Tuesday, May 20, 2014

ஏன் நரேந்திர மோடிக்கும், மோகன் பகவத்துக்கு “ஹிதாயத்தை கொடு யா அல்லாஹ்” என்று ஏன் கேட்க மறுக்கின்றோம்?

முந்தைய பதிவில் நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் பிறர் நலம் நாடுபவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிந்தோம், படிப்பினை பெற்றோம். அரசியல் சாக்கடையில் பெரும்பாலான முஸ்லீம் சகோதரர்கள், ஒருவரை ஒருவர் குறைக்கூறி பிறர் நலம் நாடாதவர்களாக உள்ளார்கள் என்பதை அறிந்தோம்.
இன்றைய இந்திய அரசியல் சூழலில் முஸ்லீம்கள் விரும்பாத ஓர் ஆட்சி மாற்றம் மத்தியில் பா ஜ க தலைமையில் பதவி ஏற்க உள்ளது. இந்திய முஸ்லீம்களிடம் மட்டுமல்ல உலக முஸ்லீம்களிடமும் ஓர் அச்ச உணர்வு பொதுவாக ஏற்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. இந்த சூழலில் முஸ்லீம்கள், குறிப்பாக தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தங்களுடைய விரக்தியை இணைய தளங்களிலும், முகநூல்களிலும், whatsup messengerகளிலும் கருத்துப் பறிமாற்றத்தின் மூலம் சிலர் நாகரீகமாகவும், பெரும்பாலானவர்கள் அநாகரீகமாகவும் பதிவு செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சிகளை தூண்ட ஏகப்பட்ட இயக்கங்கள் உள்ளது இந்த சூழலில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து அறிவுப்பூர்வமாக சிந்திப்பது காலத்தின் கட்டாயம்.
நமக்கு ஓர் தீர்வு வேண்டும் என்றால் அதற்கான அற்புதமான வழிகள் குர்ஆனிலும், நம் உயிரினும் மேலான அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல்களிலுல் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம், ஆனால் உணர்ச்சிவசப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தந்த வழிமுறைகளை பல நேரங்களில் மறந்துவிடுகிறோம்.
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (திருக்குர்ஆன் 9:50)
எந்த ஒரு செயல் நடந்தாலும் அது அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பதை முஸ்லீம்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்பவேண்டும் என்பதை மேல் குறிப்பிட்ட இறைவசனம் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது.. ஒரு செயல் நமக்கு சாதகமாக இருக்கும் என்றிருந்தால், அல்லாஹ் அதில் நமக்கு ஏதோ ஓர் சோதனையை வைத்திருக்கிறான் என்று நம்ப வேண்டும். எந்த ஒரு செயல் நமக்கு பாதகமாக அமையப் போகிறது என்றிருந்தால், அல்லாஹ் அதில் ஏதோ ஓர் நல்லதை நாடி இருக்கிறான் என்று நல்லெண்ணம் வைக்க வேண்டும்.
…..நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். (திருக்குர்ஆன் 3:120)
நாம் அல்லாஹ்வின் அச்சத்தோடும், அவன் நம்பிக்கையோடும், பொறுமையோடும் இருந்தோமையானால், எந்த எதிரியின் சூழ்ச்சியும் நம்மை தீண்டாது என்று இந்த திருக்குர்ஆன் வசனத்திலிருந்து  நாம் தெளிவடையலாம். எந்த ஒரு தருணத்திலும் ஒரு முஃமீன் அல்லாஹ் மேல் உள்ள நம்பிக்கையில் ஒடு துளி அளவும் சந்தேகம்  அடைய மாட்டான்.
இஸ்லாமிய வரலாற்றில் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளிலும், சோதனையான காலகட்டத்திலும், அல்லாஹ்வுடைய தூதருடைய ஈமானையும், சத்தியத் தோழர்களுடைய ஈமானையும் அல்லாஹ் சோதித்தான், அவர்கள் பொறுமையாக இருந்தார்கள், ஈமானில் உறுதியாக இருந்தால், அல்லாஹ்வின் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தார்கள், அல்லாஹ் பல வெற்றிகளை கொடுத்தான். நாளை மறுமையிலும் அவர்களுக்கு கொடுப்பதாக வாக்களித்துள்ளான்.
உதாரணமாக இதோ சில நினைவூட்டல்கள்.
இஸ்லாத்திற்காக தன்னுடைய உடல் பொருள் சொத்துக்கள் அனைத்தையும் அர்ப்பணித்த உம்முல் முஃமினீன் ஹதீஜா(ரலி) அவர்களின் மரணம் நிகழ்வும், இதனால் நபி(ஸல்) அவர்கள் தன்னுடய வாழ்நாட்களில் மிகவும் மனதளவில் தளர்ந்த அந்த கால கட்டமாக இருக்கட்டும்.
இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்தால், தன்னுடைய அருமை மகள்களின் திருமண வாழ்க்கையை இழந்து விதவையான துன்பகரமான சம்பவங்களாகட்டும்.
நபி(ஸல்) அவர்கள் உறவுகள், உடமைகள், சொத்துக்களை விட்டுவிட்டு மக்கா என்ற சொந்த ஊரைவிட்டு விரட்டப்பட்ட நிகழ்வாக இருக்கட்டும்.
நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகரில் சிறுவர்களால் கல்லடி வாங்கிய கொடூர நிகழ்வாக இருக்கட்டும்,
இறை நிராகரிப்பளர்களால் திணிக்கப்பட்ட பத்ருப் போர்களம் பின்னர் வந்த உஹது, ஹந்தக் போர்களங்காகட்டும்.
சமூக பரிஷ்காரங்களினால் ஏற்பட்ட கொடுமைகள், பசி பட்டினி போன்ற சோக நிகழ்வாகட்டும்.
பிலால்(ரலி), மிக்தாத்(ரலி), சுமைய்யா(ரலி), யாசிர்(ரலி) ஆகியோர் நபி(ஸல்) அவர்கள் கண்ணெதிரே இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் கொடூரமான முறையில் குரைசிக் இறை நிராகரிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்ட காலமாகட்டும்.
அழுகிய குடல்களை நபி(ஸல்) அவர்கள் மேல் வைத்து மக்கா குரைசிகள் அகங்காரத்துடன் சிரித்துக் கொண்டாடிய போது, அகிலத்தின் அருட்கொடை பொறுமைசாலிகளின் தலைவரான அண்ணல் நபி(ஸல்) அவர்களும், இஸ்லாத்தின் தங்கத் தாரகை நபி(ஸல்) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா(ரலி) அவர்களும் பொறுமையோடு அல்லாஹ்வை அஞ்சியவர்களாக இருந்து, அவனிடமே பிரார்த்தனை செய்த நிகழ்வாகட்டும்.
முஸ்லீமான ஒருவர் அல்லாஹ்வுக்கு பிறகு அதிக அளவில் நேசிக்கும் ஒரே மனிதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள். அந்த நபி(ஸல்) அவர்களின் மரணத்தினால் மதீனாவே இருண்டு, உத்தமத் தோழர்கள் சோகத்தின் உச்சியில் இருந்த குழப்பமான சூழ்நிலையாகட்டும்.
இஸ்லாம் நிலப்பரப்பளவில் வளர்ந்து வந்த காலச்சூழலில், யூதக் கைக்கூலி ஒருவனால் அமீருள் முஃமினீன் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு, முஸ்லீம்கள் மிகப்பெரிய பின்னடைவான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அந்த நிகழ்வாகட்டும்.
பின்னர் உஸ்மான் (ரலி) அவர்களும், அலி(ரலி) அவர்களும், ஹஸன்(ரலி) ஹுசைன் (ரலி) ஆகிய்யோரும் கொடூரக்காரர்களால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட போது ஏற்பட்ட குழப்பமான காலகட்டங்களாகட்டும்.
இப்படி ஆயிரக் கணக்கான நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தூய இஸ்லாத்தின்படி வாழ்ந்த மக்கள்  பொறுமையாக இருந்தார்கள், நிதானத்தை கடைப்பிடித்தார்கள், அல்லாஹ்வை அஞ்சினார்கள், அல்லாஹ்வை நம்பினார்கள், அவனிடமே வேண்டினார்கள். அல்லாஹ் அவர்களை சோதித்தான், சோதனையில் ஈமானில் உறுயோடு இருந்து வெற்றிகள் பல கண்டு அல்லாஹ்வின் பொருத்தத்துக்கு உரியவர்களாக தங்களை முன்னுதரணமாக்கிக் கொண்டார்கள். இஸ்லாத்திற்காக என்னற்ற தியாகங்கள் செய்த நல்லோர்களின் செயல்களை அல்லாஹ் பெருந்திக் கொள்வானாக.
நமக்கு முன் மாதிரி நபி(ஸல்) அவர்கள் என்பதை நம்புகிறோம், ஆனால் அவர்களின் வழிகாட்டுதலை மறந்துவிடுகிறோம். நபி(ஸல்) அவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் கொடுமைகள் கொடுத்தவர்களுக்கு ஹிதாயத் கிடைக்க, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள் என்ற ஹதீஸ்கள் ஏராளம் நாம் அறிந்ததே. ஆனால் இவைகள் எல்லாம் உண்மை என்று நம்பும் நம்முடைய வாழ்வில் அதனை நடைமுறைப் படுத்துகிறோமா?
குஜராத்தில் ஆயிரக் கணக்கான அப்பாவி முஸ்லீம்களை கொன்று குவிக்க பேருதவி செய்த நரபலி மோடி இன்று நம் தாய்நாட்டின் பிரதம மந்திரியாக தேர்த்தெடுக்கப்பட்டிருப்பதை எந்த ஒரு முஸ்லீமாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் கை சேதம். ஆனால் இது அல்லாஹ்வின் நாட்டம். இதில் நமக்கு நல்ல படிப்பினையை அல்லாஹ் வைத்துள்ளான் என்று எண்ணுவது தானே முஸ்லீம்களின் அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்?
நமக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை எதிர்த்து குரல்கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இன்று முஸ்லீம்கள் செய்வது என்ன? இன்றைய இந்திய அரசியல் நடப்புகளை வைத்து, பொறுமை இழந்து ஏதோ சினிமாத்தனமான நகைச்சுவையை பதிவுகளாகவும், புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும். மேலும் கோபத்தின் விரக்தியில் சங்பரிவார்களை வசைமாறி பொழிந்து தள்ளுகிறார்கள். இவைகளை நமக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்பதை முஸ்லீம் சமூகம் சிந்திக்க வேண்டும்?
முஸ்லீம்கள் நம்முடைய சமுதாயம் வீரத்திற்கு பெயர் எடுத்த முன்னுதாரன சமுதாயம் என்பது எப்படி உலகம் அறிந்து வைத்துள்ளதோ, அது போல் நன்னடத்தையிலும், நற்பண்புகளிலும், பொறுமை காப்பதிலும் முன்னுதாரன சமுதாயம் என்பதும் வரலாறு உண்மை படுத்துகிறது. ஆனால் இன்று உணர்ச்சிவசப்படும் சமூகமாக நம்மை மாற்ற நினைக்கும் சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு கடந்த சில வருடங்களாக நாம் அடிமையாகி பொறுமை இழந்து, நற்பண்புகளை இழந்த சமுதாயமாக மாறிவிட்டோமோ என்கிற  சந்தேகம் எழுவதை தவிற்க இயலவில்லை.
இஸ்லாமிய விரோதத்தை கண்டு போராட்ட குணம் என்ற தோரணையில் உணர்ச்சிவசப்பபடுவதை கையில் எடுக்கும் நம் சமுதாயம், ஏன் மாற்றி யோசிக்க தங்குகிறோம்? ஏன் நரேந்திர மோடிக்கும், மோகன் பகவத்துக்கு “ஹிதாயத்தை கொடு யா அல்லாஹ்” என்று ஏன் கேட்க மறுக்கின்றோம்?  அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எத்தனையோ இஸ்லாமிய விரோதிகளின் மனத்தை மாற்றி உள்ளான். இது இன்றும் நடந்து வருகிறது. ஏன் மோடியையும் இன்னும் பிற சங் பரிவார்களின் முக்கியப் புள்ளிகளின் மனதை அல்லாஹ் மாற்ற மாட்டான் என்ற நம்பிக்கை இல்லையா? அவர்களுக்கு ஹிதாயத் கொடுக்க மாட்டான் என்று நம்ப தயங்குகிறோம்?
நாம் எந்த காலச்சூழ்நிலையிலும் மனிதர்களுகாக ஏன் அச்சப்பட வேண்டும்? நான் மேல் குறிப்பிட்ட திருகுர்ஆன் வசனம் நமக்கு நல்ல ஆறுதல் தரும், மீண்டும் அதனை நினைவூட்டுகிறேன்.
…..நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். (திருக்குர்ஆன் 3:120)
நாம் அனைவரும் பொறுமையுடையோராக இருப்போம், அல்லாஹ்வை அஞ்சியவர்களாக இருப்போம், அவனை மட்டுமே நம்பியவர்களாக இருப்போம், அவனிடமே பாதுகாப்பு பெறுவோம்.
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 11:15)
இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது; (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன;மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான்.  (திருக்குர்ஆன் 16:9)
அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழி படுத்துகிறான். தான் நாடியோரை வழி தவற செய்கிறான்.
“யா அல்லாஹ் எங்களது தாய்நாட்டில் முஸ்லீம்கள்களின் எதிரிகளான பாசீச சங்பரிவார்களின் முக்கியத் தலைவர்களை நீ கண்ணியப்படுத்த நாடினால் அவர்களுக்கு ஹிதாயத் கொடு, அவர்களை  நீ கேவலப்படுத்த நாடினால், இவ்வுலகிலும் மறு உலகிலும் கேவலப்படுத்து”
யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்..
M.தாஜுதீன்
 
 http://adirainirubar.blogspot.com/2014/05/36_21.html

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!