Friday, November 14, 2008

நாக்கைப் புடுங்குற மாதிரி நாலு கேள்வி

மாலேகான்(மகாராஷ்ட்ரா) மற்றும் மொடாசா(குஜராத்) குண்டுவெடிப்புகளில் சங்பரிவாரச் சாமியாரிக்குத் தொடர்புள்ள விசயம் ஊடகங்களில் கசியத் தொடங்கியதும் பாஜகவும் அதன் ஊதுகுழல்களும் "இந்துக்களை இழிவு படுத்தும் சூழ்ச்சி" என்று ஒப்பாரி வைத்தார்கள்.தீவிரவாத ஒழிப்புப்படையினர் அடுத்தடுத்த ஆதாரங்களை வெளியிட்டதும் சாமியாரிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று சொல்லி சாமியாடினர். குற்றச்சாட்டிற்கான அசைக்க முடியாத ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டதும் சாமியாரினிக்கு வேண்டிய சட்ட உதவிகளை பாஜகவே செய்யும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் அறிவித்திருக்கிறார்.

வழக்கமாக இதுவரையிலான குண்டு வெடிப்புகளில், சம்பவம் நடந்த ஓரிரு மணிநேரத்திற்குள் இதைச் செய்தவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள் சிமி, ஹுஜி,முஜாஹிதீன் என்றெல்லாம் சொல்லாவிட்டால் கஷ்டப்பட்டு குண்டு வைத்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடுமென்பதால் அஹிம்சாவாதி அத்வானி உடனடியாக அறிக்கை விடுவார். அத்வானிக்குச் சளைத்தவனா என்பதுபோல் உலகமகா அஹிம்சாவாதி குஜராத் படுகொலைகள் புகழ் நரேந்திரமோடி மத்திய அரசை ஏற்கனவே நான் எச்சரித்திருந்தேன். அதை சீரியசாக எடுத்திருந்தால் இந்தவார குண்டு வெடிப்பு தவிர்க்கப்பட்டிருக்கும் என்று நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்.

இந்தியா சுதந்திரமடைந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றதால் மனம் வெதும்பி இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைத் "தற்கொலை" செய்த நாதுராம் கோட்சே என்ற இந்து ஞானமரபைச் சார்ந்த சமூக சீர்திருத்தவாதி கைது செய்யப்பட்டபோது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்(RSS) முதலில் கோட்சேக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று கைகழுவியது. நாதுராம் கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே சிறுவயதுமுதலே கோட்சே பிரதர்ஸிற்கு RSSஉடன் இருந்த தொடர்புகளை புட்டு வைத்தான். பாஜகவின் பொற்காலஆட்சியில் நாதுராம் கோட்சேக்கு கோயில் கட்டுமளவுக்கு புகழ்ந்தார்கள் என்பது தனிக்கதை.

சரி விசயத்திற்கு வருவோம். குண்டு வெடிப்புகள் முஸ்லிம்களின் ஏகபோக உரிமை என்பதுபோல் பேசி, எழுதி, முழங்கி வந்தவர்கள் கீழ்கண்ட எனது கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்வீர்களா?

1) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இனிவரும் சுதந்திர மற்றும் குடியரசு தினத்தன்றும் வரலாறு, புவியியல்,அறிவியல்....................காணாத பாதுகாப்பை இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு(ம்) வழங்குவீர்களா?

2) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாதுக்களையும் சாத்விக்களையும் சிலவாரங்களுக்குக் கைது செய்து சிறையிடைப்பீர்களா?

3) கோழி களவாணி/ ஆடு களவாணி/பிளேடு பக்கிரி/ கேப்மாறி/ மொள்ளமாறி/ முடிச்சவிழ்க்கி யாராவது பிடிபட்டால் பி.ஜெய்னுலாபிதீன்/ ஜவாஹிருல்லா/ காதர் முஹைதீன் இவர்களில் யாருக்காவது கொலைமிரட்டல் ஈமெயில் வந்திருப்பதாகச் சொல்லி போலீஸ் பாதுகாப்பு கொடுப்பீர்களா?

4) ரயில் நிலையம்,பேரூந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடுமிடத்தில் விபூதி வைத்த, பூணூல் போட்ட, சபரி மலை, திருப்பதி, பழனிக்கு மாலை போட்டவர்களிடம் துருவித்துருவி விசாரிப்பீர்களா?

இதை வாசித்துக் கொண்டிருக்கும் இந்துமத நண்பர்களே! என்னடா இவன் இப்படி எல்லோரையும் சகட்டுமேனிக்கு சந்தேகப்பட்டு எழுதியிருக்கிறான்! யாரோ ஒருசிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த இந்துக்களையும் குற்றஞ்சொல்வது எவ்வகையில் நியாயம் என்று கேட்கத் தோன்றுகிறதா?

இதே கேள்வியைத்தானே நாங்களும் கடந்த 10-15 வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்! என்ன செய்வது தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தானே அடுத்தவரின் வலி சிலருக்குப் புரிகிறது!

இப்படிக்கு,
ஊர்சுத்தி உமர்
courtesy:adiraixpress

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!