Tuesday, August 23, 2011

கொள்ளையர்களை வெட்டிய வீரப்பெண் பரக்கத் நிஷா!


வீடு புகுந்து நகைகளைப் பறித்த கொள்ளையர்களிடம் போராடிய பெண், அவர்களிடம் இருந்த அரிவாளைப் பறித்து, கொள்ளையனை வெட்டியதால், அவர்கள் தப்பி ஓடினர். தேனி மாவட்டம் உத்தமபாளையம், பி.டி.ஆர். காலனியை சேர்ந்த சர்தார் அகமது மனைவி பரக்கத் நிஷா,53. நேற்று அதிகாலை 4 மணிக்கு, வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் வீட்டிற்குள் புகுந்தனர்.

அதில் ஒருவன், பரக்கத் நிஷாவின் மகள் அலிமா பானு படுத்திருந்த அறைக்குள் சென்று, அவர் அணிந்திருந்த ஐந்து சவரன் செயினை பறித்த போது, அலிமா பானு கூச்சலிட்டார். கொள்ளையனைப் பிடிக்க ஓடி வந்த பரக்கத் நிஷாவை, அரிவாளுடன் காத்திருந்த மற்றொரு கொள்ளையன் தடுத்தான். அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் செயினை பறித்தவன், அரிவாளால் வெட்டினான். இதில், பரக்கத் நிஷாவிற்கு கைவிரலில், காயம் ஏற்பட்டது.

large_298784.jpgசுதாரித்துக்கொண்டவர், திருடனுடன் போராடினார். அவனிடம் இருந்த அரிவாளைப் பறித்து, கொள்ளையனைத் திருப்பி வெட்டினார். தோள்பட்டையில், இரண்டு முறை வெட்டியதால், தப்பித்தால் போதும் என, கையில் கிடைத்த ஐந்தரை சவரன் நகைகளுடன், கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அதற்குள், பரக்கத் நிஷாவின் மருமகன் அக்பர் அலி, எழுந்து துரத்திய போது, காலில் காயம் ஏற்பட்டது. பரக்கத் நிஷாவும், அக்பர் அலியும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தமபாளையம் போலீசார், தப்பி ஓடிய கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!