Monday, April 6, 2009

ஷிர்க் என்றால் என்ன? சமுதாயம் விழித்துக் கொள்ளத் துவங்கி விட்டது.தொடர் 6

ஒரு மனிதன் தனக்கும், அல்லாஹ்வுக்குமிடையில் தரகர்களை ஏற்படுத்திக்கொள்வதை அல்லாஹ் ஒரு போதும் விரும்புவதில்லை. இவ்வாறு தரகர்களை ஏற்படுத்திய ஒரே காரணத்திற்காகத்தான் அக்கால மக்கா முஷ்ரிகீன்களை நபி (ஸல்) அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். இக்காரணத்திற்காகவே அம்மக்களை காபிர்கள் என்று அல்லாஹ் கூறினான். ஏனெனில் அம்மக்கள் அல்லாஹ்வை நம்பி இருந்தனர். அல்லாஹ்தான் தங்களுக்கு உணவளிப்பவன் என்பதையும் ஏற்றிருந்தனர். அல்குர்ஆனின் 43:9, 43:87, 29:61, 31:25, 23:84, 23:86, 23:88, 10:31 வசனங்கள் இதனை நமக்கு தெளிவாக்குகின்றன. அல்லாஹ்வை நம்பியிருந்த அன்றைய மக்கள் காபிர்கள் என்று அழைக்கப் பட்ட காரணம், அவர்கள் அல்லாஹ்வை நேரடியாக அணுகமுடியாது! இடைத்தரகர்கள் வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததுதான்.

அவர்களிடம் இவ்வாறு நம்பும் நீங்கள் ஏன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கக் கூடாது என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள்: இவர்கள் அல்லாஹ்விடத்தில் எஙளுக்காகப் பரிந்து பேசுகின்றனர் எனக் கூறினார்கள் (அல்குர்ஆன்10:18)

இதே போன்றுதான் இன்றைய முஸ்லிம்கள் பலரின் பதிலும் இருக்கின்றது. அன்று வணங்கப்பட்டு வந்த சிலைகள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு வந்த நல்லோர்களின் உருவமேயாகும். நல்லோர்கள் இறந்துவிடுவார்களானால் அவர்களுக்கு சிலை செய்து வணங்கி வந்தார்கள் அன்றைய மக்கள். (அறிவிப்பவர்: ஆயிஸா(ரழி) நூல்: புகாரீ, முஸ்லிம்)

இன்று முஸ்லிம்களில் பலர் நல்லோர்கள் இறந்த பின் அவர்களுக்கு கப்ரு, தர்ஹா கட்டி அங்கே வழிபாடு நடத்தி வருகின்றனர். சிலை-கப்ரு என்று சொற்களில் தான் வேறுபாட்டைக் காண முடிகிறதேயன்றி மற்ற செயல்கள் எல்லாம் ஒன்றாகவே உள்ளன. கொள்கைகளும் ஒன்றாகத்தான் உள்ளன.

அவர்களிடம் கோவில்கள், இவர்களிடம் தர்ஹாக்கள். அங்கே சிலைகள் இங்கே கப்ருகள். அங்கே பூசாரிகள். இங்கே லெப்பை, சாப்புமார்கள். அங்கே தேர், இங்கே கூடு. அவர்களிடம் திருவிழாக்கள் இவர்களிடம் கந்தூரிகள்.அங்கேயும் உண்டியல்கள், இங்கேயும் உண்டியல்கள், இதற்கெல்லாம் மூல காரணமாக உண்டி வளர்ப்பதற்காக வைக்கப்பட்ட உண்டியல்கள்.

இப்போது சிறிது சிந்தித்து பாருங்கள். இந்நோக்குடன் கப்ருக்குச் செல்லும் முஸ்லிமிற்கும் இதே நோக்கத்தில் சிலைகளை வணங்கியவர்களுக்குமிடையில் ஏதாவது வேறுபாடு இருக்கின்றதா? அல்லாஹ் நம்மை அழைத்து, என்னை அழையுங்கள்! நான்தான் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவன். என்னைத் தவிர உங்கள் கஷ்டங்களை துன்பங்களைப் போக்கப் கூடியவன் யாருமில்லை என்று தன் திறுமறையில் பல இடங்களில் கூறி இருக்கும்போது, இவர்கள் செய்து வரும் ஷிர்க்கான செயல்களை அல்லாஹ் எப்படி மன்னிப்பான்?

உங்கள் இறைவன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழையுங்கள்! (நான் உங்களின் பிரார்த்தனைகளை) அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைபட்டவர்களாக நரகில் நுழைவார்கள் (அல்குர்ஆன்40:60)

இஸ்லாத்தின் பெயரிலே வயிறு வளர்க்கின்ற சில வேஷதாரி மெªலவிகளின் பித்தலாட்டத்தின் காரணத்தாலும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி ஷேக்மார்களின் சதிமோசத்தாலும் சமுதாயத்திற்குள் ஏராளமான ஷிர்க்கான செயல்கள் ஊடுருவி உருமாறி காட்சியளிக்கின்றன.

தங்களை காதிரி என்றும், ஷாதுலி என்றும் கூறிக்கொள்ளும் எத்தனையோ நய வஞ்சக ஷேக்மார்கள் சமுதாயத்தில் மலிந்து விட்டனர். இந்த வேடதாரிகளின் வேஷம் கலையக் கூடிய நாள் நெருங்கி விட்டது. சமுதாயம் விழித்துக் கொள்ளத் துவங்கி விட்டது.

உங்களைக் கடலிலும், கரையிலும் காப்பாற்றக் கூடியவன் நான்தான்.என்னை அணுகுவதற்கும், நான் உங்கள் துஆக்களை அங்கீகரிப்பதற்கும் யாருடைய உதவியும் சிபாரிசும் தேவையில்லை என்று அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான். ஆனால் இன்று முஸ்லிம்களில் சிலர் யாகுத்பா போன்ற தவறான பாடல்களை வணக்கமெனக் கருதி பயபக்தியோடு பாடி வருகின்றனர். இறந்து போனவர்களை அழைத்து என்னுடைய தலைவரே! எனக்கு அபயம் அளித்து உதவக்கூடியவரே! என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவரே! எதிரிகள் என்னைத் தாக்காமலிருக்க எனக்குப் பாதுகாப்பு அளியுங்கள். என்ற பொருள் கொண்ட கவிதைகளை மவ்லிது என்ற பெயரில் ஓதி வருகின்றனர். புதிய புதிய சினிமா மெட்டுகளில் நடத்தப்படும் இந்தக் கச்சேரிக்கு தலைமை தாங்குகின்ற போலி அறிஞர்கள் எத்தனை?

அந்தோ பரிதாபம்! அல்லாஹ்விடம் கேட்க வேண்டியவற்றை அல்லாஹ் அல்லாதவர்களிடம், அதுவும் இறந்தவர்களிடம் கேட்பது ஷிர்க்கா? இல்லையா? என்று சிந்தித்துபாருங்கள்! அல்லாஹ் ஏன் இணைவைத்தலை மன்னிப்பதில்லை என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இத்தகைய கொடிய பாவத்திலிருந்தும் விடுபட்டு, ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நில்லுங்கள்! பிறருக்கும் சொல்லுங்கள்! அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியில் நடத்திடப் போதுமானவன்.

S.கமாலுத்தீன் மதனி

THE END

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!