கொள்கிறாரோ அவர் உலகிலுள்ள அனைத்தும் அளிக்கப்பட்டவர் போலாவார் என்று அண்ணல் நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு மிஹ்ஸனில் கதமீ (ரலி) நூல்: திர்மிதி

எவர் இஸ்லாமிய நேர்வழியை அடைந்து அவரால் இயன்றதைக் கொண்டு வாழ்க்கை நடத்தி போதுமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு நல்வாழ்வு உண்டாகட்டும் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: புலாளதுப்னு உபைது (ரலி) நூல்:திர்மிதி

நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு நம்பிக்கை கொண்டிருப்பின் நிச்சயமாக அவன் உங்களுக்கு உணவளிப்பான், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று. அவை காலையில் வெறும் வயிற்றோடு சென்று மாலையில் வயிறு நிரம்ப உண்டு திரும்புகின்றன என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: உமர் (ரலி) திர்மிதி

செல்வம் என்பது உலகப் பொருள்களின் அதிகரிப்பில் இல்லை. எனினும் செல்வம் என்பது மனத்தின் செல்வமேயாகும். போதுமென்ற மனமேயாகும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: நூல்கள்: புகாரி, முஸ்லிம்

உங்களில் எவரேனும் தம்மைவிட அதிகப் பொருளுடையவரையும் தோற்றத்தில் தம்மைவிட மேலாக உள்ளவரையும் காண நேரிட்டால் அப்பொழுது அவர் தம்மைவிட இவ்விஷயங்களில் கீழாக உள்ளவரை நோக்கவும், ஏனெனில் இவ்விதம் செய்வது நீங்கள் அல்லாஹ்வுடைய அருளை, அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருளை குறைவாகக் கருதாமலிருக்க மிகவும் உதவியாயிருக்கும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!