Friday, August 14, 2009

ஐயையோ,துபாய்கு வந்துடாதீங்க!!!


...............இப்பொழுது இங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு. அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும்.ஆனால் தெரிந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடம் பேசும் பொழுதோ அதே “வலிக்கவில்லை” கதைதான்.

ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும் ,வெளிநாட்டில் இருந்துபலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும் ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.

என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக்,எம்மார், அராப்டெக்,போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.

இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை,வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது, பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம்,ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.

தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் “உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லதுவேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்” என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.

வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டுவிட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டதுஎன்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.

இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.

டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!

by ஷேய்க் தாவூத்
--------------------------------------------
வட்டியின் தீங்கு பற்றி திருக்குரானின் எச்சரிக்கை !!!


யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
2:275

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
2:276

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்
2:278


ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்
3:130
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
4:161


மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.
30:39

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!