Thursday, August 4, 2011

இது கற்பதற்கான பயணம் அல்ல! விற்பதற்கான பயணம்




அவசரச் சென்னையின் இப்படி அமைதியான ஒரு இடம் இருப்பது அன்றுதான் தெரிந்தது.

சென்னை என்றாலே அசுத்த நகரம், என்ற ஒரு அவப் பெயர் உண்டு. ஏன் என்றால் பார்க்கும் இடமெல்லாம் குப்பை கூலங்களும், கழிவுகளும், சாக்கடைக்களும், அசுத்தத்திற்கே பேர் பெற்ற கூவம் நதியும் இங்குதான் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நகரில் இப்படியும் ஒரு இடம் உண்டுமா என்று எண்ணத் தலைப்படும் அளவுக்கு செம்மொழிப் பூங்கா மிகவும் அழகாக இருந்தது.

அடர்த்தியான மரங்களும், அழகிய புல்கள் நிறைந்த தரையும், வெளிநாடுகளில் கொண்டு வந்து நடப்பட்ட வித விதமான மரங்களும், பூச்செடிகளும் அங்கு நிறைந்து காணப்பட்டது.

இவ்வளவையும் விட மனதுக்கு இதமான செய்தி என்னவெனில் அங்கு அசுத்தமான நிலையைக் காண முடியவில்லை. மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிந்தது. அந்தப் பூங்காவின் அழகையும், தூய்மையையும் பார்த்தால் சென்னை மாநகராட்சிக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.


கலைஞர் ஆட்சியின் ஒரு சிறப்புப் பக்கம் என்று உண்டென்றால் இதையும் அதில் சேர்த்துக்கொள்ள முடியும்.

இனி விஷயத்திற்கு வருவோம்........


இவ்வளவு அமைதியான இடத்தில் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்த எண்ணி கையில் வைத்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் புரட்டி படிக்க ஆரம்பித்தேன். அல்லாஹ்வின் மிகப்பெரும் அருள் அமைதியான சூழலில் நேரம் செல்வது கூட தெரியாமல் புத்தகம் முழுவதும் படித்து முடிந்தாகிவிட்டது.

மாலை 5.45 அளவில் அங்கிருந்து புரப்படத் தயாராகி வெளியில் வந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் மனதை கலங்க வைத்த ஒரு காட்சி அங்கு நடந்து கொண்டிருந்தது. ஆம் படிப்பதற்கு புத்தகத்தை தூக்க வேண்டிய கரத்தில் விற்பதற்கு புத்தகங்களை தூக்கிக் கொண்டு ஒரு சிறுமி அங்கு வியாபாரம் செய்துகொண்டிருந்தாள்.

முகத்தில் கவலை பாதி, விரக்தி மீதி என்று வாடிய பூச்செடியைப் போல் கவலை தோய்ந்த முகமும், வகிடு எடுக்காத தலை முடியும், அழுக்குத் தோய்ந்த ஆடையும் தான் தனது நிலை என்பதை தோற்றத்திலேயே வெளிப்படுத்திக் காணப்பட்ட அவளுக்கு சுமார் ஐந்து வயதிருக்கும்.

ஒரு புத்தகத்தையாவது வாங்கிக்கோண்ணே என்ற சென்னைத் தமிழ் அந்த சிறுமியின் நாவில் இருந்து வெளிப்பட்டது.

சிறுவர்கள் சித்திரம் எழுதிப் பழகுவதற்காக பயன்படுத்தும் டோரா” என்ற புத்தகத்தைத் தான் அவள் கையில் சுமந்து விற்பனை செய்து கொண்டிருந்தாள்.


ஒரு புத்தகத்தின் விலை இருபது இந்திய ரூபாய்கள். வரைவதற்குறிய தேவை எனக்கில்லை என்றாலும் அந்தப் பிஞ்சி உள்ளத்தின் மன அமைதிக்காக ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுப் பூங்காவும் சேர்ந்து அமைந்திருந்த செம்மொழி பூங்காவிற்கு அதிகமான சிறுவர், சிறுமியர் தங்கள் தாய் தந்தையருடன் வந்து போய்க் கொண்டிருக்கும் அவ்வேலையில் இவள் மாத்திரம் விற்பனைக்கான புத்தகங்களை கையில் சுமந்து கொண்டிருந்தாள்.

சென்னை வாசிகளுக்கோ அல்லது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கோ இது போன்ற நிகழ்வுகள் பழையதாக இருக்களாம் ஆனால் என்னைப் போன்ற வெளிநாடு வாழ் மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம் என்றே சொல்ல வேண்டும்.

சென்னையில் இது போன்ற நிலையில் நிறைய சிறுவர்களை பார்க்கக் கிடைக்கிறது.

படிக்கும் வயதில் புத்தகம் விற்கும் சிறுவர்கள்.

காலை எழுந்தவுடன் வீடுகள் தோறும் பத்திரிக்கை பங்கு வைக்கும் சிறுவர்கள்,

டீ கடையில் வேலை பார்ப்பவர்கள்,

ரயில்வே ஸ்டேஷனில், பஸ் ஸ்டான்டில் கடலை விற்பவர்கள்,

மெரீனா கடற் கரையில் சுண்டல் வியாபாரம் செய்யும் சிறுவர்கள்,

பஸ்களில் ஏறி பிச்சை எடுக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் என்று இந்திய நாட்டின் எதிர்காலத் தலை முறையான சிறுவர்களின் ஆரம்ப நிலை இப்படியென்றால் இந்திய தேசம் எப்படி வல்லரசாக முடியும்?

இளைஞர்களைக் கொண்ட சமுதாயம் இந்தியச் சமுதாயம் என்று வாய் கிழியப் பேசுபவர்கள் அந்த இளைஞர்களின் ஆரம்ப நிலையை சரியான முறையில் வழிகாட்டுதல் வழங்காமல் வளர்த்தெடுப்பதில் இந்தியாவிற்கு என்ன இலாபம் வந்துவிடப் போகிறது?

அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ஒரு கூட்டம், சினிமாக் கூத்தாடிகளுக்குப் பின்னால் ஒரு கூட்டம் என்று ஆளுக்கால் கூட்டம் சேர்ப்பதற்குத் தான் இங்குள்ளவர்கள் ஆசைப் படுகிறார்களே தவிர, குழந்தை முன்னேற்றத்திற்காக முயற்சிப்பதாக தெரியவில்லை.

இந்தியாவின் இந்த நிலையைப் போன்ற பாரதூரமான ஒரு நிலையை மற்ற எந்த நாட்டிலும் காணமுடியாது.

சிந்தனை..........

சிறுவர்களின் இந்த அவல நிலைக்கான காரணங்களை அலசிப்பார்த்து அதற்கான தீர்வை நாம் சிந்தித்துப் பார்க்கும் போது, இந்தப் பிரச்சினைக்குறிய சரியான தீர்வை யார் தர முடியும்?

உயர் நீதி மன்றம் தருமா?

ஆளும் அரசாங்கம் தருமா?

கோவில் சாமியார்கள் தருவார்களா?

சிறுவர் பாதுகாப்பு இயங்கள் தருமா?

சிசுக் கொலைத் தடுப்புச் சட்டத்திற்கான அமைப்பு பெற்றுத் தருமா?

சீரழிக்கும் சினிமா ஹீரோக்கள் தீர்வைத் தருவார்களா?

அல்லது இங்குள்ள இயக்கங்களும், சங்கங்களும் பெற்றுக் கொடுக்குமா? 

இல்லவே இல்லை ஏன் என்றால் அனைவரும் தங்கள் சுய இலாபத்திற்காகத் தான் சிறுவர் முன்னேற்றம் பற்றிப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், கருத்துத் தெரிவிக்கிறார்களே தவிர உண்மையான உணர்வுடன் யாரும் செயல்படவில்லை.

அப்படியானால் இதற்குத் தீர்வுதான் என்ன?

ஒரே வார்த்தை!

ஒரே தீர்வு! அது என்ன?

இஸ்லாம்.................. இஸ்லாம்......................... இஸ்லாம்................ இஸ்லாம் மாத்திரமே இதற்குறிய சரியான தீர்வாக அமைய முடியும்.

சிறுவர்களின் மனதில் இடம் பிடித்து, அவர்களுக்குறிய சரியான வழியைக் காட்டி, சிறுவர்களை நாளைய சீரிய தலைவர்களான மாற்றும் சக்தி இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு என்றால் அது மிகையில்லை.

உதாரணமாக உலகத்திற்கு இறுதித் தூதராக இறைவனால் அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் நடந்து கொண்ட சில முறைகளைப் பாருங்கள் இது போல் நாம் எப்போதாவது நடந்த்துண்டா என்பதை சிந்தையில் எடுத்துப் பாருங்கள்.

அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும்நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ, நூல்: புகாரி (6247)

மேலும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி அவர்களை மகிழ்விப்பவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் இருந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு அபூஉமைர் என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தான். அப்போது அவன் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தான் என்றே எண்ணுகிறேன். நபி (ஸல்) அவர்கள் (எம் வீட்டிற்கு வந்தால்)அபூஉமைரே! பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கிறதுஎன்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சில வேளை நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் போது தொழுகைக்குத் தயாராகி விடுவார்கள். தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்யுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டிசுத்தம் செய்யப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அப்போது அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6203)
தம்மிடம் வேலை செய்பவர்களிடமும் பணிவுடன் நடந்துள்ளார்கள். அவர்களிடம் தாம் மிகப் பெரிய தலைவர் என்று ஆணவத்துடன் நடந்து கொண்டதில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவேஅபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்றுஅல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாளியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்என்று கூறினார்கள். ஆகவேநான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும்இதை ஏன் இப்படிச் செய்தாய்என்றோநான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும்ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லைஎன்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (2768)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போக மாட்டேன் என்று சொன்னேன். ஆனால்என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது. நான் புறப்பட்டுச் சென்ற போதுகடைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்த போது அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயாஎன்று கேட்டார்கள். நான்,ஆம்! செல்கிறேன்அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (4626)

இறுதியாக........................

நபியவர்களைப் போல் சிறுவர்களுடன் பழகியவர்கள், பழகுபவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்?

அன்பானவர்களே!

பெரியவர்களே!

அரசியல் தலைவர்களே!

அறிஞர்களே!

நபியவர்களின் வழி முறையைக் கையில் எடுங்கள் சிறுவர்களின் வாழ்வுக்கான அறிவுக் கண்களை திறப்பதற்கான சாவி அதுதான். சிறப்பான அந்த வழி முறைகளைப் பின்பற்றி உலக மற்றும் மறுமை வாழ்வில் வெற்றி பெருவோமாக

Rasmin M.I.Sc

2 comments:

  1. என்னதான் சட்டம் போட்டாலும் குழந்தை தொழிலாளர்கள் வருவதை தடுக்க முடிவதில்லை :-(

    நச் பதிவு :-)

    ReplyDelete
  2. சிறுவர்களையும் மனிதர்களாக மதிக்க எப்போதுதான் கற்றுக்கொள்வார்களோ/ மனதை கனக்கச்செய்த பதிவு.

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!