Saturday, December 5, 2009

இதுக்கு முந்தப்போவது யாரு?

அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...

அன்புடையீர்,

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் வாழும் பகுதி தேனி மாவட்டம். தாழ்த்தப்பட்ட சமூகத்தவராக இருந்து 20-30 ஆண்டுகளுக்குமுன் இசுலாத்தை ஏற்ற மக்கள் தேனி மாவட்டத்தின் பல கிராமங்களில் வசித்து வருகின்றனர். அன்றாடம் உழைத்தால்தான் உணவுக்கு உத்திரவாதம் என்ற நிலையில் வாழும் மக்களில், ஆணும் பெண்ணும் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஒருவர் இறந்தபின் அவருடன் வருபவை மூன்று. அதில் ஒன்று நிலையான கல்வி; மற்றொன்று நிரந்தர தர்மம். ஒரு தலைமுறையையே முன்னேற்றுவதற்குத் தேவையான கல்வியைக் கொடுத்தல் என்பது இவ்வுலகம் அழியும் வரையிலான நன்மையை நிரந்தரமாகப் பெற்றுத் தரும் நற்செயலாகும்.

நம் சமுதாயம் இன்று எல்லா நிலையிலும் அடங்கி ஒடுங்கி, அனைத்து மட்டங்களிலும் பின் தங்கியிருப்பதற்குக் கல்வியில் கவனமின்றி இருப்பது மிக முக்கிய காரணமாகும்.


"தாழ்ந்திருக்கும் கையை விட உயர்ந்திருக்கும் கை மேலானது" என்பது எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வாக்கு. ஒருவரது தற்காலிகத் தேவையை அவ்வப்போது தீர்த்து வைப்பது என்பது, அவரைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்கும் நிலையில் தொடர்ந்து நீடிக்க வைப்பதற்கு மறைமுகமான ஊக்கமளிப்பதாகும். அதைவிட, அவரது தேவையை அவரே தீர்த்துக் கொள்ளும் வகையில் கவுரவமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது மிக உயர்ந்த நற்செயலாகும். மார்க்கச் சகோதரர்களைப் பொருத்தவரை ஒருவரின் கவுரவத்தைப் பாதுகாப்பதும் மற்ற முஸ்லிம்களின் மீது கடமையாகும்.

அதன் அடிப்படையில், T. மீனாட்சிபுரம் எனும் கிராமத்தின் எதிர்காலத்தையே முழுமையாக மாற்றி அமைக்கவல்ல இளம் தலைமுறையினரின் கல்விக்காகச் செலவழிக்க வேண்டியது நம் சமுதாயத்தின் கடமையாகும். அதற்காக அக்கிராமக் குழந்தைகளின் ஆண்டுக் கல்விக்கான முழு தொழுகையினையும் ஒவ்வொரு ஆண்டும் முழுமையாகக் கொடுத்து உதவி, அவர்களின் கல்வி இறுதிவரை தடைப்பட்டு விடாமல் முழுமையடையும் வகையில் அக்கிராமத்தைத் தத்தெடுக்கவும் நம்மில் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என சத்தியமார்க்கம்.காம் அன்போடு கேட்டுக் கொள்கிறது.

மாணவரில் ஒருவருக்கும் மாணவியரில் ஒருவருக்கும் பள்ளிப் படிப்பின் இறுதி வரைக்குமான செலவுகளுக்கு சத்தியமார்க்கம்.காம் பொறுப்பேற்கிறது. இந்த நல்வாய்ப்பை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.


வாழ்க்கைத் தரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இக்கிராமத்து முஸ்லிம்களின் பிள்ளைகள் பஞ்சாயத்து போர்டு பள்ளிகளிலேயே பயின்று வருகின்றனர். குடும்பச் சூழல் காரணமாக இடையில் படிப்பை விடும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதிகம். மதிய நேர சத்துணவுக்காகவே பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பும் அவல நிலையும் தொடர்கிறது. மெட்ரிகுலேசன் படிப்பு என்பது அவர்களுக்குத் தூரத்துக் கனவு.

இந்நிலையில் இம்மக்களின் வறுமை மற்றும் கல்வி ஆசையை சாதகமாய் பயன்படுத்திக் கொள்ள சில கிருஸ்துவ அமைப்புகளும் நிறுவனங்களும் சமீப காலமாக முயன்று வருகின்றன. நான் இங்கு சிபாரிசு செய்துள்ள T. மீனாட்சிபுரம் கிராமத்துப் பிள்ளைகளை அருகில் தேவாரம் என்கிற ஊரில் அமைந்துள்ள குட்செப்பர்டு மெட்ரிக் பள்ளி நிர்வாகம், இலவசக்கல்வி, சீருடை என ஆசைக்காட்டி 2007-2008 கல்வியாண்டில் அழைக்க, இம்மக்களும் மெட்ரிக் படிப்பு கனவில் பிள்ளைகளைச் சேர்க்க, அப்பிள்ளைகளைப் பைபிள் வகுப்புகளுக்கும் சர்ச்களுக்கும் ஜெபக் கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.இந்த ஆபத்து நமது கவனத்திற்கு வந்தவுடன் அக்கிராமத்துப் பிள்ளைகள் 9 பேரையும் மேலும் ஒரு கிராமமான திம்மிநாயக்கன் பட்டி கிராமத்துப் பிள்ளைகள் 9 பேரையும் அப்பள்ளியிலிருந்து இடமாற்றம் பெற்று, உத்தமபாளையம் அல்-ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளோம்.

அப்பள்ளி நிர்வாகம் கல்விக் கட்டணம் முழுவதையும் தள்ளுபடி செய்துள்ளனர். சீருடை மற்றும் புத்தகங்களுக்கான செலவைப் பெற்றோர் ஏற்க வேண்டும் என்றும் மீதமுள்ள போக்குவரத்து மற்றும் இதர கட்டணங்களைத் தங்களைப் போன்ற சமூகம் நலன் நாடும் அமைப்புகள் மூலம் பெற்றுத் தருவது என்றும் முயன்று, இறையருளால் ஓராண்டு (2008-2009) சமாளித்து விட்டோம். 2009-2010 கல்வி ஆண்டில் மேலும் அதிகப் பிள்ளைகள் சேர்ந்துள்ளனர்.

T. மீனாட்சிபுரம் பிள்ளைகள் 18 பேரின் கல்விக் கட்டணம் விவரங்களைத் தங்கள் உதவி வேண்டி இத்துடன் இணைத்துள்ளேன். திம்மிநாயக்கன் பட்டி கிராமத்தைச் சார்ந்த 12 பிள்ளைகளுக்கான செலவினை வேறு அமைப்பினர் - சமுதாய ஆர்வலரிடம் பெற வேண்டிய தேவையும் உள்ளது. அதற்கும் நீங்களே வழிகாட்டினால் பேருதவியாக அமையும். இசுலாத்தைப் புதிதாக ஏற்ற இந்த மக்களின் எதிர்கால வாழ்விற்கு தங்கள் மூலம் வழிகாட்ட வல்ல இறையை வேண்டி வேண்டுகோள் விடுக்கிறேன். தங்கள் பேருதவியைப் பள்ளி முகவரிக்கே அனுப்பி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வுதவி ஆண்டுதோறும் தொடரும் அளவிற்கு வல்ல இறைவன் தாங்கள் அனைவரது வளனும் சிறக்க அருள் புரிவானாக!

நிறைய அன்புடன்,
பேரா. மு. அப்துல் சமது
தமிழ்த்துறை விரிவுரையாளர்
ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி
உத்தமபாளையம் - 625 533
போன் : 04554 - 265225
தேதி : 17/08/2009
----------------------------------------------------

T. மீனாட்சிபுரம் முஸ்லிம் ஜமாஅத்தின் வேண்டுகோள் மடல்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

எங்கள் கிராமத்து முஸ்லிம்களின் நிலையையும் இவ்வுதவி வேண்டுவதன் காரணத்தையும் பேராசிரியர் மு. அப்துல் சமது அவர்கள் விரிவாக எழுதியுள்ளதால், இங்கு அவற்றைக் குறிப்பிடவில்லை. இஸ்லாத்தைப் புதிதாக ஏற்ற எங்கள் மக்கள் தொடர்ந்து வல்ல இறைவனின் நேர்வழியாம் தீன் வழியில் நிற்பதற்குத் தங்களது பேருதவி துணை நிற்கும்.

உத்தம பாளையம் அல்-ஹிக்மா மெட்ரிக் மேநிலைப் பள்ளியில் பயிலும் எங்கள் ஜமாஅத்தைச் சார்ந்த 18 பிள்ளைகள்தாம் எங்கள் ஜமாஅத்தில் இருந்து மெட்ரிகுலேசன் கல்வி பெறும் முதல் தலைமுறை. அவர்களது கல்வி மேம்பாட்டிற்குத் தாங்கள் உதவி புரியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இத்துடன் பள்ளிக் கட்டண விபரங்களை இணைத்துள்ளோம். தாங்கள் அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ எங்கள் ஜமாஅத்தினர் அனைவரும் துஆச் செய்கின்றனர். நன்றி.


வஸ்ஸலாம்.

தலைவர்
மீனாட்சி புரம் முஸ்லிம் ஜமாஅத்
T. மீனாட்சிபுரம் - 625 530
தேவாரம் வழி, உத்தமபாளையம் தாலுகா
தேனி மாவட்டம்.
ALHIKMAH MATRICULATION SCHOOL

(Regd. By Government of Tamilnadu)

P.T.R COLONY, UTHAMAPALAYAM

THENI DT. - 625 533 Ph: 04554(268202)



நன்றி http://www.satyamargam.com/1375

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!