Tuesday, March 17, 2009

வட்டி என்ற மிகப்பெரிய தீமை! இறுதிப் பலன் நாசம்தான்!!தொடர் 3

بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் மனிதர்களுக்கு அருளப்பட்டதை (நபியே!) நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (16:44)


மேலே உள்ள இறைவசனத்தின் மூலம் குர்ஆனில் வரும் வட்டிக்கு விளக்கம் தர அங்கீகாரம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் அதைப்பற்றி கூறுவதை கீழே காண்போம். பலவித கொடுக்கல் வாங்கலில் நபி(ஸல்) அவர்கள் இவையெல்லாம் கூடும், இவையெல்லாம் வட்டி (ஹராம்) கூடாது என்று கூறியுள்ளதால் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல் எல்லா ஹதீஸ்களையும் கருத்தில் கொண்டு அதைப்பற்றி அறிய முற்படவேண்டும்.

வட்டி எல்லாம் தவணை முறையில்தான். கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை. (உஸாமத்துபின் ஜைத் (ரழ) நூல்: புகாரி, முஸ்லிம்

தங்கத்தை தங்கத்திற்கு பதிலாகவும், வெள்ளியை வெள்ளிக்கு பதிலாகவும், மணிக்கோதுமையை மணிக்கோதுமைக்கு பதிலாகவும், தொலிக்கோதுமையை தொலிக்கோதுமைக்கு பதிலாகவும், பேரிச்சம் பழத்தை பேரிச்சம் பழத்திற்கு பதிலாகவும், உப்பை உப்பிற்கு பதிலாகவும் சம எடையில், சம தரத்தில், கரத்திற்கு கரம் விற்றுக்கொள்ளுங்கள். இவ்வினங்கள் பேதப்படுமானால் கரத்திற்கு கரம் நீங்கள் விரும்பிய பிரகாரம் விற்றுக் கொள்ளுங்கள். எவர் கூடுதலாகக் கொடுக்கவோ அல்லது கூடுதலாக வாங்கவோ செய்த போதினும் அது வட்டியாகும். விற்பவரும் வாங்குபவரும் சமமானவரே. (உபாதாத்துப்னிஸ்ஸாமித் நூல்: முஸ்லிம், திர்மிதி)

நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரழி) அவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம் பழத்தை கொண்டு வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது உமக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று வினவினர். அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரிச்சம் பழம் இருந்தது. அதில் நான் இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பர்னீ பேரிச்சம்பழம் வாங்கினேன் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஆ! இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்க வட்டி, இவ்வாறு செய்யாதீர், இவ்வாறு நீர் செய்ய நாடினால் முதலில் (உமது) பேரிச்சம் பழத்தை விற்றுவிட்டு பின்னர் இதனை வாங்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள். (அபூ ஸயீது நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத் (ரழி). திர்மிதி, நஸயீ)

வட்டித்தொழில் செய்து சாப்பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடுமாறும் பைத்தியக்காரராகவே எழுப்பப்படுவார். (இப்னு அப்பாஸ் (ரழி). இப்னு அபீஹாத்திம் )

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். (அபூஹுரைரா (ரழி) புகாரி)

வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரழி) ஆதாரம்:முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

இத்தகைய பெரும்பாவமான வட்டியிலுருந்து விலகி இன்றைய உலகில் நாம் வாழமுடியாது. அப்படி வாழமுற்பட்டால் நாமும் நமது சமுதாயமும் மிகப்பெரும் பொருளாதர வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வும் அவனது தூதரின் வாக்கும் எக்காலத்திலும் பொய்யாகாது.

يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ அல்லாஹ் வட்டியை (எந்த பரகத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை பெருகச் செய்வான். (2:276)


நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: இறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக! (இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: பைஹகீ, ஸ்ரஹுஸ்ஸுன்னா)

எனவே நாம் எவ்வளவு அதிகமாக கஷ்டப்பட்டு உழைத்தாலும், இறைவனால் நமக்கு அளித்த ரிஜ்க்கு மேல் அடைய முடியாது. அடையுமுன் யாரும் மரணிக்க முடியாது. ஆகவே வட்டி என்ற ஹராமை தவிர்த்து ஹலாலான வழியிலேயே முயற்சி செய்வோம். நமக்குள்ள ரிஜ்க்கு நம்மை வந்தே அடையும் என்ற நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் உறுதிகொண்டு உழைப்போமாக.

by அப்துல்லாஹ்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!