Tuesday, December 13, 2011

வக்பு வாரியத்தை கலைக்க வேண்டும்,த த ஜ தீர்மானம்


மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள்

2011 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று நெல்லை பார்வதி சேஷ மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது., ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். அவரது வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

2. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுவரும் 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தக் கோரியும், புதுச்சேரியில் இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டித்தும், மத்தியில் முஸ்லிம்களுக்கு10% இட ஒதுக்கீடு தர வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுவையின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிப்ரவரி 14 (செவ்வாய்க்கிழமை) அன்று உரிமை மீட்புப் போராட்டம் நடத்துவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது

3. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை இதுவரை காங்கிரஸ் அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவருகிறது. சச்சார் கமிஷனும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நிலையை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்த பின்பும் அவற்றின் பரிந்துரைகளை மத்திய காங்கிரஸ் அரசு நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகிறது. முஸ்லிம்களின் இந்த நியாயமான உரிமையைக் காங்கிரஸ் அரசு உடனடியாக வழங்கத் தவறினால் காங்கிரஸிற்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்பதை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

4. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் அப்பள்ளியை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை துரிதப்படுத்தவும் நியாயமான தீர்ப்பு வழங்கவும் இப்பொதுக்குழு நீதித் துறையைக் கேட்டுக் கொள்கிறது.

5. இந்திய தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசன திருத்தம் செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும் இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

6. கிறிஸ்தவ சமுதாயத்தின் சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் கிறிஸ்தவ சமுதாயமே நிர்வகித்து வருகிறது. ஆனால் முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின் வக்ஃபு வாரியம் நிர்வகிக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கும் சுரண்டல் பேர்வழிகளுக்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ஃப் வாரியத்தை முற்றாகக் கலைத்து விட வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

7. குஜராத்தில் மூவாயிரத்திற்
கும் அதிகமான முஸ்லிம்களை கொன்றொழித்த பயங்கரவாதி நரபலி மோடியின் உண்ணாவிரத நாடகத்தை வாழ்த்தி தனது பிரதிநிதிகளை அனுப்பிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

8. முஸ்லிம்களின் விரோதியான அத்வானியின் ரதயாத்திரைக்கு ஆதரவளித்தும் வாழ்த்தியும் முஸ்லிம்களின்உணர்வோடு விளையாடும் ஜெயலலிதாவின் இப்போக்கு தொடருமானால் முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாக்குகளையும் இழக்க நேரிடும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

9. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு எனத் தொடர்ந்து விலைவாசிகள் அதிமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை எளிய நடுத்தர மக்களை மிகவும் சிரமத்திற்குள்ளாக்கி அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இப்பொதுக்குழு அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என தமிழக அரசைக் கோருகின்றது.

10. தமிழகத்திற்கும் கேரளத்திற்
கும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, தமிழகத்திற்கும் ஆந்திரத்திற்கும் இடையே பாலாறு அணைப் பிரச்சினை, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரிப் பிரச்சினை என இன மொழி அடிப்படையிலான பிரிவினைவாதங்கள் இந்திய தேசத்தின் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் அச்சுறுத்தும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அனைவரும் ஓரிறையின் அடிமைகள் என்பதையும் ஒருதாய் மக்கள் என்பதையும் உணர்ந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மனிதாபிமானத்தோடும் நியாயத்தோடும் இப்பிரச்சினை
களைத் தீர்க்க முன்வரவேண்டும் என்றும் அதற்கேற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இப்பிரச்சினைகளில் மத்திய மாநில அரசுகள் தீர்க்க உதவும் வகையில் அனைத்து மாநில பொது மக்களும் கட்சிகளும் வன்முறையைத் தூண்டிவிடுவதைக் கைவிட வேண்டும் என்று அனைத்து மாநில மக்களையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

11. அரசியல் ஆதாயத்திற்காக
வும் சுய விளம்பரத்திற்காகவும் இன மொழி பிரிவினைகளைத் தூண்டி மக்களை பிளவு படுத்த முயற்சிக்கும் நச்சு சக்திகளை இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் புரிந்து கொண்டு அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

12. கூடங்குளம் அணுமின் நிலைய விஷயத்தில் இன மொழி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் மக்களைப் பிரிக்க முயலும் பிரிவினைவாதிகள், அந்நிய சக்திகளின் அடிவருடிகள், ஆகியோரின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து, அப்பகுதிவாழ் மக்களின் நியாயமான அச்சத்தை போக்கி, தேவையான பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்தி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

13. தமிழகத்தில் குற்ற செயல்கள் அதிகரிக்கவும் பலரது குடும்ப வாழ்க்கை சீரழியவும் காரணமாக இருக்கும் அரசு மதுக்கடைகள் போதாதென்று சொகுசு மதுக்கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூடவேண்டும் என்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

14. முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களும் அரசு விடுமுறையாக இருந்தும் சில கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் தேர்வுகளை நடத்துகின்றன. சட்டத்திற்கு புறம்பாகச் செயல்படும் இந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் அவற்றின் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்படவேணடும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

15. முஸ்லிம் அல்லாதார் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அந்நிறுவனங்களின் மதம் சார்ந்த வழிபாட்டு பாடல்களை பாடவும் அவற்றில் பங்கேற்கவும் முஸ்லிம் சிறார்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்கும் மாணவ மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அத்தகைய கல்வி நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது

16. ரமலான் மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு சிறப்பு விலையில் அரசு வழங்கும் பச்சரிசி விநியோக முறையை இலகுவாக்கும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. அரிசி வழங்கலில் தேவையற்ற கெடுபிடிகள் செய்து முஸ்லிம்களை அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.

17. வியாபார நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் மின்கட்டணம் போன்றே பள்ளிவாசல்களுக்கும் மின்கட்டணம்வசூலிக்கப்படுகிறது. அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் முற்றிலுமாக இலவச மின்சாரம் வழங்கும்படியும் இயலாவிட்டால் வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட் கட்டணத்தை வசூலிக்குமாறு தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

18. காழ்ப்புணர்வு காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சில ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுக்கிறார்கள். மனிதாபிமானமற்ற இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

19. சில்லறை வணிகத்தில் 51 சதவிகிதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக் குழு எச்சரிக்கை செய்கிறது. உள்நாட்டு மக்களின் பொருளாதாரத்தைச் சீரழித்து அந்நிய சக்திகளிடம் நாட்டையே அடகுவைக்க வேண்டிய நிலையைத்தான் 51 சதவிகித அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிக்கும் இந்த முடிவு ஏற்படுத்தும். எனவே இந்தியாவை அந்நிய சக்திகளிடம் அடிமையாக்கும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது


No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!