Saturday, December 26, 2015

சிரியா அகதிகள் சென்னையில் .......

 கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர். ஜெர்மனி நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக அவர்கள் இங்கு வந்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய நாட்டிலிருந்து புகலிடம் தேடும் அகதிகள் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள ஜெர்மனி தூதரகங்கள் வாயிலாக அந்நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக சிரிய மக்கள் இந்தியா வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை
வந்துள்ளனர்.

சிரிய நாட்டுத் தலைநகர் டமாஸ்கஸில் இருந்து சென்னை வந்துள்ள பெண் ஒருவர் கூறும்போது, "இது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்காலம் என்பதால் தூதரகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜெர்மனி விசாவுக்காக ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலும் மிக நீளமாக உள்ளது. எனவே இன்னும் சில காலம் நான் காத்திருக்க வேண்டும்.

எனது கணவர் படகு மூலம் ஜெர்மனி சென்று விட்டார். ஆனால், பெண்கள், குழந்தைகள் அவ்வாறாக படகில் ஜெர்மன் செல்வது மிகவும் ஆபத்தானது. எனவேதான் இங்கு வந்துள்ளோம். எனது குடும்பத்துடன் மீண்டும் இணைய வேண்டும். சிரியாவில் இருந்த எங்களது உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டோம். துருக்கி, ஜோர்டான் நாடுகளிலும் ஜெர்மனி விசா பெற முடியும்.

ஆனால் அந்த நாடுகளில் எங்களை மிகவும் தரக்குறைவாக நடத்துகின்றனர். எனவேதான்
ஈரான், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு வருகிறோம். ஜெர்மனி விசா பெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இந்தியா வந்திருக்கிறோம். இது என் கதை மட்டுமல்ல இங்கு ஜெர்மன் விசாவுக்காக காத்திருக்கும் பல குடும்பங்களின் நிலையும் இதுவே" என்றார்.

சிரியாவைச் சேர்ந்த அகமது ஹூசைன் ஹைதராபாத்தில் கணினி படித்து வருகிறார். இவர் ஜெர்மன் தூதரங்களை விசாவுக்காக அணுகும் சிரிய மக்களுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறார்.

அவர் கூறும்போது, "இந்தியாவுக்கும் வரும் சிரிய மக்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். அவர்கள் இங்கு தங்குவதற்கு நிறைய செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒரு நாளைக்கு 100 டாலர் வரை செலவாகிறது. பெரும்பாலான பெண்கள் அவர்களது கணவரையோ, தந்தையையோ பார்த்து ஆண்டுகள் பல கடந்துவிட்டன. அவர்களது குடும்ப, பொருளாதார நிலையைக் கருதி ஜெர்மனி தூதரகங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்" என்றார்.

அதேபோல் சென்னை விமான நிலையத்துக்கு வரும் சிரிய அகதிகள் மொழிப் பிரச்சினையால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக அகமது ஹூசைன் கூறுகிறார்.

சென்னை விமான நிலையத்தின் குடியேற்று அலுவலகங்களில் சிரியாவிலிருந்து வருபவர்களிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுவதாகவும் ஆனால் அரபு மொழியைத் தவிர வேறு மொழி தெரியாத அவர்கள் தவிப்புக்குள்ளாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில்  
உள்ள அரபு மொழிபெயர்ப்பாளர்கள் சிரிய அகதிகளிடம் அதிகக் கட்டணம் கோருவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இப்படி மொழிப் பிரச்சினை, பணப் பிரச்சினையில் சிக்கியுள்ள சிரிய அகதிகள் பலரும் முன்வைக்கும் ஒரே கோரிக்கை "தயவு செய்து எங்களுக்கு விரைவாக விசா வழங்குங்கள்" என்பதேயாகும். 


 http://tamil.thehindu.com/india/
 ஞாயிறு, டிசம்பர் 27, 2015

Monday, October 12, 2015

வாழ்த்துக்கள்,சேக்கனா நிஜாம் !

அதிரையின் பிரபல வலைதள எழுத்தாளரும், அதிரை நியூஸ் இணையதள ஊடகத்தின் தலைமை நிர்வாகி சேக்கனா நிஜாம் அவர்களின் திறமைக்கு மகுடம் சூட்டும் விதமாக பிரபல மாலை தினசரி இதழான 'மாலை முரசு' பத்திரிகை,  அதிரையின் செய்தியாளராக சேக்கனா நிஜாமை நியமனம் செய்துள்ளது.

 இப்பணியின் மூலம் நன்மைகள் அதிரை மக்களுக்கு கிடைத்திடும் வகையில் உழைத்திட வேண்டுகிறோம்.

 பத்திரிக்கை துறைக்கு பொருத்தமானவர்,
இந்தப் பணி மூலம் இஸ்லாம்,முஸ்லிம்கள் பற்றிய தவறான அவதூறுகளை களைய நீங்கள் ஆவன செய்தல் வேண்டும்.செய்வார்  இன்ஷா அல்லாஹ்! வாழ்த்துக்கள்.

Thursday, October 1, 2015

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை!ஐ நா தலை இட வேண்டும் !!

உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் வீட்டில் மாட்டின் மாமிசத்தை வைத்திருந்தார்கள் என்று கூறப்பட்டு, இஸ்லாமியர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டது எப்படி? பின்னணித் தகவல்கள்.

உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டு மாமிசத்தை சாப்பிடதாகக் கூறப்பட்டு இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் நீடித்துவருகிறது.

அக்லாக்கின் குடும்பத்தினர் திங்கட்கிழமையன்று இரவு நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

அன்று இரவு அதாவது, அக்டோபர் 28ஆம் தேதி முஹம்மது அக்லாக் என்ற அந்த ஐம்பது வயது நபரின் வீட்டில் மாட்டின் மாமிசம் இருந்தது என்று ஒரு கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்துக் கொன்றது.

அன்று இரவு பத்தரை மணியளவில், விவசாயக் கூலியான முஹம்மது அக்லாக்கின் குடும்பம் வழக்கம்போலவே, சாப்பிட்டுவிட்டு படுக்கச் செல்லும்போதுதான் அந்த தாக்குதல் நடந்தது.

முஹம்மது அக்லா தனது மகன் படுத்திருந்த அறைக்கு பக்கத்து அறையில் அப்போது தூங்கிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் பெரும் ஆவேசத்துடன் ஓடிவந்த கும்பல் ஒன்று கம்பு, கத்தி, நாட்டுத் துப்பாக்கிகளுடன் அவர்களுடைய வீட்டில் நுழைந்தது.
அக்லாவின் குடும்பம் ஒரு பசுவைக் கொன்று சாப்பிட்டுவிட்டதாக கும்பலைச் சேர்ந்தவர்கள் கூச்சலிட்டனர்.

"எல்லாப் பக்கமிருந்தும் அவர்கள் வந்தார்கள். சுவரின் மீது ஏறினார்கள். வாசல் வழியாக வந்தார்கள். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து நாங்கள் பசுவைக் கொன்றதாகக் குற்றம்சாட்டினார்கள் என்கிறார் அக்லாக்கின் 75 வயதுத் தாயான அஷ்கரி அக்லாக்.

"அந்தப் பகுதியில் இருக்கும் யாரும் பார்க்காமல் நாங்கள் எப்படி வீட்டிற்குள் பசுவைக் கொண்டுவர முடியும். இந்தப் பகுதியில் நாங்கள் மட்டும்தான் இஸ்லாமியக் குடும்பம்" என்கிறார் அவர்.

வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கும்பல், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாமிசத்தை காட்டி கேள்வியெழுப்பியது. ஆனால், அது ஆட்டின் மாமிசம் என்று அக்லாக்கின் கூடும்பத்தினர் கூறினர். ஆனால், அந்தக் கும்பல் அதனை ஏற்கவில்லை.

அக்லாக்கின் குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சியும் பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிக்க ஆரம்பித்தது அந்தக் கும்பல்.
சிலர் அக்லாக் தூங்கிக்கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தனர்.
அவருக்கு அருகில் இருந்த தையல் எந்திரத்தைத் தூக்கி அவர் தலையில் போட்டனர். பக்கத்து அறையில் இருந்த அவரது மகனையும் வெளியில் இழுத்துவந்தனர். அதற்குப் பிறகு கொடூரமாக இருவரையும் கும்பல் தாக்கியது.

அந்தக் குடும்பத்திற்கு அருகில் இருந்த இந்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதனைத் தடுக்க முயன்று முடியாமல் போகவே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து காவல்துறை அங்கு வந்தபோது, அக்லாக் இறந்துபோயிருந்தார். அக்லாக்கின் மகனான தானிஷ் மிக மோசமாக காயமடைந்திருந்தார்.

அருகில் உள்ள ஒரு கோவிலில் செய்யப்பட்ட அறிவிப்பே இந்தச் சம்பவத்திற்கு மூலகாரணமாக கூறப்படுகிறது. யாரோ ஓருவர் அந்தப் பகுதியில் பசுவைக் கொன்று சாப்பிட்டதாக கோவிலில் இருந்த ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், யார் அந்த அறிவிப்பைச் செய்தார்கள் என்பது தெரியவில்லை.

அப்படி ஒரு அறிவிப்பு செய்யப்பட்டதை, தான் கேட்டதாக அந்தக் கோவிலுக்கு அருகில் கடை வைத்திருக்கும் பங்கஜ் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
"நான் கையைக் கழுவிக்கொண்டுவருவதற்கு முன்பாக பெரிய கும்பல் அந்த வீட்டிற்கு முன்பு குவிந்துவிட்டது. யாரும் எதுவும் செய்யமுடியவில்லை" என்கிறார் பங்கஜ்.

அடையாளம் தெரியாத சிலர் கோவிலுக்குள் குதித்து அங்கிருந்த ஒலிபெருக்கியைப் பயன்படுத்திவிட்டார்கள் என்றும் கோவிலுக்குப் பொறுப்பானவர்களுக்கு அன்று "உடல்நிலை சரியில்லை"யென்றும் சில உள்ளூர்க்காரர்கள் கூறுகின்றனர்.

அந்தக் கோவிலின் அர்ச்சகரையும் அவரது உதவியாளரையும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறது.

"எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சி. நாங்கள் மட்டும்தான் இங்கே ஒரே இஸ்லாமியக் குடும்பம் என்றாலும், நான்கு தலைமுறைகளாக நாங்கள் இங்கு வசிக்கிறோம். இதற்கு முன்பாக இப்படி பிரச்சனை ஏற்பட்டதில்லை" என்கிறார் அக்லாகின் 55 வயது சகோதரரான ஜமீல் அகமது.

அக்லாக்கின் குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் ஆறு பேர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் நான்கு பேர் தேடப்பட்டுவருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு அங்கு பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. காவல்துறைக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.
அந்தப் போராட்டங்களின் போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதோடு. அருகிலிருந்த கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தி, காவல்துறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

செவ்வாய்க் கிழமையன்றும் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் அருகிலுள்ள பகுதியிலிருந்து காவல்துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

ஊரடங்கு உத்தரவு போடப்படவில்லையென்றாலும் தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அரசியல் நோக்கத்துடனேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சப்பீர் குஜ்ஜர் தெரிவித்தார்.

"இரு சமூகங்களைப் பிரிப்பதற்காக வெளியிலிருந்து வந்த சக்திகள் வேண்டுமென்றே செய்த வேலை இது. பல வருடங்களாக இந்தப் பகுதியில் வசித்துவரும் குடும்பத்தினர் குறிவைக்கப்பட்டதற்கு வேறு காரணங்களைச் சொல்ல முடியவில்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கலாம்" என்கிறார் அவர்.

2017ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

இனிமேலும் தாங்கள் தாத்ரியில் வசிக்க விரும்பவில்லையென்று கூறியிருக்கிறது அக்லாக்கின் குடும்பம்.

"எங்களோடு நீண்ட காலமாக வசித்தவர்களே இப்படிச் செய்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. என் தாயையும் சகோதரியையும் அழைத்துக்கொண்டு இங்கிருந்து போய்விடவே விரும்புகிறேன்" என தாக்குதல் நடந்தபோது சென்னையில் இருந்த அக்லாக்கின் மூத்த மகன் சர்தாஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"எங்களுக்கு இனி இங்கே இடமில்லை. அவர்கள் ஏற்கனவே என் சகோதரனைக் கொன்றுவிட்டார்கள். அடுத்து என்ன நடக்குமென யாருக்குத் தெரியும்?" என்கிறார் அக்லாக்கின் சகோதரர்.
இந்தியாவின் பல மாநிலங்களில் பசு வதை தடைச் சட்டம் அமலில் இருக்கிறது.

thanks
 http://tamil.thehindu.com/bbc-tamil

இது போன்று பல சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இந்தியாவில் நடை பெற்று வருகின்றன.இதை ஐ நா தலை இட்டு,இந்தியாவைக் கண்டிக்க வேண்டும்.நீதியின் முன் ஆட்சியாளர்களும்,இது போன்ற ஈன செயலை செய்யும் காட்டுமிராண்டி கும்பல்களும் தண்டிக்கப்பட வேண்டும்.இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவ ஒற்றுமையை சீர்குலைக்கும் இது போன்ற செயல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

Tuesday, September 29, 2015

தந்திரமாக நடக்கும் கொலைகள்!அதிர்ச்சி தகவல்!!

Mohamed Anas


பண்டைய அரபு தேசத்தில் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் பழக்கம் இருந்தது. இஸ்லாம் அந்த மண்ணில் வந்தவுடன் அந்த பழக்கத்தை கடுமையாக தடை செய்தது. நபிகள் நாயகம் அவர்கள் ''யார் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று அழகிய முறையில் வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, அவர்களுடன் நல்ல முறையில் நடக்கிறாரோ அவருக்கு இறைவன் சுவர்கத்தை பரிசாக கொடுக்கிறான்'' என்ற நற்செய்தியை அந்த மக்களுக்கு கூறினார்கள். மேலும் திருக்குரான் வசனமோ ''மேலும், உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படும்போது எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என்று'' போன்ற எச்சரிக்கையும் அந்த மக்களுக்கு விடுக்கப்பட்டது. இது அந்த சமூகத்தை முழுவதுமாக மாற்றியது. சமூகம் மாற வேண்டும். எண்ணங்கள் மாற வேண்டும். வரதட்சணை ஒழிய வேண்டும். அப்பொழுதே இந்த அவலங்கள் முற்று பெரும்.

----------------------------------------------------------------------

உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுக்களை கள்ளிப்பால் ஊற்றி தளிரிலேயே பொசுக்கும் பயங்கரம் வெளிச்சத்துக்கு வந்து ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இந்த சமூக அவலத்தை தடுக்க அரசு எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் நிலைமை இன்னும் மாறவில்லை என்ற உண்மை முகத்தில் அறைகிறது. அங்கே, சிசுக்கொலைகள் குறைந்தாலும் நவீன வடிவத்தில் கருக்கொலைகள் அதிகரித்துவிட்டன என்பதே களம் நமக்குச் சொல்லும் தகவல். 

தாயே தன் மகளுக்கு கள்ளிப்பால் புகட்டி மண்ணுக்குள் புதைப்பது உசிலம்பட்டி பகுதிக்கு புதிதல்ல. ‘இதுவும் பொட்டப் புள்ளயா.. கழுதைய போட்டுத் தள்ளிரு.. வச்சிருந்தா வகை பண்ண முடியாது’ - சர்வ சாதாரணமாய் இப்படிச் சொல்லி, கருப்பையின் ஈரம் காய்வதற்குள் பெண் சிசுக்களை கல்லறைக்கு அனுப்பும் அவலத்தை 1984-ல் தான் வெளி உலகம் அறிந்தது. இதற்குப் பிறகுதான், சேலம், தருமபுரி மாவட்டங்களில் இதைவிட அதிகமாக பெண் சிசுக்கள் கொல்லப்படும் பகீர் தகவலும் கசிந்தது. 

சிசுக்கொலையின் அடிநாதம் 
 
முன்பெல்லாம் மதுரை, தேனி மாவட்டங் களில் ஆண்கள்தான் பரிசப் பணம் கொடுத்து பெண்களை மணம் முடித்தார்கள். பெண்ணுக்கு சீர்வரிசையாக ஆடு - மாடுகளை மட்டுமே கொடுத்தனுப்பினார்கள். பசுமைப் புரட்சியின் வரவால் விவசாயம் செழித்தபோது நகை, பணம் என வரதட்சணை கொடுத்து பெண்களைக் கட்டிக் கொடுக்கும் வழக்கமாக மாறியது. 

இது வானம் பார்த்த பூமி. பக்கத்திலேயே வைகை அணை இருந்தாலும், உசிலையின் ஒரு பகுதியை மட்டும் வளப்படுத்திவிட்டு இன்னொரு பகுதிக்கு வஞ்சகம் செய்கிறது வைகை நதி. வளமான பகுதியில் இருப்பவர்கள், பெண்களுக்கு அதிக நகைகளை போட்டு கட்டிக் கொடுத்தார்கள். அவர்களுக்குச் சரிநிகராக வறண்ட பூமிக்காரர்களால் வரதட்சணை கொடுக்க முடியவில்லை. கடனை வாங்கி சீர் செய்து விட்டு கடனாளி ஆனார்கள். வாகாக சீர்வரிசை கொண்டு வராத பெண்கள், புகுந்த வீட்டில் நெருக்கடிகளுக்கு ஆளானார்கள். 

கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்து நிற்கும் மகளுக்கு வழி சொல்ல வகை தெரியாத பெற்றோர், ‘இம்பூட்டுக் கஷ்டப்படுறதுக்கு பொறந்த வீட்டுக்குள்ளயே இந்தப் புள்ளய கள்ளிப்பால ஊத்திக் கொன்னுருக்கலாம்’ என்று அமில வார்த்தைகளை அள்ளி வீசுவது வழக்கமானது. பெண் சிசுக் கொலையின் அடிநாதம் இதுதான். 

ஆணுக்கு முக்கியத்துவம் ஏன்? 
 
எப்படியும் ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்து பெண் குழந்தைகளை பெற்றவர்கள், கள்ளிப்பாலோ எருக்கம் பாலோ, நெல் உமியோ கொடுத்து ஈவிரக்கமின்றி கொன்று புதைத்தார்கள். 

‘மூணு பொட்டப் புள்ளையல கொன்டோம்னா நாலாவதா ஆம்பளப் புள்ளதான்’ - இப்படிக் கிளப்பி விடப்பட்ட மூட நம்பிக்கைகளும் பெண் சிசுக்களுக்கு எமவேதமாக அமைந்து போனது. இப்படித்தான் பெண் சிசுக் காவுகளின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே போனது உசிலம்பட்டி. என்னதான் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் இருந்தாலும் இன்னும் அங்கே சிசுக்கொலைகள் தொடர்கின்றன. அதைவிட அதிகமாக கருக்கொலைகள் பெருகிவிட்டன. 

“ஆம்பளப் புள்ளை இல்லைன்னா ’அரசத்த வளே’ன்னு வைவாக. எங்க அம்மாச்சிக்கு மூணு பொட்டப் புள்ள, எங்கம்மாவுக்கு ரெண்டு, எனக்கும் ரெண்டாவது பொட்டப் புள்ளயா பொறந்துடக்கூடாதுன்னு எங்கம்மா என்னைய திருமங்கலத்துல இருக்குற ஸ்கேன் சென்டருக்கு கூட்டிப் போச்சு. கோயில் விசேஷத்துல (கடா) குட்டி பிடிக்க, செத்தாக்க கோடித்துணி கொண்டாந்து போட, வாணம் போட்டு, உருமி கொட்டி மையக்கரைக்கித் தூக்கிவிட இதுக்கெல்லாம் ஆம்பளப் புள்ளதானே வேணும்கிது சனம்’’ என்று ஆண் வாரிசுக்கு வக்காலத்து வாங்குகிறார் கொக்குடையான்பட்டி பிரியா. 

தந்திரமாய் சாகடிப்பு 
 
இதே ஊரைச் சேர்ந்த சமூக சேவகி மீனாட்சி, “ஏழு வருசத்துக்கு முந்தி வடகாட்டுப்பட்டியில சலவை தொழிலாளி ஒருத்தரு மூணாவதும் பொம்பளப் புள் ளயா பொறந்துருச்சுன்னு சொல்லி அந்தப் புள்ளைய வீட்டுக்குப் பக்கத்துல இருந்த குழியில உசுரோட தூக்கி அடிச்சு மண்ணைப் போட்டு மூடுனாரு. கதறக் கதற அந்தச் சிசுவை மண்ணுக்குள்ள போட்டு மூடுன கொடுமையை கண்ணால பாத்தவ நான். உசிலம்பட்டி பகுதியில இப்பையும் பொம்பள புள்ளைகள கொன்டுக் கிட்டுத்தான் இருக்காக. ஆனா, ரொம்ப தந்திரமா பண்றாக. இந்தப் பகுதியில இருக்கவங்க நிறையப் பேரு ஆந்திரா, கர்நாடகான்னு தொழில் பாக்குறாக. 

நெறமாச கர்ப்பஸ்திரிகள அங்க கூட்டிட்டுப் போயிடுறாங்க. ஆணா பொறந்தா அங்கருந்து உடனே தூக்கிட்டு வந்துருவாங்க. பொட்டப் புள்ளைனா நாலாம் பேருக்கு தெரியாம கொன்டு பொதைச்சிட்டு ஒரு மாசம் கழிச்சு, எதுவுமே நடக்காதது மாதிரி ஊருக்கு திரும்பிருவாக. ’என்னடி ஆச்சு?’ன்னு கேட்டா, ’’கொடி சுத்திப் பொறந்துச்சு. பெரிய உசுர காப்பாத்துறதே பெரும்பாடா போச்சுல்ல, புள்ளைக்கி ‘ஆர்ட்’டுல (ஹார்ட்) ஓட்டையாம், குழந்தைக்கு வளர்ச்சி இல்லை’ அப்படி இப்படின்னு ஏதாச்சும் காரணத்தச் சொல்லுவாக. இப்பெல்லாம் காசுக்காக டாக்டருங்களே பொம்பளப் புள்ளைய கொல்லத் தயாரா இருக்காங்க” என்கிறார்.
பெண் குழந்தைகளால் என்ன பிரச்சினை? 
 
“அப்பெல்லாம் அஞ்சு பொட்டப் புள்ளைகளக் கூட பெத்து வளத்துக் கட்டிக் குடுத்தாங்க. ஆனா இப்ப, பொம்பளப் புள்ளைய பெத்தாலே புருஷங்காரன் சண்டை புடிக்கிறான். அந்தக் கொடுமைய தாங்க முடியாம புள்ளைக நாண்டுக்குதுக. சரி.. பொட்டப் புள்ளையா இருந்தாலும் பரவால்ல. ஆளாக்கிக் கட்டிக் குடுத்துருவோம்னு படிக்க வைச்சா, எடப் போக்குல சாதிவிட்டுச் சாதி எவனையாச்சும் இழுத்துட்டு ஓடிருதுக. இந்தக் கச்சடாவெல்லாம் வேண்டாமுன்டு தான் பொம்பளப் புள்ளைகன்டா கழிச்சுக் கட்டிடுறாங்க’’ சிசுக்கொலைக்கு இப்படி நியாயம் கற்பிக்கிறார் ஆனையூர் அங்கம்மாள். 

“ஆம்பளப் பய எப்புடியும் பொழைச்சுக் குவான். அவனுக்கு ஒரு கோவணத்தக் கட்டிக்கூட வெரட்டிரலாம். பொட்டப் புள்ளைகள அப்படி வெரட்ட முடியுமா சாமி? அதுகளுக்கு பொறந்ததுலேயிருந்து மையக்கரை வரைக்கும் சீர் செய்யணும். அந்தக் காலத்துல நாங்க ஆறு மாசத்துக்கு ஒரு தடவ தான் அரிசிச் சோத்தப் பாப்போம். இந்த லட்சணத்துல புருசன் அடிக்கிறான்னு பொட்டப்புள்ள கண்ணக் கசக்கிட்டு வந்து நிக்கும். மூணுவாட்டி கூட தீத்து விட்டிருக்கோம். இதையெல்லாம் சகிச்சுக்க முடியாமத்தான் கள்ளிப்பாலை ஊத்துனாங்க’’ என்கிறார் இதே ஊரைச் சேர்ந்த கருத்தக்கண்ணன். 

“நாங்க தான் நெதானம் தெரியாம செஞ்சோம். இப்ப, காலம் பெரண்டுக்கிச்சுல்ல. ஊசி, மருந்து, மாத்தரைன்னு வந்துருச்சுப்பு. ஆணு பொண்ணுன்னு பாத்து கலைச் சுப்புடுறாங்கள்ல.. பொட்டப் புள்ளைகளப் பூரா கொன்னு போட்டுட்டு இப்ப பொண்ணுக கெடைக்காம வெளி வெளியா பொண்ணு தேடி கெளம்புறாங்கே.” கருக்கலைப்பின் அபாயகரமான தாக்கத்தை போகிற போக்கில் விதைக்கிறார் பி.முத்துப்பிள்ளை. 

“இப்பத்தான் ஏன் கொல்றே?’ன்னு வர்றாங்க. அந்தக் காலத்துல இந்த வெசாரணை எல்லாம் இல்லப்பு. பொட்டப்புள்ள பொறந்துருச்சா.. (தொடர்ந்து.. பெண் சிசுவைக் கொல்வதற்கு கையாளும் முறையை அவர் சொன்ன விதத்தை விலாவாரியாகச் சொல்ல முடி யாது என்பதால் தவிர்க்கிறோம்) மூணே நாழிகையில எல்லாம் முடிஞ்சிரும். புள்ளைய பெத்தவ ரெண்டு மூணு நாளைக்கு அழுதி சிந்திக்கிட்டுக் கெடப்பா. அந்தப் புள்ள வளந்து பெருசாகி வாக்கப்பட்டுப் போற எடத்துல அடிப்பட்டு மிதிபட்டுச் சாகுறதுக்கு இது தேவலைன்னு அப்புறம் அவளே தேத்திக்குவா’’ இது ஆனையூர் காசம்மாளின் வாதம். 

“அன்னைக்கி கிலோ கணக்குல நகை போட்டு புள் ளைகள கட்டிக் குடுத்தாங்க. இப்ப வெலவாசி ஏறிப் போச்சு. இப்பப் போயி கனமா பொட்டப் புள்ளைகள பெத்துப் போட்டு என்ன செய்ய..? இருக்குற வீட்டுப் புள்ளைகள பகுமானமா கட்டிக் குடுக்குறாங்க இல்லாத வீட்டுப் புள்ளைக நின்டு போகுதே. அதனால தான் பொட்டப் புள்ளையே வேணாம்னு சொல்லுது சனம்’’ 

கொக்குடையான்பட்டி காமாயியும் மின்னல் கொடியும் இப்படிச் சொல்கிறார்கள். அதிர்ச்சி தரும் வார்த்தைகளை அனாசயமாக கூறுகின்றனர். சிசுக்கொலைக்கான காரணத்தை இன்னும் சிலர் வேறு கோணத்தில் கூறுகிறார்கள். 

 thanks

 http://tamil.thehindu.com/opinion/columns/

 4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.



6:140. எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.
 
17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
 




Monday, September 28, 2015

ஈரானிய ஷைத்தான்- பயங்கர சதி அம்பலம்

பதினாங்கு வருடங்களாக நிகழாத நிகழ்வு தீடீர் என ஏற்பட்ட உடன் மெக்காவில் நடந்த விபத்திற்கு சவுதி அரேபியா தான் காரணம் என்கிறார்கள். உண்மையில் சவுதியுடன் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவினாலும் மக்காவை சவுதியை தவிர வேறு எந்த நாட்டாலும் இவ்வளவு திறமையாக நிர்வகிக்க முடியாது என சவாலாகவே சொல்லலாம்.
முப்பது லட்சம் மக்கள் ஒன்றாக குழும் இடத்தை நிர்வகிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல, பதிமூன்றாயிரம் சிசிடி கேமராக்கள் ஒரு நொடியும் தாமதிக்காமல் இயங்கி கொண்டு இருக்கிறது.

லட்சக்கணக்கான ஊழியர்கள் ஒவ்வொரு வினாடியும் திறம்பட இயங்குகிறார்கள். பல்லாயிரக்கணக்கான காவலர்கள் செக்யூரிடிகள் சிறு அசம்பாவிதமோ சண்டையோ நிகழாமல் கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் தவிர்க்க முடியா விபத்துகள் மொத்த நிர்வாகத்திறனையும் குறைவாக மதிப்பிடப்படுகிறது. எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் தவறுகள் நிகழத்தான் செய்யும் இது தான் எதார்த்தம்.
ஆனால் மக்கா நெரிசல் நிகழ்வுக்கு தற்போதைய முக்கிய காரணம் ஈரானிய ஷியாக்கள் தான்.
 
இவர்கள் தான் எப்போதும் பிரச்சினை செய்ய கூடியவர்கள் 1987ல் போலீஸுடன் மோதி சண்டையிட்டு நாநூற்றுக்கும் அதிகமான மக்கள் மரணிக்க இவர்களே காரணமாக இருந்தார்கள்.

தற்போது நடந்த விபத்திற்கும் இவர்கள் தான் காரணம். தீடீர் என்று ஈரானியா ஹாஜிகள் சவுதி அரசை எதிர்த்து அங்கே போராட்டம் செய்யும் விதமாக குரல் எழுப்ப பெரியளவில் சலசலப்பு ஏற்ப்பட்டது.

மொராக்கோவை சேர்ந்த முஹம்மது அப்துல் சலாம் மற்றும் குவைத்தை சேர்ந்த கலீதல் ஹாசிமி என்பவர்கள் சொல்கிறார்கள் ஈரானிய ஷியாக்கள் தீடீர் என கூட்டத்தில் பிரச்சினை செய்யும் விதமா சவுதி அரசுக்கு எதிராக ஒன்று திரண்டு குரல் எழுப்பினார்கள், இதை தடுக்க வந்த காவலர்களிடம் தகராறில் ஈடுப்பட்டார்கள் என்றார்கள்.

கூட்டம் அதிகமாக இருக்கவே லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் குழப்பம் நிலவியதில் சிலர் கீழே விழ, கீழே விழுந்தவர்கள் மீது பின்னால் வந்தவர்கள் மேலே மிதிப்படும் நிலைக்கு ஆளாகியது.

காரணம் இவ்வாறு இருக்க சம்பந்தம் இல்லாமல் நிர்வாகம் சரி இல்லை என ஈரான் கொந்தளிப்பது தன் நாட்டை பிரேஜையின் தவறை மூடி மறைக்கத்தான். அதற்கு ஏற்றார் இங்கிருந்தும் சிலர் பிரச்சினை செய்கிறார்கள்.

ஈரானியர்களின் கேடுகெட்ட தனத்தால் நூற்றாக்கணக்கான உயிர்கள் போனதும் அல்லாமல் சவுதியை விமர்சிக்கிறார்கள்.
சவுதி எந்த வசதியும் செய்து கொடுக்காமல் மக்கள் நெரிசல் உண்டாக காரணமாக இருந்தால் விமர்சிப்பதில் தவறல்ல.

ஒவ்வொன்றிருக்கும் டைம் டேபிள் போட்டு செயல்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பும் அவர்கள் விதிமுறைகளையும் சரியாக பின்பற்றினால் உயிர் சேதம் தவிர்க்கப்படும்.

அதே போல் பெருமைக்காக திரும்ப திரும்ப ஹஜ் செய்பவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
 
தேவையற்ற நெருக்கடியை தவிர்க்க முடிந்தளவு முயலுங்கள்.

thanks 
http://adiraipirai.in/?p=15205

Sunday, September 27, 2015

நதிக்கு அந்தப்பக்கம்

ஹல்லோ... அஸ் ஸலாமு அலைக்கும்....

எப்படி இருக்கீங்க.... என் பெயர் யஹ்யா. நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்....  புதுக்கோட்டை பக்கத்துல ஆழியூர் கிராமம்தான் எங்க ஊர். நானும் என் உம்மாவும் எங்க குட்டித்தம்பி ஹாரூனும்தான் என் உலகமே.  ஹாரூன் பத்தி சொல்லலையே நானு.... ஹாரூன், பாப்பாவா இருந்தப்ப முதல்ல எதிர்த்த வூட்டு மீரான் மாமா வீட்டுலதான் இருந்தான். மீரான் மாமாவோட ஒரே பையன். ஆனா மீரான் மாமாவும், மாமியும், ஒரு நா கடல்ல மீனு பிடிக்க போனவங்க திரும்பி வரவேயில்லை. ரெண்டு நா கழிச்சு, அவங்களை தண்ணிலருந்து மீட்டு வந்தாங்க. அதுதான் நான் அவங்களை கடைசியா பாத்தது. அதுக்கப்புறம் இருந்து ஹாரூனை உம்மா எங்க வூட்டுலயே வெச்சுகிட்டா.

அப்புறம்..... இந்த குப்பத்துல எல்லாருக்குமே எங்க உம்மாவை ரெம்ப பிடிக்கும். ஏன்னா மக்ரிபுக்கப்புறம் எல்லாரும் அந்த தெரு விளக்கு இருக்குல்ல... அந்த தெரு விளக்குக்கு கீழே உம்மா எல்லாக் குழந்தைகளையும் கூட்டி வச்சி, தினமும் ஒரு கதை சொல்லுவா. ஒவ்வொரு புள்ளைகிட்டயும் எதுனா கேள்வி பதில் கேட்டு, அதுக்கப்புறம் நல்ல விஷயங்களை வச்சு எல்லாரும் பழகிக்கற மாதிரி ஒரு கதை சொல்லுவா. எங்க எல்லாருக்கும் கதைன்னா ரொம்ப இஷ்டம்... உங்களுக்கும்தானே... அப்படி நேத்து நடந்ததை சொல்லவா??

நேத்து அப்படித்தான் பக்கத்து தெரு கனிகிட்ட உம்மா கேட்டா, ஏண்டா பொழுதன்னிக்கும் அழுதுட்டே இருந்தேன்னு சொல்லி. அதுக்கு கனி சொன்னான், நான் ரஹ்மத் லாத்தா பையன் கேட்டான்னு இருவது ரூவா கொடுத்தேன், கடனா... எங்கட உம்மா, யாரை சாட்சியா வச்சு கொடுத்தேன்னு கேட்டா, நான் அல்லாஹ்தான் சாட்சி சொன்னேன்.... அதுக்கு சவட்டிட்டான்னு சொல்லி ஒரே அழுகை. அப்புறம் எங்க உம்மா சொன்னா, அழாதே கனி.... இப்படித்தான் ரெண்டு பேரு முன்ன ஒரு காலத்திலும் அல்லாஹ்வை மட்டுமே சாட்சியா வச்சி கடன் தந்து வாங்கினாங்க.... அந்தக் கடனை திருப்பி அடைக்க அல்லாஹ்வே போதுமானவனா இருந்தான்னு சொன்னா. ஒடனே ஹாரூன் குட்டி, உம்மா.... உம்மா... அந்தக் கதைய சொல்லு சொல்லுன்னு ஒரே பிடிவாதம். அம்மாவும் சொல்ல ஆரம்பிச்சா...


முன்ன ஒரு காலத்துல ’தர்யான்’னு ஒரு ஊரு, எகிப்துல நைல் நதி பக்கத்துல இருந்துச்சு. அங்க அப்துல்லாஹ், ஹபீப்ன்னு ரெண்டு பசங்க ரொம்ப சினேகிதம். எங்க போனாலும் ஒன்னா போவாங்க, ஒன்னா வருவாங்க, எப்பவும் ஒன்னாவே இருப்பாங்க... ஒரு நாள் அப்துல்லாஹ்வுக்கு நதிக்கு அந்தப்புறம் இருக்கற எடத்துல ஒரு வேலை கெடைச்சிச்சி. அப்போ அப்துல்லாஹ் வந்து சொன்னான்... ”ஹபீப்... எனக்கு நதிக்கு அந்தப்பக்கம் ஒரு வேலை கெடைச்சிருக்கு. நான் உடனே பயணம் போகனும்... ஆனா காசுதான் இல்லே... எனக்கு கொஞ்சம் காசு தர்றியா”ன்னு கேட்டான். ஹபீபும், அடடே நம்ம கூட்டாளிக்கு நல்ல வேலை அமைஞ்சா அது நல்லவிசயம்தானேன்னு முடிவு செஞ்சி பணம் எடுத்தாந்தான். பணம் கொடுக்கும் முன்னாடி ரெண்டு பேரும், ”யா றப்பே... உன்னை சாட்சியாக்கி, உன் முன்னாடிதான் இந்தப் பணத்தை ஹபீப் கொடுக்க நான் வாங்கிக்கிட்டேன். இன்ன தேதியில இந்தக் கடனை திருப்பித் தருவதுக்கு நீயே பொறுப்பு”ன்னு உறுதி செஞ்சுகிட்டாங்க.

ஆச்சு. அப்துல்லாஹ்வும் படகு ஏறி நதிக்கு அந்தப் பக்கம் பயணம் போயிட்டான். நாளும் வேகமா ஓடிடுச்சி. கடன் திருப்பித் தர வேண்டிய நாளும் வந்துடிச்சி. ஆனா அதே சமயம் பயங்கர சூறாவளிக்காத்தும், நதியோட போக்கு வேகமா இருந்ததாலும் ஒரு படகும், கப்பலும் நைல் நதியில போகலை. அப்துல்லாஹ்க்கு சங்கடமா போனுச்சு.... நாம நம்ம கூட்டாளிகிட்ட வாங்கின பணத்தை இன்ன தேதிக்குதானே தர்றோம்ன்னு சொன்னோம்... இப்போ என்ன செய்றதுன்னு அல்லாஹ்வே எனக்கு வழி காட்டுன்னு சஜ்தா செய்து, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதுக்குள்ள அந்தப் பணத்தை வச்சி நல்லா அடைச்சி, அல்லாஹ்வே இதை ஹபீப்ட்ட நீதான் சேர்க்கனும். இதுக்கு நீயே பொறுப்புன்னு சொல்லி பணமிருக்கும் அந்த மரக்கட்டையை கடல்ல வீசி எறிஞ்சுட்டான்.

அதே நேரம் அங்கே ஹபீபும் கரைப்பக்கமா நின்னு தன்னோட சகாவை எதிர்பார்த்துகிட்டே இருந்தான். மோசமான வானிலையையும்  ஆளே இல்லாம இருப்பதையும் கவனிச்சு, திரும்பிப் போக நினைச்சவன் காலில் எதோ தட்டுச்சு. என்னானு பார்த்தால், மரக்கட்டை. அதுல எதோ அடைச்சிருக்கேன்னு எடுத்து பார்த்தா, அப்துல்லாஹ் அனுப்பி வச்ச பணமுடி. அல்லாஹ்வை நினைச்சி, ஷுக்ர் அதா செஞ்சிட்டு, ரொம்ப சந்தோஷமா தன் வீட்டுக்கு திரும்பிட்டான்.

இந்தக் கதைய சொல்லி முடிச்சதும் எங்க உம்மா, கனியைக் கூப்பிட்டு சொன்னா. ”நீயும், உன் சினேகிதனும் அல்லாஹவை மெய்யாலுமே நம்பி, அவனுக்கு பயந்து, அவன் முன்னாடி இந்த உறுதி எடுத்துகிட்டோம்னு நினைப்புல சரியா இருந்தா, அல்லாஹ் உங்க கடனை திருப்பித் தர பொறுப்பெடுத்துப்பான் கனி... கவலைப்படாதீங்க, பொறூமையா இருங்க.ஏன்னா அல்லாஹ் பொறுமையாளர்களுடன் தான் இருக்கிறான்”னு சொல்லி அனுப்பினா.

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
2:153
 
thanks 
 http://mydeartamilnadu.blogspot.com/2015/09/blog-post_27.html

Thursday, September 10, 2015

எங்கிருக்கின்றார் என்பது அவசியமில்லை!!!

அஸ்ஸலாமு அலைக்கும்,

இச்சட்டத்தின் படி, ஒருவர் தகவலை பெற அவர் இந்தியராக இருத்தல் மட்டும் போதுமானது (எங்கிருக்கின்றார் என்பது அவசியமில்லை). மொபைல் நம்பர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் தகவல் கேட்பவரின் முகவரியும், மின்னஞ்சல் முகவரியும் அவசியம். 

தொடர்ந்து படிக்க: http://manithaabimaani.blogspot.com/2015/09/blog-post_10.html

Monday, August 31, 2015

இவர்கள்...!

பிஸ்மில்லாஹ் 
 
 
ஏக இறைவனைத் தொழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தினால், கட்டப்பட்ட பள்ளி வாசல்கள். அந்தப்  பள்ளியின் பெயர் மாநிலமெங்கும் பரவவேண்டும் என்ற ஆர்ப்பரிப்பில் ஆடம்பர வேலைப் பாடுகள். இந்தியாவின் எந்த மாநிலத்தில் எந்தக் கல் கிடைத்தாலும் - அதைக் கொண்டு தரைகள், தூண்கள் இத்யாதி இத்யாதிகள்!
"ஒரு காலம் வரும்போது, பள்ளி வாசல்களைக் கட்டி, பெருமைப்பட்டுக் கொள்வார்கள்" என்ற கருத்தில் உள்ள அண்ணல் நபிகளின் `பொன்மொழி இங்கு நினைவுகூர்தல் வேண்டும்.
இப்படி பார்த்து, பார்த்து,பள்ளி வாசல் கட்டியாயிற்று ! ஐங்காலத் தொழுகையும் நடைபெறுகிறது. அனைத்தும் அமர்க்களமாய் நடைபெறும் சந்தோஷ தினங்கள் தான் என்றென்றும் ! இறைவனை தியானிப்பதின் மகோன்னதம், அது மிக உயர்ந்த பாக்கியம் அல்லவா ?
எல்லாவற்றையும் செய்து விட்டு, மிக முக்கிய, இஸ்லாத்தின் உன்னத பதவியான,தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தம சஹாபாக்கள் பார்த்த அந்த பணியை செய்யும் "இவர்களை" ஏனோ நம் மக்கள் மறந்து விட்டார்கள். 
ஆம் ! கொடுமையான தண்டனையின் உச்சம் அது ! சுடுமணல்! வெற்றுடம்பு,தீக்காயங்கள், சுடும் பாறை நெஞ்சின் மீது வைத்து, `ஏக இறைவனை மறு` என்று சொன்ன இறைநம்பிக்கை அற்ற அந்த மக்கத்து குரைஷிகளைப் பார்த்து "ஏகன் ஒருவனே ! ஏகன் ஒருவனே! என்று முழங்கிய பிலால் (ரலி) அவர்கள் செய்த அந்தப் பணி அல்லவா? அது !
இரண்டு கண்களும் தெரியாது, சமுதாய அந்தஸ்து கிடையாது. ஆனால், ஈருலக தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - அந்த நல்ல மனிதரை உயரிய பணிக்கு நியமித்தார்கள். அவர்கள் தான் உம்மி மக்தூம் (ரலி). அந்த இரு பெருந்தகைகளும் செய்த பணி "முஅத்தின்" தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் பெரிய பணி. இஸ்லாத்தின் மணி மகுடமாய் விளங்கும் அற்புத பணிஅல்லவா அது!
 பாங்கு சொல்வதற்குள்ள நன்மையையும், முதல் சஃபில் நின்று தொழும் நன்மையையும் ஒருவர் அறிந்தால் அதை அடைய சீட்டு குலுக்கி போட்டு பெற முயற்சிப்பார்கள் என்ற ஹதீசும், பாங்கு சொன்னவர் மறுமையில் கழுத்து நீண்டவராக வருவார் என்ற் ஹதீசும், பாங்கு சொன்னவருக்காக அவர் பாங்கின் ஒலியைக் கேட்ட ஜீவராசிகள் எல்லாம்  அவருக்காக வேண்டி, சாட்சி சொல்வார்கள் என்ற ஹதீசும், பாங்கின் மகிமையை, அதை சொல்லும் "முஅத்தின்"களின் உயர்வை எடுத்துக் காட்டும் வகை அல்லவா ?
அந்த அருமையான பணியை செய்யும், அந்த ஆத்மாக்களின் வாழ்வு சுபிட்சமாக உள்ளதா? இல்லை ! இல்லை ! இல்லவே இல்லை ! ஏன்?
அந்த நல்ல பணியை செய்யும் அவர்களை நாம் எந்த இடத்தில வைத்திருக்கிறோம்.நாம் அனைவரும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
நாம் அந்த உன்னத பணியை விளங்கவில்லை, அல்லது மறந்து விட்டோம்."முஅத்தின்" என்ற பெயரையே மோதினாராக்கி, களங்கப்படுத்திவிட்டோம். அவர்கள் பாங்கு மட்டும் சொல்லவில்லை. அதிகாலையில் எழுந்து , தன் அடிப்படைதேவைகளை முடித்து மழையோ, குளிரோ எதையும் பொருட்படுத்தாமல்,பள்ளிவாசல் கதவு திறந்து லைட் போட்டு, ஹவுளில், கக்கூஸில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொண்டுவிட்டு, பாங்கு சொல்லும் நேரம் வந்ததும் அந்த குறித்த நேரத்தில் பாங்கு சொல்ல வேண்டும்.
ஒவ்வொருவராக தொழவரும் நபர்களின் கண்ணுக்கு ஏனோ ஒன்று உதாரணமாக,தண்ணீர் தேங்கியிருப்பது குறையாகத் தெரியும் (குறைகள் மட்டும்தான் தெரியும்) அதற்கு அந்த பள்ளியின் மோதினாரைத்தான் ஒரு பிடிபிடிப்பார்கள். முத்தவல்லி ,தொழவைக்கும், இமாம், நாற்காலிகளில் தொழும் நல்லவர்கள், ஏன் எல்லோரும் அந்த "முஅத்தினை" கேட்கவேண்டிய கேள்விகள் கேட்டு துளைத்தெடுப்பார்கள்.நாம் அதை சரி செய்து,உதவலாமே என வருபவர் மிக மிக சிலரே.
தொழுகை முடிந்தவுடன், பள்ளி வாசலை சுத்தம் செய்தல், கழிவறைகளை கண்காணித்தல்  இப்படியான சில வேலைகளில் நேரங்கள் நகரும் !
காலை, பகல்,  இரவு உணவுக்கு தனது அடுக்குச் சாப்பாட்டு செட்டைத்  தூக்கிக் கொண்டு அன்றைய பொழுதிற்கு உணவளிக்கும் வீட்டிற்கு சென்று ,அலைந்து திரிய வேண்டும்.பள்ளிவாசலின் மின்விசிறியை ஜமாத் தொழுகை நேரம் முடிந்ததும்  ஒரு குறிப்பிட்ட அவகாசத்தில் நிறுத்திவிடுவார்(பள்ளி ரூல்ஸ்), ஜமாத் தொழுகை முடிந்து லேட்டாக தொழவரும் நபர் தன்னிச்சையாக மின்விசிறியை போட்டுக் கொண்டு தொழுது விட்டதை யாரும் பார்த்துவிட்டால அதனை முத்தவல்லியிடம் சொல்லி இவருக்கு திட்டும் வாங்கிக் கொடுக்கும் ஒரு கூட்டமும் பள்ளியில் அமர்ந்துதான் இருக்கும்.
சொந்த் வீடு, மக்களை பார்க்க போதிய நேரம் ஒதுக்க இயலாது, லீவு கிடைப்பது இல்லை, சம்பளமும்  சொல்லிக் கொள்ளும்படியாக பெரும்பாலான பள்ளிவாசல்களில் கிடையாது. இன்றையச் சூழல் விலைவாசியில் அந்த சம்பளத்தைக் கொண்டு 10 நாட்கள்கூட வாழ்க்கையையை ஓட்ட இயலாத சூழல்.
இன்னும், அவர்களுக்கு மன உளைச்சல்கள் , காயங்கள், ஏச்சுப் பேச்சுகள் ஏராளம்.
மார்க்கத்தின் உயர்ந்த பணி செய்யும் அம்மக்களைப் பற்றி, நாம் சிந்தனை செய்தோமா ? நம் அருகில் உள்ள் அப்பள்ளியின், முஅத்தின்களை அரவணைத்திருக்கிறோமா ? இதுவரை இல்லை என்றாலும் பரவாயில்லை !இனியாவது, இன்ஷா அல்லாஹ் அந்த முஅத்தின்களின் தோள்களில் தோழமையுடன் கைபோட்டு, அவர்களின் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அணுகி, அவர்கள் பிள்ளைகளின் கல்வி மேம்பாடு போன்றவற்றில் அனுசரனையாக விளங்கி, அந்த உயர்ந்த பணி செய்யும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். ஏனெனினில் அவர்கள் நீண்ட கழுத்துடன் மறுமையில் (தனி அந்தஸ்துடன்) வருவார்கள் ! எல்லா ஜீவராசிகளும் அவர்களுக்காக சாட்சி சொல்லும் !
நாம் !?

(‘முஅத்தின்’களின் இப்பிரச்சனையை  நாம் எவ்வாறு களைய வேண்டும்?அவர்களின் சம்பள உயர்வுக்கு என்ன செய்ய வேண்டும் ?போன்ற கருத்துக்கள் பரிமாறி,அதை எப்படி முன்னெடுப்பது?அதற்கு நாம் எவ்வாறு பங்களிக்கலாம் என கருத்துக்கள் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்,நன்றி)
 
 
 
 
 http://adirainirubar.blogspot.com/2015/08/blog-post_31.html#
 

Saturday, August 29, 2015

அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தைத் தருமா !?

மனிதனின் வாழ்வில் மகிழ்வைத் தொலைத்து மன நிம்மதியை இழக்கச் செய்து மனதைக்குன்ற வைத்து ஒருவனை மனநோயாளியாகக்கூட ஆக்கிவிடும் சக்தியொன்று இருக்கிறது என்றால் அது இந்த பாழாய்ப்போன சந்தேகமெனும் தீராத நோயாகத்தான் இருக்கமுடியும்.
அனுதினமும் ஒவ்வொருவரும் ஏதாவது ரீதியில் சந்தேகப்பட்டுக் கொண்டுதான் வாழ்நாளைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவை யாவும் நடைமுறை வாழ்வில் நிகழக் கூடிய சந்தேகங்களேயாகும்.
உதாரணமாகச் சொல்வதாயின் வீட்டைப் பூட்டிவிட்டோமா.? சமையல் கேஸை ஆஃப் செய்தோமா.? பாக்கிப் பணம் திரும்பப் பெற்றோமா..? அல்லது வெளியில் செல்லும்போதோ, பயணத்திலோ, அலுவலகப்பணியிலோ, ஏதாவது ஒரு பொருளை எடுத்துவர மறந்துவிட்டு கொண்டுவந்தோமா..? இல்லையா.? என்று சந்தேகப்படுவது. அடுத்துச் சொல்வதானால் சந்தேக நிலையில் உள்ள சில அறியாத விசயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது, ஆதாரமில்லாத சில செய்திகளைக் கேள்விப்படும்போது சந்தேகத்தோரணையில் கேட்பது இதுபோன்ற இப்படி பலவகையில் ஒருமனிதனுக்கு நடைமுறை வாழ்வில் அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு.
ஆனால் சிலரது சந்தேகங்கள் அவசியமற்றதாக நின்றாலும் குற்றம், நடந்தாலும் குற்றம், பார்த்தாலும் குற்றம்,பேசினாலும் குற்றம் என்று சொல்வதுபோல சதா எல்லாவற்றிற்கும் எல்லா விசயத்திற்கும் சந்தேகப்படுவது ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குடும்பவாழ்வில் திருமண வாழ்வில் ஏற்படும் சந்தேகம்தான் எல்லா சந்தேகங்கங்களை விடவும் மிக மோசமானவையாகவும் பிரச்சனைக்குரியவையாகவும் இருக்கிறது.இந்த சந்தேகம்தான் நிம்மதியைத் தொலைக்கச் செய்து விடுகிறது. இச்சந்தேகம் கொண்டவர்கள் சந்தோசமாக வாழ்ந்ததாகத் தெரியவில்லை.
சந்தேகம் என்பது பொதுவாக அனைவருக்கும் இருக்கும் குணங்களில் ஒன்றாக இருந்தாலும் . அதேசமயம் சூழ்நிலையைப் பொருத்து ஏற்படக் கூடியவையாக இருக்கிறது. இப்படி சூழ்நிலைச் சந்தேகங்கள் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப் பொருத்து அதிகபட்சம் ஏற்றுக்கொள்ள கூடியவையாகவும் இருக்கிறது. அர்த்தமுள்ள சந்தேகங்கள் ஆரோக்கியமானதே அதேசமயம். அர்த்தமில்லா அவசியமற்ற சந்தேகங்கள் சந்தோசத்தைத் தொலைத்து சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கிறது.
ஒருவருக்கு அவசியமற்ற சந்தேகங்கள் சதா எந்நேரமும் மனதைவிட்டு மாறாமல் இருக்குமானால் எதற்கெடுத்தாலும் சந்தேகக் கண்களால் பார்த்துப்பழகி அதுவே ஆட்கொள்ளத்தொடங்கி விட்டால் அதுவே நாளடைவில் மனநோயாளியாகக்கூட மாறிவிட வாய்ப்பாகிவிடுகிறது.
ஆகவே பெற்றோர்களானாலும், கணவன் மனைவி, பிள்ளைகளானாலும், சகோதர,சகோதரி உறவினார்கள் மற்றும் நட்புகளானாலும் புரிந்துணர்வு மிகமிக அவசியம் இருக்கவேண்டும். ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும்.நம்பிக்கை தளர்ந்து வலுவிழந்து விடுமாயின் அந்த இடத்தை சந்தேக நோய் தான் ஆக்கிரமித்துக் கொள்ளும். பிறகு பிரச்சனைகளுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை.
தேவையற்ற சந்தேகத்தினால் எத்தனையோ கணவன் மனைவிமார்களும், குடும்பங்களும், உறவுகளும் நட்புகளும் சிதறுண்டு நாலாபுறமும் பிரிந்து கிடப்பதை நாம் இவ்வுலகில் பார்க்கிறோம் கேள்விப்படுகிறோம் பல ஊடகங்கள் மூலமாக செய்திகளை அறிகிறோம். இப்படி அவசியமற்ற சந்தேகத்தினால் ஏற்படும் பிரிவுகளை நினைக்கும்போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.
குடும்பப் பிரச்சனையில் ஏற்படும் சந்தேகங்கள் கணவன் மனைவிக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகளினால் சந்தேகங்கள் நாளடைவில் பெரிதாகி வளர்ந்து காரணத்தை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் சந்தேகத்தால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அநியாயத்திற்கு தன்னை மாய்த்துக் கொண்டவர்களும் நிறையபேர் உண்டு.
மற்ற சந்தேகங்களை விட ஒரு மனிதனுக்கு குடும்ப உறவில் சந்தேகம் வந்து விட்டால் அவனிடம் எவ்வளவு செல்வமிருந்தாலும் பணிவிடை செய்ய ஆயிரம் உதவியாளர்கள் இருந்தாலும் மனதில் நிம்மதிமட்டும் இருப்பதில்லை.. நிம்மதியில்லாத வாழ்க்கை நரகவேதனைக்குச் சமம் என்றுதான் சொல்லமுடியும்.நம்பிக்கைதான் வாழ்க்கை இதை நன்கு உணர்ந்தவர்கள் இன்புற்று வாழ்வார்கள். இல்லையேல் துன்பத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு நடைபிணமாகத்தான் வாழமுடியும். ஆகவே அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருவதில்லை என்பதை உணர்ந்து அவசியமற்ற சந்தேகங்களைத் தவிர்த்துக் கொண்டு நமது இவ்வுலக வாழ்க்கையை ஆரோக்கியமானதாக ஆக்கிக் கொள்வோமாக...!!!
அதிரை மெய்சா
 
 http://adirainirubar.blogspot.com/2015/08/blog-post_30.html

Wednesday, August 26, 2015

அதிரையில் சம்பவம்:புது மாப்பிள்ளை கடத்தி,சிறை வைப்பு!!

நமதூரில் கடந்த சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக, ஒரு வினோதமான, வக்கிரமான, கண்டிக்கத்தக்க பழக்கம் நிலவி வருகின்றது!  அதாவது, இளைஞர் ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்றால், அவரின் ‘ஆப்த நண்பர்கள்’ என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் விடலைகள் உஷார் ஆகித் தமக்குள் திட்டம் போட்டுக்கொள்கிறார்கள்.

அது என்ன ?

‘எப்படியாவது புது மாப்பிள்ளையைப் புதுப் பெண்ணுடன் முதலிரவில் சேர விடக் கூடாது’ என்ற வக்கிரமான – நமதூர்ப் பரிபாஷையில், ‘பெரலி பண்ணும்’ – வன்முறைக் கலாச்சாரம்!  இதில் பல முறைகளைக் கடைப்பிடித்துக் காலித்தனம் செய்கின்றனர் நம் இளைஞர்கள்!

- புது மாப்பிள்ளையை அன்றிரவு happy ride என்று சொல்லி ஏற்றிக்கொண்டு, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கார்களில் அந்தத் ‘தோழப் பிள்ளைகள்’ வெளியூர்களுக்கு எங்காவது கொண்டுபோய் இரவு முழுவதும் மறைத்து வைப்பது.

- புது மாப்பிள்ளைக்கும் தோழப் பிள்ளை(!)களுக்கும்கூட அறிமுகமில்லாத கிராமப்புறங்களுக்குள் சென்று, அன்றிரவு முழுவதும் அரட்டை அடிப்பது. (இன்னொன்றும் அடிப்பார்களோ என்னவோ, தெரியாதப்பா.)

- எல்லோருமாகச் சேர்ந்து Second show சினிமாவுக்குப் போய், சினிமா பார்ப்பது! அந்தப் புது மாப்பிள்ளைக்கு சினிமாவில் கவனம் இருக்குமா என்ன?

- அல்லது, ஊரிலேயே, பெண் வீட்டுப் பந்தலிலேயே, புதுப் பெண்ணின் மனக் குமுறலுக்கு முன்னாலேயே, புது மாப்பிள்ளையைச் சூழ்ந்துகொண்டு அரட்டை அடித்துக்கொண்டு, அவனை வீட்டுக்குள் செல்லவிடாமல் அன்றிரவு முழுவதும் – அதாவது விடியும்வரை - ‘கேரோ’ பண்ணி வைத்துக்கொள்வது.

- அல்லது, புதுப்பெண் – புது மாப்பிள்ளையின் அலங்கார அறையில் கூடி அமர்ந்துகொண்டு, பெண்ணையும் மாப்பிள்ளையையும் முதலிரவில் தனிமையில் சந்திக்க விடாமல் தடுத்து வைப்பது.

- இத்தியாதி, இத்தியாதி.....

இது போன்ற ‘கழிசடைக் கலாச்சாரம்’ எங்கிருந்து கிடைத்தது இவர்களுக்கு?! திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர், இரவும் பகலும் இதய வேட்கையால், என்னவெல்லாம் அந்தப் புது மணமக்கள் கனவு கண்டுகொண்டு இருந்திருப்பார்கள்!?  இதைத் தவிடுபொடியாக்கும் இந்தத் தறிகெட்ட பழக்கம் நம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு வரலாமா?  அவர்கள் சிந்திக்கட்டும்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்!

“அப்புடித்தாண்டீ, என்னட மப்ளையையும் கடத்திக்கிட்டு போய்ட்டானுவ. இங்கே, வூட்லே வாப்பா கத்துறாஹ. காக்கா, மாமாமார் அங்கங்கே ஓடித் தேடினா, எங்கேயுமே இல்லெ!  கடைசீலே, அடுத்த நாள் காலைலே மொகத்தெத் தொங்க போட்டுக்குட்டு வந்தாரு என் மாப்ளே” என்று பழைய மணப்பெண் ஒருவர் அங்கலாய்ப்பது நம் காதில் விழுகின்றது!

இளைஞர்களே!  இஸ்லாமியப் பண்பாட்டின் பக்கம் திரும்பி வாருங்கள்!  வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு, உங்கள் Islamic Identity யைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்!

இது மட்டுமில்லை!  நமது பண்பாட்டிற்கே உலைவைக்கும் ‘வெடி வெடிப்பு’ப் பழக்கம்!  திருமணத்தன்று பின்னிரவில் செவிப்பறைகளைத் தாக்கும், கண் பார்வையைக் கெடுக்கும் வெடிவெடிப்பைச் சர்வ சாதாரணமாகச் செய்கின்றனர், திருமண வீட்டுக்குப் பக்கத்தில்!  பிறந்து சில நாட்களே ஆன சிறு குழந்தைகள், முதியோர்கள், இதய நோயாளிகள் போன்றோருக்குத் தீங்கு விளைக்கும் இந்த வெடிக் கலாச்சாரம் யாருடையது?  மாற்று மதத்தினர், கல்யாணமென்றும் கருமாதி என்றும் பாராமல், வெடி வெடித்துக் மகிழ்வர். அவர்களுடையதை நாம் பின்பற்றலாமா?  சிந்தியுங்கள், வாலிபர்களே!

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் சொன்னதை இங்கு உங்களுக்கு நினைவூட்டுவது பொருத்தம் என்று கருதுகின்றேன்:
من تشبه بقوم فهو منهم

(எவரொருவர் பிற சமுதாயத்தைப் போன்று செய்வாரோ, அவர், அவர்களைச் சார்ந்தவராவார்.)

மேற்கண்ட எண்ணக் குமுறலை எழுத்தில் வடித்து இணையத்தில் பதிக்க நினைத்துக்கொண்டிருந்தபோது என் பேரப்பிள்ளை ஒருவன் சொன்ன செய்தி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

அண்மையில் நமதூரில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினான்.  புது மணமக்கள் எப்படியோ, தோழப் பிள்ளைகளின் கண்ணைக் குத்திவிட்டு, மணவறைக்குள் நுழைந்துவிட்டார்களாம்.  இதையறிந்த ‘தோழப் பிள்ளைகள்’, ‘விடக் கூடாது இவனை’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு, பெண் வீட்டாரிடம், “அந்த ரூமைத் திறந்து தாருங்கள்” என்று அடம் பிடித்தார்களாம். ஊம்.....!  பெண் வீட்டார் அசைந்து கொடுக்கவில்லை!

“அப்டினா, நாங்க இந்த அறைக்கு முன்னாலேயே படுத்துக்குவோம்” என்று கூறி, அடுத்தடுத்துப் பரவலாகப் படுத்துக்கொண்டார்களாம் - இரவு முழுதும், விடியும்வரை!

“அடப் பாவமே!” என்று நான் ஆச்சரியத்துடனும் சினந்தும் உணர்ச்சியை வெளிப்படுத்தியபோது, அந்தப் பேரன் சொன்னான்:

“இல்லப்பா!  இந்தப் புது மாப்புளேயும் இதுக்கு முன் பலரின் கல்யாணத்திலும் இதுபோல் செஞ்சிருக்கான், அப்பா!”

என்னத்தச் சொல்ல?

அபூ பிலால்

http://www.adirainews.net/2015/08/blog-post_757.html#comment-form

Sunday, August 23, 2015

சனாதன தர்மமும்,பள்ளி வாசல் இமாமும்

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 


*******************
*************
*******


பள்ளி வாசலின் ஒலி பெருக்கியில் இருந்து வந்த அந்த தொழுகை அழைப்பில் முஸ்லிம்களின் உள்ளங்கள் அமைதி அடைந்து,ஏக இறைவனை வணங்க எல்லாரும் பள்ளி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

"டேய்,அப்துல் காதர்,தொழுக பாங்கு சொல்லியாச்சி,இந்த பண்ணா மீனை வீட்டுல்ல கொடுத்து விட்டு,வெர்சன பள்ளிக்கி வா?என்று அப்துல் காதரின் அப்பா முஹம்மது தம்பி அவர் வாங்கிய பண்ணா மீனை,தன் பேரனிடம் கொடுத்து விட்டு,பள்ளி நோக்கி விரைந்தார்.

.இப்படி மார்க்கெட்,வங்கி,தோப்பு,குளம்,வெட்டிப் பேச்சு பேசும் மர நிழல் மனிதர்கள்,இப்படி எல்லா மக்களும் பள்ளியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

அழகிய கம்பீரமான அந்தப் பள்ளி வாசலின் உள்ளே,தொழுகைக்கு முன்,செய்ய வேண்டிய அங்க சுத்தி எனப்படும் உழு செய்து கொண்டு இருந்தனர் மக்கள்.அந்த ஹவுல் எனப்படும் தண்ணீர் தடாகத்தில் உலா வரும் மீன்களின் அழகை ரசித்தும்,பிடிக்க முயற்சிக்கும் கவனத்திலும் சிறுவர்கள் இருக்க,அந்த பள்ளி வாசலின் மோதினார் முகைதீன் அவர்கள் இகாமத் சொல்ல ஆரம்பித்தார்.


தொழுகை நடக்க இருப்பதன் ஒரு சமிக்கையே இந்த இகாமத் எனப்படும் வாசகங்கள்.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 
அஷ்ஹது அன்லா  இலாஹா இல் லல் லாஹ் 



********************************
**********************
*************
எல்லாரும் அவரவர் சப்பில் வந்து நிற்க,தொழுகை நடத்தப் போகும் இமாம் அவர்கள் ,எல்லாருக்கும் முன்பாக வந்து நின்றார்.நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எப்படி நமக்கு காட்டித் தந்தார்களோ,அப்படியேதான் தொழ வேண்டும் என்ற ஹதீஸை சொல்லி விட்டு தொழுகை நடத்த ஆரம்பித்தார்,அந்த இமாம் பஷீர் அஹமது.

********************************************
டேய் தே---பயலே,இங்க வாடா,என்ற அந்த ஊரின் உயர் சாதி இந்துவின் அதட்டலைக் கேட்டு,அதறிந்து போனார் பாஸ்கர்,இந்து சனாதன தர்மத்தின் படி அவர் ஒரு தாழ்ந்த சாதி,சூத்திரன்.அசிங்கமான பொருள் படும் படி அதட்டிய அவனின் வயது,பாஸ்கரனின் வயதை விட,கம்மிதான்.ஆனால்,அவன் உயர்ந்த சாதி,இவன் தாழ்ந்தவன்.அவர்களின் கணக்குப் படி.

டேய்,என்னடா நீங்கல்லாம் மெட்ராஸ் போய் படிச்சாலும்,அமெரிக்கா போய் கிழிச்சாலும்,எங்களுக்கு கீழ்தாண்டா.டேய் கேட்டுக்க,நாளைக்கி - பறை மேளத்தை எடுத்துக்குட்டு எங்க தெருவுக்கு உங்க ஆளுக எல்லாரையும் கூட்டிக்கிட்டு வா,அங்க ஒரு சாவு விழுந்து போச்சி,அப்படி வரலன்னா,உங்களை கோல பண்ணுவோம்,பொண்ணுங்களை கற்பழிப்போம் வீடுகளை தரை மட்டமாக்குவோம்,சாக்கிரதை.


பாஸ்கரனால் பேச முடியவில்லை.எப்படி முடியும்? பேசினால் அவனுக்கு அவன் நாக்கு இருக்காது,கால் நரம்பை வெட்டி விடுவார்கள்.என்னதான்,வக்கீலாக இருந்தாலும் - அவனால் அந்த இடத்தில பேச முடியாது,அந்த இடத்தில அவன் ஒரு தாழ்ந்தவன்.அவனை அசிங்கமாகப் பேசும்,மற்றவனோ உயர் சாதிக்காரன்.

சரி ஐயா ! பாஸ்கரனால் அது மட்டுமே சொல்ல முடியும் ,அதை சொன்னான்,சொல்லும் போது,இரு கைகளையும் கூப்பி,சான் கிடையாக அவன் கால்களில் விழுந்து,எழுந்தான்.அதை அந்த உயர் சாதிக்காரன் ரொம்பவே ரசித்தான்,தான் உயர் சாதியில் பிறந்ததற்கு.

**********************************
டேய் பாஸ்கர் நீ என்னடா சொல்றே? நாமெல்லாம் முஸ்லிம்களாக மாறிட்டா,அந்த உயர் சாதி காரங்க கிட்ட போய் நாம் கூனி குறுகி நிக்க முடியாதா?ஆச்சர்யமா இருக்குடா?அப்படி என்னதாண்டா இருக்கு அந்த இஸ்லாத்துல?

ஆமாடா,இஸ்லாத்தைப் பத்தி நிறைய படிசிருக்கேன்.இஸ்லாம் படி,இறைவன் ஒண்ணுதான், இறைவனின் கடைசி தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.அல்லாஹ்வுக்கு முன்னாடி எலாரும் சமம்.ஒரு அரபியை விட,ஒரு அரபி இல்லாதவனோ - ஒரு அரபி இல்லாதவனைவிட - ஒரு அரபியோ உயர்ந்தவன் இல்லை.இப்படி இறைவனின் வேதமான குர் ஆணிலும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன் மொழிகளிலும் நிறைய இருக்கு,இப்போ நமக்கு 24 மணி நேரம் மட்டும் தான் இருக்கு.இப்பவே நம்ம ஊர்ல இருக்குற பள்ளி வாசலுக்குப் போய்,இஸ்லாத்தை ஏத்துக்குவோம்.அடுத்த நிமிஷமே நம்ம எலாருடைய இன இழிவும் நீங்கிடும்,உடனடியா அவங்களோட சரி சமமா தொழுகை நடத்தலாம்.அந்த உயர் சாதிக்காரங்களும் நம்மள கொட்டு அடிக்க கூப்பிட மாட்டாங்க,கேவலப் படுத்த மாட்டாங்க ,இன்னும் சொல்ல போனா நம்மள என்ன பாய் ன்னு கூப்பிடுவாங்க.அதனால வாங்க எல்லாரும் பள்ளி வாசல் போகலாம்.


அல்லாஹ்வைத் தவிர ,வணங்கி வழிபட வேறு யாரும் இல்லை,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அல்லாஹ்வின் கடைசி தூதராக இருக்கிறார்கள்.
பாஸ்கரன் உட்பட ஒரு சிறு கூட்டமாக ஆண்களும்,பெண்களும் இஸ்லாத்தை தழுவிக்கொள்ள,அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என மக்கள் ஆனந்த முழக்க மிட்டனர்.

*****************************************
மறுநாள்,பாஸ்கரனும் , மற்ற மக்களும்,இஸ்லாத்துக்கு மாறிவிட்டதை அறிந்த உயர் சாதி மக்கள் என்ன செய்வது என அறியாமல் திகைத்து கொண்டும்,இனி பறை அடிக்கவும்,குடித்து விட்டு,சாவு வீட்டில் ஒப்பாரி வைக்கவும்,மலம் அள்ளவும் இனி என்ன செய்வது என விழித்துக் கொண்டிருந்தனர்.
***************************************
இஸ்லாம் ஏற்ற மக்கள் எல்லாரும்,இஸ்லாம் பற்றி அறிய 3 மாத பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
*******************************************
பயிற்சி முடிந்து,இதோ இந்த முன்னாள் பாஸ்கர்,பஷீர் அஹமதுவாக மாறி,முஸ்லிம்கள் எல்லாரையும் தொழுகை வைக்க,இமாமாக நம் முன்னாள் நின்று கொண்டிருக்கிறார்.



Saturday, August 22, 2015

இவர்தான் பீ.ஜைனுல் ஆபிதீன் ???

 அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹ்) இந்த பதிவை எல்லா சகோதரர்களும் முழுவதுமாக நிச்சயம் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.


மேலும் இந்த சம்பவத்தில் ஒரு வார்த்தை கூட மிகைபடுத்தி எழுதவில்லை என்று அல்லாஹுவின் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன்.


இன்று தோஹாவில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற போது"என்னுடைய மாமா சென்னையில் இருந்து உம்ரா செய்வதற்கு வந்திருக்கிறார்" என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.அவர் பெயர் ரபியுல்லாஹ்.சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த சகோதரர் உருது மொழியை தாய்மொழியாக கொண்டவர்.அவரிடம் மார்க்க விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருதந்த போது விஷயம் ஊரில் நடக்கும் ஏகத்துவ பிரசாரங்களை பற்றி வந்தது.


அப்போது அவர் "நான் நீண்ட காலமாக தாவா பணிகளை மேற்கொண்டு வருகிறேன். "1984 காலகட்டங்களில் சென்னை பூந்தமல்லியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.அதில் யாரை உரையாற்ற அழைப்பது என்று ஆலோசித்தப்போது பிஜே என்ற இமாம் ஒருவர் தொண்டி என்ற ஊரில் இருக்கிறார்.நல்ல பேச்சாற்றல் உள்ளவர் அவரை அழைக்கலாம் என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள்.


அவரிடம் டெலிபொன் வசதி இல்லாத காரணத்தால் நேரில் சென்று அழைப்பதற்காக என்னை நியமித்தனர்.என்னிடம் அவருடைய வீட்டை விசாரிக்கும் போது அவருடைய தந்தை மளிகை கடை வைத்திருக்கிறார். அவரை காண வேண்டும் என்று விசாரிக்குமாறு அறிவுறுத்த பட்டது.


ஏனென்றால் பிஜே விற்கு அந்த அளவு எதிர்ப்பிருந்த காலகட்டம் அது. நானும் தொண்டியில் பஸ்விட்டு இறங்கி அடுத்துள்ள கடையில் சென்று விசாரித்தேன்.கடைக்காரருக்கு ஆரம்பத்தில் யாரென்று புரியவில்லை.பின்னர் நான் பிஜேவை பற்றி சொன்னபோது "ஓ கிறுக்கனுடைய வீடா?அப்படி தெளிவாக சொல்லுங்கள் என்று எனக்கு வழி காண்பித்தார்.நான் அவருடைய வீட்டை கண்டுபிடித்து விட்டேன்.சிறிய குடிசை வீடு.வாசலில் கதவிற்கு பதிலாக துணியை மறைப்பாக தொங்க விட்டிருந்தனர்.வாசலில் அவருடைய தந்தை என்னை கண்டதும் என்னவிஷயம் என்று வினவினார்.

 நான் வந்த விஷயத்தை சொன்னதும் "ஏனப்பா அவன் உயிரோட இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா?டைபாய்டு ஜுரம் வந்து சாககிடக்கிறான் என்புள்ளை.தயவு செய்து அவனை எங்கேயும் கூப்பிடாதீர்கள்"என்று கோபப்பட்டார்.

இதை கேட்டு ரூமில் படுத்து கிடந்த பிஜே யாரு அத்தா அது"அவரை உள்ளே வரசொல்லுங்கள் என்று சொன்னதும் நான் உள்ளே சென்றேன் ஒரு சிறிய அறையில் அவர் சோர்வாக படுத்து கிடந்தார்.அவரை பார்த்ததும் சலாம் சொல்லிவிட்டு நான் வந்த விஷயத்தை சொன்னேன்.ஆனால் தற்போது உள்ள நிலைமையில் தங்களால் வரமுடியாதல்லவா?என்று கூறி வருத்தப்பட்டேன்,அதற்க்கு அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.நான் கண்டிப்பாக வருவேன் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என்னோடு மார்க்கப்பணிகள் முடிந்துவிட போவதில்லை.என்னை விட திறமையான ஆலிம்கள் நிறையப்பேர் உள்ளனர் என்றார்.

சரி என்று டாக்ட்டரை பார்க்க இருவரும் கிளம்பினோம்.டாக்டர் பரிசோதித்து விட்டு 104 டிகிரி விஷ காய்ச்சல் உள்ளது.அதனால் பயணம் செய்வது நல்லது இல்லை என்று அறிவுறுத்தினார்.ஆனால் பிஜேவோ நிச்சயம் போகவேண்டும் ஏதாவது செய்யுங்கள் என்று டாக்டரிடம் சொன்னார்.டாக்டர், அதற்க்கு மேல் உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டு ஒரு ஊசி போட்டு விட்டு மாத்திரை கொடுத்து 3 மணிநேரம் நன்றாக தூங்கிவிட்டு பயணம் செய்யுங்கள் என்றார்.நாங்கள் வீட்டுக்கு வந்ததும் பிஜேவின் தாய் எங்களுக்கு டீயும் பண்ணும் சாப்பிடதந்தார்கள். சாப்பாடு முடிந்ததும் பிஜே என்னிடம் "பாய் நீங்களும் சோர்வாக இருப்பீர்கள்.என்னுடைய அருகில் படுத்து கொள்ளுங்கள்" என்றார்.

இருவரும் உறங்கிவிட்டு லுஹருடைய பாங்கு சத்தம் கேட்டு எழுந்தோம்.பிஜே எழுந்ததும் மலர்ச்சியுடன் காணப்பட்டார்.காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் என்னிடம் கூறினார்.லுஹர் தொழுது விட்டு புறப்பட தயாரானோம்.தொண்டி_எழும்பூர் பஸ்ஸில் ஏறினோம்.டிக்கெட் எடுக்க நான் பணம் எடுத்த போது அவர் "பாய் நான் எடுக்கிறேன் என்றார்"அதற்க்கு நான் இது என்னுடைய பணம் இல்லை.ஜமாஅத் பணம்.நம்முடைய செலவிற்கு தந்தது என்றேன்.அதற்க்கு அவர் அப்படியானால் நீங்கள் உங்கள் டிக்கெட் எடுத்துகொள்ளுங்கள் நான் என்னுடையதை எடுத்துகொள்கிறேன்"என்றார்.

நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்க்க வில்லை.பின்னர் மறக்க விஷயங்களை பற்றி பேசி கொண்டு எழும்பூரை அடைந்தோம்.அன்றய பூந்தமல்லி சொற்ப்போழிவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பிஜேவின் உரையும் மிக சிறப்பாக அமைந்தது. அன்றிலிர்ந்து சுமார் 30 வருடமாக நானும் பிஜேவும் நல்ல நண்பர்களாக உள்ளோம்.பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்.முடிவுகள் எடுப்பதில் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்று தன் நண்பனை பற்றி பெருமையாக என்னிடம் சொன்னார்.


கேட்டு கொண்டிருந்த எனக்கு பிஜே மீது உள்ள மரியாதை கூடியது என்றே சொல்லலாம்.இதன் மூலம் இஸ்லாமிய சகோததர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒருவர் மீது அவதூறு சொல்லும் முன்பு ஆயிரம் முறை யோசியுங்கள்.காரணம் நாம் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நாளை மறுமையில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்."இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம்மீது என்றென்றும் உண்டாவட்டுமாக.....!!!!!

நன்றி அதிரை பாரூக் 

 http://peacetrain1.blogspot.com/2012/05/blog-post_08.html



Thursday, August 20, 2015

ஹஜ் பயணத்தில் ‘செல்பி'

 ஹஜ் பயணத்தின் போது இஸ்லா மியர்கள் புனிதமாகக் கருதும் பகுதிகளில் ‘செல்பி’ எடுப்பது பரவலான ஆதரவையும், அதே அளவு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இணையத்தின் சமூக வலைத்தளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.

மெக்காவிலுள்ள காபாவைச் சுற்றியும், அங்கு நடைபெறும் பல்வேறு மத சம்பிரதாய நிகழ்வுகளையும் தங்களுடன் சேர்த்து ‘செல்பி’ (தங்களைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் புகைப்படம்) எடுத்து அதனை சமூக வலைத் தளங்களில் ஏராளமான ஹஜ் பயணிகள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஹஜ் பயண செல்பிகள் பெரும் பிரபல்யம் அடைந்துள்ளன.

24 வயதான அலி இது தொடர் பாகக் கூறும்போது, “இது எனது முதல் புனித யாத்திரை. இப்பகுதியில் என்னைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஆவணப்படுத்துவது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித் துள்ளார். அவர், சாத்தான் மீது கல்லெறியும் சுவர் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.

குவைத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “நான் எங்கு சென்றாலும், புகைப்படம் எடுப்பேன். தற்போது அனைவரிடமும் சிறிய கேமராக்கள் உள்ளன. இவை முழு காட்சியையும் பதிவு செய்கின்றன” என்றார்.

விமர்சனம்
ஹஜ் பயண செல்பிகளை கடுமையாக விமர்சனம் செய்து, பலரும் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். நான் 90-ம் ஆண்டுகளின் மத்தி யில் உம்ரா சென்ற போது, கேமரா வைப் பார்த்த எந் தந்தை, ‘விலக் கப்பட்டது’ எனக் கூச்சலிட்டார். தற்போது, ஹஜ் செல்பிகள் பிரபல்யமாகியுள்ளது. என்ன உலகம் இது! என ஒருவர் பதிவிட் டுள்ளார்.

காவா என்ற பெயரில் ட்விட்டரில் ஒருவர் “இது அல்லாவுடன் தொடர்பு கொள்ளும் நேரம். எனது ஆன்மாவைச் சுத்திகரிக்கும் நேரம். ஹஜ் செல்பி-க்களை எடுக்கக் கூடாது” எனப் பதிவிட்டுள்ளார்.

ஆதரவு
அதே சமயம் செல்பிகளுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்துள்ளனர். ஹஜ் பயணத்தின் போது, புகைப்படங்களுக்கு அனுமதியிருக்கும் நிலையில், செல்பி-களை மட்டும் ஏன் எடுக்கக்கூடாது? எனச் சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பேராசிரியர் கருத்து
இதுதொடர்பாக, சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த ஷாரியா சட்ட பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “புகைப்படங்கள் தனிப்பட்ட நினைவுப் பொக்கிஷங்களுக்காக எடுக்கப்பட்டால் அதனால் தவறில்லை. ஆனால், பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஹஜ் சம்பிரதாயப் பகுதிகளில் எடுக்கப்பட்டால் அது தடை செய்யப்பட வேண்டும். செல்பி-களைத் தவிர்ப்பது முஸ்லிம்களுக்கு நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/world/

இரவில் ஒலித்த அழுகுரல்

வழிப்போக்கர்களைச் சுமந்துகொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று மதீனாவுக்கு வந்தது. அந்தக் கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள். இதனை ஜனாதிபதி உமர் கண்டார். வழிப்போக்கர்களான அந்தப் பயணிகளுக்கு உதவ விரும்பினார். தமது நண்பரான நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபுடன் சேர்ந்து இரவு முழுவதும் அந்தக் குழுவினருக்குக் காவலராய் நின்றார். 

பின்னிரவு நேரத் தொழுகையான ‘தஹஜ்ஜுத்’-ஐ இருவருமாய் தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. 

ஜனாதிபதி உமர் கூட்டத்தினரை நெருங்கி குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது நேரம் கழிந்தது. மீண்டும் அதே இடத்திலிருந்து குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. 

ஜனாதிபதி உமர் குழந்தையின் தாயிடம் விரைந்து சென்றார். “அம்மா! இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அழாமல் கவனித்துக் கொள்ளுங்கள்!” என்றார். 

கொஞ்சம் நேரம்கூட ஆகியிராது. மீண்டும் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
ஜனாதிபதி குழந்தையின் தாயிடம் சென்று குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார். இப்படி மூன்று முறை நடந்தது. 

கடைசியாக, குழந்தை அழும் குரல் கேட்டு தாயாரிடம் சென்ற ஜனாதிபதி உமர், “அம்மா! நீங்கள் இரக்கமுள்ள ஒரு தாயாக ஏன் நடந்துகொள்ள மறுக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இந்தக் குழந்தை இரவு முழுவதும் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது!” என்றார்.
தன்னிடம் பேசிக்கொண்டிருப்பது ஜனாதிபதி என்று தெரியாமல் அந்தத் தாய் சொன்னாள்: 

“இறைவனின் அருள் உங்கள் மீது பொழிவதாக! இரவு பல முறை நீங்கள் தேவையில்லாமல் எனக்கு அறிவுரை என்ற பெயரில் வந்து தொந்தரவு செய்துவிட்டீர்கள். இந்தக் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை மறக்கடிக்க முயன்றுவருகிறேன். இந்தக் குழந்தையும் தாய்ப்பால் குடிப்பதை விட மாட்டேன் என்கிறது! நான் என்ன செய்ய?” என்று சலித்துக் கொண்டாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஜனாதிபதி உமர், “அம்மா, குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால்குடி மறக்கடிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?” என்று கேட்டார். 

“காரணமில்லாமல் செய்ய நான் கல்நெஞ்சம் கொண்டவளா? எங்கள் ஜனாதிபதி உமர் அவர்கள் பால்குடி நிறுத்திய குழந்தைகளுக்குத்தான் பைத்துல்மாலிலிருந்து (அரசு பொது நிதியகம்) நிதி உதவி செய்கிறார்கள்!”
“சரி.. இந்த குழந்தைக்கு வயதென்ன?” 

“குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகின்றன!” 

“குழந்தையைப் பால்குடி மறக்கடிக்க அவசரம் காட்ட வேண்டாமம்மா!” என்று சொல்லிவிட்டு ஜனாதிபதி உமர் அங்கிருந்து சென்றார். 

அதிகாலைத் தொழுகையை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி உமருக்கு இரவில் நடந்த சம்பவம் நினைவில் வர, தொழுகையின் நடுவிலேயே அழ ஆரம்பித்தார். மேற்கொண்டு திருக்குர்ஆன் வசனங்களை ஓத முடியாமல் நா தழுதழுத்தது. ஒருவழியாகத் தொழுகையை நடத்திவிட்டு முடிவில் சொன்னார்: 

“உமர் அழிந்தான்! அவன் பச்சிளம் குழந்தைகளைக் கொன்று விட்டான்!”
அத்தோடு நில்லாமல் தமது ஆட்சிக்குட்பட்ட எல்லா பகுதிகளுக்கும் உடனடி ஆணையைப் பிறப்பித்தார். 

“குழந்தைகளுக்கான நிதி உதவி பெறும் பொருட்டு எந்தத் தாயும் குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால் குடியை நிறுத்தக் கூடாது! இனி, பால் குடிக்கும் குழந்தைகளுக்கும் அரசின் நிதி உதவி கட்டாயம் உண்டு!” 


 இஸ்லாம் வாழ்வியல்: இரவில் ஒலித்த அழுகுரல்
இக்வான் அமீர் 

 http://tamil.thehindu.com/society/spirituality/
 

Thursday, August 13, 2015

குரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரானை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கைது 

  சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரானை ரூ. 5 கோடிக்கு விற்க முயன்ற 10 பேர் கொண்ட கும்பலை மைசூரு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.

இது தொடர்பாக மைசூரு மாநகர காவல் கண்காணிப்பாளர் அபினவ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கர்நாடகாவை சேர்ந்த ஒரு கும்பல் இஸ்லாமியர்கள் புனித நூலான குரானின் மிக பழமையான பதிப்பை, பல கோடிக்கு ரூபாய்க்கு விற்க முயற்சிக்கிறது. அந்த பழமையான குரான் குறித்து இணையதளத்தில் தகவல் வெளி யிட்டு, வெளிநாட்டுக்கு விற்கப்பட வாய்ப்பு இருக்கிறது என ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த வாரம் தகவல் அளித்தனர்.

அதன் பேரில் மைசூரு கே.ஆர்.நகர் போலீஸார் அந்த மோசடி கும்பலை அணுகினர். அப்போது, இந்தியாவில் மிகவும் பழமையான இந்த குரான் தங்கத் தாளில் எழுதப் பட்டது. இதன் விலை ரூ. 5 கோடி எனக்கூறி, ஒரு வீடியோவையும் அனுப்பினர். அந்த வீடியோவை ஆராய்ந்த போது, மோசடி கும்பலிடம் இருக்கும் குரான் விலை மதிப்பற்றது என தெரிய வந்தது. இதையடுத்து அந்த கும்பலிடம் பேசி தனியார் விடுதிக்கு வரவழைத்தனர்.

அப்போது குரானை விற்க முயன்ற 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது புராதன பொருளை சட்ட விரோத மாக விற்க முயன்றது, மோசடி செய்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளோம் என்றார்.

அந்த குரானை 93 வயதான வரலாற்றியல் ஆய்வாளரும், மங்களூரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான பி. ஷேக் அலி ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர், `தி இந்து' விடம் கூறியதாவது:

''என்னுடைய இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் இத்தகைய அரிதான குரானை பார்த்ததில்லை. 604 பக்கங்கள் கொண்ட இந்த குரான் தங்க முலாம் பூசப்பட்ட தாளில், கறுப்பு மையால் அரபி மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது.

ஒரு தேர்ந்த, அனுபவம் வாய்ந்த‌ எழுத்தர் 6 அல்லது 7 ஆண்டுகள் இதனை எழுதி இருக்கலாம். இந்த குரான் சாய்வு வடிவிலான எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. இதில் 30 பாராக்களும், சம அளவுடைய 114 சுராக்களும் இடம்பெற்றிருக்கின்றன''என்றார். 



 http://tamil.thehindu.com/india/400-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%825-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7537804.ece?homepage=true&relartwiz=true

இது தான் உண்மை !!!


 அடிமைகளாய் இருந்து உமய்யாக்களின் ஆட்சியின் போது, இஸ்லாத்தில் இணைந்த பின்  இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் மம்லுக்குகள். இவர்கள் 9 ம் நூற்றாண்டிலிருந்தே பல ஆட்சியாளர்களின் ஆட்சியில் இராணுவத்தில் பெரும் பதவிகளை வகித்தார்கள். குறிப்பாக அரசியலிலும், இராணுவத்திலும் இவர்கள் எகிப்து, லீவண்ட், ஈராக், இந்தியா போன்ற பகுதிகளில் தலையெடுத்தார்கள். தற்போதைய மத்திய ஆப்கானிஸ்தானிலிருந்த கோர் என்ற பகுதியை கஸ்னவித் ஆட்சியாளர் கஸ்னி முஹம்மதுவிடமிருந்து அபு அலி இப்ன் முஹம்மது வெற்றி பெற்று சுன்னிப்பிரிவு இஸ்லாமாக ‘குரித் ஆட்சிவம்சம்’ என்று துவக்கினார்.,,,


 இனி

http://islamiyaatchivaralaru.blogspot.in/

Tuesday, August 11, 2015

About இஸ்லாமிய பெண்மணி blog?

முஸ்லிம் பெண்களுக்கான சிறந்த தமிழ் பிளாக்.இஸ்லாத்தின் கொள்கைகள்,விளக்கங்கள்,முஸ்லிம் பெண்களின் ஆக்கங்கள் இன்னும் பல் சுவை கதம்பமாக மிளிர்கிறது,நீங்களும் படியுங்கள்,பிறருக்கும் எத்தி வையுங்கள் .


http://www.islamiyapenmani.com/

Monday, August 10, 2015

ஆண்மையுள்ள ஆனந்த விகடன்

 
 
 தண்டனை யாகூபுக்கு மட்டும் தானா ?
 
 
12-08-2015 தற்போதைய ஆனந்த விகடன் இதழில் தண்டனை யாகூப்புக்கு மட்டும்தானா? என்ற தலைப்பிட்ட ஆக்கம் உண்மையிலேயே பத்திரிகை தர்மத்தை காப்பாற்ற இன்னும் ஒரு சில பத்திரிகை இருக்கவே செய்கிறது என நமக்கு உணர்த்துகிறது.
 
 சரணடைந்த ஒருவருக்கு அரசு சொல்லும் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் மரண தண்டனை என்றால்


*9,000 கோடி அளவிற்கு இந்திய பொருளாதாரத்தை சீரழித்த , நூற்றுக்கணக்கான உயிர்பலியை ஏற்படுத்திய மும்பை கலவரத்தை நான்தான் தொடங்கி வைத்தேன் என தனது சாம்னா பத்திரிகையில் வெளிப்படையாக எழுதிய பால்தாக்கரே வுக்கு கடைசி வரை தண்டனை கொடுக்காமல் பாதுகாப்பு கொடுத்த இந்திய நீதி துறையை காரி துப்புகிறது


*2002 ஆம் ஆண்டு வரலாறு காணாத இஸலாமியர் படுகொலையை ஏற்படுத்திய குஜராத் கலவரத்தை தூண்டியவர் யார் ? அவர்களுக்கு என்ன தண்டனை ?
கேட்கிறது செவிடனாய் இருக்கும் இந்திய நீதித்துறையை.


*2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் மாலேகான் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பை பற்றி அகப்பட்டுக்கொண்ட அசினாமந்தா வின் அத்தனை ஆதாரப்பூர்வமான பதில்களுக்கு பிறகும் ஏன் இன்னும் மரண தண்டனை விதிக்கவில்லை பிரக்யா சிங் பெண் ? சாமியாருக்கு ....


நாக்கை புடுங்கும் அளவிற்கு கேட்கிறது இந்திய நீதி துறையை



நாட்டில் நடந்த பெரும்பான்மையான அனைத்து வன்முறை வெறியாட்டங்களுக்கும் காரணமான ஆர்.எஸ்.எஸ் , வி.எச்.பி , பக்ரஜ்தள் போன்ற அனைத்தையும் ஏன் தடை செய்யவில்லை என நியாயமான அனைத்து கேள்விகளுக்கும் பதிலில்லை இந்திய நீதி துறையில் ...



நன்றி ஆனந்த விகடன்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
 
 http://www.adiraixpress.in/2015/08/blog-post_35.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+adirai+%28%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%29#.VcjrubUqMrc

Sunday, August 9, 2015

காக்கா வீட்டு பேரன்

சமீப காலங்களில் அண்ணலெம் பெருமானார் முஹம்மத் நபி ஸல் அவர்களின் தோழர்களின் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி அழகு பார்க்கும் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.உண்மையில் இது மிக மெச்சப்பட வேண்டிய ஒரு செய்தியாகும்.

முதலில் சஹாபாக்கள் என்போர் யார்? அவர்களின் தியாகங்கள் என்ன?போன்ற விஷயங்களை ,அவர்களின் உன்னதமான தியாகமான வரலாற்றை நாம் ஒவ்வொருவரும் இன்ஷா அல்லாஹ் படிக்க வேண்டும்,இதன் மூலம் நம் ஈமான் அதிகரிக்க வாய்ப்புண்டு.


நம் குழந்தைகளுக்கு சினிமா நடிகர்,நடிகைகளின் பெயரை வைத்து,அவர்களை,அந்தக் கூத்தாடிகளை நம் குழந்தைகளுக்கும்,நம் சமுதாயத்துக்கும் அறிமுகப்படுத்தி,சேவை செய்யும் சில தாய் தந்தையர் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்கள் திருந்தி,அப்பெயர்களை மாற்றி,தத்தம் குழந்தைகளுக்கு சஹாபாப் பெருமக்கள்,இமாம்கள் போன்றோர்களின் பெயர்களை  வைக்க வேண்டும்,தங்கள் குழந்தைகள் கூத்தாடிகளின் பெயர்களை தாங்கிக் கொண்டு திரியாமல்,அந்த அநாகரிக செயல்களுக்கு விளம்பரம் தேடித் தராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.இல்லையெனில்,சமுதாயத்தின் ஒழுங்கீனத்துக்கு அவர்கள் மறைமுக வேலை பார்க்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

சஹாபாப் பெருமக்கள்,இமாம்கள் பெயரை வைத்தால்,- அந்தக் குழந்தையின் பெயரை சொன்னாலே,அது அந்த உன்னத சஹாபியின் பெயர் நிழலாடி,அவர்களின் வரலாறு நினைக்க தோன்றும்,அல்லது அன்னவர்களின் வரலாற்றை படிக்கத் தோன்றும்.

என் காக்காஅவர்களுக்கு மகள் வழி பேரன் பிறந்திருக்கிறான்.மு ஆத் என பெயர் வைத்திருக்கிறார்கள்.அந்தப் பேரனை பார்க்கும் போதும்,கொஞ்சும் போதும் ,இயற்கையாகவே ரலி என்று சேர்த்து சொல்லவே மனம் நாடுகிறது,அத்துடன் அந்த சஹாபியின் வரலாறு நெஞ்சம் நனைக்கிறது,இன்னும் அவர்களின் வரலாறு படிக்கத் தோன்றுகிறது.இதன் மூலம்,அந்த உன்னத சஹாபியின் பெயர் மூலம்,அவர்களின் தியாகம் இன்னும் பரவ வழி ஏற்படுகிறது.இது கூட ஒரு சைகாலஜி போன்ற ஒரு விடயமாகவே நான் கருதுகிறேன்.



ஒரு நடிகனை,நடிகையை ,நம் பிள்ளைகளுக்கு பெயர் இட்டு,அவர்களின் கேவலமான வாழ்கையை விளம்பரப்படுதுவதன் மூலம்,அசிங்கமான செயல்கள் எல்லாம்,அங்கீகாரம் அடைந்து விடுகின்றன.இது சமுதாயத்தில் மறைமுக ஆபத்தை விளைவிக்கும்.

ஆனால்,இப்படி சஹாபாப் பெருமக்கள்,இமாம்களின் பெயர்கள் மூலம் ,அவர்களின் தியாகம்,ஒழுக்கம் நினைவு கூறப் பட்டு,சமுதாயம் சீர் படுகிறது.
எனவே,இது விஷயத்தில் நாம் கவனம் செலுத்தி,சஹாபாக்களின் மாண்புதனை இன்னும் உலகம் அறிய செய்வோம்,இன்ஷா அல்லாஹ்.


Saturday, August 8, 2015

அமெரிக்க அதிரை கூட்டமைப்பும் ,அதன் முக்கியத்துவமும்...

சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை அதாவது ஆகஸ்ட் இரண்டாம் தேதி,அமெரிக்க வாழ் அதிரைக் கூட்டமைப்பின் ஒன்று கூடல் ஒன்று கலிபோர்னியா மாநிலத்தின் வல்லெஹோ என்ற ஊரின் ஒரு பூங்காவில் நடந்தேறியது.

பொதுவான,ஒரு நிகழ்வாக அது நடந்து இருப்பின்,அதைப் பற்றிய செய்திகளை பரிமாறும் எண்ணம் வந்து இருக்காது.ஆனால்,அங்கு வந்து கூடி இருந்த மக்கள் அனைவரும் அதிரை மக்களின் மீதான ஒரு கரிசன உணர்வுடன் கூடிப் பேசி இருந்ததைக் கண்டவுடன்,பகிரவேண்டும் என்ற நல எண்ணம் ஏற்பட்டதில் வியப்பில்லை தானே.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு வாழும் அதிரை முஸ்லிம் மக்கள் அனைவரும் எவ்வித தெரு வேறுபாடும் இல்லாமல்,எந்த சங்கத்துக்கும் கொடி பிடிக்காமல்,ஒன்று பட்ட ஒரே அமைப்பாக இருக்கிறார்கள்.எந்த ஒரு தெருவுக்கும் இங்கு அமைப்புக்கள் இல்லை.அனைவரும் அமெரிக்கன் அதிரை போரம் என்ற அமைப்பின் கீழ் ஒற்றுமையாக செயல் பட்டுக் கொண்டுள்ளனர்.இது வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒரு அறிய நிகழ்வாகும்.

வளைகுடா நாடுகளில் உள்ள எந்த நாட்டையும் எடுத்துப் பார்ப்போம் என்றால்,அங்கெல்லாம்,முஹல்லாகள் முஹல்லாக்களாக பிளவு பட்டு,தெருவுக்கு ஒரு சங்கமாக பிரிந்து கிடக்கிறார்கள்.ஆஸ்திரேலிய,பிரிட்டன் போன்ற நாடுகளின் கதியும் இதுதான்.

குறிப்பிட்ட இந்த தெரு வாசிகளின் கூட்டம் நடை பெற உள்ளதால்,குறிப்பிட்ட அந்த தெரு வாசிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று விளம்பரங்கள் வருகின்றன.

ஆனால்,அமெரிக்காவின் நிலையே வேறு,இங்கு அதிரைவாசிகளே கலந்து கொள்ளுங்கள் என்றுதான் விளம்பரங்கள் வரும்.

அதேயே,கூட்டத்தில் ஒருவராக கலந்து கொண்ட சவூதி ஐடாவின் முன்னாள் தலைவர்,ஆபிதீன் காக்கா அவர்கள்,இதை ஒரு யுனிக் என்று குறிப்பிட்டு பாராட்டினார்கள்.

இன்ஷா அல்லாஹ்,இது இனியும் தொடர வேண்டும் என்பதே நம் அவாவும்,துவாவும். 

Friday, August 7, 2015

மரைக்காயர் பிரியாணி,அட-இது நம்ம பிரியாணி



NEW STORE OPEN IN CHENNAI

 சென்னை வாழ் அதிரையர் சுஹைப் இன்று அமைந்தகரையில் PERFUME GALLERY புதிய தொழில் நிறுவனத்தை இன்று மாலை தொடங்கியுள்ளார்

.இந்நிறுவனத்தில் அணைத்து வகையான வெளிநாட்டு வாசனை திரவியங்கள் ,சாக்லேட் வகைகள் ,பரிசு  பொருட்கள் ,கடிகாரங்கள் விற்கப்படுகிறது .

PLEASE SUPPORT


Monday, August 3, 2015

குர்ஆனை கற்றுக் கொள்ளட்டும், யூத அறிஞர்


“அவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும்” - இது இஸ்ரேல் நாட்டில் புகழ்பெற்ற  ஆர்த்தோடாக்ஸ் மதருகுருவான ( Rabbi Menachem Froman) ரப்பி மெனாகம் ஃபுரோமனின் அறிவுரை. அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை பார்த்துதான் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். இஸ்லாத்தின் ஆதார நூல்களைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததால்தான் அந்தத் துறை இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை வெளியீட்டு வருகிறது என்பதே ஃபுரோமனின் கருத்து.

இதற்க்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அந்த அதிகாரிகள் குறைந்தபட்சம் ஓராண்டாவது விடுமுறை எடுத்து குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும். இஸ்லாம் மாபெரும் ஆன்மீகக் கடல் என்பதையும் அதிலிருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது என்பதையும் அப்போது அவர்கள் விளங்கிக் கொள்வார்.

மேற்கத்தியர்களும் யூதர்களும் முஸ்லிம்களிடம் அவமரியாதையுடன் நடந்து கொள்வதே பிரச்சனைக்குக் காரணம். ஆணவத்தின் மொழியில் அவர்கள் பேசுகின்றனர். அவர்கள் அமைதியை விரும்பினால் முஸ்லிம்களை நெருங்கிச் சென்று அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஃபுரோமன்.

ரஷ்ய வார இதழான ‘எக்ஸ்பெர்ட்டு’க்கு அளித்த நேர்காணலில் 63 வயதான ஃபுரோமன் தனது கருத்துக்களை மனம் திறந்து வெளியிட்டுள்ளார். இவர் பலமுறை முன்பு யாசிர் அரஃபாத்தை சந்தித்து அமைதித் திட்டத்திற்காக முயன்றவர் என்பது குறிப்பிடதக்கது. அரசியல் தீர்வை விட  ஆன்மீகத் தீர்வைக் குறித்தே அவர் வலியுறுத்தி வந்தார். ஜெருசலம் யாருக்கு என்பதுதான் மோதலுக்கான முக்கியக் காரணம் என்பதால் அந்தப் புனித நகரத்தை யூத,கிறிஸ்தவ, இஸ்லாமியர் அனைவருக்கும் சொந்தமாக்கி உலகத்தின் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பது இவரது பரிந்துரை.

http://valaiyukam.blogspot.com/2015/08/blog-post_3.html

Tuesday, June 23, 2015

வேண்டுகோள்

அஸ்ஸலாமுஅலைக்கும் ( வரஹ்) அதிரையைச்  சேர்ந்த சகோததர் ஒருவர் அவர் சக்திக்கு மீறிய கடனில் இருக்கிறார். கடன் நெருக்கடி அதிகமாகிவிட்ட நிலையில் வேறு வழியற்று ஜகாத் கோருகிறார்
அவர் தன்னை வெளிக்காட்டி கொள்ளமுடியாத தர்மசங்கடமான நிலையில் கீழ் கானும் வங்கி எண்ணில் செலுத்தினால் அவர் கடன் அடைக்கப்படும். மேலும் கடன் போக இருக்கும் மீதமுள்ள பணத்தை தேவையுடையவர்களுக்கு அளித்துவிடுவார். இன்ஷாஅல்லாஹ்
State bank of India
Hidayathullah.ar
A/c No: 31824538849
Adirampattinam branch
Branch code: 14370
இயன்ற வரை சேர் செய்யுங்கள்
தகவல் உண்மை என்ற நிலையில், என் கணக்கு எண் கொடுத்து உதவுகிறேன்.
ஹிதாயத்துல்லாஹ். அர
8148480807

Monday, January 5, 2015

மக்களே! ஒரு உதவி வேண்டும்,இறை கூலி கிடைக்கும்!!

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1984 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் 'நீதி போதனையை' கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் என்.எஸ் ஜமால் முஹம்மது ( வயது 74 ). 'ஹஜரத்' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். பணியின் போது பள்ளி நிர்வாகம் வழங்கி வந்த சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்தி வந்தார். இவரது குடும்பம் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி தெருவில் அமைந்துள்ளது.

பணிபுரியும் காலத்தில் தினமும் முத்துப்பேட்டையிலிருந்து அதிரைக்கு பேருந்தில் வந்துவிட்டு செல்வார். அப்போது தான் பெற்றுவந்த சம்பளம் போதுமானதாக இல்லையென்றாலும், இருந்ததைக் கொண்டு சிக்கனமாக குடும்பம் நடத்தி வந்தார். எளிமையானவர் அனைவரிடமும் இன்முகத்துடன் பழகக்கூடியவர். தனது மாணவர்களை கண்டால் முதுகில் தட்டிக்கொடுத்து நலம் விசாரிப்பார்.

நீதி போதனை வகுப்பின் போது இவர் கூறும் 'இஸ்லாமிய வரலாற்று 'சம்பவங்கள்', தொழுகை குறித்து விளக்கங்கள், நபி ( ஸல்) வாழ்வில் நடைபெற்ற படிப்பினை சம்பவங்கள், ஒழுக்க நெறிமுறைகள் உள்ளிட்ட பலவற்றை சுவாரஸ்யமாகவும் எளிதாக புரியும்படியும் கூறுவதில் வல்லவர். வாரம் ஒரு முறை நடக்கும் நீதி போதனை வகுப்புக்காக மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதும் உண்டு. இவர் கற்பிக்கும் சூராக்களை முன்னாள் மாணவர்களிடம் ஒப்பிக்க சொன்னால் இன்றும் அப்படியே ஒப்பிப்பார்கள்.

இவரிடம் நீதி போதனைகளை கற்ற பல மாணவர்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். தாயகம் திரும்பிய பல மாணவர்கள் ஹஜரத்தை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் மரியாதையுடன் நலம் விசாரித்துவிட்டு செல்வதும் உண்டு.

இவர் தற்போது முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி பின்புறமுள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதங்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் இவருக்கு இருதய வால்வில் இரு இடங்களில் அடைப்பு உள்ளது எனவும், இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதன் பிறகு திடீரென ஒரு நாள் இவரது பேச்சிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பேச்சில் உளறல் ஏற்பட்டது. இதன் பிறகு தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது ஓரளவு பேசி வருகிறார்.

மூட்டு வலியுடன் அவதிப்படும் இவர் தற்போது முழு ஓய்வில் வீட்டில் இருந்து வருகிறார். நாற்காலியில் அமர்ந்துதான் தொழுது வருகிறார். பள்ளிவாசல் - வீடு ஆகிய இரண்டு இடங்களை தவீர வேற எங்கும் செல்வதில்லை. இவரது மனைவி சிறுவர் சிறுமிகளுக்கு குரான் ஓத கற்று கொடுத்து இதன் மூலம் பெரும் சொற்ப தொகையில் குடும்பம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்களும், நானும் ( சேக்கனா நிஜாம் ) ஹஜரத்தை கண்டு நலம் விசாரிப்பதற்காக முத்துப்பேட்டையில் உள்ள இவரது இல்லத்திற்கு நேற்று சென்றோம். இவரது நிலைமை அறிந்து வருந்தினோம். அப்போது தலைமை ஆசிரியர் மஹபூப் அலி சிறு தொகையை உதவியாக ஹஜரத்திடம் வழங்கினார்.

இவரது மருத்துவ சிகிச்சைக்காக நிதி தேவைப்படுகிறது. நம்மின் உதவியை எதிர்பார்த்துள்ளார். இவருக்கு நாம் தாராளமாக உதவுவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியை பெறுவோம்.

மேலதிக விவரங்கள் தொடர்புக்கு:
0091 9442038961 / 8220378051

நிதி உதவி கோரி ஹஜரத் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
N.S JAMAL MOHAMED
S/O. N.E. SHAHUL HAMEED
NO. 35,  MOHAIDEEN PALLI STREET
INDIAN OVERSEAS BANK
MUTHUPET BRANCH
SB A/c No. 122601000006760

குறிப்பு : ஹஜரத்துக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாகவோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள அலைப்பேசி  மூலம் தகவல் பெற்றுக்கொண்டு உதவலாம்.

சேக்கனா நிஜாம்

http://www.adirainews.net/2015/01/blog-post_10.html

Sunday, January 4, 2015

உடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா?

திறந்து கிடப்பதுதான் சிறந்தது என்றால்
அந்தச் சிறப்பு எம் பெண்டிர்க்குத் தேவையில்லை!

கணவன் காண வேண்டியதைக்
கண்டவனும் காண்பதுதான் சுதந்திரம் என்றால்
என் மனைவி அடிமையாகவே இருக்கட்டும்!

வரைமுறையற்று வாழ்வதுதான் பெண்ணியம் என்றால்
என் சகோதரிக்குப் பெண்ணியம் வேண்டாம்!

உடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா?
இல்லை என்பதற்கு அன்னை தெரசா அற்புதச்சான்று!

திறந்து கிடக்கும் பண்டத்தை
ஈக்கள்தான் மொய்க்கும்!

மூடித்திறந்த மலர்களையோ
தேனீக்கள் கூட்டம் மொய்க்கும்!

மேகம் மறைத்தால்தான் வானம் அழகு!
மோகம் மறைத்தால்தான் காதல் அழகு!

சிப்பிக்குள் இருப்பது முத்தின் அருமை!
அங்கம் மறைப்பதில்தான் பெண்ணின் பெருமை!

ஹிஜாப் என்பது அடிமைத்தனத்தின் அடையாளமல்ல;
அது ஓர் அருட்கொடை!

ஓராயிரம் கோடிப் பார்வைகளாயினும்
உட்புக விடாமல் காக்கும் கவசம்!

அபுல் ஹசன் R
9597739200

http://www.satyamargam.com/articles/arts/lyrics/2461-hijab-is-blessed-gift.html

ஐ.டி. நிறுவனங்களின் அக்கிரமங்கள்: இப்படி பண்றீங்களேம்மா!

 எல்லா கதைகளுக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். ஐ.டி நிறுவனங்களைப் பற்றி நான் முதலில் புரிந்துகொள்ளத் தொடங்கியது கல்லூரியின் நான்காம் வருடத்தில்தான்.

கேம்பஸ் இண்டர்வியூவுக்கு பல கனவுகளுடன் ஐ.டி நிறுவனங்களின் செயல்பாடு எப்படி? எந்தெந்த டெக்னாலஜியில் நம்மை வளர்த்துக் கொண்டால் உதவிகரமாக இருக்கும் என்றெல்லாம் நாங்கள் தேடித் தேடி படித்து வந்தோம். சரி, இப்போது இதுதான் நமது பாதை என்று ஆகிவிட்டது; இனி இந்த பயணத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் முன்பே சிலர் சிந்திக்கத் தொடங்கினர்.

கல்லூரி காலம் முடியும் முன்னரே நிறைய பேருக்கு நிறுவனத்தில் சேர்வதற்கான அழைப்புக் கடிதம் (Call Letter) வந்தது.

ஜூலை மாதத்தின் கடைசியில் வரிசை வரிசையாக நண்பர்கள் சேரத் தொடங்கினர். ஆகஸ்ட் மாதத்தில் எனது பயணமும் தொடங்கியது, ஆனால் கால் லெட்டருக்குக் காத்திருந்தபடியே சில நண்பர்கள் தங்கள் நாட்களை கடத்தினர்.

முதலில் 'நீங்க என்னடா அதுக்குள்ள வேலைக்கு சேர்ந்துடீங்க கொஞ்ச வாழ்க்கையையும் வாழுங்க' என்றெல்லாம் கேலி செய்து வந்தனர். நாட்கள் நகர நகர எனது ட்ரெய்னிங் முடிந்தது, ப்ராஜெக்ட்டிற்காக நான் காத்திருந்த நாட்களில் எனது நண்பன் அவனது கால் லெட்டருக்காகக் காத்திருந்தான்.

பெஞ்ச் படலம்

டிசம்பர் மாதம் ஐ.டி. நிறுவனங்களின் இலையுதிர் காலம் வெளிநாட்டில் எங்கும் கிறிஸ்துமஸ், நியூ இயர் கொண்டாட்டம் என்பதால் ப்ராஜெக்ட் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இருந்தாலும் தினந்தோறும் அலுவலகம் வந்தபடி வாய்ப்புகள் தேடிக் காத்திருந்தேன் நண்பர்களுடன்.

இந்தக் காத்திருக்கும் படலத்தின் பெயர் 'பென்ச்' (Bench). ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் ப்ராஜெக்ட்டும் கிடைத்தது. அன்றும் நண்பன் தனது ப்ராஜெக்டிற்காக காத்திருந்தான். கல்லூரியில் பயோ டெக்னாலஜி படித்த அவன் கேம்பஸ் இன்டர்வியூ'வில் மூன்று நிறுவனங்கள் நடத்திய இன்டர்வியூவையும் அசத்தி ஒரே நாளில் மூன்று வேலைகளை வாங்கினான். மூன்றில் ஒன்று எடுக்க வேண்டிய தருணம் அன்று.

ஐ.டி. நிறுவனத்தில் வேலைப் பார்க்கச் சென்றாலும் தான் படித்த படிப்பு வீண்போகக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். மற்ற இரண்டு நிறுவனங்களை காட்டிலும் 'அச்சில்' நிறுவனத்தில் சம்பளம் சற்று குறைவுதான் என்றாலும் தான் படித்த படிப்பை இணைக்கும் வகையில் ஐ.டி.யில் லைஃப் சயின்ஸ் பிரிவில் வேலைப் பார்க்கிற வாய்ப்பு என்கிற ஒரே காரணத்திற்காக, அச்சில் நிறுவனத்தில் வேலை செய்வதாக உறுதி கொடுத்தான். அவனுடன் சேர்த்து 2012 ஆம் ஆண்டு அச்சில் நிறுவனத்தில் வேலை கிடைத்த பலருக்கும் அந்த வருடத்தில் 'கால் லெட்டர்' வரவில்லை.

காலாவதியான கால் லெட்டர்கள்

நான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமானது. அப்போது வரை நிறுவனத்திலிருந்து அவனுக்கு எந்த பதிலும் கிடைக்காமல் இருந்தது. நாட்கள் காத்திருப்பை அதிகரித்துக் கொண்டே வந்தன. இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாதோ? என்கிற வருத்தம், நண்பர்கள் எல்லாம் வேலைக்கு போகும்போது என்னால் போக முடியவில்லையே என்ற விரக்தி, இன்று வந்திடுமோ நாளை வந்திடுமோ இப்படி ஐயத்திலே ஒவ்வொரு நாளும் காத்திருப்பில் கடந்தது.

அந்த வருடத்தில் கால் லெட்டர் கிடைத்த சிலருக்கும் கால் லெட்டர் வந்துவிட்டதால் உங்கள் அனைவருக்கும் வேலை நிச்சயம் என்று கிடையாது. 'ஒரு தேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் மெரிட் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். மற்றவர்களைப்பற்றி நாங்கள் பின்பு கூறுவோம்' என்று நிறுவனம் உரைத்த செய்தி அந்த வருடத்தில் சேர்ந்த பல ஊழியர்களை பாதித்தது.

இனிமேலும் காத்திருந்து என்ன நடக்கப் போகிறது? இந்த ஐ.டி'லாம் நமக்குப் பகல்கனவு தான். இனியும் காத்திருப்பதில் பயன் ஏதும் இல்லை என்கிற சிந்தையில் பேங்க் தேர்வு எழுதி வெற்றி பெற்று கிளெர்க்காக வேலைக்குச் சேர்ந்தான்.

சவுக்கடி மின்னஞ்சல்

நான்கு வருடம் பொறியியலை காதலுடன் படித்தவனுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைப் பார்க்கவில்லையே என்கிற வருத்தம். 2012 ஆம் ஆண்டு வேலைக்கு சேர வேண்டியவனுக்கு ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் கழித்து நிறுவனத்திடம் அழைப்புக் கடிதம் வந்தது:

'வாழ்த்துக்கள் நீங்கள் அடுத்த மாதம் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு இந்த வேலையில் சேர விருப்பம் இல்லை என்றால், உடனடியாக இரண்டு நாட்களுக்குள் சொல்லி விடவும்' என்று அக்கடித்தில் எழுதப்பட்டிருந்தது.

அதைப் படித்து அமைதியாக தான் எடுத்த முடிவு தான் சரி என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். இதே கடித்ததை பெற்ற என் தோழி ஒருத்தி இதைக் கண்டு வெகுண்டெழுந்தாள் 'ஒன்றரை வருடங்கள் ஆகிறது, எனக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்ததே மறந்து போச்சு. இன்று உங்கள் கடிதத்தை கண்டதும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் உங்களுக்காக வருடங்களாக காத்திருக்கிறோம்... உங்களால் உங்களது மெத்தனத்திற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்க முடியாதா? எத்தனை திறமைசாலிகளின் கனவை நீங்கள் உடைத்துள்ளீர்கள் என்று தெரியுமா? எவ்வளவு ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அது என்ன இரண்டு நாட்களுக்குள் பதிலை சொல்லு என்று கெடு விதிக்கின்றீர்கள்? எங்களது மின்னஞ்சல்களுக்கு பதில் சொன்னீர்களா? அழைப்புகளுக்கு பதில் சொன்னீர்களா? இருந்தாலும் நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன் 'பங்குச் சந்தையில் உங்கள் நிறுவனத்தின் நிலை என்னவென்று எனக்குத் தெரியும். மீண்டும் உங்களது பங்குகள் இறங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது; அப்படி கீழிறங்கும் பட்சத்தில் என்னைப் போன்றவர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கு நீங்கள் கொஞ்சமும் தயங்கமாட்டீர்கள் என்று நான் நன்கு அறிவேன். மனிதர்களை மதிக்கத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் நான் இப்போது வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனிதாபிமானமற்ற உங்கள் நிறுவனத்தின் வேலை எனக்கு நிச்சயம் வேண்டாம். இதை நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கொண்டு செல்லுங்கள், எனக்குக் கவலையில்லை' என்று சவுக்கடி வரிகளில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினாள்.

தமிழகத்தில் அமைந்துள்ள சேவை சார்ந்த ஐ.டி நிறுவனங்கள் பலவும் மனித உயிர்களை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்வதில்லை.

நாங்க இருக்கோம்

'ஆமாண்ணா.. இங்க வாங்க.. அவர் சொன்னத நாம எப்படி மூணு மாசத்துக்குள் முடிக்கறது? இதுல இருக்குற வேலையை பார்த்தா டெவெலப்மென்ட், டெஸ்டிங் எல்லாம் சேர்த்து குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகுமே!' என்று நண்பன் ஒருவரிடம் கேட்டான். அவர் 'இல்லைடா, அது மூன்று மாசம் இல்லை இன்னும் இரண்டு மாசத்துக்குள் முடிக்கணும். ஆமா, என்னை ஏன் நீங்க அண்ணான்னு கூப்படறீங்க? நானும் உங்க பேட்ச் தான், இந்த ப்ராஜெக்டல நாங்க மூணு மாசமா வேலை செய்யறோம். அப்பவே இத முடிக்க ஒரு வருஷம் ஆகும்ன்னு ஒருத்தர் சொன்னாரு. அது இப்போ தான் இவங்களுக்கு புரிஞ்சிருக்கு. இன்னும் இரண்டு மாசத்துல முடிச்சாகணும்னு புடுங்கறாங்க. நான் மூணு வாரமா இங்கயே இரண்டு மணி வரைக்கும் வேலை பார்க்கிறேன். சில சமயத்துல 48 மணி நேரம் தொடர்ந்து வேலைப் பார்க்கிற மாதிரி ஆகுது.. சன்டேவும் எங்களுக்கு விடுமுறை கிடையாது' என்றார்.

'இப்போ தான் இந்த வேலை முடிக்க ஆள் தேவைன்னு உங்களலாம் சேர்த்திருக்காங்க, காசாகும்.. ப்ராஜெக்ட் பட்ஜெட்ன்னு சொல்லி சீனியர்களையும் சேர்க்கல. இந்த மேனேஜர்க்கும் டெக்னிகலா எதுவும் தெரியல. எதாவது வடை சுட்டு முடித்துக் கொடுக்கிறோம்ன்னு வாக்கு கொடுத்திடராறு. அதுக்கு ஏற்ற மாதிரி ஆளுங்களையும் எடுக்கணும்.'

'சரி எதுக்கு பாஸ், இப்படிலாம் கஷ்டப்படறீங்க? உங்க பிரச்சினைய HR - Human Resource (மனிதவளம்) பார்வைக்கு கொண்டு போக வேண்டியதுதானே?' என்றேன்.

'பாஸ் அதுலாம் உங்களுக்கு தான் நான் பச்சை டாக் (Green Tag) போட்டிருக்கேன் உங்கள மாதிரி ப்ளூ டாக் (Blue Tag) போடலை. நாங்கலாம் டெம்ப்ரவரி வொர்க்கர். இங்க இரண்டு வருஷம் இப்படி வேலை பார்த்தாதான் இந்த மேனேஜர் ரெகமெண்ட் செய்து எங்களை பெர்மனேன்ட் ஆக்குவாறு!' என்று பதில் வந்தது.

ஏன் பாஸ் நீங்க இன்ஜினியரிங் படிக்கலியா? என்றேன். 'இல்லை பாஸ் நான் பீ.ஈ. கம்ப்யூட்டர் சைன்ஸ் தான். நான் ரூரல்ல (Rural) படிச்சேன் நான் படிச்ச கல்லூரியில கேம்பஸ் ப்ளேஸ்மென்ட் கிடையாது. வேலை தேடி அலைஞ்சி பாருங்க அப்போ உங்களுக்கு தெரியும் ஒரு வேலை வாங்கறர்து எப்படின்னு! நாங்கலாம் உங்களுடைய இப்போதைய லெவல் தொடுவதற்கு இரண்டு வருஷமாவது கடினமாக உழைக்கணும். அப்போ கூட இவங்க என்ன செய்வாங்கன்னு தெரியாது.

பரீட்சை எனும் வேலி

என் உறவினர் வேலை பார்க்கும் மற்றொரு பிரபலமான ஐ.டி நிறுவனத்தில் பி.எஸ்.சி படித்தவர்களை பொறியியளார்கள் பணியில் அமர்த்தி பணி நேரத்திற்கு பிறகு ட்ரெய்னிங் அளிக்கின்றனர். விடுமுறை நாட்களில் அவர்கள் புகழ்பெற்ற கல்லூரியில் ஆன்லைன் முறையில் தேர்வுகள் எடுத்து வார முடிவுகளில் வகுப்புகளில் பங்குபெற்று கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் முதுகலை படித்து முடிக்க வேண்டும். அப்படி படித்து முடித்தால் மட்டுமே அவர்களால் இருபதாயிரத்தை பார்க்க முடியும்.

பாட அமைப்பு அவர்களை குறைந்த பட்சம் மூன்று வருடமாவது படிக்க வைக்கும்படி அமைந்திருக்கும். மூன்றாம் வருடத்தின் இறுதியில் சுமார் அறுபது சதவீத மக்கள் தான் தேர்ச்சி பெறுவார்கள். மீதமுள்ளவார்கள் மீண்டும் படிக்க வேண்டும். அப்போது தான் நிரந்தரமாக்கப்படுவார்கள்.

இது ஒருவகையான நூதனமான திருட்டு இது. 'ஒரு மனித வளத்திற்கு குறைந்தது ஒரு லட்ச ரூபாய் வெளிநாட்டு வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் வாங்குகிறார்கள். அதுவும் பொறியியல் படித்து கேம்பஸ் இன்டர்வியுவில் வேலைக்கு வரும் ஊழியனுக்கு குறைந்தது இருபதாயிரம் அளிக்கப்பட வேண்டும் என்பதால் அவனுக்கு பதிலாக ஒரு பி.எஸ்.சி படித்தவனை எடுத்தால் பத்தாயிரம் கொடுத்தால் போதுமானது. அதுவும் இந்த முதுகலை படித்து முடிக்கும் வரை அவன் வேறு நிறுவனங்களைத் தேட மாட்டான். அதுவரை அவனுக்கு அளிக்கும் சம்பளமும் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தைத் தான் அளிக்கப் போகிறது என்கிற எண்ணம்.

ரிசோர்ஸ் கட் டவுனின் (Resource Cut Down) பின்புலம்

இந்த அநியாயங்களின் அடுத்த உச்சம் தற்போது தேநீர்சிஸ் நிறுவனத்தில் நடந்து வரும் ரிசோர்ஸ் கட் டவுன் (Resource Cut Down). தற்போது நிறைய பேரை வேலையை விட்டு நீக்கியதற்கு, அவர்கள் சரியாக வேலைப் பார்க்காத காரணத்தால் நிறுவனம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக கூறுகிறது. இது உண்மை தானா? சற்று உற்று நோக்குவோம்.

நீக்கப்பட்டவர்கள் யார்?

முதலில் வேலையில் ஒருவன் புதிதாக சேர்கின்றபோது அவனுடைய போஸ்ட் 'Trainee' எனப்படும். அதன் பின் படிப்படியாக அவன் நிறுவனத்திற்கு பங்களிக்கின்ற விதம், அவனது பதவியை மேல் எடுத்துச் செல்கிறது. இன்று தேநீர்சிஸ் நிறுவனத்தால் நீக்கப்பட்ட பலரும் இரு வகையில் விழுகின்றனர் ஒருவர் 'Trainee' மற்றொருவர் 'Associate Consultant'.

ப்ராஜெக்ட் கிடைப்பதற்காக மாதங்களாக காத்திருப்பவர்கள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பொதுவாக சிலர் ஏமாற்றும் எண்ணத்துடன் கிடைக்கின்ற ப்ராஜெக்ட்களுக்கு நொட்டை கூறி வேலை செய்யாமல் சம்பளம் வாங்கப் பார்ப்பதுண்டு. வேறு சிலர் நிறைய முயற்சிகள் எடுத்தும் ப்ராஜெக்ட் ஏதும் இல்லாத காரணத்தால் காத்திருப்பதும் உண்டு; இந்த இரண்டு பிரிவுகளில் உள்ளவரையும் கரிசனம் பார்க்காது நிறுவனம் வேலையைவிட்டு நீக்கியுள்ளது.

அடுத்ததாக consultant-களுக்கு வருவோம். யார் இவர்கள்? அடிப்படையாக ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்தவர்களால்தான் இந்த பதவியை எட்ட முடியும். இன்று நிறுவனம் இந்த மனிதர்கள் பலரை எப்படி தகுதியற்றவர் எனக்கூறி நீக்கியுள்ளது? இவர்கள் உண்மையிலே தகுதியற்றவர்கள் என்றால் எதற்காக இத்தனை ஆண்டுகள் இவர்களை நிறுவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

Associate Consultant பதவியில் இருப்பவர்கள் மாதத்திற்கு குறைந்தது ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இவர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு இவர்கள் இடத்தில் வேறொரு ஆளை புகுத்தி விட்டால் அவர்களுக்கு இருபதிலிருந்து, முப்பதாயிரம் வரை சம்பளம் கொடுத்தால் போதும். அதுவும் புதிதாக இணைந்துள்ளவர்களைப் பயன்படுத்தினால் இருபதாயிரம் கொடுத்தால் போதுமானது. இதுதான் ஐ.டி. நிறுவனங்களின் காஸ்ட் கட்டிங் (Cost Cutting) முறை.

'ஷாக்' விளைவுகள்

நண்பன் கூறுகையில், இப்போதெல்லாம் என் டீம் லீட் தினமும் வந்தவுடன் மெயில் எதாவது வந்ததா என்று கேட்கிறார். எல்லோர் மீதும் அவருக்கு நம்பிக்கை போய் விட்டது. வெளிநாட்டிலும் இதுதான் நடக்கிறது. இங்கே டிஸ்மிஸல் லெட்டரை கொடுத்து ஒரு மாத ஊதியம் கொடுத்து ஒரே நாளில் கிளம்பச் சொல்கிறார்கள், வெளிநாட்டில் ஒரு மாத கெடுவாம்.

அங்க ஃபாரின்ல இருப்பவர் தினமும் போன் பண்ணி ஏதாவது சொன்னாங்களா? என்று தான் முதலில் கேட்கிறார். பக்கத்து டீம்'ல காத்தால வந்தவர் சாப்பிட போய் இருக்காரு. வந்தவருக்கு ஹெச்.ஆர்.கிட்டேந்து ஒரு மெயில் 'உங்கள வேலையை விட்டு தூக்கறோம்ன்னு' அப்படியே ஷாக்காகி உட்கார்ந்தவர் சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பிட்டார்.

அநியாயம் பண்றாங்க இங்க நிறைய பேர் ஹவுசிங் லோன், அது இதுன்னு இறக்கி விட்டுறுக்காங்க. பேமிலி மேன் - எங்கள வேலையை விட்டு தூக்கிட்டா நாங்க குடும்பத்த எப்படி காப்பாற்றுவதுன்னு ஒவ்வொரு நாளும் கவலைபடறாங்க. இந்த இடம் இப்போ வேலைப் பார்க்குற இடம் மாதிரியே இல்லை. நாளைக்கு இவங்களோட ஹெல்ப் இல்லாம நாங்கல்லாம் எப்படி வேலைப் பார்க்க முடியும்?

எத்தனையோ வருடம் தேநீர்சிஸ் நிறுவனம் ஸ்டாக் மார்க்கெட்டில் பெரிய பெரிய லாபங்களை ஈட்டிருக்கு. அப்பலாம் அதுக்கு காரணமா இருந்த ஊழியர்களுக்கெல்லாம் ஊதியத்தை ஏற்றியா கொடுத்திருக்கு? நிறுவனத்திற்காக உழைத்தவர்களை Poor Performers என்று பொய்யாக பட்டம் கட்டி வேலையை விட்டு அனுப்புவது அநீதியானது.

தன்னுடன் இருப்பவர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும், தன் வேலை போகாமல் இருந்தால் சரி என்ற நோக்கத்துடன் பிற ஊழியர்கள் இன்னும் சுயநலமாக அமைதிகாப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.

வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்தே பழகிய முதுகெலும்புகள் இன்று ரப்பர் துண்டாக மாறி வருகின்றன. முதலாளித்துவத்தின் உச்சபட்ச பசிக்கு இன்று உணவுகள் கூடிக் கொண்டே போகின்றன. தீராப் பசிக்கு உணவாக - என்றுதான் உறைக்குமோ?

கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்று, சமூக சேவைக்கு லட்சக் கணக்கில் பணம் ஒதுக்குகிறார்கள். உங்களிடம் வேலை பார்ப்பவனும் சமுதாயத்தில் ஓர் அங்கம் தானே? அவனுடைய நல்வாழ்வுக்கு யார் சார் ரெஸ்பான்சிபிள்?

ஹரி, தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/article6741885.ece

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!