Saturday, April 18, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?ரியா என்றால் என்ன?தொடர் 2

'ரியா" என்ற அரபிச் சொல், 'ரஆ" எனற வேர்ச் சொல்லிருந்து வருகின்றது. 'ரஆ" என்றால் 'பார்த்தான்", 'கவனித்தான்" என்று பொருள். 'ரியா" என்பதற்கு பகட்டுத்தனம், பாசாங்கு செய்தல், பாவனை, முகஸ்துதி, நயவஞ்சகம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.மனிதர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் அல்லது மனிதர்களின் பாராட்டுக்களைப் பெறும் நோக்கில் அல்லாஹ்வை வணங்குவது அல்லது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் செயல்களில் ஈடுபடுவது என்பதே ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் 'ரியா" எனப்படுகின்றது.

இத்தகைய செயல்களைத் தூண்டும் எண்ணம் முற்றிலும் தூய்மையற்றதாக இருக்கலாம். அதாவது அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற வேண்டுமென்ற எண்ணம் சிறு துளி கூட இல்லாமல், மனிதர்களைத் திருப்திப்படுத்துவதற்காக மட்டும் அச்செயலில் ஒரு மனிதர் ஈடுபட்டிருக்கலாம்: அல்லது அவரது எண்ணத்தின் ஒரு பகுதி மட்டும் தூய்மையானதாக இருக்கலாம். அதாவது அச்செயலில் ஈடுபடும் போது அவரது எண்ணத்தில் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பது ஒரு பகுதியாகவும், அதே நேரத்தில் மனிதர்களின் பாராட்டுதல்களைப் பெற வேண்டும் என்பது அவரது எண்ணத்தின் இன்னொரு பகுதியாகவும் இருக்கலாம்.

'ரியா" என்பது குறித்த இந்த விளக்கத்தை நாம் கவனிக்கும் போது, 'ரியா" உள்ளத்தில் இருந்து தோன்றுகின்றது என்பதைப் பூிந்து கொள்ளலாம். ஈமான் (நம்பிக்கை) என்பது உள்ளத்தின் செயற்பாடுகளும் (அதாவது, அச்சம், அன்பு, நம்பிக்கை, எதிர்பார்ப்பு) நாவின் வெளிப்பாடுகளும் (அதாவது, கலிமாவைச் சொல்வது) கால், கைகளின் செயற்பாடுகளும் (அதாவது தொழுகை, ஹஜ்) உள்ளடங்கியதாக உள்ளது.

'உள்ளத்தின் வெளிப்பாடுகள், அடிப்படை நம்பிக்கையின் ஒரு பகுதியாக விளங்குகின்றது. அல்லாஹ் மற்றும் அவனது தூதர் மீதான நேசம், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை, அல்லாஹ்விற்காக மார்க்க விஷயத்தில் நேர்மையாக இருத்தல், அல்லாஹ்விற்கு நன்றிக் கடன்பட்டிருப்பது, அல்லாஹ்வின் நாட்டம் குறித்து பொறுமையாக இருப்பது, அல்லாஹ்வின் பால் அச்சம்... ஆகிய இந்தச் செயற்பாடுகள் அனைத்தும், எல்லா படைப்பினங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளதாக அனைத்து அறிஞர்களும் ஒருமித்தக் கருத்துக் கொண்டுள்ளார்கள்." (மஜ்மு அல் பத்தாவா பகுதி 10, பக்கம் : 5) என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்.

இப்னு கையூம் அல் ஜவ்ஸீ இவ்வாறு சொல்கிறார்கள்:
'உள்ளத்தின் செயற்பாடுகள் தான் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளது. உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் இவற்றைப் பின்பற்றி நம்பிக்கையை நிறைவுபடுத்துகின்றன. நோக்கம் ஆத்மா போன்றும், செயல்கள் உடல் போன்றும் அமைந்துள்ளன. ஆத்மா உடலை விட்டுப் பிாிந்தால், உடல் செத்து விடுகின்றது. எனவே உள்ளத்தின் செயற்பாடு பற்றிய அறிவு, உடல் உறுப்புகளின் செயற்பாடு பற்றிய அறிவை விட முக்கியமானதாகும். இல்லையெனில் உள்ளத்தின் செயற்பாட்டைத் தவிர வேறு எதைக் கொண்டு ஒரு நம்பிக்கையாளரை, நயவஞ்சகாிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலும்? உடல் உறுப்புகளின் வணக்கம் மற்றும் சமர்ப்பணத்தை விட உள்ளத்தின் வணக்கமும், சமர்ப்பணமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், உள்ளத்தின் வணக்கம் தொடர்ச்சியானது, ஒவ்வொரு சந்தப்பத்திலும் உள்ளம் வழிபாடு செய்வது அவசியமாகும்."

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!