Thursday, August 27, 2009

இதுதான்,இதுவேதான்,இது மட்டுந்தான்,ஒரே நேர்வழி!!!

இறைநம்பிக்கையில் மூட நம்பிக்கைகளைக் கண்ட சிந்தனையாளர்கள், இறைவனை மறுத்து நாத்திகக் கொள்கையைத் தழுவிக் கொண்டனர்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

"மனித அறிவு வளர்ச்சியடையாத - முற்காலத்தில் - உலகில் இயற்கையாக நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் - மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி அல்லது சக்திகளைக் காரணம் காட்டி வந்தான் - அன்றைய மனிதன்!

"ஆனால் மனித அறிவு வளர்ச்சி அடைந்து பல நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் இயற்கை நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் இறைவனே காரணம் என்று கூறுவது - மனித அறிவின் பிற்போக்குத் தனத்தையே காட்டுகிறது.

"விஞ்ஞானம் - இயற்கைப் பெருவெளியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லா அற்புதங்களுக்கும் காரணம் கண்டு பிடித்துச் சொன்ன பின்பும் எல்லாவற்றுக்கும் காரணம் இறைவன்.... இறைவன்.... என்று சொல்கின்ற பிற்போக்குத் தனத்தை என்னென்று சொல்வது?

"இதனை விடுத்து விஞ்ஞானம்.... விஞ்ஞானம்.... என்ற முற்போக்குக் கொள்கையை (POSITIVISM) மனிதன் ஏற்கும் போதே - நோய் பிடித்த சமுதாயத்தை (SICK SOCIETY) உயிர்த்துடிப்புள்ள சமுதாயமாக (DYNAMIC SOCIETY) மாற்றிட முடியும்!"

இதுவே மேற்கத்திய சமூகவியலாளர்களின் (SOCIOLOGISTS) தீர்க்கமான கருத்து!

உயிர்த் துடிப்புள்ள சமுதாயத்துக்கு அவர்கள் சுட்டிக் காட்டுவது - இன்றைய மேலை நாடுகளை!

அங்கே எல்லாரும் படித்திருக்கிறார்கள்!

அங்கே எல்லாரும் அறிவியல் வழியாகவே (SCIENTIFIC THINKING) சிந்திக்கிறார்கள்.

அங்கே மூட நம்பிக்கைகள் குறைவு!

அவர்கள் தொழில்நுட்பத்தில் வானளாவிய சாதனைகள் புரிகின்றார்கள்!

அவர்கள் தாம் உலகையே வழி நடத்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள்!

சுருங்கச் சொல்லின் - அவர்கள் தான் பூவுலக சுவர்க்கத்தை மேற்குலகில் நிர்மாணித்திருக்கிறார்கள்!

அவர்கள் காட்டும் "பூவுலக சுவர்க்கத்தை" "ஆ" வென வாய் பிளந்து பார்க்கின்ற நம்மவர்கள், அதே மேற்குலகக் கோட்பாடுகளை இங்கே இறக்குமதி செய்தால் நாமும் ஒரு சுவர்க்கத்தை உருவாக்கிடலாம் என்று மன்க் கோட்டை கட்டுகிறார்கள்!

தாழ்வு மனப்பான்மை பிடித்துப் போய் மேலை நாடுகளைக் காப்பியடிக்கத் துடிக்கின்ற நவீன தலைமுறையினர்க்கு, மேற்குலகம் அனுபவிக்கின்ற அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுதல் அவசியம்.

அமெரிக்காவில் ஹைட்ரஜன் குண்டை (HYDROGEN BOMB) தயாரித்த அமெரிக்க விஞ்ஞானி J.R. OPPENHEIMER - அவர்களின் கூற்றுப் படி - மனிதன் - கடந்த 40 நூற்றாண்டுகளில் தொழில்நுட்பத்தில் அடைந்த வளர்ச்சியை விட இருபதாம் நூற்றாண்டின் 40 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி மிக அதிகம்!

இந்த தொழில் நுட்பம் மனிதனுக்கு செய்து கொடுத்த வசதிகள் எண்ணிலடங்காதவை.

கணினி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் உலகையே ஒரு பெரிய கிராமமாகச் சுருக்கி விட்டிருக்கின்றது.

மனித உறுப்புகளை மாற்றுவது, சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாக மாறிக் கொண்டிருக்கிறது.

தூக்கத்தைக் குறைத்து - மனித ஆயுளை நீட்டிக்கச் செய்கின்ற ஆராய்ச்சி மும்முரமாக நடந்து கொண்டிருகிறதாம்.

செயற்கை முறையில் DNA - வைத் தயாரித்து "நாம் விரும்பும்" குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியுமாம்!

தொழில் நுட்பம் தந்த பொருளாதார வளர்ச்சி மேலும் மனிதனை சுக போக வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

அமெரிக்கர்கள் விடுமுறையைக் கழிக்க என்று - ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகை பில்லியன் டாலர்கள் கணக்கில்!

மேலை நாடுகளில் - மனிதனின் வாழ்க்கைத் தரம் 1800 - ல் இருந்ததை விட ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறதாம்! அப்படியானால் - அவர்களுடைய மகிழ்ச்சி ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது, அவர்களுடைய வாழ்க்கை ஐந்து மடங்கு அர்த்தமுள்ளதாக ஆக்கப் பட்டிருக்கின்றது என்றா பொருள்?

அது தான் இல்லை!

மேற்குலக நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் குற்றங்கள் மில்லியன் கணக்கில் பதிவு செய்யப் படுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாகரிகம் அடைந்த நாடுகளில் மதுவின் வளர்ச்சி வேகம் பயமுறுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. மதுவின் இந்த வளர்ச்சியில் பெண்களுக்கும் பங்குண்டு. மது குடிப்பதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்.

ஆபாசப் படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முன்னணி வகிப்பவை மேற்குலக நாடுகளே! இப்படிப் பட்ட படங்களுக்கென்றே தனிப்பட்ட திரையரங்குகள் உள்ளனவாம். இயந்திர மயமான வாழ்க்கையை விட்டு - சற்றே வெளியேறி - இளைப்பாற நினைப்பவர்களைக் கவர்ந்து இழுக்கிறதாம் - இந்த ஆபாசப் படங்கள்.

சூதாட்டங்களும் - மனித நாகரிகத்தோடு சேர்ந்து வளர்ந்திருக்கின்றன! உலகின் மிகப் பெரும் சூதாட்ட நகரங்கள் (GAMBLING CITIES) அனைத்தும் "நாகரிக மயமான" நாடுகளில் தாம் அமைந்திருக்கின்றன.

போதைப் பொருட்களைப் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும், அதற்கு அடிமையாகி விட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

நாகரிகத்துடன் தற்கொலை செய்து கொள்வதும் வளர்ந்துள்ளது! தொழில் மயமாதல், நகர் மயமாதல், குடும்பங்கள் உடைந்து போதல் - இம்மூன்று காரணிகளும் அதிகரிக்க அதிகரிக்க தற்கொலையும் அதிகரிக்கிறதாம்.

மன நோயால் பீடிப்பவர்களின் எண்ணிக்கையும் அப்படித்தான். உலகத்திலேயே அதிகமான மன நோய் நிபுணர்கள் இருப்பது ஹாலிவுட்டில் தானாம்.

போதுமா சகோதரர்களே!

இறை மறுப்பும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கல்வித் திட்டமும் , அறிவியல் தொழில் நுட்பமும், மனிதனுக்குச் சாதித்துக் கொடுத்தவை இவை தான்!

இதனையே இங்கே இறக்குமதி செய்யத் துடிக்கின்றனர் மேல் நாட்டு மோகம் கொண்ட நம்மவர்கள்.

இன்றைய உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கின்ற - மனித வாழ்வில் - அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் ஆற்றல் எந்தக் கொள்கைக்கு இருக்கிறது?

அது இஸ்லாத்துக்கு மட்டுமே இருக்கின்றது என்பது தான் மறுக்க இயலாத உண்மை!

மேலை நாட்டவர்கள் இஸ்லாத்தை "பயங்கரவாதத்துடன்" ஒப்பிட்டுப் பேசிடுவதில் அவர்களுக்கு இருக்கின்ற உள் நோக்கத்தை ஏன் நம்மவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது?

யார் யார் எல்லாம் இஸ்லாத்தை எதிர்க்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள்? அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்றும் சற்றே எடை போடுங்கள். உண்மை தெள்ளென விளங்கும்!

சகோதரர்களே!

இஸ்லாமிய இறை நம்பிக்கையில் மூட நம்பிக்கை கிடையாது!

இறைவனின் தூதர்களைக் கடவுளாக்கி வணங்குகின்ற அறியாமை இங்கே இல்லை!

இஸ்லாத்தின் கொள்கைகள் பாதுகாக்கப் பட்டவை! திருக் குர் ஆனும், நபிமொழிகளும் இடைச்செருகல்களுக்கு ஆளாகி விடாமல் பாதுகாக்கப் பட்டு ஒப்படைக்கப் பட்ட விதத்துக்கு ஈடு இணையே கிடையாது!

இஸ்லாம் - மனிதனின் "ஆன்மிகக் கொள்கை வெற்றிடத்தை" முழுமையாக நிரப்பும் சக்தி வாய்ந்தது!

இஸ்லாம் - மன நோய் மற்றும் தற்கொலை எண்ணங்களை அடியோடு நீக்கி விடுகிறது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே கொல்லப் படுகின்ற பெண் சிசுக்களைக் காப்பாற்ற வல்லது!

இஸ்லாம் மட்டுமே உலகை - விபச்சாரத்திலிருந்தும், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களிலிருந்தும் காத்திடும் ஆற்றல் பெற்றது!

இஸ்லாம் மட்டுமே உலகை - வட்டியில் இருந்து விடுவித்து பொருளாதாரச் சுரண்டலைத் தடுத்து நிறுத்திடும் ஒப்பற்ற திட்டத்தை தன்னகத்தே கொண்டது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே - அரசியலைத் தூய்மைப் படுத்திடும் ஆன்மிக வலிமை கொண்டது!

இஸ்லாம் ஒன்று மட்டுமே, இன்று உலகைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கின்ற இனவெறியிலிருந்து மக்களைக் காக்கின்ற ஆற்றல் வாய்ந்தது!

இஸ்லாம் எனும் இந்த முழுமையான வாழ்க்கை நெறி - காலம் கடந்து போன ஒரு வெற்றுச் சித்தாந்தம் அன்று! அது எல்லாக் காலத்துக்கும் பொறுத்தமானது!

இவ்வாறு எல்லாவிதமான் சிறப்பம்சங்களையும் இஸ்லாம் தன்னகத்தே கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் - இது இறைவனின் மார்க்கம் என்பதால் தான். இது முஹம்மது நபியின் சொந்த சிந்தனையும் கிடையாது. அது போலவே இஸ்லாம் என்பது பரம்பரை பரம்பரையாக வருகின்ற முஸ்லிம்கள் வீட்டுப் பாட்டன் சொத்தும் கிடையாது! அது உலக மக்கள் எல்லார்க்கும் சொந்தமானது!

ஏன் உங்களுக்கும் சொந்தமானதே! எனவே - ஏற்பீர்களா இஸ்லாத்தை?



S.A.MANSOOR ALI

Saturday, August 22, 2009

இந்துக்களே விழிமின்,எழுமின், கல்கி வந்துவிட்டார். வாருங்கள் அவரைப் பின்பற்றுவோம்!!மோட்சம் பெறுவோம்!!!

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

இதை தமிழில் மொழி பெயர்த்த சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!!


--------------------------------------------------------
ஆங்கிலத்தில் படிக்க http://comparativestudy.blogspot.com

Wednesday, August 19, 2009

இன்னொரு கமலா சுரையா!பர்தாவே கண்ணியம்!!போலி பெண்ணியம் பேசுவோரின் முகத்திரை கிழிந்தது!!!

சகோதரி சுகைனா (சுமஜ்லா)அவர்கள் தங்கள் எழுத்து மூலம் சமூக தொண்டு செய்து வருபவர்கள்.பிரபல வார இதழ்களில் தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதிவருவதோடு,தங்கள் தளத்திலும் கதை,கவிதை,கட்டுரை,என எழுதி வருகிறார்.இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான பொய் பிரச்சாரம் நிகழும்போதெல்லாம்,அதை முறியடித்து எழுத்துப் போர் செய்து வரும் ஒரு எழுத்துப்போராளி.சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் பர்தா பற்றிய பொய் பிரசாரத்துக்கு அவர் கொடுத்த பதிலடியின் சுருக்கமே,கீழே நீங்கள் காண்பது.அவரை இன்னொரு கமலா சுரையா என்றால் அது மிகை அல்ல.
-----------------------------------------------

ஒரு மனைவி கணவனுக்கு ஆடையாகவும், ஒரு கணவன் மனைவிக்கு ஆடையாகவும் இருக்கிறான் என்பது ஹதீஸ்.

நான் முழுபர்தாவில் இருக்கிறேன். எனக்கு இது மிகப்பெரும் பாதுகாப்பு கவசமாகும். ஆனால், இது என் முன்னேற்றத்தை எவ்விதத்திலும் தடுக்கவில்லை. மாறாக, ஒரு மரியாதையைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது.

நான் பர்தாவில், டூ வீலர் ஓட்டுகிறேன். அதோடு, என் கணவரின் எல்லா விஷயங்களுக்கும் உறுதுணையாக இருக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், பர்தாவில் இருக்கும் எல்லாரும் கட்டுப் பெட்டிகள் அல்ல.

ஆனால், எனக்கும் இது போன்ற அனுபவம் நேர்ந்திருக்கிறது. என்னை ஒரு கட்டுப் பெட்டியாக பலரும் பார்த்து, என் தோற்றத்தை வைத்து என்னை எடை போட்டிருக்கிறார்கள். அத்தகையவர்களை நான் என் நுனிநாக்கு ஆங்கிலத்தை வைத்து மிரட்டி இருக்கிறேன்.

பர்தாவால் கேன்சர் வருகிறது என்றால் இது என்ன புகையிலையா, சிகரெட்டா? அப்படியானால், நூற்றுக்கணக்கான கிறிஸ்த்துவ சிஸ்டர்ஸுக்கு ஏன் கேன்சர் வருவதில்லை? அவர்களும் ஒரு வித பர்தா தானே அணிந்திருக்கிறார்கள்!

பர்தா என்பது ஒரு கவசம். என்னுடைய அழகு என் கணவருக்கு மட்டும் தான். யாருக்கும் நான் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அழகை பார்த்து தான் ஒருவரை ஆராதிக்க வேண்டுமானால், அத்தகைய ஆராதனை கேடாய் தான் முடியும்.

நினைத்து பாருங்கள், ஒரு சமூகத்தில், 100 விழுக்காடு பெண்கள் பர்தாவுடன் சென்றால், அங்கே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்குமா? ஈவ் டீசிங் நடக்குமா?

பர்தாவில் இருப்பதால், என்னுடைய எந்த முன்னேற்றமும் பாதித்ததில்லை. நான் B.A ஆங்கில இலக்கியம், M.Com படித்து, தற்சமயம், கரெஸ்ஸில் M.A. ஆங்கில இலக்கியமும், காலேஜ் சென்று B.Ed ம் பயின்று வருகிறேன். அதோடு, ஹிந்தியில் 2 எக்ஸாம் எழுதியிருக்கிறேன். டைப் ரைட்டிங் ஹையர் முடித்திருக்கிறேன். கணினியிலும் பரந்து பட்ட அறிவு உள்ளது. ஆனால், நான் முழு பர்தாவில் இருக்கிறேன், என்னுடைய 12வது வயது முதல்.

என்னை யாரும், என் கணவர் உட்பட கட்டாயப்படுத்தியதில்லை. அதே போல யாரிடமும் நான் என் கருத்தை திணிக்கவில்லை. முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு பெண்ணாக இருந்து சொல்கிறேன், எனக்கு பிடித்திருக்கிறது. அதில் பாதுகாப்பு உணர்கிறேன். அணிகிறேன்.

எத்துணையோ இணைய நட்புகள் இருக்கிறார்கள். ஆனால், யார் எவ்வளவு தூரம் கேட்டும், போனிலோ, மெஸ்ஸஞ்சரிலோ நான் பேசியதில்லை. பெண்களிடம் பேசி இருக்கிறேன். காரணம் இதெல்லாம் தேவையில்லாத பின் விளைவை ஏற்படுத்தும்.

போன வாரம் கூட யூ.எஸ்ஸில் இருக்கும் ஒரு தோழர், என் பிடிவாதம் கண்டு தன் மனைவியிடம் சொல்லி என்னிடம் பேச சொன்னார்.

பர்தா அணிகிறேன். ஆனால், நான் பர்தா அணியாதவர்களை விட சுதந்திரமாக உள்ளேன். சந்தோஷமாக உள்ளேன்.

போலியான வெளி அலங்காரம் எனக்கு தேவையில்லை. என் வாழ்க்கை என் கணவருக்காகவே! அவருக்கு திருப்தி தராத ஒன்று எனக்கு வேண்டாம்.

இதை ஒவ்வொரு பெண்ணும் எண்ணினால், எப்படி இருக்கும் நம் சமுதாயம்?

மற்ற மதங்களிலுள்ள முட்டாள்தனங்களை யாராலும் பட்டியலிட முடியும். ஆனால், அந்த மதத்திலும், எமக்கு உயிர் நண்பர்கள் உள்ளனர், அவர்கள் மனம் ஒரு போதும் புண்பட்டு விட கூடாது!

Your Freedom stops before others nose என்பதை யாவரும் புரிந்து செயல்பட வேண்டும்.

பெண்ணினமாகிய எமக்கே, அது ஒரு பாரமாக தெரியாத போது, அதை ஒரு சுதந்திர உணர்வாக நினைத்து பெருமைப்படும் போது, அதை பற்றி மாற்று மத அன்பர்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம் என்பது என் எண்ணம்.

சினிமாவில் காட்டப்படுவது எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. புற்றுக்கு பால் வார்த்தால் புண்ணியம் என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம்.

அடுத்தவர் மத நம்பிக்கை புண்படாத வகையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது தான் நம் மரபு.

இந்த சுதந்திர நன்னாளில் அதை நாம் கைகொள்ள முயற்சிப்போமாக!

Friday, August 14, 2009

ஐயையோ,துபாய்கு வந்துடாதீங்க!!!


...............இப்பொழுது இங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு. அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும்.ஆனால் தெரிந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடம் பேசும் பொழுதோ அதே “வலிக்கவில்லை” கதைதான்.

ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும் ,வெளிநாட்டில் இருந்துபலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும் ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.

என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக்,எம்மார், அராப்டெக்,போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.

இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை,வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது, பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம்,ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.

தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் “உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லதுவேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்” என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.

வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டுவிட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டதுஎன்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.

இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.

டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!

by ஷேய்க் தாவூத்
--------------------------------------------
வட்டியின் தீங்கு பற்றி திருக்குரானின் எச்சரிக்கை !!!


யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
2:275

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
2:276

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்
2:278


ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்
3:130
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
4:161


மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.
30:39

Thursday, August 13, 2009

ரியா !மறைவான இணைவைப்பு? புகழ்,பெருமை,பகட்டு=அவமானம்,அழிவு,கைசேதம்!! தொடர் 12

புகழுக்காகவும், பெருமைக்காகவும் நற்செயகளைப் புரிவோருக்கு இந்த உலகிலேயே அவர்கள் நாடியது கிடைத்து விடும் என்ற போதிலும், இறுதித் தீர்ப்பு நாளில் அவர்கள் முழுமையாக அல்லாஹ்வினால் அவமானப்படுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னதாக முஅத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

'இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்"

நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்


அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

'தனது செயல்களைப் பற்றி மற்றவர்களிடம் எவர் பகட்டாகக் காட்டிக் கொள்கிறாரோ, அவரை அல்லாஹ் தனது படைப்பினங்கள் முன்பு சிறுமைப்படுத்தி கண்ணியத்தைக் குலைத்து அவனை இகழ்வான்."

நூல்: சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீப்

Sunday, August 9, 2009

சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும்

அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நீங்கள் தவறான எண்ணங்களை - சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் , சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்துக் கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவி துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாய் விளங்கி ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்! அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி, முஸ்லிம்)

Tuesday, August 4, 2009

வெற்றிக்கு வழி! பெண்கள் கண்ணியமானவர்கள்!!தொடர் 3

ஆச்சரியப்பட்ட சண்முகம் ஏதோ யோசிக்கலானார்.இதற்கிடையே, டிய், டிய், சாய்,சாய் என்ற குரல் கேட்டு அனைவரும் செங்கல்பட்டு வந்துவிட்டதை அறிந்து,தங்கள் உணவுப் பொட்டலங்களை அவிழ்த்து உண்ண ஆரம்பித்தனர்.சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் கொண்டு வந்த சிக்கன் பிரியாணியை சண்முகம்,ரஞ்சிதம்மாளிடம் பகிர்ந்துகொள்ள,அவர்கள் கொண்டு வந்த இட்லி,சாம்பார் வகைகளை இவர்களும் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.

சாப்பிடும் போது ஏக இறைவனின் திருப்பெயரை சொல்லி,சலீம் நானா,பஷீர் காக்கா சாப்பிட்டதையும்,எதையும் வீணாக்காமல் ,சுத்தமாக வழித்து உண்டதையும்,இடை இடையே இறைவனை துதிப்பது, சாப்பிட்டபின் இறைவனை புகழ்ந்தது,என எல்லாவற்றையும் அந்த தம்பதிகள் கவனிக்காமல் இல்லை.


திடீரென "அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர்,"என்ற ரம்மியமான குரலில் தொழுகைக்கான அழைப்பொலி கேட்கவே,எல்லாரும் குரல் வந்த திசை நோக்கி,திரும்பினர்.அங்கே இரு முஸ்லிம் தம்பதிகள் பாங்கு சொல்லிவிட்டு, இஷா என்ற இரவு நேர தொழுகை தொழ ஆரம்பித்தனர்.சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் ஒழு செய்துவிட்டு,தொழுது முடித்தனர்.சண்முகம்,ரஞ்சிதம்மால் கவனித்துக்கொண்டிருந்தனர்.

இப்போது ரஞ்சிதம்மால் கேட்டார்,"பாய்,எனக்கொரு சந்தேகம் பாய்.தல,உடம்பு என்று மூடி இருக்கிற அந்த பாயம்மாவை பாத்தொனே என் மனசில தோனுச்சி,எதுக்கு பொம்பளைங்களை இப்படி முக்காடு போட்டு மூடி வக்கிறீங்க,இது அடிமைத்தனம் இல்லையா?"

பஷீர் காக்கா சொன்னார்,"நல்ல கேள்விதாம்மா கேட்டிருக்கீங்க.அதாவது,இஸ்லாம் இவ்வுலகில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், எப்படி வாழ்ந்தால் கண்ணியமாக வாழ முடியும் என்பதை தெளிவாக கற்றுத்தருகிறது.

மனிதனின் இயற்கையான உணர்வான வெட்கம் என்பது மனிதர்களுக்கே உரித்தான உயர்ந்த சிறந்த பண்பாகும். வெட்கமின்றிச் செயல்படுதலை இஸ்லாம் நடை, உடை, பாவனை என எல்லா காரியங்களிலும் தடை செய்கிறது.

நாகரீகம் வளர்ச்சி அடையாத காலங்களில் கூட மனிதன் தன் உடம்பை இலை, தழைகளை வைத்து மறைப்பதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டான். எனில் உடம்பை மறைத்தல் என்பது மனிதர்களுக்கு இடையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய செயல் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அத்தகைய சமூகத்தில் மரியாதையும் கண்ணியமும் பெற்றுத் தரும் உடை விஷயத்தில் இஸ்லாம் அதிகக் கவனம் செலுத்துகிறது. உடை என்பது சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. எனவேதான் ஒருவர் உடை அணியும் விதம் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பாத விதத்தில் இருப்பதற்கும், தங்களது மறைவான பகுதிகள் வெளியில் தெரியும்படியான இறுக்கமான ஆடைகளை தவிர்க்கும்படியும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இது இருபாலருக்குக்கும் பொதுவானதுதான்.

பெண்களைப் பொறுத்தவரை முகம் மற்றும் கை மணிக்கட்டுக்கு கீழ் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் மறைத்துக் கொள்ள இஸ்லாம் அறிவுறுத்துகிறது. இவ்வாறு மறைப்பதற்கு ஏதுவான உடையாக தற்காலத்தில் வடிவமைத்திருக்கும் பர்தா இருப்பதனாலேயே இஸ்லாம் கூறும் அறிவுரையை மனப்பூர்வமாக பேணும் பெண்கள் இதனை அணிகின்றனர். கண்ணியத்தையும் பாதுகாப்பையும் சமுதாயத்திலிருந்து பெற விரும்பும் பெண்களுக்கான சிறப்பான பரிந்துரையாகவே இஸ்லாம் இதனைக் கூறுகிறது. இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பெண்கள் மட்டுமே பர்தாவை அணிகின்றனர். இதனை தங்கள் உடலை முழுமையாக மறைத்துக் கொள்ளும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையை வைத்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

பர்தா போன்ற உடை அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறை திருக்குர்ஆனின் 33 வது அத்தியாயம் ஸூரத்துல் அஹ்ஜாப்பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன். மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும், அவர்கள் சமூகத்தில் மோசமானவர்களால் விளையும் தொல்லைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காகவும் தான் பர்தா போன்ற உடையை உபயோகிக்க இஸ்லாம் பெண்களுக்குப் பரிந்துரைக்கிறது."

ரஞ்சிதம்மால் அந்தக் கருத்தை ஆமோதிக்கும் வண்ணம்,தன்னை அறியாமலே தன தலையை மூடிக்கொண்டதை,பஷீர் காக்கா கவனிக்கத் தவறவில்லை.

இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

Sunday, August 2, 2009

வெற்றிக்கு வழி! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். தொடர் 2

"ரொம்ப அருமையான கருத்தா இருக்கே"

"ஆமாம்,சண்முகம்,இஸ்லாத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு ஒழுங்கு இருக்கு.இத செய்,அத செய்யாதே என்று சொல்வதோட நிருத்திக் கொள்ளாமே,ஏன் செய்யனும்,ஏன் செய்யக்கூடாது என்று விளக்கமும் துல்லியமான முறையில் இருக்கும்."

அப்படியா ஆச்சரியமா இருக்கு.சரி ஒரு விஷயம் ஞாபகம் வருது,இது பத்தி இஸ்லாத்துல சொல்லப்பட்டிருக்கா? என்று ஆவலோடு கேட்ட சண்முகத்தைப் பார்த்து பஷீர் சொன்னார்,:தயங்காம எது வேணுன்னாலும் கேளுங்க நண்பரே,என்னால் முடிந்த அளவு சொல்றேன்".

"பொதுவா மனுஷன் தப்பு பண்ணிண்டே இருக்கான்.அதுக்கு ஒரு இலக்கணம் இல்லாம போச்சு, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற மாதிரி நிலமையில இப்போ இந்த உலகம் போய்க்கிட்டு இருக்கு,எனவே பாவங்கள் செய்றதா பத்தி இஸ்லாத்துல என்ன சொல்லப்பட்டிருக்குன்னு கொஞ்சம் சொல்லேன்"சண்முகம் வேண்டிக்கொண்டார்.

"நல்லது சண்முகம்,இத பத்தி குரானிலும் இறைவன் கூறி இருக்கிறான்,நபிகள் நாயகமும் தங்களுடைய ஹதீஸிலும் கூறி இருக்கிறார்கள்.அது இதுதான்"


பெரும் பாவங்களில் மிகப் மிகப் பெரியதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினர். அதற்கு நாங்கள் சரி என்றோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் (அநியாயமாக) கொலை செய்வதுமாகும் என்று கூறிச் சாய்ந்து வீற்றிருந்த நபி صلى الله عليه وسلم நிமிர்ந்து அமர்ந்து மேலும் கூறினர்; அறிந்து கொள்ளுங்கள். பொய்யுரைப்பதும், பொய்ச்சான்று பகர்வதுமாம் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவற்றைத் திரும்பத் திரும்ப கூறாது) வெறுமனே இருந்து விடட்டுமே என்று கூறும் வரை. அறிவிப்பாளர்: அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் புகாரி, முஸ்லிம், திர்மிதீ

பெரும் பாவங்களைப் பற்றி ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அவை ஒன்பதாகும். [1] இணை வைப்பதும் [2] சூனியம் செய்வதும் [3] கொலை செய்வதும் [4] வட்டியை உண்பதும் [5] அனாதிகளின் பொருள்களை உண்பதும் [6] போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவதும் [7] கணவர்களைப் பெற்றுள்ள குற்றமற்ற பெண்கள் மீது அவதூறு கூறுவதும் [8] பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் [9] உங்களுடைய கிப்லாவான கஃபதுல்லாஹ்வில் செய்யத் தகாததைச் செய்ய, ஒருவன் வாழும்பொழுதும் இறந்த பின்பும் பிறர் செய்து வருவதையும் ஆகுமாக்குவதாகும் என்று கூறினர். அறிவிப்பவர்: உபைதுப்னு உமைர் அவர்கள் தமது தந்தை மூலம் அறிந்து, ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

அல்லாஹ்வுடைய நபியே! அல்லாஹ்விடம் எந்த பாவம் மிகப்பெரியது என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், நீர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும். அவன்தான் உம்மைப் படைத்தவன் என்று கூறினார்கள். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், உம்முடைய குழந்தைகள் உம்முடைய உணவில் பங்காளிகளாக வந்து விடுவார்களென்று அஞ்சி அவர்களைக் கொலை செய்வதாகும்' என்று கூறினர். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள் 'நீர் உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் மனைவியைச் சோரம் செய்வதாகும்' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ

'ஒருவன் தனது பெற்றோர்களை ஏசுவதும் நிச்சயமாகப் பெரும் பாவங்களைச் சேர்ந்ததேயாகும்' என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அப்பொழுது) மனிதன் தன் பெற்றோர்களையும் ஏசுவதுண்டா? என்று நாங்கள் வினவினோம். ஆம்! இவன் மற்றவனின் தந்தையை ஏசுகிறான். அவன் இவனுடைய தந்தையை (பதிலுக்கு) ஏசி விடுகிறான். இவன் மற்றவனின் தாயை ஏசி விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னுல் ஆஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ



இதைக்கேட்டுக்கொண்டிருந்த சண்முகம்,இவ்வளவு நுணுக்கமான முறையில நபிகள் சொல்லி இருக்கிறார்களே என்று ஆச்சரிப்பட்டுப் போனார்.

இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!