Thursday, March 18, 2010

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? வீடியோ! டாக்டர் பெரியார்தாசன்

வழங்குபவர்: டாக்டர் பெரியார்தாசன் (அப்துல்லாஹ்)
நாள்: ஹிஜ்ரி 28.03.1431 – (14.03.2010)
இடம்: செனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா
நிகழ்ச்சி ஏற்பாடு: செனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி.












Wednesday, March 17, 2010

துபையில் (Peace) அமைதி மாநாடு

இஸ்லாம் என்றால் பயங்கரவாதம், தீவிரவாதம் எனும் பூச்சாண்டிக் கருத்துருவாக்கம் உலகெங்கும் வலிந்து திணிக்கப்படும் இக்காலச் சூழலில், அதைத் தவிடுபொடியாகச் செய்யும் "அமைதி மார்க்கத்தின் அழைப்பு" மாநாடுகள் நடத்தப் படுவது காலத்தின் கட்டாயமாகும். அவ்வரிசையில் துபையில் இன்ஷா அல்லாஹ் நாளை 18.03.2010இல் தொடங்கி மூன்றுநாட்கள்  நடைபெறவிருக்கும் மாநாட்டில் வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடைய சத்தியமார்க்கம்.காம் அன்புடன் வேண்டி, இதை அறிவிக்கின்றது.


கலந்து கொண்டு சிறப்பிப்போர்:
Sheikh Abdur Rahman Al Sudais (Expected)
Imam Masjed Al-Haram (Al-Kaba) – Saudi Arabia
Dr. அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸ் - ஸஊதி அரபியா
ஈர்த்திழுக்கும் இவரது மறையோதல் உலகப் புகழ் பெற்றது. 1961ஆம் ஆண்டு பிறந்த ஷேக் அப்துர் ரஹ்மான், தமது 12ஆவது வயதில் இறைமறையை முழுமையாக மனனம் செய்தவர். ஹிஜ்ரீ 1399ஆம் ஆண்டு ரியாத் மருத்துவக் கழகத்தின் மிகச் சிறந்த மாணவராகப் பட்டம் பெற்ற மருத்துவர். ஷேக் அப்துர் ரஹ்மான் அவர்கள், தமது 'இஸ்லாமிய அடிப்படை நெறிமுறை' (ஷரீஆ) இளங்கலைப் பட்டத்தை ரியாத் பல்கலைக் கழகத்தில் 1983இல் நிறைவு செய்தார். பின்னர், இமாம் முஹம்மது இபுனு ஸஊத் இஸ்லாமியப் பலகலைக் கழகத்தில் தமது முதுநிலைக் கல்வியை 1987இலும் இஸ்லாமிய நெறிமுறை (ஷரீஆ) ஆய்வுக்கான முனைவர் பட்டத்தை உம்முல் குரா பல்கலைக் கழகத்தில் 1995இலும் நிறைவு செய்தார். ஹிஜ்ரீ 1404 ஷஅபான் மாதம் 22ஆம் நாள்முதல் கஅபாவின் இமாமாகப் பணியாற்றுகிறார். அன்னார், சிறுவயது முதல் தம் நல்லொழுக்கத்தாலும் இப்போதும் பின்பற்றும் எளிமையாலும் அனவரையும் கவர்ந்தவர்.
Sheikh Mishary Rashid Al Effasy - Kuwait
ஷேக் மிஷாரீ ராஷித் அல் இஃபாஸி - குவைத்

ஷேக் மிஷாரீ அவர்கள் 1976இல் குவைத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த ஓதுவார் (காரீ அல் குர்ஆன்). மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் அல் குர்ஆனையும் இஸ்லாமியக் கல்வியையும் பயின்றவர். மறையோதுதலின் நுட்பங்களை கற்றுத் தேர்ந்த ஷேக் மிஷாரீ, குவைத்தின் பெரிய பள்ளிவாயிலின் இமாமாகப் பணியாற்றுகிறார். இவரது குரலில் அல் குர்ஆன்  யூ-ட்யூபில் கேட்கக் கிடைக்கிறது.
Dr. Hussain Hamed Hassan - Egypt
Dr. ஹுஸைன் ஹாமித் ஹஸன் - எகிப்து
Dr. ஹுஸைன் ஹாமித் ஹஸன் அவர்கள் இஸ்லாமியப் பொருளாதாரத் துறையில் சமகாலத்தவரின் தந்தை எனப் பேசப் படுகிறார். கைரோவிலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் தமது முனைவர் பட்டத்தைக் கடந்த 1965இல் பெற்றவர். கூடுதலாக, ந்யூயார்க் பலகலைக் கழகத்தின் 'உலகளாவிய ஒப்பீட்டுச் சட்டப் பயிற்சி' மையத்திலிருந்து இரு பட்டங்களைப் பெற்றிருக்கிறார். எகிப்து அரசின் தலைமை வழக்கறிஞராக 1969-1970 பணியாற்றியுள்ளார். தற்போது மத்தியக் கிழக்கின் பல இஸ்லாமிய வங்கிகளுக்கு மட்டுமின்றி,  பொருளாதாரக் கல்விப் பயிலகங்களின் நெறிமுறைக் கண்காணிப்புக் குழுமத்தின் தலைவராகவும் மத்தியக் கிழக்கின் அரசாங்கங்கள் சிலவற்றுக்குப்  பொருளாதார ஆலோசகராகவும் திகழ்கிறார்.
Yasir Qadhi - USA
ஷேக் யாஸிர் காழி - அமெரிக்கா
ஷேக் யாஸிர் காழி அவர்கள் அமெரிக்காவின் டெக்ஸஸில் உள்ள ஹ்யூஸ்டனில் பிறந்தவர். மேனிலைப் பள்ளிப் படிப்பை ஸஊதியில் உள்ள ஜித்தாவிலும் இஸ்லாமியக் கல்வியை மதீனாவின் இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திலும் பயின்றவர். தமது இஸ்லாமியக் கல்வி ஆய்வுக்கான முனைவர் பட்டத்தை அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழத்தில் அண்மையில் பெற்றார் ஷேக் யாஸிர். மிகச் சிறந்த பேச்சாளரும் இஸ்லாமிய அழைப்பாளருமான ஷேக் யாஸிரின் அழைப்புப் பிரச்சாரங்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்துள்ளன. ப்பீஸ், இஸ்லாம்(இங்கிலாந்து), அல்-ஹுதா(ஸஊதி அரேபியா), அல்-ஃபஜ்ரு(எகிப்து) ஆகிய தொலைக்காட்சிகளிலும் இவரது இஸ்லாமியப் பிரச்சாரம் ஒளிபரப்பப் படுகிறது.
Yusuf Estes - USA
ஷேக் யூஸுஃப் எஸ்ட்ஸ் - அமெரிக்கா
"விளையாட்டுப் பிள்ளை" என்று கேள்விப் பட்டிருக்கிறோமில்லையா? போலவே, அமெரிக்காவின் யூஸுஃப் எஸ்ட்ஸ் அவர்கள், குழந்தைகள்முதல் பெரியவர்வரை அனைவரின் உள்ளங்களையும் தம் விளையாட்டுப் பேச்சினால் கொள்ளை கொண்ட இந்த "விளையாட்டு ஷேக்" ஒரு முன்னாள் கிருஸ்துவப் பாதிரியாவார். ஐ.நா.வின் மத அமைதி-நல்லிணக்கத் தலைவர்களில் அமெரிக்காவின் பிரதிநிதியாகப் பணியாற்றியவர். எகிப்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிமைக் கிருஸ்துவத்துக்கு மதமாற்ற முயன்றபோது இஸ்லாத்தின் வலையில் தாமாகவே வந்து 'வீழ்ந்துபட' நேந்ததை விளையாட்டாக  எளிமையான ஆங்கிலத்தில் அவர் விவரிக்கும்போது சிரிப்பும் அழுகையும் கலந்த அனுபவம் உண்டாகும். வெகு எளிமையான ஆங்கிலத்தில் விளையாட்டுத்தனமாகப் பேசியே பலரை இஸ்லாத்தின் பக்கம் அழத்து வந்திருக்கிறார். இஸ்லாமியப் பிரச்சாரத்துக்காகவே பல இணைய தளங்களை நடத்திவருகிறர். அவரது சொந்தப் பெயரிலும் (www.YusufEstes.com) பிற பெயர்களிலும் இயங்கும் இணைய தளங்களுள் குறிப்பிடத் தக்கவை : (www.BibleIslam.com), (www.ShareIslam.com).
Abdur Raheem Green - UK
ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன் - இங்கிலாந்து
ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன் அவர்கள் ஆங்கிலேய முடியாட்சியின் கீழ் இராணுவப்படை நிர்வாகியாத் திகழ்ந்த தந்தைக்கு, தான்ஸானியாவின் தலைநகரான தாருஸ்ஸலாமில் பிறந்தவர். குடும்பம் முழுதும் இங்லாந்துக்கு மீண்டு, லண்டன் கிருஸ்துவப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றவர். மாணவப் பருவத்திலேயே வாழ்வின் பொருளைத்தேடி, தம் உள்ளம் அலைபாய்வதை உணர்ந்தவர். தம் கலாச்சாரத்தை, வாழும்வழியைப் பல்வேறு வகையில் தன்னுள் கேள்விக்குட்படுத்தியவர். பிறகென்ன? தேடிக் கொண்டே இருப்பவர்களை இறுதியாக எதிர்கொள்வது அல்லாஹ்வின் வேதம்தானே! அது 1987இல் அவர் கைக்குக் கிடைத்தது. அன்றுமுதல் இன்றுவரை தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனப் பிறருக்கு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் சிறந்த அழைப்பாளர்களுள் ஒருவராக மாறிவிட்டார் ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன். அவரது இணையதளம் www.IslamsGreen.org
Sheikh Hussain Yee - Malaysia
ஷேக் ஹுஸைன் யீ - மலேஷியா
"சீனஞ் சென்றேனும் ஞானம் தேடு" என்று ஓர் அரபுப் பழமொழி உண்டு. இந்தச் சீனவழிவந்த "யீ" அவர்களுக்கு ஞானம் பிறந்தது மலேஷியாவில். புத்தமதக் குடும்பத்தில் பிறந்த "யீ", தமது 18ஆவது வயதில் (1978) இஸ்லாத்தைத் தழுவினார். இஸ்லாமியக் கல்வி பயில்வதற்காக அவர் தேர்ந்து கொண்டது மதீனாவின் இஸ்லாமியப் பல்கலைக் கழகம். தேர்ந்தெடுத்த துறை ஹதீஸுக்கலை. பட்டம் பெற்றது 1978இல். மலேஷியாவில் புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களுக்கு அடிப்படை போதனைகளையும் வாழும் வழிகளையும் சொல்லிக் கொடுப்பதற்குத் தோற்றுவிக்கப்பட்ட 'முஸ்லிம் சமூகநல அமைப்பு (Perkin)'இல் தம்மை இணைத்துக் கொண்டார் ஷேக் ஹுஸைன். பின்னர் ஹாங்காங்கின் இஸ்லாமிய மையத்தின் இயக்குநர் பொறுப்பேற்றார். மலேஷியாவில் "அல்-காதிம்" (தொண்டன்) எனும் அமைப்பை 1984இல் நிறுவி அழைப்புப் பணியைத் தொடர்ந்தார். சமகால ஹதீஸுக்கலை விற்பன்னர்களில் தலையானவரான இமாம் முஹம்மது நாஸிருத்தீன் அல்-அல்பானீ (ரஹ்) அவர்களின் மாணவராவார் ஷேக் ஹுஸைன்.
M.M Akbar - India
ஷேக் எம். முஹம்மது அக்பர் - இந்தியா
இயற்பியல் பட்டதாரியான எம். முஹம்மது அக்பர், ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் சுற்றிக் கொண்டேயிருக்கும் இஸ்லாமிய அழைப்பாளர். கேரளாவில் பிறந்த ஷேக் அக்பர் இஸ்லாமியப் பிரச்சாரத்திலும் பிறமத நண்பர்களுடன் நடத்தும் நட்புமுறையிலமைந்த விவாதத்திலும் கெட்டிக்காரர். "ஸ்நேகஸம்வாதம்" (Friendly debate) எனும் பெயருடைய மலையாள மாத இதழின் ஆசிரியர். "நிஜம்" எனும் தஃவா அமைப்பின் நிறுவன இயக்குநர். Peace எனும் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். "Bibilinte Daivikatha-Vimarshangal, Vasthuthakal" (Divinity of Bible-Criticisms and Truths), "Haindavatha - Dharmavum Dharshanavum" (Hinduism – Religion and Ideology) ஆகிய நூல்களை எழுதிய மிகச் சிறந்த எழுத்தாளர்.
Saeed Rageah - Canada
ஷேக் ஸயீத் ராகேஹ் - கனடா
சோமாலியாவில் பிறந்து ஸஊதியில் வளர்ந்து, வட அமெரிக்காவுக்குப் பெயர்ந்து, தற்போது கனடாவின் டோரொண்டோவில் அபூஹுரைரா இஸ்லாமிய மையத்தில் இமாமாகப் பணியாற்றும் ஷேக் ஸயீத், இஸ்லாமியக் கல்வியில் இளங்கலைப் பட்டமும் வெர்ஜினீயாவின் ஃபயர்ஃபாக்ஸில் உள்ள 'இஸ்லாமிய, அரபு அறிவியல் பயிலக Institute of Islamic and Arabic Sciences'த்தில் நெறிமுறை(ஷரீஆ)க் கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். நாவன்மை மிக்கவர். மஸ்ஜிது ஹுதா (மோண்டரல்), மஸ்ஜித் ஆயா (மேரீலாண்ட்) "முஸ்லிம் இளையோர்" இதழ், "அக்ஸாக் கூட்டமைப்பு" ஆகியவற்றின் நிறுவனர் ஆவார் ஷேக் ஸயீத்.
Ahmed Hamed - India
ஷேக் அஹ்மது ஹாமித் - இந்தியா
"அழைப்புப் பணி என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை ஆகும்" எனக் கூறும் ஷேக் அஹ்மது ஹாமித், 28 வயது நிரம்பிய இந்திய இளைஞர். வணிகவியலில் முதுநிலைப் பட்டதாரியான அஹ்மது, கடந்த சில ஆண்டுகளாகவே அழைப்புப் பணியில் தீவிரமாக இயங்கி வருகிறார். "இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதலை, குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் அமைந்த பிரச்சாரம் ஒன்றின் மூலமே களைய முடியும்" எனக் கூறும் அஹ்மது, எவரையும் கவரும் நாவன்மை கொண்டவர். பல்வகைப்பட்ட தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்காற்றியவர். அமீரகங்கள், ஸஊதி அரபியா, இங்கிலாந்து, மலேஷியா ஆகிய நாடுகளில் அழைப்புப் பணி செய்திருக்கிறார். தாஇகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர் ஷேக் அஹ்மது.
Zain Bhikha - South Africa
ஸைன் பிகா - தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவின் ப்ரிட்டோரியாவில் 1974இல் பிறந்த ஷேக் ஸைன், சிறுவயதில் குரலினிமை கொண்ட சிறந்த பாடகராம். ப்ரிட்டோரியா முஸ்லிம் பள்ளிக்கூடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இஸ்லாத்தை மையப் படுத்தி, "வாழும் வழி - A Way of Life" எனும் ஒரு கவிதைத் தொகுப்பையும் பின்னர் "Praise to the Prophet (SAW)" (1996), "Fortunate is He" (1997) and "The Journey" (1998) ஆகிய தொகுப்புகளையும் ஸைன் வழங்கியுள்ளார்.
நிகழ்ச்சி நிரல்:
வியாழன் 18.03.200
மாலை 5 முதல் இரவு 11:30 வரை : மாநாட்டுத் தொடக்கம், உரைகள், பொருட்காட்சி

வெள்ளி 19.03.2010
காலை 10 முதல் பகல் 1 வரை : உரைகள், ஜும் ஆத் தொழுகை, பொருட்காட்சி
பகல் 2.30 முதல் இரவு 11:30 வரை : உரைகள், கிரா அத், கவிதை, பொருட்காட்சி

சனி 20.03.2010
காலை 10 முதல் பகல் 1 வரை : உரைகள், பொருட்காட்சி
பகல் 2.30 முதல் மாலை 6 வரை : உரைகள், பொருட்காட்சி
மாலை 6.30 முதல் இரவு 11.30 வரை : பொருட்காட்சி, மாநாட்டு நிறைவு

கூடுதல் விபரங்களுக்கு: http://www.peaceconvention.com/

thanks http://www.satyamargam.com/

Monday, March 15, 2010

ஏகன் அல்லாஹ்வை வணங்கும் பேராசிரியர் பெரியார்தாசன்,புகைப்படங்கள்

(முன்னாள்)பேராசிரியர் பெரியார்தாசன்-இன்று பேராசிரியர் சகோதரர்  அப்துல்லா  அவர்கள் உம்ரா (புனித மக்கா-காபா பள்ளிவாசல் சென்று ஏக இறைவனாகிய அல்லாஹ்வை வணங்கிய காட்சிகள்.

Sunday, March 14, 2010

சகோதரனே வருக!

இப்பரந்த உலகையும் அண்ட சராரங்களையும் படைத்தவன் என்று ஒருவன் உண்டா? இல்லையா?. இக்கேள்வியின் மீதான விவாதத்திற்கு, இல்லை என்றும் உண்டு என்றும் இருவேறு பதில்கள் உள்ளன. உண்டு என்பதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் உண்டு என்று கூறுவோரும் உளர். 
 
இதில் படைத்தவன் ஒருவன் உண்டு என்று கூறுவோரில் ஒன்றுக்கு மேற்பட்ட பல கடவுள்கள் உண்டு என்ற நிலைபாட்டில் உள்ளோரில் பெரும்பாலோர் என்றாவது ஒருநாள் படைத்தவன் ஒருவன்தான் என்ற உண்மையைக் கண்டுகொள்கின்றனர். இது நாள்தோறும் நாம் படிக்கும் செய்திகளில் ஒன்றுதான்.

ஆனால், "படைத்தவன் என்றொருவனே இல்லை; அனைத்தும் தானாகவே தோன்றின" என நிரூபிக்கப்படா அறிவியலைத் துணைக்கழைத்து "பகுத்தறிவு" என்ற பெயரில் படைத்தவனை மறுதலித்து வாழும் நாத்திகர், படைத்தவனைக் கண்டுகொள்தல் என்பது நிகழ்வுகளில் ஆச்சரியமும் அபூர்வமுமான நிகழ்வாகும். தமிழகத்தின் பகுத்தறிவு(!)ப் பாசறையிலிருந்து இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களுள் மிகச் சிறந்த இலக்கியவாதியான முரசொலி/நீரோட்டம்/அடியார் அவர்கள் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர். நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட இன்னொருவரது வாழ்வின் திருப்புமுனை நிகழ்வு ஒன்று கடந்த வியாழன் (11.03.2010) அன்று சவுதி அரேபியாவில் நடந்தது.

ஆம்! "தேடுதல் உடையோர் நேரான வழியை அடைந்து கொள்வார்" என்பதற்கு இன்னுமோர் இலக்கணமாக, தமிழகத்தில் "கடவுள் இல்லை" என்ற கொள்கையில் நீண்டகாலமாகப் பிரச்சாரம் செய்து வந்த பிரபல பேராசிரியர் முனைவர் பெரியார்தாசன் அவர்கள் கடந்த வியாழன் அன்று இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தம்மையும் இவ்வுலகையும் படைத்த இறைவனை இறுதில் தேடிக் கண்டுகொண்டார்.
உள்ளம் திறந்து, முன்முடிவுகள் இன்றித் தேடமுனைபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தேடுவதில் முனைப்புடன் இருந்தால் என்றாவது ஒருநாள் அவர்கள் தேடுவதை அடைந்தே தீருவர். "படைப்பாளன் என்றொருவன் இல்லவே இல்லை" என்று எவ்வித உறுதியான சான்றும் இல்லாமல், கண்டுபிடிப்பில் இன்றும் கத்துக்குட்டியாக இருக்கும் விஞ்ஞானத்தைத் துணைக்கழைத்து மிக அற்பமான சிற்றறிவைப் பயன்படுத்திப் படைத்தவனை மறுதலித்து வாழும் நாத்திகச் சகோதரர்கள், தங்களைத் தாங்களே "பகுத்தறிவுவாதிகள்" என அழைத்துக் கொள்வதிலாவது அவர்கள் உறுதியானவர்களாக இருப்பின், தம் மனதைத் திறந்து "படைப்பாளன்" குறித்துப் பேசும் அனைத்து வேத கிரந்தங்களையும் ஒப்பீட்டாய்வு செய்ய முன்வரவேண்டும் என்றும் படைத்தவனின் வாக்காக இவ்வுலகின் இறுதிநாள்வரை பாதுகாக்கப்பட இருக்கும் திருக்குர்ஆனை முழுவதும் ஒருமுறையாவது படித்துப் பார்க்கவேண்டும் என்றும் இத்தருணத்தில் அழைப்பு விடுக்கிறோம்.

தன்னுடைய நீண்டகால நாத்திக+புத்தமதப் பயணத்தின் இறுதியில் தன்னையும் இவ்வுலகையும் படைத்தவனைக் கண்டுகொண்ட பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், "கருத்தம்மா" என்ற பெண்சிசுக் கொலையை மையப்படுத்தி எடுத்திருந்த திரைப்படத்தின் மூலமும் தமிழக மக்களிடையே பிரபலமானவராவார். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்து தனது பெயரையே நாத்திகச் சிந்தனையாளரான பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை இணைத்துக் கொண்டு, 'பெரியார்தாசன்' ஆக வாழ்ந்தவர்.

சமூக சிந்தனைக் கருத்துகளைப் பரப்புவதில் முன்னணியில் நின்ற அவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தைப் பற்றி, கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்த பெரியார்தாசன், கடந்த வியாழக்கிழமை (மார்ச் 11, 2010) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு, தன்பெயரை "படைத்தவனுக்கு அடிமை" என்ற பொருள்படும் "அப்துல்லாஹ்" என்று மாற்றிக் கொண்டார்.
இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட முனைவர் அப்துல்லாஹ் எனும் பெரியார்தாசனின் இறைதேடுதல் பயணம் சுவாரசியமானது. சிறுவயதில் தன்னுடன் பயின்றிருந்த சிராஜுதீன் என்ற முஸ்லிம் நண்பருடன் 2000ஆம் ஆண்டில் ஒருநாள் இரவு பல விஷயங்களைக் குறித்துக் கதைத்துக் கொண்டிருந்த வேளையில், படைத்தவனைத் தேடும் சிந்தனை எழக் காரணமான ஒரு கேள்வி சிராஜுதீனிடமிருந்து எழுந்தது என்றும் அதுவே தன் இறைதேடுதல் பயணத்தின் ஆரம்பக்கட்டம் என்றும் அவர் நினைவு கூர்கிறார்.

"படைத்தவன் என்றொருவன் இல்லை என்ற நாத்திக கொள்கைதான் சரியானது எனில் அதனால் நம்முடைய மரணத்துக்குப் பின் எந்த இழப்பும் இல்லை. ஆனால், அதற்கு மாறாக ஒருவேளை படைத்தவன் என்றொருவன் இருந்து விட்டால் மரணத்துக்குப் பின் நாம் மிகப் பெரிய நஷ்டவாளியாக நிற்க நேருமே" என்ற சிந்தனையினால் எழுந்த அச்சம்தான் "படைத்தவன் என்றொருவன் இருக்கிறானா?" என்ற தேடுதலுக்குத் தன்னை உந்தித் தள்ளியதாகக் கூறுகிறார்.

"கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் அங்கு உரையாற்ற வந்த பெரியாரைப் புகழ்ந்து, நான் எழுதிய கவிதைதான், பெரியாரின் கொள்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பமாக அமைந்தது" என்று கூறும் அவர், அதன்பின் கடுமையான கடவுள் மறுப்புச் சிந்தனை கொண்டவராக தமிழகம் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும் இதற்கிடையில் இனத்தின் அடிப்படையிலான இழிவை அகற்ற "புத்த மதத்துக்கு" மாறியதாகத் தமிழக அரசு பதிவேடுகளில் தன் விவரங்களை மாற்றிக்கொண்டதையும் நினைவு கூர்கிறார்.
"2000இல் மனதினுள் எழுந்தக் கேள்வி, பல வேத கிரந்தங்களையும் ஆராயச் சொன்னது. இந்துமத வேதங்களில் கடவுளைத் தேடுபவன், கடவுள் மறுப்புக் கொள்கையில்தான் போய் சேருவான். பைபிளிலும் படைத்தவனைக் குறித்த தெளிவு இல்லை. இறுதியில் இஸ்லாத்தில் - திருக்குர்ஆனில் தேட முற்பட்டேன். திருக்குர்ஆனை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்தே மனதினுள் தெளிவுகள் ஏற்பட ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் தினசரி வேலைகளை ஒதுக்கி, நாளுக்கு 5 மணி நேரம் வரை திருக்குர்ஆனை வாசித்து முழுமையாக முடித்தேன். அதன் பின் ஹதீஸ்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். 2004 இல் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை முழுமையாக நிறுத்தி விட்டேன். அதன் பிந்தைய 6 ஆண்டுகளும் முழுமையாக இஸ்லாத்தை ஆய்வு செய்வதிலேயே செலவழித்து, இறுதியில் உண்மையான இறைவனை இஸ்லாத்தின் மூலம் கண்டுகொண்டேன்" என்று தன் இறைதேடுதல் பயணத்தின் கடந்த 10 ஆண்டுகால முக்கிய நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்.

"கடவுள் இல்லை" என்ற சிந்தனையை ஆயிரக்கணக்கானோருக்கு விதைத்த இறைமறுப்பாளர் ஒருவர் இன்று இறைவனைக் கண்டுகொண்டுள்ளார். கடுமையான தேடுதல் மூலம் கண்டு கொண்ட ஓரிறையை இனிவரும் காலங்களில் மக்களுக்கு எடுத்தியம்ப இருக்கும் அன்னாரின் கண்டறிதலைத் தமிழ்ச் சமூகம் மனம் திறந்து கேட்கட்டும்; உண்மையான படைத்தவனைக் கண்டு கொள்ளட்டும்.
இறைமார்க்கத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டபின், மக்கா நோக்கிக் கடந்த சனிக்கிழமையன்று உம்ரா எனும் புனிதபயணத்தை மேற்கொண்ட அவர், இன்று 14.03.2010 இரவு 8.30 மணிக்கு ஜித்தா செனய்யாவில் "நான் எவ்வாறு இஸ்லாத்திற்கு மாறினேன்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார், இன்ஷா அல்லாஹ்.
அவரது இந்நாள் வரையிலான பிழைகளைப் பொறுத்து, அவர் மூலம் இத்தூய மார்க்கம் மேலும் வலுப்பெற இறைவன் அருள்புரிவதற்காக நாமும் பிரார்த்திப்போம்.
"தேடுங்கள்; கண்டடைவீர்கள்!"

http://www.satyamargam.com/

Saturday, March 13, 2010

பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்றார்.

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று (மார்ச் 12) அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனிதமக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில்  தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

ரியாதில் எமது சிறப்பு செய்தியாளருக்கு டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அளித்த பேட்டியை இன்ஷா அல்லாஹ் விரைவில் எமது இணைத்தளத்தில் பார்க்கலாம்.


courtesy tmmk.in

Saturday, March 6, 2010

கேடு கெட்ட சாமியாரும்,சகோதரியின் உள்ளக் கிடைக்கையும்...

கேடு கெட்ட இந்த சாமியாரின் ஈன செயல்களை,அந்த அசிங்கம் பற்றி பீஸ் ட்ரெயினில் ஏன் வெளியிட்டீர்கள் என ஆதங்கப்பட்டு,ஆத்திரப்பட்டு ஒரு சகோதரி லறீனா A.H. சாடியிருந்தார்.'பீஸ் ட்ரெயின்' என்று அருமையானதொரு பெயரை வைத்துக் கொண்டு இந்தமாதிரி கேடுகெட்ட செய்திகளைப் பிரசுரிக்காதீர்கள்.என்று.

அந்த சகோதரியின் மனக்கிடக்கை புரிகிறது.குரானும்-ஹதீசும் இயம்பும் உன்னத செய்திகள் உலா வரும் இத் தளத்தில் சாக்கடைகள் பற்றி எழுதியது தவறுதான்,அதற்காக மன்னிக்கவேண்டுகிறேன்,மனம் வருந்துகிறேன்.

ஆனால் ஒன்று சகோதரி,"எல்லாம் வல்ல அல்லாஹ்,அவர்களை-அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் அவர்களை இது போன்று கேவலப்படுத்தி,உண்மை எது,பொய் எது என உலகுக்கு அம்பலப்படுத்துகிறான்".

இந்து சகோதர-சகோதரிகள் சீர் தூக்கிப் பார்த்து,சத்தியம் எது என புரிந்து - இனிய மார்க்கம் இஸ்லாம் நோக்கி வருவீர்களேயானால் அது உங்களுக்கே நலமாக இருக்கும்.

தன் உள்ளக்கிடக்கையை பகிர்ந்து கொண்ட சகோதரிக்கு மிக்க நன்றி.அல்லாஹ் அருள் புரிவானாக.

Tuesday, March 2, 2010

த்தூ!

பிரபல தமிழக சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள அவருடைய பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

அந்த வீடியோ காட்சியில் ஆசிரமம் போல் காணப்படும் அங்கு சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் ஒரு அறையில் உள்ளனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. அதை தொடர்ந்து விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த செய்திகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, கடலூர் அருகே வண்டிப்பாளையம் பகுதியில் நித்தியானந்தா சாமியாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து அங்கு ஒட்டப்பட்டு இருந்த அவரின் படங்களை கிழித்தெறிந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாரின் படத்தை கிழித்தவர்கள், நித்யானந்த சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரின் ஆசிரமத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!