Sunday, March 6, 2016

நல்லதை நாடி,அல்லதை சாடி !

ஒரு செய்தியை சொல்ல எத்தனையோ வழி முறைகள் இப்போது .ஆனால்,ஆதிக் காலம் தொட்டு,பல வித முறைகள் மாறிக் கொண்டே வருகின்றன.

அல்லாஹ் தன தூதர்களை ஏகத்துவம் என்ற ஒற்றை செய்தியை கொடுத்து,மக்களிடையே பிரச்சாரம் செய்ய அனுப்பும் போது,அந்த தூதர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே அழைத்தனர்.வேறு சாதனங்கள் இல்லை.வேறு சாதனங்கள் இல்லையென்றாலும் அந்த ஏகத்துவ செய்தியை இறைவன் எவ்வாறு கட்டளை இட்டானோ,அதே மாதிரி,எவ்வித பிசிறும் இல்லாமல் செய்தனர்.தங்கள் பேச்சு மட்டுமே (வாய்)அன்றைய ஒரே மீடியா.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். 16:125
நபிமார்கள் அனைவருமே,மிக மிக அழகிய முறையில் மக்களை "அல்லாஹ் ஒருவனே" "அவனை மட்டுமே வணங்க வேண்டும்"என்ற உயரிய கொள்கையில் மக்களை அழைத்தனர்.சிலர்  ஏற்றனர்,பலர் பகைத்தனர்.

இருப்பினும்,மனம் தளராமல் - அவர்களின் பணியை செம்மையாய் செய்தனர்.அவர்களின் அன்றைய ஒரே மீடியா தங்களின் வாய்.பிறகு வந்த சஹாபாக்கள்,இமாம்கள்,தாபியீன்கள்,த்பவுத் தாபியீன்கள் போன்ற நல்ல மக்களின் காலங்கள் கூட குரான்,சுன்னாவை மக்களிடையே கொண்டு செல்ல அவர்களின் ஒரே மீடியாவாக இருந்தது அவர்களின் வாய் மட்டுமே.அவர்களும்,ஏகத்துவ செய்திகளை ,அல்லாஹ்வுக்கு பயந்து சொல்லி சென்றனர்.
நாட்கள் செல்ல செல்ல மக்களும் மாறினர்,மீடியாக்களும் மாறிவிட்டன.அதனால் அவதூறு செய்திகளும் பரவ ஆரம்பித்தன.

நவீன கண்டு பிடிப்புக்கள் மூலம் மீடியாக்கள் இன்று பல வகைகளிலும் மேலோங்கி எங்கோ சென்று விட்டது.

வாயின் மூலம் தொடங்கிய மீடியா,நபிமார்கள்,சஹாபாக்கள்,இமாம்கள்,தாபியீன்கள்,த்பவுத் தாபியீன்கள் வரை நன்றாகவே இருந்தது.
வாய் மூலம் தொடங்கப்பட்ட அந்த மீடியா,பிறகு சங்கு ஊதியும்,பறை அடித்தும்,நெருப்பு மூட்டியும்,நகரா அடித்தும் வளர்ந்து,பிரிண்டிங்  முறை தொடங்கப்பட்டு,ஒரு புரட்சி ஏற்படத் தொடங்கியது.

முற்காலத்தில் பலகையிலும் கல்லிலும் தமக்கு வேண்டிய எழுத்துக்களையோ, முத்திரைகளையோ, குறிகளையோ செதுக்கினர். அவற்றின் மீது மையைத் தடவி நகல் எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேடு பள்ளங்களைக் கொண்ட பரப்பு ஒன்றின் மேல் மையைத் தடவிக் காகிதத்திலோ அல்லது வேறு ஒரு பொருளின் மீதோ அழுத்திப் பதிவெடுக்கும் முறை அடுத்துக் கையாளப்பட்டது. களிமண் அல்லது மெழுகில் இவ்வகையான அச்சுப் பதிவுகள் செய்யப்பட்டன.

முத்திரையிடுதலும் இலச்சினையிடுதலும் பாபிலோனியாவிலும், சீனாவிலும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட வரலாறாகும். செதுக்குத் தகடுகளில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டன. அடுத்து, கல்வெட்டுக்களில் மையைத் தடவிப் பதிப்பு எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுவே மரத்தில் எழுத்துக்களை வடிவமைத்துப் புத்தகங்கள் பதிப்பிக்க முதன்முதலில் அடிப்படையாக அமைந்தது. கல்வெட்டிலிருந்து உண்மை நகல் எடுப்பதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். கல்வெட்டுத் துறைகளிலிருந்து மர அச்சுப்படி முறையும் அதிலிருந்து நகல் எடுப்பு முறையும் வளர்ச்சியடைந்தன.

அடுத்த நிலையில் நெசவுத் துணியில் அச்சிடும் முறை பரவியது. மரத்துண்டுகளில் செதுக்கப்பட்ட விதவிதமான உருவங்களைக் கொண்டு துணியில் அச்சிடுவது இம்முறையாகும்.

இத்தாலி நாட்டில் 15ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அரபுமொழியில் அச்சு வேலைகள் சில நடைபெற்றன. திருக் குரானும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

அச்சுக்கலையில் புதிய முறையைப் புகுத்தச் சீனநாட்டினர் விரும்பினர். 11ஆம் நூற்றாண்டில் சீனாவை ஆட்சிபுரிந்த ‘சிங்கிலி’ மன்னன் காலத்தில் ‘பி.செங்’ என்பவர் தனி அச்சை முதன்முதலில் கண்டுபிடித்தார்.

‘பி.செங்’ என்பவரே எழுத்துக்களை முதலில் களிமண்ணால் செய்தும் பிறகு தகரத்தால் செய்தும் உருவாக்கினார். தனித்தனி எழுத்துக்களுக்காக மரத்தினால் செய்த எழுத்துகளைப் பயன்படுத்தினார். மங்கோலியர் காலத்திலேயே இந்த அச்சுமுறை வழக்கத்திற்கு வந்தது. இது மற்ற நாடுகளுக்கும் பரவியது.

அடுத்த நிலையில் உலோகத்தால் அச்சு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. கொரியா, சீனா ஆகிய நாடுகளில் 18ஆம் நூற்றாண்டு வரை இம்முறை வழக்கில் இருந்தது.

15ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கையால் எழுதப்பட்ட எழுத்துகளையே மாதிரியாகக் கொண்டு அச்சு உருவாக்கி நூல்களை வெளியிட்டனர். இம்முறையால் கையெழுத்திற்கும் அச்சிற்கும் வேறுபாடு காணப்படவில்லை. ஜான் கூட்டன்பர்க் எனும் ஜெர்மானியர் முதன்முதலில் ஐரோப்பாவில் தனித்தனி உலோக எழுத்துகளை 1437இல் உருவாக்கி, அச்சுப்பொறியையும் கண்டுபிடித்தார். இதனால் இவர் ‘அச்சுக்கலையின் தந்தை’ என்று போற்றப்படுகின்றார்.

இன்று அச்சடிக்க பல நவீன முறைகள் வந்துவிட்டன.

அதோடு,இணைய வழி மீடியா ,தொலைக் காட்சி என முன்னேறி - செய்திகள் ஒரே நொடியில் முழு உலகும் சுற்றி வந்து விடுகிறது.நல்ல செய்தியோ,கெட்ட செய்தியோ,உண்மையோ,பொய்யோ - அவதூறோ இப்படி இன்று உலகம் முழுதும் செய்திகள் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.சில செய்திகள் வெல்லும்,சிலது கொல்லும்.

எனவே,நவீன மீடியாக்களின் உலகத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.எனக்கு   எது சரி என்று படுகிறது,அதையே  பின்பற்றுவேன் என்பதை விட,அல்லாஹ்வுக்கும்,அவனது உண்மைத் தூதர் ,மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு எது சரியோ ,அதையே நானும்,நீங்களும் பின்பற்ற வேண்டும்,இன்ஷா அல்லாஹ் அவ்வாறு பின்பற்ற அல்லாஹ் அருள் செய்வானாக.

நல்லதை நாடி,அல்லதை சாடுவோம்,இன்ஷா அல்லாஹ்.







No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!