Monday, May 30, 2011

தலைகாட்டாமல் இருந்தால் ?

ஒரு நாளில் சில நிமிடங்களாவது வெயிலில் தலை காட்டாவிட்டால், வைட்டமின் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.மும்பையில் வசிப்பவர் குல்கர்னி. ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றும் இவர், காலையில் அலுவலகம் செல்லும் போது, "ஏசி' காரில் சென்று விடுவார். அலுவலகத்திலும், "ஏசி' அறையிலேயே இருப்பார்.

காலை முதல் மாலை வரை வெளியில் எங்கும் செல்லாமல், வெயிலில் தலை காட்டாமல் இருந்ததால், அவருக்கு சில வகையான வைட்டமின்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். "உங்களின் வழக்கமான பணிகளில் மாற்றத்தை உண்டாக்குங்கள். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம், சில நிமிடங்களாவது உடம்பில் வெயில்படும்படி பார்த்துக் கொள்ளுங்கள்' என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.இதேபோல், "வெயில் படாமல் நிழலிலேயே இருக்கும் பலரும், உடம்பில் முக்கியமான வைட்டமின்கள் பற்றாக்குறையால், சில வகையான நோய் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுகின்றனர்' என, அரசு சாரா அமைப்பு ஒன்றின் துணைத் தலைவராக இருக்கும் டாக்டர் ஷியாம் பிங்கிள் தெரிவித்துள்ளார்.

டி அல்லது டி3 சத்துக்கள் : அவர் மேலும் கூறியதாவது:நாம் வெப்ப மண்டல நாட்டில் வசிக்கிறோம். இங்கு சூரிய வெளிச் சத்திற்கு பற்றாக்குறை இல்லை. இருந்தாலும், பலர் சூரிய ஒளி மூலம் பெறக்கூடிய வைட்டமின்களான, டி அல்லது டி3 பற் றாக்குறையால் அவதிப்படுகின்றனர். அதற்கு காரணம் வெயிலில் தலை காட்டாததே. ஒருவருக்கு எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் எனில், இந்த வைட்டமின் டி அல்லது டி3 சத்துக்கள் அவசியம். மும்பையில் பெரிய அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளின், 75 சதவீதம் பேர் வைட்டமின் சத்துக்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வைட்டமின் பி12 மற்றும் டி சத்துக்கள் அவர்களின் ரத் தத்தில் போதிய அளவு இல்லை. அதனால், உணவுப் பழக்கத்திலும், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைக் கொண்டுவர வேண் டும். அத்துடன், ஒரு நாளில் சில நிமிடங்களாவது உடம் பில் வெயில் படும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, காலை நேர வெயில் உடம்பில் பட்டால் நல்லது.இவ்வாறு ஷியாம் பிங்கிள் தெரிவித்துள்ளார்.இதே போன்ற கருத்தை, வேறு பல மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.



Sunday, May 29, 2011

மாணவர்களே! சலுகைகளைப் பெறத் தவறாதீர்கள்!

கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்வி மற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய‌, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவ சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சில வருடங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டங்கள், சரியான அளவில் எல்லா மக்களின் கவனத்திற்கும் இன்னும் சென்றடையவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மை! எனவே இந்தக் கல்வியாண்டிலாவது நம‌க்கு இயன்றவரை நம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுதியுடைய மாணவர்களை பயனடையச் செய்வோம்.


கல்லூரி மாணவர்களுக்கான‌ உதவித் தொகைகள்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை/அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 10 வகையான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன‌.

மாணவிகளுக்கு: முதுநிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களின் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விவசாயிகள் பிள்ளைகள்: இத்திட்டத்தின் கீழ், இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் பிள்ளைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,750 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை ஆவணத்துடன் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குந‌ர்களுக்கு எழுதி அனுப்பவேண்டும். இவர்களின் அலுவலகங்கள் சென்னை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ளன.

படை வீரர்களின் பிள்ளைகள்: பாதுகாப்புப் படை வீரர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குன‌ருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம். முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், அனைத்து வகையான பட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். பணிக் காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு, விடுதிச் செலவுகளும் வழங்கப்படுகின்றன. இவை கல்லூரிக் கல்வி இயக்குநர் மூலம் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர்களின் பிள்ளைகள்: முதுநிலைப் பட்டப் படிப்புகள், எம்.பில்., பி.எச்டி. படிக்கும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம்.

வகுப்பு வாரியாக: இது தவிர, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மூலம், அந்தந்த நலத்துறைகளின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் கீழ் உதவித்தொகைப் பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ஒரே பெண் குழந்தை: தவிர, குடும்பத்தின் முதல் பட்டதாரி/ஒரே ஒரு பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகையைப் பெற சேப்பாக்கத்தில் உள்ள பி.சி./எம்.பி.சி. நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும், ஒரு மாணவர் ஒரு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் மட்டுமே பெற முடியும். இது தொடர்பாக மேலும் விவரங்களை அறியவும், உதவித் தொகைகளைப் பெறுவதில் ஏதேனும் பிரச்ச‌னை இருந்தாலோ அது குறித்து ஆலோசனைப் பெறவும்,

தொலைபேசி எண்கள்: 044 -28271911/6792/28212090 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இலவசக் கல்வி:

குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும்போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை சென்ற கல்வியாண்டில் பிறப்பிக்கப்பட்டது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும்போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், 'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்விப் படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்' என சென்ற வருடம் ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ/மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக்கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் ஏற்கனவே சேர்ந்து படித்துவரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களைச் சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

'குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை' என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்கவேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெறவேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்த‌து.

குறிப்பு: மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இவை அனைத்தும் பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து சேகரித்து தொகுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் உள்ள இந்த தகவல்களைப் பார்க்க முடியாத/அறிய வாய்ப்பில்லாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு, அவரவர்களுக்கு முடிந்தவரை இந்தச் செய்திகளை கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
http://payanikkumpaathai.blogspot.com/2011/05/blog-post_14.html

Tuesday, May 24, 2011

இட ஒதுக்கீடு அதிகரிப்பு - அரசு நடவடிக்கை


தமிழகத்திலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 3,049 பயணிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.


அரசின் மானியம் பெற்று ஆண்டுதோறும் ஹஜ் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான, குலுக்கல் சென்னை, ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா குலுக்கலைத் துவக்கி வைத்தார். இந்திய ஹஜ் குழு துணைத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். அரசு செயலர் சந்தானம், சிறுபான்மையினர் நலத்துறை உறுப்பினர் செயலர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹஜ் பயணம் செல்ல ஏழு குழந்தைகள் உட்பட, 10 ஆயிரத்து 465 பேர் விண்ணப்பித்து இருந்தனர். குலுக்கலில் 3,049 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், 70 வயதுக்குப் மேற்பட்டோர், ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்து மூன்று ஆண்டுகளாகக் காத்திருப்பவர்கள் என 981 பேர் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுக்கு மாநில அளவிலான காத்திருப்போர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டோர் விவரத்தை www.hajcommittee.com மற்றும் www.hajjtn.org ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மதுரையிலிருந்து நேரடி விமானம்: இந்த ஆண்டு முதல் மதுரையிலிருந்து ஹஜ் செல்ல, நேரடி விமான சேவை துவங்க உள்ளதாக, இந்திய ஹஜ் குழு துணைத் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியது: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து விமானத்தில் செல்வதால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, மதுரையிலிருந்து நேரடியாகச் செல்ல விமான சேவை துவங்கப்பட உள்ளது. இதேபோல், ஆந்திர மாநிலம் ராய்ப்பூரிலிருந்தும் ஹஜ் செல்ல, நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளது. உடமைகளைக் கொண்டு செல்வதற்கு, ஹஜ் குழு இலவசமாக பெட்டிகளை வழங்குகிறது. புதுச்சேரி, அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் ஹஜ் ஹவுஸ் கட்ட மத்திய அரசு 2 கோடி ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: "ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதால், தமிழக ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்' என பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "தமிழக ஒதுக்கீட்டை அதிகரிக்க முதல்வர் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Monday, May 23, 2011

"கார்பன் கூட்டாளி"

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் பெரிதும் வியந்த பதிவர்களில் ஒருவர் சகோதரர் "கார்பன் கூட்டாளி" அவர்கள். http://carbonfriend.blogspot.com/

அறிவியல் கருத்துக்களை ஆன்மீகத்தோடு சேர்த்து ஆணித்தரமாக விளக்குவதில் வல்லவர் (உயிரியலில் முதுகலை பட்டம் பெற்றவர்). என்னுடைய பரிணாம கட்டுரைக்களுக்கு உறுதுணையாக இருப்பவர். 

அவருடைய தளத்தை பார்க்காதவர்கள், நான் மேலே கொடுத்துள்ள லிங்கை பயன்படுத்தவும். உங்களுக்கு அவருடைய முயற்சிகள் பிடித்திருந்தால் நீங்கள் அறிந்த மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ் 

அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி ஆடுதுறை - திருமங்கலக்குடி தஞ்சை மாவட்டம்

BE - Mechanical EngineeringBE - Civil EngineeringBE - Electronics & Communication EngineeringBE - Computer Science EngineeringBE - Electrical and Electronics Engineering

NO DONATION

* அனுபவமிக்க பேராசிரியர்கள்
* சென்னை போன்ற நகர்புற கல்லூரிகளுக்கு இணையான  
தரமான கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் 
* இயற்க்கை எழில்மிக்க காற்றோட்டமான சுற்றுச்சூழல்
* ஆண் பெண் இருபாலாருக்கும் தனி தனி விடுதி வசதிகள்
* இருபாலாருக்கும் தனி தனி தொழுகை கூடங்கள்
* அருகில் உள்ள ஊர்களுக்கு வாகன வசதிகள்
* மாணவர்களுக்கு கூடுதலாக நல்லொழுக்க பயிற்சி 
மற்றும் Spoken Englishவகுப்புகள்
* விளையாட்டில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை புரியும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு சலுகைகள் 

* தரமான மற்றும் சுகாதாரமான உணவகம்
* மற்றும் பல
-- 

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:ஷாஜஹான் - 9965904553
காரல் மார்க்ஸ் - 9965904550
மெஹ்பூப் - 9894987984
Office: 0435- 2473355, 2473354,2472444,2470444
Website: www.as-salamcollege.com
Email: ascet.aduthurai@gmail.com

Sunday, May 22, 2011

மரண அறிவிப்பு.

புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அமைச்சரவையின் ஒரே முஸ்லிம் அமைச்சர் மரியம் பிச்சை அவர்கள் கார் விபத்தில் மரணமடைந்தார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.


 திருச்சி பெரம்பலூர் மெயின்ரோடு, பாடாலூர் அருகே அவரது கார் வந்துகொண்டிருந்தது. அப்போது அவரது கார் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.இந்த விபத்தில் மரியம் பிச்சை மரணம் அடைந்தார். 

Wednesday, May 18, 2011

விழித்துக்கொண்ட முஸ்லிம்கள், அலறும் அரசியல் கட்சிகள்

அசாம் மற்றும் கேரளா சட்டசபை தேர்தலில், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் முஸ்லிம் மக்கள், மதம் சார்ந்த கட்சிக்கு இம்முறை ஓட்டளித்திருப்பது, முன்பு எப்போதும் நடக்காதது என்று, அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில், மவுலானா பத்ருதின் அஜ்மல் குவாஸ்மி தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, 75 இடங்களில் தனித்து போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில், குனாலிகுட்டி தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 24 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது. அசாமில், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அளவிற்கு, அதிக இடங்களில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும், இக்கட்சிகள், அதிகாரம் படைத்த கட்சிகளாக, இம்முறை உருவெடுத்துள்ளன.


முஸ்லிம் சமுதாய கட்சிக்கு, அந்த சமுதாயத்தினரின் ஓட்டு என்ற நிலை உருவாகியுள்ளது. அசாமில் முஸ்லிம்கள் 30 சதவீதமும், கேரளாவில் 25 சதவீதமும் உள்ளனர். வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து, இச்சமுதாய மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும், இக்கட்சி தலைவர்கள், அதிகளவில் கவனம் செலுத்தி உள்ளனர்.இந்த மாநிலங்களுக்கு மாறாக, மேற்குவங்கத்தில், எப்போதும், இடது சாரி கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வந்த முஸ்லிம்கள், சமீபத்திய தேர்தலில், திரிணமுல் தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டுகளை அளித்துள்ளனர். அதேசமயம், அசாம் மற்றும் கேரளா தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி, அதிகளவில் விளம்பரம் செய்தால், இந்த மாநிலங்கள், தவறான முன் உதாரணங்களாக மாறிவிடும் என்று அரசியல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பீகார் மாநிலத்திலும், முஸ்லிம்கள் அதிகம். கடந்தாண்டில், அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஓட்டுகள் அனைத்தும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பக்கம் சாய்ந்தன. இதே நிலைமை தான் இம்முறை மேற்குவங்கத்திலும் பிரதிபலித்துள்ளது.



அதேபோன்று தமிழகத்திலும் முஸ்லிம்களின் பாரம்பரியமான் திமுக ஒட்டு வங்கியை மனித நேய மக்கள் கட்சி உடைத்து,அதிமுக அணிக்கு பெற்றுத்தந்ததால் திமுக தோற்றுப்போனது என்ற திமுகவின் புலம்பலும் கவனிக்கத் தக்கது.

விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்பதை முஸ்லிம்கள் இந்திய அளவில் நன்கு உணரத்தொடங்கியுள்ளனர்.இது ஒரு நல்ல முன்னேற்றம்.

Tuesday, May 17, 2011

வரும் 24ம் தேதி ஹஜ் குலுக்கல்

 தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள, 10 ஆயிரத்து 470 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றுக்கான குலுக்கல், வரும் 24ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு ஹஜ் கமிட்டியிடம், இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள, 10 ஆயிரத்து 470 பெரியவர்கள் மற்றும் ஏழு கைக்குழந்தைகளுக்கு விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்து, ஹஜ் செல்லும் பயணிகளை தேர்ந்தெடுக்க, வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் உள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கில் நடக்க உள்ளதாக, ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

Sunday, May 15, 2011

செல்லாத ஓட்டு

  “இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை (வாழ்க்கை நெறியை) எவரேனும் விரும்பினால் (அது) ஒரு போதும் அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.” (அல்குர்ஆன் 3:85)

Friday, May 13, 2011

மாமிசம் இலவசம்


ரிக் வேதம் பசு புனிதமானது என்று கூறுகிறது. புனிதமானபடியால் யாகங் களில் அது வாளால் அல்லது கோடரி யால் வெட்டப்பட்டுக் கடவுளுக்கு நெய்வேத்தியமாக அளிக்கப்பட்டது. கடவுள் நெய்வேத்தியத்தைப் பிரசாத மாக பிராமணர்களும் சரி, பிராமணர்கள் அல்லாத ஜாதி இந்துக்களும் சரி பக்தியுடன் சாப்பிட்டனர்.

இதை தைத்தீரிய பிராமணா என்ற வேத நூல் தெளிவாகக் கூறியுள்ளது. இது மட்டுமின்றி, வீட்டிற்கு விருந்தாளி வந்தால் அவருக்கு கோ உணவு அளிக்க வேண்டும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அவ்வாறே விருந்தாளி கள் வேத காலங்களில் கவுரவப் படுத்தப்பட்டனர்.

ஆரியர்களின் ஆகப் பெரிய ரிஷி யாகிய யாஜன வல்கியார் கூறுகிறார்:

நான் அதைச் சாப்பிடுகிறேன். ஆனால், அது இளசாக இருக்க வேண்டும்.

இந்துக்கள் கோ மாமிசம் சாப்பிட்டு வந்ததைப் புத்த சூத்திரங்கள் தெளி வாகக் கூறுகின்றன. பசுக்களும் இதர பிராணிகளும் ஏராளமாகக் கொல்லப் பட்டன. இவை அனைத்தும் சமயச் சடங்குகளாகக் கருதப்பட்டன என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய இந்தியாவில் இந்துக்களை மாமிச பட்சிணியாகவும், காய்கறி உணவு உண்பவர்களாகவும் பிரித்தால் மட்டும் போதாது. மாமிசம் உண்ப வர்களை, மாட்டு மாமிசத்தைத் தவிர வேறு மாமிசங்களை உண்பவர்கள் என்றும், மாட்டு மாமிசம் உண்பவர்கள் என்றும் பிரிக்க வேண்டும். உணவு அடிப்படையில் இந்துக்களைப் பிரித்தால் பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார், துண்டாப்படாதவர் எனலாம். ஆனால், வேதங்கள் கூறும் நான்கு வர்ணங்களுக்கு இது ஒத்துவராது. எனினும், எதார்த்த நிலையை உண்மையில் எடுத்துக் காண்பிக்கின்றது.

ஒரு காலத்தில் எல்லோருமே மாட்டு மாமிசம் சாப்பிட்டு வந்தனர். பிராமணர் மாட்டு மாமிசத்தை உண்ணுவதை விட்டுவிட்டனர். பிறகு எந்த மாமிசமும் சாப்பிடுவதை விட்டுவிட்டு, காய்கறி உணவு மட்டும் சாப்பிடத் தொடங்கினர். ஆனால், பிராமணர் அல்லாதவர் மாட்டு மாமிசம் சாப்பிடுவதை விட்டனரே தவிர, மீதியுள்ள மாமிசங்களைச் சாப்பிட்டு வந்தனர்.

அஸ்வமேத யாகம் போல், பசு யாகம் செய்த போதெல்ம் பிராமணர் அந்த மாமிசங்களைச் சாப்பிட்டு வந்தனர். உண்மையில் ஏறத்தாழ தினசரி பிராமணர் பசு மாமிசம் சாப்பிட்டு வந்தனர். பிராமணர் குருமார்கள் ஆன படியால், பிராமணர் அல்லாதார் எல்லாச் சடங்குகளுக்கும் பிராமணர்களை அழைத்து வந்தனர்.

எல்லாச் சடங்குகளி லும் கலந்து கொள் ளும் பிராமணர் களுக்குத் தினசரி இலவச மாகவே மாமிசம் கிடைத்தது. இந்த வசதி பிரா மணர் அல்லாதவர் களுக்கு கிடைக்க வில்லை. உபநிஷத் துக்கள் கோ மாமிசம் சாப்பிடுவதை நியா யப்படுத்தின; கட்டா யப்படுத்தின. அப்படியானால், கோ மாமிசம் சாப்பிடுவதைப் பிராமணர் எப்பொழுது கைவிட்டனர்? ஏன் கைவிட்டனர்? என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.

புத்த மதத்திற்கும் பிராமணீயத் திற்கும் ஏறத்தாழ 400 ஆண்டுகள் கடுமையான சண்டைகள் நடைபெற்று வந்தன. புத்தமதம், மக்களை மிகவும் கவர்ந்தது. கடவுள் இல்லை என்பதும் பொருள் முதல்வாதமும் மக்களின் சமயமாக ஆயின. அசோக மன்னனே பவுத்தத்தைப் பெரிதும் ஆதரித்தவன்.

பிராமணர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற பெரும் முயற்சி செய்து வந்தனர். பவுத்த மதம் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டதால், அதே மதத்தைப் பிராமணர்களும் கடுமையாக பின்பற்றத் தொடங்கினர். புத்தர் இறந்த பின், பவுத்தர்கள் புத்தக் கோவில்களைக் கட்டினர். பிராம ணர்களும் கோயில்களைக் கட்டினர். ஆனால், அவைகளில் சிவன், விஷ்ணு, இராமர், கிருஷ்ணன் விக்கிரகங்களை வைத்தனர். இதன் நோக்கம் ஒன்றே; புத்தர் கோவில்களுக்குச் செல்லும் மக்களைத் தங்கள் கோவில்களுக்கு ஈர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு தான் கோவில்கள் ஏற்பட்டன. பிராமணீயத்தில் கோவில்கள் கிடையாது.

பவுத்தர்கள், பார்ப்பனர் சமயத்தை எதிர்த்தனர். குறிப்பாக யாகத்தையும், யாகத்தில் குதிரை, பசு முதலியவற்றைக் கொல்வதையும் கடுமையாக எதிர்த்தனர். பசுக் கொலை எதிர்ப்பைப் பெரு வாரியான சாதாரண மக்கள் பெரிதும் வரவேற்றனர். காரணம், விவசாயத் திற்கு மாடுகள் மிகத் தேவையான தாலும் பெருவாரியான மக்கள் விவசாயிகளானபடியாலும், மாட்டைக் கொலை செய்வதை அவர்கள் விரும்பவில்லை. பிராமணர்கள் மீது வெறுப்பு இவ்வாறு அந்தக் காலத்தி லிருந்துதான் ஏற்பட்டது. இதைச் சமாளிக்கும் பொருட்டு பிராமணர்கள் யாகத்தையும், பசுவை யாகத்தில் கொல்வதையும் கைவிட்டனர்.

இது மட்டுமன்றி பவுத்த பிக்குகள் செல்வாக்கிலிருந்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கப் புலால் மறுத்து. எந்த மாமிசமும் தின்பவர்கள் அல்லர் என்றும் தாங்கள் காய்கறிகள்தான் உண்பவர்கள் என்றும் வெளிப்படுத்தத் தொடங்கினர். இவ்வாறுதான் மாமிசப் பட்சிணியாக இருந்த பிராமணர்கள் காய்கறி மட்டுமே தின்னும் சாகப் பட்சிணியாகத் தொடங்கினர்.

இது ஒருபுறமிருக்க, உடைந்த மனிதர்கள் கோமாமிசம் தின்பது தீண்டாமைக்கு ஏன் இட்டுச் செல்ல வேண்டும்? பிராமணர்களும் பிரா மணர் அல்லாதவர்களும், கோமாமிசம் சாப்பிடுவதை விட்டபின், உடைந்த மனிதர்கள் மட்டும் கோமாமிசம் சாப் பிடுவது புதிய சூழ்நிலையை ஏற்படுத் தியது.

கோமாமிசம் சாப்பிடாதவர்கள், பசு பவித்திரமானது; அதைக் கொல்லக் கூடாது; பசு மாமிசம் சாப்பிடுகிறவர்கள் சண்டாளர்கள் என்று கூறத் தொடங் கினர். அகவே, உடைந்த மனிதர்கள் கோமாமிசம் சாப்பிட்டு வந்தால் அவர்கள் சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டனர்.

ஆகவே, உடைந்த மனிதர்கள் கோமாமிசம் சாப்பிட்டு வந்த காரணத்தால், தீண்டப்படாதவர்கள் என்ற நிலை ஏற்பட்டது என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

(மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து)

--------- விடுதலை ஞாயிறு மலர், 07-05-2011

Tuesday, May 10, 2011

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிடுவீர்!


அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக!

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை, வாத்தியாப் பள்ளித் தெரு, எண் 1, ஃபாத்திமா நகர் முகவரியில் வசிக்கும் திருமதி ஏ.கே. மைமூன் பீவிஅவர்களின் கீற்று வேயப்பட்ட வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08.05.2011) நண்பகல் 1:30 மணியளவில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று தீப்பிடித்து மளமளவென்று வீடு முழுவதும் பரவியது.
PNO House Fire 08.05.2011 6.jpg
வெறும் சுவர்கள் மற்றும் மண் பாத்திரங்கள் போன்றவற்றை மட்டும் விட்டுவிட்டு வீட்டில் உள்ள பீரோக்கள், அலமாரிகள், கட்டில், மெத்தை, தொலைக்காட்சி பெட்டி, எமர்ஜென்சி விளக்கு, மின்விசிறிகள், டேபிள் ஃபேன், ரேடியோ, கிரைண்டர், மிக்ஸி, கதவுகள், ஜன்னல்கள், சுவிட்சு பெட்டிகள், எலெக்ட்ரானிக் மீட்டர், சைக்கிள், டேபிள், நாற்காலிகள், துணிமணிகள், உணவுப் பொருட்கள், கூரை, கீற்று, மூங்கில்கள் என அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் தீ தின்று தீர்த்து விட்டது.

இத்துடன் வீட்டை சரி செய்வதற்காக கடனாக வாங்கி வைத்திருந்த 55,000 ரூபாய் ரொக்கப் பணம், பொருட்கள் வாங்கிக் கொடுப்பதற்காக வைத்திருந்தநான்கு ரேஷன் (குடும்ப) அட்டைகள்குழந்தைகளின் காது நகைகள் (சுமார் 1 பவுன்)என அனைத்தையும் நெருப்பு தின்று விட்டது. 

சிறுகச் சிறுகச் சேமித்து குடும்பத் தேவைக்காக வைத்திருந்த இந்தப் பொருட்களின் மதிப்பு ஏறக்குறை 5 இலட்சத்திற்கும் அதிகம். இதற்கெல்லாம் மேலாக வீட்டில் உள்ளோர் உடுத்தியிருந்த துணிகள் மட்டுமே மிஞ்சியது. மாற்றுத் துணிகள் ஒன்றுகூட இல்லாமல் அனைத்தும் தீயில் கருகிவிட்டது.
PNO House Fire 08.05.2011 1.jpg
கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஒரு மகனார், அவரின் மனைவி, இரண்டு சிறு பிள்ளைகள் (ஒரு பெண் பிள்ளை வயது 5 மற்றும் ஒரு ஆண் பிள்ளை வயது 4), ஒரு விதவை மகள் (வயது 40) என ஆறு நபர்களின் உயிர்கள் மட்டுமே இந்த சம்பவத்தில் தப்பித்தவை. 

அனைத்தையும் இழந்து நிற்கும் அந்த ஏழைக் குடும்பத்திற்கு உறவினர்கள், ஊர்க்காரர்கள் உட்பட பலர் பல விதங்களில் ஆறுதல் சொல்லி தேற்றினாலும் நாளைய வாழ்விற்கு வழித் தெரியாமல் கலங்கி நிற்கிறது அந்த குடும்பம்.

எனவே, இந்தத் தகவலை வேண்டுகோளாக ஏற்று உள்நாட்டிலும், வெளிவாட்டிலும் வாழும் நல்லுள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள், அமைப்புகள், இயக்கங்கள், அறக்கட்டளைகள், நற்பணி மன்றங்கள், சங்கங்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு பொருளாகவோ, பணமாகவோ அன்பளிப்பாக வழங்கி அந்த ஏழைக் குடும்பத்தின் கண்ணிரை துடைத்திடுமாறும், குடியிருக்க வீடும், குடும்பம் நடத்தத் தேவையான பொருட்களும், உடுத்திக் கொள்ள துணிமணிகளும் வழங்கி அவர்கள் வாழ வழி செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியில் நேரிடையாகவோ அல்லது தொலைபேசி மற்றும் அஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும், இந்தக் குடும்பத்தின் செய்தியை பிறருக்கும் எடுத்துரைத்து அவர்களும் இந்த நற்காரியத்தில் பங்கெடுக்க வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

நன்றி. வஸ்ஸலாம்.

திருமதி ஏ.கே. மைமூன் பீவி
எண் 1, ஃபாத்திமா நகர்,
வாத்தியாப் பள்ளித் தெரு,
பரங்கிப்பேட்டை - 608502,
கடலூர் மாவட்டம். 
அலைபேசி: (+91) 9894342457

வங்கிக் கணக்கு விபரம்:
A/c # : 007101000018803
Bank: Indian Overseas Bank
Branch: Portonovo - 0071
District: Cuddalore

மேலதிக விபரங்களுக்கு...
ஏ.கே. அப்துல் பாரீ (அண்ணன்) (+91) 9003608064
எஸ். அப்துல் ஹமீத் (மச்சான்) (+901) 9944030796
ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் (மகன்) (+91) 8870159878
ஏ. லியாகத் அலீ (தங்கை மகன்) (+91) 9597783844

அன்புடன்,
மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,
பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic).
(தற்போது பரங்கிப்பேட்டையில் நிகழ்விடத்திலிருந்து...)

Monday, May 9, 2011

முதல் அடி

அயோத்தி பிரச்னையில் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரிப்பதற்கான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.




மேலும், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு "புதிரானது" என்றும் கருத்து தெரிவித்துள்ளது.


"இடத்தை பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோரவில்லை. இந்நிலையில், எவரும் கோராத வகையில் புதிய தீர்வினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியது ஆச்சரியமாகவும் உள்ளது." என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.



அயோத்தியில் ராம ஜென்ம பூமி அமைந்துள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, நிர்மோகி அகாரா, அகில பாரத இந்து மகா சபா, ஜமாத் உல் அமாஹி ஹிந்த், சன்னி சென்ட்ரல் வஃக் போர்டு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.




இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. இதில், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிப்பதற்கான உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Sunday, May 8, 2011

மரண அறிவிப்பு

புதுமனை தெருவை சேர்ந்த சைபுதீன் s/o  பாரூக் அவர்களின் குழந்தை ஹமூத் (வயது பத்து மாதங்கள்) உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் காலமாகிவிட்டது. 
 
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்.அந்தக் குழந்தையின் பெற்றோரை பொருந்திக்கொண்டு,பாவங்களை மன்னித்து,பொறுமையை கொடுத்து ஈருலகிலும் வெற்றி பெற செய்வானாக.

அந்தக் குழந்தையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் - சுவர்க்கப் பூங்காவில் நுழைய செய்வானாக.ஆமீன்.
 

6:61
அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.
 
2:155நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!